Friday, May 6, 2011

கட்டுரை

                               மகேந்திரவர்மனின் வாரிசுகள் 

காஞ்சிபுரம் நகரத்திற்குள் எந்த பக்கம் நுழைந்தாலும் துரப்பார்வையில் நிச்சயம் கோபுரங்கள்தன் கொண்டையில் தங்கத்தையும் வெங்கலத்தையும் வரிசை யாக சொருகி வைத்திருப்பது தெரியும். காஞ்சிக்கு ஏறக்குறைய 2500 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. எல்லா நகரத்திற்கும் வரலாறு உண்டுதான். அனால்  மறக்க முடியாத நினைவுச் சின்னங்களை உருவாக்கி வைத்திருக்கும்  பல்லவர்களின் செயல் சிறப்புக்குறியதுதானே!   

பல்லவ அரசர்களின் நீண்ட வரலாற்றை பார்க்கின்றபோது, எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். அவர்கள் அடிப்படையில்  கல்வியில், கலையில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மகேந்திர வர்மன்  இலக்கியம்  படைப்பவராகவும். மக்களை இலக்கியத்தில் பங்குகொள்ளச் செய்தவராகவும் இருந்திருக்கின்றார்.

நான்காம்  நுற்றாண்டின் கால கட்டங்களில் காஞ்சியில் பல்வேறு கல்லூரிகள் இருந்திருக்கிறது. காவேரிப்பாக்கம் பெருமாள் கோயிலையடுத்து ஒரு கல்லூரியும்,  கடலூரிலிருந்து புதுவைக்குச்செல்லும் வழியில் பாகூரில் ஒருகல்லூரியும், பழய சீவரத்தையடுத்த பகுதியில் ஒருகல்லுரியும் இருந்திருக்கிறது.  அனால் அனைத்தும் வடமொழி கல்லுரிகளாகவே இருந்திருக்கிறது. கடிகை ஏன்ற கல்லூரியில் 'கதம்ப அரசமாலை' இயற்றிய மயூர சம்மன் என்பவன் கல்வி கற்றிருக்கிறான்.

கல்லூரிகளில் அறுபத்து நான்கு கலைகளில் சிலவற்றை பாடமாக வைத்துள்ளார்கள். வேதங்கள் உபநிடதங்கள் கற்பிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது அரசர்கள் மாறினாலும் கல்வியை கண்காணித்து போற்றி வந்துள்ளனர். கல்லூரிகளில் தர்க்கம், தத்துவம், மருத்துவம், விருப்பபாடமாக வைத்து, கலைகளை பொதுவான பாடமாக வைத்துள்ளனர்.மேலும் ஆராய்ச்சி கல்வியும் கல்லூரியில் வழங்கியுள்ளார்கள். 

காஞ்சியின் முக்கிய சிறப்பு. நாளந்தாப் பல்கலைகழகத்தின் பேராசிரியரான தர்மபாலர் இக்காஞ்சி மண்ணின் மைந்தர். புத்தர் காஞ்சிக்கு வந்து பலரை பொளத்தராக்கினார். இந்த சிறப்புக்குரிய தகவல்களை சீன யாத்திரிகர் யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். பல்லவர்கள்  பிற்பகுதியில்தான் தமிழ்மொழியை ஆதரித்துள்ளனர். குறிப்பாக மகேந்திரவர்மன் காலத்தில்தான் தமிழ்  கல்வியும் கலையும் சிறப்படைந்து இருக்கிறது. மகேந்திரவர்மன் நாடகம், நடனம், ஓவியம் என்கிற இலக்கியத்துறையை சார்ந்தவைகளில்  ஈடுபாடுடன் இருந்திருக்கின்றான். 

மகேந்திரன் 'மத்த விலாசப்பிரகசனம்' என்ற நகைச்சுவை நாடகத்தை இயற்றினார். அதை அரங்கேற்றி மகிழ்ந்துமிருக்கிறார். நாட்டை ஆளும் அரசன்  நகைச்சுவையை வெளிப்படையாக மேடைஏற்றியதும்,ஆன்மீக கோபுரங்களை  சிற்பங்களை உருவாக்கியதும் நாட்டின் அமைதிநிலை பொருத்தா?  கலையை உருவாக்குகிறவர்கள் எந்த சூழ்நிலையிலும்  அலட்டிக்கொள்ளாமல் இருப்பதாலா? மகேந்திரன் யாழ் இசை  மீட்டுவதில் கூட  தேர்ந்தவராய் இருந்திருக்கிறார். மகேந்திரவர்மன் முக்கியமாக பெண்களை இசைக்கவும், பாடவும் அழைத்திருக்கிறான்.  நடனங்களை பயிற்று விப்பதற்காக பல கோயில்களில் பெண்களை நியமித்திருக்கிறான். அவர்களுக்கு நிலங்களை மானியங்களாகத்தந்து பிழைப்பிற்கு வழிசெய்திருக்கிறான். அவன் காலத்தில் ஓவியங்களிலும் சிறந்து விளங்கினான். சித்தன்ன வாசல் குகை ஓவியங்களை எடுத்துக்கொள்ளாம்.

பல்லவர்களில் ஒருவனான நந்திவர்மன் அரசாண்டபோது  தன் மாற்றாந்தாய்க்கு பிறந்தவன்,  நந்திவர்மனின் ஆட்சிய கவிழ்த்து தான் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைத்தான். ஒருநாள் நந்திவர்மன் நாட்டை பார்வையிட வீதியில் நடந்தான். அவன்தம்பி, அரசன் வரும் வழியில் ஒரு பெண்ணை கவிபாட பணித்தான். அவளும் பாடினாள்.  கேட்ட அரசன் கவிதையில் மயங்கி பெண்ணே இப்பாடலை யார் இயற்றியது இன்னும் பாடல்கள் உள்ளதா என்றான். இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது அவரிடம் என்றாள். தம்பி உன்னிடத்திலா இத்தனை திறமை இருக்கிறது. நாளைக்கே இந்த பாடல்களை அரங்கேற்ற வேண்டும். நாளை அரசவைக்கு கொண்டுவா என்றான்.  

தம்பி இப்போது சற்று மனம் வருந்தி அண்ணா இதில் வசை பொதிந்த வார்த்தைகளை கோர்த்து பாடியுள்ளேன். இந்த பாடலைப்பாடும்போது தாங்கள் இறந்து விடுவீர்கள். அதற்காகவே   அப்படி இயற்றினேன் என்றான்.  தம்பி நீ இயற்றிய கவிதையை கேட்காவிட்டால் நான் வாழ்வதில் என்ன பயன் என்றான்.  உடனே தம்பி ஒரு நிபந்தனை வைக்கிறான். நான் இயற்றிய கலம்பகம் நூறுபாடல் கொண்டதாகும். அரண்மனையிலிருந்து  சுடுகாடுவரை குறிப்பிட்ட அளவு இடைவெளியில் நூறு பந்தல் அமைக்க வேண்டும். அதில்  புலவர்களையும், அறிஞர்களையும்  விலை உயர்ந்த ஆடை, அணிகலன் உடுத்திவந்து அமரச்செய்ய வேண்டும். ஒரு பாடல் பாடி முடியும்போது   அந்த பந்தல் எரிந்து சாம்பலாகும். அதன் பிறகு அடுத்தப்பந்தல் இப்படியாக அனைத்துப்பந்தலும் எரிந்தபிறகு கடைசியில் சுடுகாட்டில் உயரமாகக் கட்டைகளை அடுக்கி அதன்மீது நீ படுக்கவேண்டும் பாடல் முடியும்போது கட்டையோடு நீயும் சாம்பலாவாய் என்றான். 

அதை கேட்டபோது  நந்திவர்மனுக்கு  எந்த பதட்டமும் இல்லை. உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்றான். தம்பி பாடல்பாடப் பாட ஒவ்வொரு பந்தலாக எரிந்தது. அரசன் மிகவும் மகிழ்ந்து தம்பியை வாழ்த்தினான். சுடுகாட்டில் கட்டைகள் அடுக்கப்பட்ட இடம் வந்தது. தம்பிக்கு மிகவும் வேதனை அண்ணா நான் தவறு செய்துவிட்டேன் இதோடு நிறுத்தி கொள்வோம் என்றான். தம்பி நீபாடிய பாடல்களால் என் இருதயம்  பூரிப்படைந்தது. கடைசி பாடலை கேட்காமல் போனால்  எனக்கு நிம்மதியே இல்லை. நீ பாடாவிட்டாலும் நான் இங்கேயே மரிப்பது உறுதி என்றான். அரசன் விறகுமீது  படுத்தான். தம்பி பாடினான். அரசன் சாம்பலான். இந்தளவு பல்லவர்கள் கலையை நேசித்து வளர்த்தார்கள்.  

தற்போது காஞ்சிபுரத்தின் நிலை என்ன? பல்லவர்களின் வேரானவ்ர்கள் எங்கே? தற்கால தமிழகத்தில் அவர்களை தேடும் பணியை யார்செய்கிறார்கள்? என்ற கேள்வியை கேட்டால் பதில் மீண்டும் கேள்விதான்?          

தற்போது காஞ்சிபுரத்தில் கலை இலக்கியப்பணி இயக்கத்தில் இருக்கிறதா என்ற கேள்வியை வைக்கிறபோது. பரவலாக தெரிந்த முகமாய்   மானங்காக்க நம் மத்தியில் புழங்கி கொண்டிருக்கும்  நா.முத்துக்குமாரைத்தான் சொல்ல வேண்டும். சினிமா என்கிற மாபெரும் ஊடகம் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கிறது. அதில் முழுவதும் அதன் மூர்க்கத்தனமான போக்குக்கு முற்றிலும் தன்னை இழந்து விடாமல். தனக்கான தனித்தன்மையை நிருபித்துக்கொண்டுதான் இருக்கிறார். இருந்தாலும் உறுதியான எலும்புகளுக்கு இடையில் ஊடாடும் ரத்தமும், அழகியலை போர்த்தி நிற்கும் சதையுமான கதைகள்  உருவாக சினிமா ஒரு தடையாக நிற்கிறதே என்று நினைக்கும்போது வருத்தபடத்தான் வைக்கிறது. 

'நுகம்' தந்த எக்பர்ட் சச்சிதானந்தம் ஒரு தீவிரமான படைப்பாளிதான். அவர்  ஏறக்குறைய நாற்பது வருஷமாக காஞ்சிபுரத்தை  ஆழ்ந்து உள்வாங்கியிருக்கிறார். அதனால் காஞ்சியின் அடையாளமாக எடுத்துக்கொள்ளலாம். அனால் காஞ்சியின் தனித்த அடையாளமாக இருப்பதில் அவருக்கு சற்று தயக்கம்தான். ஏனென்றால் பிறந்து சுமார் இருபத்தியெட்டு வருஷம் தன் சொந்த மதுரை கிராமத்தின் சிறுவயது நிகழ்வுகளோடும், மண்ணோடும் இன்னும் நினைவு களை சுமந்துகொண்டு தான் இருக்கிறார். அது அவரின் நுகம் தொகுப்பின்  மதுரையும், காஞ்சியும் மாறி மாறி  கதைகளாக கைகூடுவதில் இருந்து தெரிந்துகொள்ளலாம். பல்லவர்கள் காஞ்சியில் சிலகாலகட்டங்களில் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் கோபுரங்கள், சிற்பங்கள் என்று கலைகளின் வழியாக ஒரு அமைதியான வாழ்வுமுறையை கட்டமைத்து சென்றுள்ளார்கள். அது காலம் கடந்து இன்னும் நடைமுறையில் இருப்பதால், அந்த வாழ்வுமுறை அவருக்கு பிடித்தும் இருக்கிறது.  ஒரு பத்து வருஷம் தனியார் நிறுவனம் தன் கிடுக்கு  பிடியில் காற்று வசதில்லாத அறையில் அடைத்து விட்டது. தற்போது மீண்டும் தீவிரமான படைப்பாளியாய்  கலையின் கழுகு பார்வையில் காஞ்சியை சுற்றிவருகிறார். எதோ ஒருநாளில் எதோ ஒரு  அசோகமரத்தின் சரித்திரங்கள் கலையாகத்தான்போகிறது. 

குறும்படங்களை இயக்க ஒருகாலத்தில் அதிகமான பணத்தேவை இருந்தது. அச்சூழலில் பணத்தோடு   உழைப்பையையும் பொருட்படுத்தாது. நண்பர்களோடு இணைந்து குறும்படத்தை முடித்தார். தரும. ரத்தினக்குமார். தற்போது தரை என்கிற திரை அமைப்பை நண்பர்களுடன் இயக்குகிறார். அமுதகீதன் கவிதை கட்டுரை தொகிப்பின் மூலம் தன்   காஞ்சியின் கலைகள் வாழ்வதற்கு நீர் ஊற்றி இருக்கிறார். உலக சினிமா திரையிடுவதற்கு தன் சொந்த வீட்டின் ஒரு பகுதியில் இடம்தந்து காமராஜ், லோகநாதன் அவர்களின் மனைவிகள்  தொடர்ந்து உதவிவருகிறார்கள். உலக படத்தை பார்வையிட உள்ளுர்க்காரர் நா.முத்துக்குமார் புரொஜெக்டர் தந்துள்ளார். இதையும் தாண்டி முன்னெடுப்பின் பணி தொடர்ந்து நடக்கிறது.  இப்படியான  பல்லவர்களின் வாரிசுகளால்தான் காஞ்சிபுரத்தில் புதிய இளைஞர்கள் படிக்கவும் உலகப்படத்தை பார்க்கவும் தொடர்ந்து குவிந்துகொண்டே இருக்கிறார்கள்  இரண்டு முன்று பேருக்கு மிகாமல். ஒண்ணாங்கிளாஸ் பையன் தவறாமல் டுயூஷன்   போகிறான்.  இளைஞர்களிடம்  இலக்கிய புறக்கணிப்பு ஏன்?  யாரிடம், எங்கே கோளாறு?
                   

No comments: