Friday, February 18, 2011

கவிதை

    உருமாறும் வெண்குதிரை   


வெண்குதிரை 
இந்நிலத்தை தன் பிடரியால் 
பெருக்கிக்கொண்டிருந்தபோது 
என் கொள்ளுத்தாத்தா 
ஊர் தலைவர் வீட்டுக்குப் பின்னால்  
சாணியை பெருக்கிவாரினார்.

அக்குதிரை 
பின்னந்தொடையில் ஈட்டிபாய்ந்து 
கொட்டடிக்கோட்டையை
விட்டு ஒடியபோது.
தாத்தா 
உள்ளூர் மயில்களின் அசைவில் 
உதிரும் இறகுக்காக வாதாடினார்.

புத்தக இடுக்குகளில் 
மயில் இறகை சுமந்த அப்பா 
வெண்குதிரையின் எச்சத்தில் முளைத்த 
A முதல் D வரை எழுத்தை 
முட்டி மோதிக்கற்றுக்கொண்டார்.

சாது, தீது, ரோகம் 
உடைந்து கலந்து குழைந்து 
பதியம் போட்ட விதைப்போல்
இலக்கு, அறம் தரித்த  இயல்கள்
முளைக்கும்போதே முற்றிய கைகளுடன் 
மனித அடையாளத்தில் 
அடிக்கடி மதம்பிடிக்கும் 
தற்போது கிராமங்களை சூரையாடும்   
உள்ளூர் யானையாய் வளர்ந்துவிட்டது.

அறயியல் அரசமரம்
அதன் அடிவேரை
துடைத்து சுத்தம் செய்யத்தெரிந்த
யாருக்கும்   நிழல் தருகிறது.
இலக்கு இயல் ஆலமரமாய் 
ஆயிரம் விழுதுடன் குழுக்குழுவாய் 
வேர்தரித்துக்கிடக்கிறது. 
விழுதை கண்ட என் கண்கள் 
கிழிந்த புடவையில் 
தூளிக்கட்டி தாய் பாடிய 
வார்த்தை நினைவு வந்தது.
குடுகுடுப்பைக்காரனின் கினுகினுப்பைக்கேட்டு 
ஓடிவரும் குழந்தையாக 
ஓடிவந்து விழுதைப்பிடித்தேன் 
வாழ்க்கையை  தரிசிக்க.

என் கைப்பட்டதும் சுருண்டு 
உயர்ந்து அதன் பிறப்பிடத்தில் நின்றது
ஏன் இப்படி? தீ இட்டது போல் பட்டதா என்றேன்.

இல்லை இல்லை 
அதெல்லாம் மறந்துவிட்டோம் 

முன்னோர்கள் ஊன்ருகோளின்
சுற்றளவை, வைரத்தை, உறுதிப்பாட்டை
ஆய்வு செய்து உள்வாங்கி வா
உள்ளன்பாய் ஏற்றுக்கொள்வோம்
என சாரைப்பாம்பாய் விரைந்து ஏறி 
தலைதூக்கி பிரிந்த கரும் நாக்கு
வெளியில் நீட்டி எச்சரித்தது 
கைகொடுக்க மறுத்த விழுது. 


பாம்பானாலும் நாக்கில் 
விழுந்த வார்த்தைக்கு விஷமில்லை 
உண்மைதான் சொன்னாய் நண்பா 
தேடித்தேடி தேடிப்பிடித்தால் 
குடியுயர்ந்தோர், படிப்புயர்ந்தோர்
உழைப்பு, மனசாட்சி,  கற்பனைக் கலந்து
அவரவர் ருசிக்கு பெயர்வைத்து   
இதிகாசங்கள், வரலாறுகள், இலக்கியங்களும் 
வேரறுந்த காய்ந்த கோரைப்பல்லுள்ள
முள்ளில் சிக்கிய கதராடையாய் கிடக்கிறது
எந்த நாளும் சமூக நலனிலிருந்து பிரிக்கமுடியாததாய்.

ஆக மூலத்தை கண்டுபிடித்தேன். 
விடமாட்டேன் வருகிறேன் என்றபோது
முன்னேயும்  பின்னேயும் 
நவீனங்கள் ஈட்டியாய் கூர்பாயும்
கரை சேரவழியுண்டு 
குறுக்கே கால்பதித்தால் 
இசங்களும், இருத்தலும் 
தலை மறைக்க சுவர் எழுப்பி 
மந்திரங்கள் ஓதி நிற்கிறது.

அவன் வென்குதிரையாய் வந்தபோது 
கொள்ளுத்தாத்தா செய்ததை 
உள்ளிருப்போன் வெண்மயிலாய் மாறி
ஏன் என் கொள்ளுப்பேரனிடம்
திரும்ப பெற முயற்சிக்கிராய்.

வேண்டாம் வேண்டாம் 
சூதுகள் வேண்டாம்  
பழங்கள் வருஷிக்கும் காடுளும் இல்லை
வனவாசம் போக யாரும்  பாண்டவர் இல்லை.

இலக்கியம் தந்த முன்னோர்கள் 
தாங்கிய அணிகளன்களோடு
கூர்த்தீட்டீய  விமர்ச்சனங்களை அங்கீரித்து
ஒன்று பட்ட சமூக பரப்புக்கு
இணைந்தே  கைகொடுப்போம். 
நான் எப்போதும்  கையை உயர்த்துகிறேன்
குதிரையாய் மாறாமல் நண்பனாய் இருப்பதற்கு.  
 









No comments: