Monday, May 9, 2011

கவிதை

                              அம்மா                                   

அம்மா 
நான் உனக்கு எதையுமே செய்யவில்லை 
எதையுமே செய்யமாட்டேன்
என்று தெரிந்தும் என்மீது
எப்போதும் அன்பாகவே இருந்தாய்
அன்பாக இருக்க உன்னால்மட்டும்
எப்படிமுடிந்தது.

கலைத்துப்போட்ட 
அப்பாவின் இரக்கமில்லாத 
இரவை 
ஆயுதமில்லாத போர்வீரனாக இருந்தும் 
எதிரியை வெற்றிகொண்டதுபோல் 
வெள்ளிக்கிழமை விடியலை 
குளித்து வாசல் அமர்ந்தாய்.

நான் கேட்காமலே 
பசியாயிருப்பேன் இருப்பேனென்று
மடிமீது கிளத்தி பாலுட்டினாய் 
உன் ரத்தம் கலந்த பால்
வயிறு முட்டிக்கொண்டது 
இருந்தாலும் 
என் வயிறை தடவிக்கொண்டே இருந்தாய்.
நான்
இரக்கமில்லாமல் உன்மேல்மலம் கழித்தேன்
உனக்கு கோபமே வரவில்லை
நாற்றமெடுத்த என் கழிவைப்பார்த்து 
நீ முகம் சுளிக்கவுமில்லை.

அம்மா 
நான் உனக்கு எதையுமே செய்யவில்லை.

அப்பாவிடம் கெஞ்சி,கெஞ்சி
குழம்புக்கு வாங்கிய
இரண்டு ரூபாயைக்கொடுத்து
அன்னாச்சிக்கடைக்கு போக
என்னெய் கெஞ்சுவாய்
அடுப்பு புகைவதைப்பார்த்து
கமிஷன் கொடுத்தால் போவேன்
என அடம்பிடிப்பேன்.
நீ செல்லம், ராஜா என்று கெஞ்சினாலும்
மறுத்து நிற்பேன்.

சோறு போடமாட்டேன் போ என்று
நீயே கடைக்கு போவாய்
நான் நிர்த்தாட்சனையாய்
விளையாட ஓடிவிடுவேன்
இரவு சாப்பிட
இரண்டாவது தெருவிற்கு வந்து அழைத்து நிற்பாய். 

அம்மா 
நான் உனக்கு எதையுமே செய்யவில்லை.

என் பிள்ளைக்கு கலியாணம் பண்ணிடு 
என் கண் குளிர பார்த்துவிடுகிறேன் 
என்று அப்பாவை தொந்தரவு செய்ததால் 
நடந்தேறியது
முணாம்மாசம் 
மாமியார் வீடு போன நான்
திரும்பவே இல்லை
மண்ணைசுமக்க இறங்கியபோது 
நானும் உன்மீது மண்ணை சுமத்தினேன்.
அம்மா 
நான் உனக்கு எதையுமே செய்யவில்லை.

இடைவெளி நிறைந்த 
வானையும் மண்ணையும் 
இனிமையாக இசைத்து
நிரப்புகிறது பறவைகள்
அம்மா 
நான் உனக்கு எதையுமே செய்யவில்லை.

ஜே.டேனியல்

No comments: