Monday, November 18, 2013

குறிப்பு,

                                                    90 விழுக்காடு


கிராமம் முழுக்க ஊதாரி குடிகார வாலிபர்கள்  90 விழுக்காடு உருவாகிவிட்டனர். என்று நினைக்கிறேன்.  இந்த சமூகம் என்னதான் பயிற்றுவிக்கிறது தெரியவில்லை.  அதற்கு யார் காரணம்? எது காரணம் அருதியிட்டு சொல்லவே முடியவில்லை.  சொஞ்சம் கூட சிந்திக்கிற அறிவை பயன்படுத்தவே இல்லையா? தாயின் மனவேதனையைப்பற்றி, தகப்பனின் பொருளாதார சிக்கலைப்பற்றி எதையாவது யோசிக்கிறார்களா? நம்முடைய வாழ்வில் யாரையெல்லாம்  மன வேதனைக்குள்ளாக்குகிறோம். நாம் உழைக்கிறோமே அந்த உழைப்பு சுரண்டப்படுகிறதா?  அல்லது சரியாகத்தான் கிடைக்கிறதா?   வஞ்சனையுடன் நம்மை ஆளுகை செய்கிறவர்கள் யார்? நமக்குள்ளே நம்மை காட்டிக்கொடுக்கிறவன் யார்?   அதிகாரம் யாரிடம் இருக்கிறது? அது நினைத்தால் சமான்யன்  ரோட்டில் நடமாடுவது சாத்தியமா? விடியும் நாட்கள் எல்லாம் சந்தோசம் மட்டுமே இருக்கும். அதை மீறி எதுவுமே நடக்காது என்ற தைரியமா?  இப்படி எதையுமே யோசிக்கத் திராணி அற்றவர்களாகத்தான் மேற்கூறிய 90 விழுக்காடு கிராம வாலிபர்கள் வளர்த்தெடுக் கப்படுகிறார்கள்.  இதற்குத்  தாய்த்தகப்பனாக  உலகமயம், ஊடுகளில் விரியும் ஊடகம் இருந்து வருகிறது.

பையன்கள் படிக்கும்போதே சகலத்தையும் செயலாக்கத்திற்கு கொண்டுவருகிறார்கள். பெரும்பாலும் முடிந்தவரைப் படிப்பது, வரவில்லை என்றால்  பாட்டன் வீட்டு பயிர் நிலம்போல தெரிந்த கம்பெனிகளுக்கு போவது. ரத்தம்  உறிஞ்சினாலும் பரவாயில்லை அவன் போடும் பிச்சைக்காசைக் கொண்டுவந்து வீட்டுக்கு கொஞ்சம் போட்டுவிட்டு, கூட்டாக சேர்ந்து தண்ணி அடிப்பது. சீட்டாடுவது. ரவுடித்தனங்களில் தன் பேச்சை நகர்த்துவது. சில நேரம் அதை செயல்படுத்தி பார்ப்பது.  தொடர்ந்து  இந்தக்  காரியங்களில் ஈடுபடுகிறார்கள். 

இவர்களை யார், எந்த அமைப்பு, எந்த மதம், எந்த பண்பாடு நல்வழிப்படுத்துகிறது? அது தேவை இல்லையா? ஏன் தேவையில்லை? இப்படிப்போனால் மிருகத்தைவிட கேவலமான                   நிலமைக்கு  மனித இனம் மாறுவதற்கு வாய்ப்பில்லையா? 

அப்பட்டமான முட்டாள் தனங்களை  மதங்கள் மூலமாக மனிதனுக்கு புகுத்துகிறார்கள் என்பதற்காக   கடவுளர்களை வெறுத்துவிடலாம், அந்த வெறுப்பின் கருத்துப்  பரப்பல்தான் நியாயமான நம்பிக்கையினால் ஏற்படுகின்ற அறத்தைக்கூட மனிதனிடம் இருந்து முற்றிலும் எடுத்துப்போட்டுவிட்டதா? 

மனிதனின் வாழ்வியலில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகின்ற மூடத்தனங்கள் முற்றிலும் ஒதுக்கப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், மனிதனிடம்  நியதியை  கட்டமைப்பதற்கு என்ன வழிவகை, எதின் மூலம்  வழிகாட்டப்படுகிறது. சமூகத்தில் அதற்கான தகுதி எந்த அமைப்பிடம், எந்த அரசிடம், எந்த இனக்குழுவிடம் இருக்கிறது. வழிகாட்டி இல்லாமல் புதிய புதிய சட்டங்கள் இயற்றப்டுவதால் மட்டும் நியதியை சமூகத்தில் மனிதனிடம் நடைமுறைப்படுத்த முடியுமா? 

குறைந்த பட்சம் பள்ளிகளில் அதற்கான   கொள்கை முடிவுகள் எதுவும் இல்லையா? அல்லது அதை உருவாக்க சாத்தியமே கிடையாதா? ஒரு மொழியை பயிற்றுவிப்பதுபோல் பிஞ்சு மனதில் தங்கும்படி மனித வாழ்வியல் நியதியைக் கற்றுக்கொடுப்பது குற்றமா? கலை பண்பாடுகளில், இலக்கியங்களில் அறம் சார்ந்த விஷயங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது. மனித மனத்தை யோசிக்கச்செய்வதற்குக்கூட நியதிகளை படைப்புகளில் சேர்க்கக்கூடாது. அப்படிச் சேர்த்தால் அது படைப்பு கிடையாது என்று குப்பையில் தள்ளுகிற நிலைதான் தொடர்ந்து இருக்கிறது. 

மனிதனின் மனம் இல்லாமல் வெறும் காகிதங்களை  உற்பத்தி செய்துகொண்டிருந்தால் எதிர்காலத்தில்  அவனின் நிலை என்னவாக இருக்கும். கடந்த காலங்களில்  நீதிக்கதைகள், அறநெறி புத்தகங்கள் அதிக புழக்கத்தில் இருந்தபோதும், அதைப்பற்றி பேச்சுக்கள் தாராளமாய் நடமாடியபோதும்.   அக்கால மக்களின் மனநிலை எப்படி இருந்தது. ஒரு வேளை தற்போது அறிவுஜீவிகளால் அத்தன்மை வாய்ந்த எழுத்துக்களை புறந்தள்ளுவதால்தான்  மனிதத்தன்மை அருகிவருகிறதா? கலை, இலக்கியப் படைப்புகளில் தேவைப்படாத ஒழுக்கவிதிகள், அறநெறிகள் தனிப்பட்ட மனிதன் வாழ்வில் கடைபிடிக்கவேண்டும் என்று கூறுவது சரியா? இலக்கியங்களுக்கு மனிதனின் வாழ்வை சீர்படுத்துகிற வல்லமை உண்டு என்று வாதாடும்போது   அதில் நெறிபடுத்துகிற எழுத்துக்களை காய் மறைவாய், இலை மறைவாய் மனிதனின் மண்டையில் பதியவைப்பதில் என்ன தவறு? 

இப்படியான பயிற்றுவித்தலை எந்த சமூக அமைப்பும், கலை, இலக்கியங்களும் தற்கால இளைய   சந்ததிக்குக்  கற்றுக்கொடுக்கவே இல்லை. அதன் சாபக்கேடுதான் பொதுவாக, சற்று கூடுதலாக கிராமங்களில் 90 விழுக்காடு இளைஞர்கள்  காட்டு மிருகங்களாக உருவாகும் சூழல் பெருகிக்கொண்டே வருகிறது.

காரணம் என்ன? எது?ஏன்?  பேசவேண்டும்.

ஜேடி 




No comments: