Wednesday, November 6, 2013

தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது எல்லாம்..... எனக்குள்ளும் இருக்கிறது.


தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது எல்லாம்.....
எனக்குள்ளும் இருக்கிறது.

கொஞ்ச நாளுக்கு முன்பு,  எந்தச்சூழ்நிலையிலும் நான் பெரிதும் மதிக்கும் உள்ளூர் படைப்பாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது. ஒரு விஷயத்தைச் சொன்னார். புதிதாக எழுத வருகின்றவர்கள். ஏன் அவசரப்படுகிறார்கள். சீக்கிரத்தில் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அப்போது நானும், அவரும் படைப்பைக்குறித்து விவாதமாக முரண்பட்ட  கருத்தை போனில் பேசிக்கொண்டிருந்தோம். 

(அவசரப்படுதல், வெளிப்படுத்தல்) வாக்கியம் என்னைக் குறித்தேப் பேசினார்.  ஆனால், அவரில் இருந்து புறப்பட்ட வாக்கியம் என்னை நேரடியாக காயப்படுத்துவதுபோல் வரவில்லை. அவரிடம் உள்ள மிக நெருக்கமான பண்பு அது. எதிர் வாதம் செய்கிறவர்களுக்கு, உவமானங்களின் மூலம் புரிதலை உணர்த்துவார். எதிர் நபருக்கு பெரிய அளவில்  மன உளைச்சலை ஏற்படுத்தாது. பெரும்பாலும் அவருக்குச்  சாதகமாகவே முடியும். நூற்றில் பத்து விழுக்காடுதான், எதிர் நபரின் கருத்தை ஆமோதிப்பதாக இருக்கும். ஆச்சரியம் என்னவென்றால் எதிர் நபரே மன திருப்தியாய், அவரின் கருத்தே சரி என  ஒப்புக்கொள்வார்.   பத்து விழுக்காடு அவராக, போனால் போகிறது என்று விடுவதுதான். 

 அப்படியா? விளம்பர விரும்பியா? ஒரு வேளை அவர் சொல்வது உண்மையாகத்தான் இருக்குமோ?  தன்னை ஒரு எழுத்தாளன் என்று காட்டிக்கொள்வதின் மூலமாக,  குறைந்த பட்சம் பக்கத்து தெருவில் இருக்கும் ரேசன் கடையில் கார்டு இல்லாமல் அரிசி கொடுப்பார்களோ?  அல்லது எதிர் வீட்டின்  நாட்டார் கடையில், 'இந்த மாசம் சம்பளம் வரல.  ஐம்பது ரூபா, ஒரு வாரம் கழிச்சித்தரேன்' என்றால் இவனெல்லாம் என்ன மனுஷன் என சொல்லாமல் விடுவார்களோ? அவர் சொன்னதை  வெகுநாட்களாக யோசித்துத்துக் கொண்டே இருந்தேன். 

மேலும், அந்த வாசகம்  உறுதிப்படும்படி  அந்த நேரங்களில் பல காரியங்களை செய்துகொண்டிருந்தேன். அதாவது பல சிறு பத்திரிகைகளுக்கு கதைகளை அனுப்புவது. தொடர்ந்து எழுதுவது. உச்ச கட்டமாக இணையத்தில் வரும்போது பழக்கமில்லாத தளங்களாக இருந்தாலும்,  சில நேரம் கதைகளை அனுப்புவது. அப்படிதான்   ஒரு முறை  மாமல்லனுக்கு, ஒரு கதையை அனுப்பியபோது “அலோ, மிஸ்டர் இனிமே கதை, கிதை அனுபுற வேலை எல்லாம் வச்சிக்காத என்று திருப்பி அனுப்பினார்.  இன்னொரு முறை மலைகள் இதழுக்கு, கதையை அனுப்பியபோது, சிபி செல்வன் நண்பரே  உங்கள் எழுத்தில் பிழைகள் வருகிறது. ஒரு எழுத்தாளன் ஒவ்வொரு முறையும் அகராதியைப் பார்த்துப் பார்த்து  எழுதமுடியாது என்றார். மேலும் உங்கள் அவசரத்துக்கு மலைகள் பயண்படாது என்ற தொனியில் சொல்லிவிட்டார்.   

ஆமாம், ஒவ்வொரு முறையும்  பார்த்து பார்த்து எழுதுவது மிகக்  கஷ்டம்தான். என்று உணர்ந்தேன். சற்றுநேரத்தில்  இல்லையே, ஒரே மூச்சாய் அகராதியை முழுதுமாக படித்துவிட்டால் எழுதுவது மிக மிக சுலபம்தானே என்று யூகித்தேன். ஆனால், அதை மெயிலில் அனுப்பவில்லை. நாம முட்டாள் தனமாகத்தான்  நடந்துகொண்டோம் வருந்தினேன். எதற்காக வருந்தினேன் என்றால் சிபி செல்வன் நண்பருக்கு  இரண்டு மூன்றுமுறை சாட்டில் கதைப்பற்றிக்  கேட்டுவிட்டேன். (அந்த சமயம் என் மெயில் முகவரி  யாரோ ஒருவரால் திருடப்பட்டு.  பல முறை விளம்பரச்  செய்தி என் மெயிலில் இருந்து எனக்கே வந்துகொண்டிருந்தது. அதனால், அனுப்பிய கதை போச்சோ இல்லையோ என்கிற பயம் இருந்தது, நிச்சயம் அவருக்குத் தெரியாது என்றே நினைக்கிறேன்.) 

இப்படி எல்லாம் செய்வதுதான் அவசரப்படுதல்  என்று ஆகிவிடுகிறதோ? தன்னை வெளிப்படுத்திக்கொள்ள துடிப்பதாக அர்த்தமோ?  என்று புரிந்துகொண்டேன். பிறகு என் அறியாமையை நானே வெறுத்து நொந்துகொண்டேன் இருந்தாலும் நாம்,அலங்காரத்தையோ, விளம்பரத்தையோ ஒருபோதும் கொள்ளையடிக்க விரும்புவதில்லை என்று, மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. ஆனாலும், இலக்கியம் என்று வருகிறபோது ஏன் இப்படி செயல்படுகிறோம் திரும்பத் திரும்ப யோசித்தேன். 

வாழ்வியல் நடைமுறைச் சார்ந்த அணுகுமுறையும், இலக்கியச் சஞ்சாரமும் ஒரேத்தன்மையான பழம் என்று எண்ணுவது சரியான பார்வையல்ல. என்கிற புரிதல் ஒரு மெல்லிய இழையாக விளங்கியது. என்றாலும்,  இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் மதிக்கத்தக்கவர் சொன்னது போல நாம் விளம்பர விரும்பிதானோ என்கிற ஐயம் இருந்துகொண்டே இருந்தது. 

மீண்டும் கொஞ்ச நாள் கழித்து,  நான் மதிக்கத்தக்வர்  புதிதாக இணையத்தை பயன்படுத்தத் தொடங்கினார். அவருக்கு கணினியின் செயல்கள் எல்லாமே புதிது.முதல் முறையாக அப்போதுதான் கைப்பழக்கமாகிறது.  சில நண்பர்களை வைத்துக்கொண்டு பழகினார். உடனே முகப்புத்தகத்தைத் தொடங்கினார்.  அதில் எப்படி எல்லாம் செயல்படலாம் என்று தன்னைவிட வயது குறைவானவர்களிடம் கேட்டுக்கேட்டு, தானே பேஸ்புக்கில் எழுதவும் கமெண்ட் போடவும் கற்றுக்கொண்டார். 

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், நன்றாக எழுதக்கூடியவர். ஒன்றிரண்டு கதைகள் எழுதியிருக்கிறார். அந்தக்கதையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. 'ஏங்க நீங்களாம் எழுதினால், என்னைப்போன்ற உதவாத ஆட்கள் எழுதுவதை விட்டுவிடுவோம். ஏன் நீங்கள் தொடர்ந்து எழுதவில்லை. கேட்டபோது. எங்க தம்பி, நாற்பத்தி இரண்டு வயசாகிடுச்சி இனிமே என்னத்த எழுதி நான் பேமஸ் ஆகப்போகிறேன் என்று சலித்துக்கொண்டு முடித்தார்.  

ஆனால், நான் குறிப்பிடுபவர் எழுபது வயதை தொடுகின்றவர். நினைத்தாலே ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு, இனிமேல் எதையாவது முயன்று பெறவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமே இல்லை. பேராசை இல்லாத தனி மனிதனுக்கு பூரணமாகக் கிடைக்கவேண்டிய எல்லாமே நிறைவாகப் பெற்றுக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். ஆனால், முகப்புத்தகத்தில் நண்பர்களைத் தேடவேண்டும். அவர்களின் பதிவுகளை வாசித்து  கமெண்ட் போடவேண்டும். சாலை வழியாக நடந்து செல்லும்போது இயற்கை அழகின் பிம்பங்களை படம் பிடித்து உடனே  தன் பக்கத்தில் பகிரவேண்டும். அடிக்கடி தனக்கு விருப்பமானதை எழுதவேண்டும். தட்டச்சு செய்வதில் சில நேரம் தவறு ஏற்பட்டாலும் தொடர்ந்து  பதிவுகளை போட்டுக்கொண்டே இருந்தார்.

அப்போதுதான் எனக்கு உண்மை புரிந்தது. அவர் செய்வது எல்லாமே தன்னை விளம்பரபடுத்திக் கொள்ளவோ,  அவசரப்படுகிறார் என்ற ஒற்றை அர்த்தத்துக்குள் மட்டும் அடக்கிவிடமுடியுமா? அவருக்கு அந்த விஷயம் மிகவும் பிடித்திருக்கிறது. செய்வதற்கான வாய்ப்பு வாய்க்கிறது. செய்யும்போது மனம் நிம்மதியை அடைகிறது. அந்த நிம்மதியை அடையத்தான் சற்று வேகமான செயலில் இறங்குகின்றார். என்று புரிந்தது. ஆனால், நான் யாரையுமே திருப்பிக்கேட்கவில்லை.

குறிப்பு- நகைச்சுவைக்காக மட்டுமே (புதியவர்களுக்கு வழிந்தா, தக்காளிச் சட்டினி. தேர்ந்தவர்களுக்கு  என்றால் மட்டும்  ரத்தமா?)

ஜேடி


No comments: