Monday, June 27, 2011

கவிதை

ரோஜாவின் 
நகல், தீயின் ஜூவாலை


ஒளிவியா
ஒரு ஓட்டுநரின்
முக்கிய அவயங்கள் எல்லாம்  
அவர் இயக்கி்ச் செல்லும்
வாகனத்தில் கவனமாய் இருப்பதுபோல்
செம்மறி ஆட்டுக்குட்டியின்
குணம்கொண்ட என்னை
வெடிகுண்டை கண்டறியும் 
கருவியாக
சோதனையிடுகிறதே உன் கண்கள்.

ஒளிவியா
தினந்தோறும்
நீ
கழிவுகளை வெளியேற்ற
கழிவறைக் குழியை
சரியாக அவதானிக்க உதவும்
ஜிரோவாட்ஸ் பல்பை
அற்பமாய் எண்ணுகிறாயே
உன் மாடிவீட்டின் வெளியை
அலங்கரிக்கும்
ஜரிகைப்போட்ட வாடகை விளக்குகளில்
மயங்கி
அற்புதம் என்று ஆர்ப்பரிக்கின்றாயே
அவைகள் விழா முடிந்ததும்
அதன் சுவடே இல்லாமல்
அவிழ்த்து  சென்றுவிடுவான்
நீ
அறியவே இல்லையா.

ஒளிவியா
எதையுமே பொருட்படுத்தாது
அஞ்ஞாணிகள் பொருள் சேர்த்தார்கள்
பிரபஞ்சத்தில்
எதுவுமே பொருட்டல்ல  என்று
ஞாணிகள் சான்றளித்தார்கள். 
அதை
திரும்பத் திரும்ப படிக்கின்றாய்
ஆனால் கடைபிடிக்க
நான் மட்டும்தான் இளிச்சவாயியா
என மீண்டும்
அஞ்ஞாணிகளின் கல்வி சாலைக்கே போகின்றாய்

ஒளிவியா
அதிகாலையில் பூத்து
இப்போதுதான்
அதன் சிவந்த இதழ்கள்
விரிந்து  இருக்கிறது
அது உண்மையிலேயே அழகிய ரோஜா என்று
 நீ
கிட்டத்தில் போகின்றாய் 
அழகிய ரோஜாவை
நகல் எடுத்த தீயின் ஜூவாலை
உன் வாசம் நிறைந்த கூந்தலை
கருக்கியபோதுதான்
பதறுகிறாய். 





No comments: