Saturday, May 21, 2011

புரிந்துணர்ந்தது

  வயிற்றை பெட்ரோலால் நிரப்பிக்கொண்டு நின்றிருந்தது. ஸ்டார்ட் செய்யும்போது இயக்குகிறவர்களுக்காக சலிக்காமல் ஓடத்தொடங் கிவிடுகிறது. இதை வாகனம் என்று நினைத்தால் தவறு. தற்காலத்தில் மனிதன்தான்  சில நேரம் உண்மையாக பல நேரம் பொய்யாக ஓடிக்கொண்டிருக்கிறான். இச்சூழலில்தான் ஜீ. முருகன் எழுத்துக்கள் மிகவும் தேவையாய் இருக்கிறது. அக்றினைகளின் பாஷைகளை புரிந்து கொள்வதின் மூலம்,   சுதந்தரமாக அவைகளை வாழ்விக்கமுடியும், என்று மறை முகமாக அவைகளுக்காக வாதிடுகிறார். ஒரு நபர் பறவைகள், மிருகங்கள்  மீது அன்புசெலுத்துகிறபோது,  நாம் சகமனிதன் மீது   அன்பு செலுத்தக்கூடாதா?  என்ற கேள்வியை எழுப்புகிறார்.

பல செயல்களில் கரைந்து மனிதன் எவ்வாறு  எதோ ஒன்றுடன் பின்னி பினைந்துகொண்டு வாழ்வை கடத்துகிறானோ! அவ்விதமாகவே அவருடைய கதைகள் கைவிடப்படும் மிருகங்களுடனும், மனித உணர்வுகளுடனும் அழகியலுடனும், மாயவாத புனைவுகளுனும்  பின்னிச்செல்கிறது. இவைகளை   காண்டாமிருகம், இணையதளத்தின் படைப்புகளில் அறியமுடிகிறது. 

இதற்கு நேர்மாறாக ஒரு படைப்பாளி எந்த சூழளில் போராளியாக மாறிவிடுகிறான். இயக்கங்கள் அவனை  எவ்வாறு  பயன்படுத்திக் கொண்டு, இயக்கமே அவனுக்கு எப்படி பயனற்றதாய் மாறிவிடுகிறது. தன்னை தொடற்சியாக போராட்டங்களில் கரைத்துக்கொண்டு, அவன் பெறுகிற வெற்றி என்ன? அவனுக்காக இயக்கங்கள், சமுகம் கண்ணீர் வடிக்கிறதா? என்கிற கேள்வியை 'இனியவன் இறந்துவிட்டான்'  என்கிற குரு நாவல் மற்றும் 'புத்தரின் தொப்பி'சிறுகதையில் வைக்கிறார்.
 
தங்களையே மனிதனுக்காக ஒப்புக்கொடுக்கும் மிருகங்கள், வாழும் வரையாவது நிம்மதியாக இருக்கின்றனவா? அவைகள் எப்படி அற்பமாய் எண்ணப்படுகிறது  என்பதை அவரின் பலகதைகளில் கானமுடியும். குறிப்பாக பாரிச வாயு, குரங்குகளின் வருகை'யை  சொல்லலாம். வைத்தியத்திற்காக புறா வாங்கவரும் பையன்  புறா பட படத்த இடங்கள் வெருமையாய் இருப்பதை நினைத்து ஏமாறுகிறான். புறா சாமாதானத்தின் அடையாளம் மட்டுமல்ல. அது கலகலப் புக்குரியது. கூண்டிலிருந்து ஜோடியை அழைத்துக்கொண்டு வெருமனே காற்றோட்டமாக சுற்றிவந்து மீண்டும் கூண்டில் தங்கி சிரிக்கும். தன் காதலியை கலவிக்கு அழைத்து ஆண்மையை நிருபிக்க கொக்கரிக்கும். காலையும் மாலையும் கோயில்களிலும் மசூதிகளிலும் உரத்த குரல் எழுப்பி தொழுகை நடத்தும். அப்படியான புறாக்கள் எங்கே என்று தேடும்படியாக வாசகர்களை கதைக்குள் இழுப்பார். கடைசியாக முடிக்கும்போது  'கண்களை சிமிட்டிக்கொண்டு  தலையை திருப்பிப் பார்த்தது'. என்று சொல்லி அதன் இயலாமையை அற்புதமாக சித்தரிப்பார்.

தங்கள்  குழந்தைகளின் அடாவடியான அடம்பிடித்தல் போக்கை சற்றும் நொந்து கொள்ளாதவர்கள், குரங்குகளின் வருகையால் கிராமத்தின் ஒழுங்கே கெட்டுவிட்டதுபோல் அவைகளை  துரத்திவிட திட்டமிடுகிறார்கள. குரங்குகள்  வயிற்றுப்பசிக்கான சுட்டித்தனங்களைத் தான்  கடைபிடிக்கிறது. அதற்காக தீவிரவாதி குழுவாக அதை ஒடுக்க நினைக்கிறார்கள். குரங்குகள் தாய்மண்ணை நேசிப்பதுபோல்  கிராமத்தையே சுற்றி சுற்றி வருகிறது.  என்றாலும் விடாப்பிடியாக  அவைகளை துரத்த  வக்கிரமான முடிவுகள் எடுக்கிறார்கள். மீண்டும் அவைகள் காடுகளில் துரத்திவிடும்போது கிராமத்தில் வெறிச்சோடிய நிலை கவ்விக்கொள்கிறது. இவைகள் எளிய நகைச்சுவையோடு மிகுந்த சோகத்தையும் வாசகர்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது. 
 
மேம்போக்கான வாசிப்புக்கு சில கதைகள் நிச்சயம் குறியிட்டு கதைப்போல்தான் தோன்றுகிறது.  சற்று ஆழ்ந்து வாசிக்க வாழ்வில் இருந்து விலகாத தவிர்க்கமுடியாத கதைகளாக அவைகள் விளங்குகிறது. சில கதைகள்  குறியீட்டு கதைகளாகவும் இருக்கிறது. மான், மாயக்கிளிகள் போன்ற கதைளைச் சொல்லலாம்.

விலங்குகளை உற்று நோக்குகிற ஆசிரியர் மனிதர்களை கண்காணிக்காமல் விட்டு விடுவாரா? மனித வாழ்நிலை சூழலை, உணர்வுகளை, பாலியல் போராட்டங்களை தன்னுடைய படைப்பாற்றலால் வெற்றிகொள்கிறார். குறிப்பாக 'சாயுங்காலம்'.  வயது முதிர்ந்தவர் நோய்மையால் படும் வேதனை. முதியவரின் மகன் வேலையாளின் மீது கொள்ளும் விசாரிப்பு. வேலையாளின் மவுனமான  ஆழ்மனதை அறிந்துகொள்ள முடியாத அங்கலாய்ப்பு.  கடைசி வரை  வெறுமையுடன் கடக்கும் வேலையாள். தாத்தாவின் மரணம். இப்படி  புதிராகவே கடந்து முடிகிறது வாழ்க்கை, என்பதை தெளிவாக பல கதைகளில் வைக்கிறார்.    

இதைபோல மஞ்சள் பாம்புகள், வெம்மை, ஆசிர்வதிக்கப்பட்டவள், ஊஞ்சல்  போன்ற கதைகள் மிகவும் சிறப்புக்குரியதாவே  இருக்கிறது. குழந்தைகளின் ஏமாற்றம் ஆண்,பெண் உறவில் அந்தரங்கமாக தரிசிக்கு இன்பங்கள். அதன் பால் பெண்ணிற்கு கிட்டும் வாழ்வியல் ஏமாற்றம் இவைகளை மிகவும் நுட்பமாக குறிப்பிடுகின்றார். ஆசிரியன் கதைகளை தரம் பிரிப்பதற்காக இவைகளை குறிப்பிடவில்லை. அதற்கான அனுபவமும் எனக்கு குறைவுதான். என் மனதில் ஆழபதிந்த கதைகளாக இருப்பதினால் குறிப்பிட்டேன்.   

என்னளவில் சிலகதைகள் வாசிப்புக்கு தடை ஏற்படுத்தும் கதைகளாகவும். பார்க்கிறேன்  குறிப்பாக 'விசுவாசி' முதல் பேராவிலே அவன்  இவன் என்று பெயரிடப்படாமல் கதையை நகர்த்துவது. திடிரென மிருகங்களுக்கு பெயர் வைத்து கதையில் நுழைப்பது. மிகவும் எளிதான கதையை  யார் எந்த வாக்கியம் என்ற குழப்பத்தால் வாசிப்பு தடைபடுகிறது. இவைகளை வாசிப்புதளத்திளிருந்தே பதிவுசெய்கிறேன்.  அவர்  படைப்புளை இன்னும்  முற்றிலுமாக வாசிக்கவில்லை. 
முக்கியமாக சிலகதைகளில் பழமையான மூட நம்பிக்கையை நிலை நிறுத்த முயற்சிப்பது போன்ற நிலை தென்படுகிறது. இவைகள் எனக்கு சிறு குறைகளாக தென்படுகிறது. இவைகளை கணக்கில் கொள்ளாது பார்க்கிறபோது. இன்னும் ஐம்பதாண்டு, அல்லது நூறாண்டு   கழித்து ஒரு வாசகன் இக்கதைகளை வாசித்தாலும் தமிழரின் சிறப்பு வெளிப்படுவதாகவே இருக்கும். தமிழ் எழுத்தாளன் பறவைகளையும், மிருகங்களையும் கூட நேசித்திருக்கிறானே! சிறப்புக்குரியவன்தான் என்று இக்கதைகள்  பேசச்செய்யும்.  


ஜே.டி 

No comments: