Wednesday, May 18, 2011

சிறுகதை

                                                 கருப்பன் குடுமி


தலையில் சுழியிருக்கும் சுற்றளவு மட்டும் இரண்டு கையில் சுருட்டி முடிச்சி போடுமளவு மயிர் இருந்தது. கொண்டையாக முடிச்சும் போட்டிருந்தார்.  மற்ற இடங்களில் போலிஸ் கட்டிங்போல இருந்தது. எந்த மகராஜன் கொடையளித்தாரோ? அடுப்புக்கரியை குழைத்து உடல் முழுதும் தடவியது போல் கருப்பாக இருந்தார்.

குடுமிக்காரருக்கு எங்கள் வீட்டிற்கு எதிர்வீடுதான். இடையில் இரண்டு மனைகள்  காலியாக இருந்தது.  பக்கத்துதெருவில் இருந்தபோதும் எதிர்வீடு என்றே சொல்லிக்கொள்வது வழக்கம். இடையில் இருக்கும் காலி மனையில் திடீரென வீடுகட்ட ஆயித்தமானார்கள். அவசரமாக மனையை அளந்து கல்லு நட்டார்கள். அதிகாலை புது செங்கல் நிறுத்தி அடர்த்தியான பூமி பூசைகள்  நடந்தேறியது. உதிரிப்புக்கள், குங்குமம், சந்தனம் மஞ்சள் குழத்த வாசனை வட்டமிடும்  காற்றில் சுழண்டுகொண்டிருந்தது. மறுநாள் காலங்களை நிறுத்த குழிகள் எடுக்கப்பட்டது. இன்னும் இரண்டு குழிகள் எடுத்துவிட்டால் கம்பிவேலைகள் ஆரம்பித்துவிடுவார்கள். அன்று மாலை கோடைகால மழை  பொழிந்தது. ஒன்னரைமணி நேரம் இடைவிடாது பொழிந்தது. மழைத்துளி கனமாயிருந்தது. ஒரு  பாத்திரத்தில்  பிடித்துவைத்து மொத்தமாக ஊற்று வதுபோல் இருந்தது. அதன் சத்தம் இறந்தவர்களுக்கு இசைக்கும் சட்டியின் இசைபோல நர.. நரவென்று கேட்டது. நேற்று இந்நேரம்  காய்ந்து கிடந்த பூமிதான். என்ன செய்வது இயற்கை சில நேரம் ஆங்காரத்தில் மூழ்கிவிடுகிறது.  அந்த ஒரு நாள் மழை இல்லாமல் இருந்திருந்தால் குடுமிக்காரர் வீடு எங்கள் பார்வையில் இருந்து மறைந்து விட்டு இருக்கும். புதிய வீடு எதிர்வீடாக அமைந்திருக்கும். ஒரு நாளில்   எவ்வளவு நிகழ்வுகள் புரண்டுபோகிறது. ஏன் ஒரு நிமிஷத்தில் எடுக்கிற முடிவு எவ்வளவு பெரிய வரலாறாக மாறுகிறது. அதன்பிறகு அவர்களுக்கு எதற்காக  மனம்  சொர்ந்துபோனதோ? குழிகள் பொருட்காட்சியாக மாறிவிட்டது.

என் வீட்டின் வராண்டாவில் நின்றால் குடுமிக்காரர்தான் முதலில் தென்படுவார். சில நேரம் சின்ன சில்வர் தூக்கு  எடுத்துசெல்வார். நான் இருக்கிற தெருவில் எல்லா இனமும் கலந்து இருக்கிறது. நான் காலிமனை வாங்கும்போது திட்டமிட்டெல்லாம் வாங்கவில்லை. அப்போது அநேக மனைகள் கழனிக்காடாகவும் பனைமர தோப்புகளாகவும் இருந்தது. ஒரு சகோதரி தூண்டுதலில் ஏனோதானோ என்று வாங்கியது.  அப்போது வாய்க்கவில்லை என்றால் என் வருமானத்திற்குள்  வாடகையிருந்து, இப்பொது  ஒரு புத்தகம் கூட வாங்கமுடியாது. குடுமிக்காரர் வசிக்கும் தெருவில் குருப்பவுஸ் வருசையாக இருந்தது. இப்போது அங்கும்  சில வீடுகள் வராண்டாவில் கார் நிருத்தும் வசதி வைத்து வீடுகட்டுகிறார்கள். குடுமிக்காரரும் ஐந்து, ஆறு வருஷம் முன்புதான் அந்த இடத்தில் குடிவந்தார். அவர் குடிவருவதற்கு முன்பு காலி மனையாய் இருந்தது. முதலில் தென்னங் கீற்றுதான் வேய்ந்தார். அப்போதெல்லாம் குடுமி வைத்திருந்தாரா? என்பதை கவனிக்கவில்லை. அவர் மனைவி ஏறக்குறைய ஆறு அடி இருப்பாள். கூந்தலுக்கும்,  உடலுக்கும் நிறம் வித்தியாசம் இருக்காது. நீண்ட கூந்தல். முகம் அழகுதான். உடல் வாகுக்கு ஏற்றவாறு ஸ்தனங்கள் துருத்திக்கொண்டு இல்லை. அதற்காக சிறியது  என்றும் சொல்லிவிடமுடியாது. அவர்கள்  முன்று பிள்ளைகளும்கூட பெற்றவர்கள்  நிறத்திற்கு சற்றும் குறைவு  இல்லாமல் இருந்தார்கள்.

குடுமிக்காரர் வீடு கல்கட்டடமாக மாறத்தொடங்கியது. குடுமிக்காரர்,மனைவி பிள்ளைகள் சேர்ந்து அவர்களே சிறுக சிறுக கட்டினார்கள். ஒரு நாள் பத்தடி சுவர் முன்று அடி உயரம் எழுப்புவது. நேரம் காலம் கணக்கு கிடையாது மாலை முன்று மணிக்கு தொடங்குவார்கள். சிலநேரம் அதிகாலை அந்து மணிக்கு குடுமிக்காரர் லைட் போட்டுக்கொண்டு சென்றிங் அடிக்க பலகையை அளவு பார்த்துக்கொண்டிருப்பார். இப்படித்தான்  வீடு கொஞ்ச கொஞ்சமாக எழும்பிக் கொண்டிருந்தது. எதேச்சியாக அந்த தெரு போகும்போதுதான் அவைரை கிட்டத்தில் பார்த்தேன். அப்போதுதான்  தலையில் குடுமி அவர் அசைவுக்கெல்லாம் ஆடிக்கொண்டிருப்பதை கண்டேன்.

குடுமி பிராமணர்கள் தானே வைப்பார்கள். அதில் இருவேறு பிரிவு இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். இவர் இவ்வளவு கருப்பாக இருக்கிறார்,எந்த பிரிவை சேர்ந்தவராக இருப்பார். பிராமணர்கள் கருப்பாய் இருக்ககூடாது என்று எதாவது சட்டமா என்ன?  மணுவில் எப்படியோ? எங்கள் அலுவலகத்திற்கு ஒரு பிராமணர் வருவார். மாவட்ட கல்வித்துறையில் சூப்பிரன்டென்ட்டாக இருந்தார். அவர்கூட  கருப்புதான். அவர் வேட்டியே கட்டமாட்டார். எப்போதும் மேல்சட்டை போடாமல் இருக்கமாட்டார். தலையில் பிராமனருக்கான  அடையாளம் கொஞ்சமும் பார்த்ததில்லை.

பள்ளி அலுவலக நண்பர்களிடம் நன்றாக பழகுவார்.எப்போதாவது எதேச்சியாக அலுவலகம் வந்துவிட்டால் அரபாத் பிரியாணி இரண்டு ஆப் ஆடர் சொல்லுவார். எங்கள் எட்கிளர்க் சிரித்துக்கொண்டே வாங்கிவரச்சொல்லுவார். போகும் ஆட்களிடம் சூப்பிரன்டென்ட் தம்பி லெக் பீஷாக இருக்கட்டும், அப்பிடியே தயிர் பச்சடி, பீடா மட்டும் ரெண்டு வாங்கிக்கோ என்பார். ஏதாவது முக்கியமான அரியர் பில், பள்ளியிலிருந்து அவர் டேபிளுக்கு போயிருந்தால் பள்ளிக்கு வருவதுண்டு. இல்லை என்றாலும் சோசியலாக வருவதும் உண்டு. ஏன் இவர் தன் இனத்தின் அடையாளங்களை வெளியில் காட்டுவதே இல்லை?

அலுவலகத்தின் எந்த சந்தேகம் கேட்டாலும் அந்த ஜீவோவை பார்க்கணும், இந்த கிளார்க்கை கேட்கனும் என்று மழுப்புவதெல்லாம் இல்லை. எல்லாவற்றிர்க்கும் பதில் நுனிவாயில் இருக்கும். எப்படி  இவரால் முடிகிறது என்று ஆச்சரியப்படுவார்கள். அவர் சென்றபிறகு நான் கேட்பேன் சார் அவர் உண்மையிலேயே பிராமனர்தானா? எங்கள் கிளார்க் சிரித்துக்கொண்டே ஆமாம்பா உனக்கு ஏன் சந்தேகம் சுத்தமான பிராமணர் பிரியாணி வாங்கினு நேரா சின்ன வீட்டுக்குத்தான் போவார் என்று சிரிப்பார்.

அவரை போல இந்த குடுமிக்காரரும் பிராமனர்தானா? ஒருவேளை என் எதிர் வீட்டில் இல்லாமல், வேறு எங்காவது அவரை பார்த்திருந்தால் அவர் பிராமணர் என்பதில் எனக்கு கேள்வியே எழுந்திருக்காது. கருப்போ, சிவப்போ நமக்கு எந்த பேதமும் இல்லை. ஆண்களில் குடுமி வைத்திருக்கிறார் அவர் பிராமணர் அவ்வளவுதான்.

அனால் இவர் என் கண்ணெதிரே தலித் வாழும் பகுதியில் வாழ்கிறார். கட்டட வேலை, கம்பிகட்டுதல், குழாய் சரிப்பார்த்தல் போன்ற எல்லா வேலைகளையும் பார்க்கிறார். இவர் எப்படி  பிராமணராக இருப்பார். அவர்களாக வந்தாலும் நீ ஏன்யா பொலம்பி தள்ளுற என்று வாசகர்கள் கோபப்படவேண்டாம். நான் ஒரு கண்காணிப்பு கோபுரத்தில் பணிசெய்கிற உழியனேத்தவிர, முற்றிலும் சார்பு நிலைகொண்டு கண்மூடித்தனமாக ஓட்டு சேகரிப்பவன் அல்ல.

நானும் மளிகைக்கடை, பால்கடை, எலக்ட்ரிகல் சேல்ஸ் அண்டு சர்வீஸ், சொந்தமாக வைத்து போண்டியானது உண்டு. வேலைன்னு மில்லு, வெல்டிங், பஸ் டிப்போவுல கூலி வேலை செய்தவன்தான்.  இரண்டாயிரத்தி நான்கில் எதோ ஒரு இலக்கிய கூட்டத்தில் கலந்துகொண்டதால்  என் தலைக்கு பயித்தியம் பிடித்துக்கொண்டது. அக்கூட்டத்தில் பேசியவர்கள் மந்திரங்கள் ஓதாமல், ஆவியோடு ஜெபிக்காமல் லேகியோனை எனக்குள் இறக்கிவிட்டார்கள். அதிலிருந்து புத்தகத்தால்  மூளையின் மெல்லிய இழைகள்  கட்டவிழ்ந்து எழுகின்றது, எழுதுவது  என் வயிற்றை பசியற்றதாக மாற்றிவிட்டது.  அப்போது யாரிடத்திலும் தேவையில்லாமல் பேசுவது இல்லை.  பிறகு அறிமுகமில்லாத நபர்களிடம் தானாக முயன்று பேசும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ள மனம் ஏவுகிறது. அவர்கள் வாழ்வில் ஏதாவது வாழ்வின் ரகசியங்கள் புதைந்து கிடக்கலாம் என்ற சுயநலம்தான். அப்படித்தான் குடுமிக்காரரிடத்தில் பூர்வீகத்தை விசாரித்துவிடால் விடை கிடைத்துவிடும் என்று யோசனையாய் இருந்தது.

ஒரு சக மனிதனிடம் பேசுவதற்கான வாய்ப்பு நாமாக உருவாக்க வேண்டியிருக்கிறது.  அவர்வீட்டிற்கு சென்று விசாரிக்கலாம் என்று நினைத்தேன். அவர் மனைவி தெருவில் தண்ணீர் பிடிக்கும்போது "என் வீட்டை எதுக்கு நோட்டம்  இடுகிறார்களோ தெவிடியாளுகள் என் வீட்டமட்டும் எந்த ஆம்பிளைகள் வரான் போறான் பாக்கிறதே இவுளுங்க வேலையாபோச்சி. நாங்க தொறந்தா போட்டுங்கெடுக்கிறோம்"என்றும், பக்கத்து வீட்டுக்காரி " ஒரு பொருள வெளியில ஏமாந்து வைக்கமுடியல. நேத்து சயந்திரம்தான் என் ஊட்டுக்காரன் வாங்கியாந்தான் புது பேஸ்ட் அத்த கூட துக்கிம்போயிட்டு இருக்கிறாங்க" என்றும் அடிக்கடி ஏதாவது பேசுவார்கள். அதற்காகவே பொதுவாக பக்கத்து வீடுகளுக்கு போக சற்று  தயக்கம்.

அவரிடம் பேசுகிற வாய்ப்பே கிடைக்கவில்லை. நான் காலையில் எழுந்து வெளியில் வரும்போது  T.V.S 50 XL க்கு முன்பான மாடல் T.V.S 50  வண்டியை ஏறி மிதித்து மிதித்து கிளம்புவார். பின்னாடி ரயில் வண்டியைப்போல் புகை விட்டுக்கொண்டு முக்கி முனகி நகரும். முன்னாடி டிக்கியில் காலி தண்ணீர் கேன் இருக்கும். சிலநேரம் நான்  இரவு இரண்டுமணிவரை கணினியின் களங்களை காண்பதால் காலையில் எழுந்து சற்று தாமதமாக வெளியே வருவேன்.   அதற்குள்   கேன் தண்ணீர் நிரப்பிக் கொண்டுவருவார்.  தினமும் கேன் தண்ணீர்தான். அதனால் பிராமணர்தான் போல யோசித்தாலும், தற்போதைய பொருளாதாரத்தில்  கேன் தண்ணீர் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. யார் வேணுமென்றாலும் வாங்க வேண்டியதுதான். உடலை சுத்தமாக வைத்திருப்பதற்கு அவசிய தேவையாய் இருக்கிறது. அதன் பிறகு அவர் நினைவுக்கு வரவே இல்லை. குடுமி மறந்தேவிட்டது.

ஒருநாள் திடீரென்று பள்ளியில் டிரைனேஜ் பைப்லைன் போடுகிற நபரைப்பார்த்தேன். அவர் எங்கள் வீடு இருக்கும் பகுதியை சேர்ந்தவர்தான். விசாரித்தேன். என்னைவிட  பத்துவயது கூடயிருப்பார்.     முன்பெல்லாம் என்னை பெயர்வைத்து அழைப்பார். இப்போது பள்ளியில் பெயர்சொல்லி அழைக்க சங்கடப்பட்டார். நான் புரிந்துக்கொண்டு பேசினேன்."நீங்கதான் வேலை செய்யிரீங்களா? எப்ப தொடங்கிநீங்கனே தெரியலையே? என்றேன்.

"இல்ல பொங்கல் லீவுல எப்படியாவது முடிச்சி  குடுத்திடனும் என்று சொல்லிட்டாங்க.குண்டா இல்ல சாரு  அவருதான் இன்சார்ஜ். வேலைய முடிங்க கடைசியாக கணக்கு பாத்துக்கலாம்" என்றார். மீண்டும் அவரே நாங்க ரெண்டு நாளா இங்க தான் வேலை செயிறோம். தினம் ஆளுக்கு இரண்ணூறு  குடுத்தாரு. உங்க வீட்டுக்கு எதித்தா மாதிரி இல்ல, அவுருதான் மேஷ்த்திரி" என்றார்.

"யாரு குடுமி வச்சிருப்பாரே அவுரா "

'ஆமாம்,ஆமாம்' என்று வேகமாக ஆமோதித்தார். சரிவா என்று அவரிடம் அழைத்தேன். காசுவாங்க காத்திருந்தவர்   பொறுப்பாளர்கள் எங்காவது போய்விடுவார்களோ என்பது போல் சற்று தயங்கினார். அதற்குள் குடுமிக்காரர் கைகால் அலம்பிக்கொண்டு வந்துவிட்டார்.  கால்களின் மயிர்கள் ஈரத்தில் தோலோடு ஒட்டியிருந்தது.  இரண்டடி மட்டகோல், ஒயர்கூடை கையில் இருந்தது. வெளி வீடுகளில் வேலை செய்தால் குரல் கறாராக பணத்தை கேட்கும். இது பள்ளி என்பதால் சற்று தயங்கி நின்றிருந்தார்கள்.

நான் குடுமியைப் பற்றி எப்படி விசாரிப்பது என்று தயங்கி வேறு விஷயங்களை பேச ஆரம்பித்தேன். அதற்குள் உள்ளிருந்து வந்த பள்ளி பணியாளர் குடுமிக்காரரிடம் "யோ உமாபதினு சொல்லு" என்றார். நான் என்னடா இவன் குறுக்க நுழைந்துவிட்டான் என்று  வருந்தினேன். குடுமிக்காரர் சடாரென்று "உங்கொம்மாகூதி" என்று சாதரணமாக சொல்லி சிரித்தார். அவர்கள்  இப்படி கேட்டு, சொல்லி கிண்டல் செய்வது வழக்கம்போல மற்ற இருவரும் சத்தமாக சிரித்துவிட்டார்கள். எனக்கு லேட்டாகத்தான்  புரிந்தது. இதுதான் நேரமென்று  ஏங்க  இந்த குடுமி பிறந்ததிலிருந்தே வச்சி இருக்கிறிங்களா? என்றேன்.

கருப்பன் லேசாக சிரித்துவிட்டு மொத்தமா வச்சிருந்தா அஸிங்கமா இருக்கிறது. அதனால பின்னால மட்டும் கொஞ்சம் முடி வேச்சிகினேன். கோயிலுக்கு நேந்துவிட்டிருக்கிறேன் சார். 

ஜே.டேனியல்  


           

.    

No comments: