Monday, November 4, 2013

கவிதை,

 கொள்ளிக்கட்டை  நிர்வாணம்


கொள்ளிக்கட்டைகள்   நிர்வாணத்துடன்
எரிந்துகொண்டு போகிறது
நெரிசல் மிகுந்த கூட்டத்தில்

எரிந்து சிதறும்
அதன் ஜீவாசுவாசத்தின் சத்தத்தைக் கேட்க
முட்டித் தள்ளிக்கொண்டு வருகிறார்கள்.

பத்து அடிக்கு ஒரு நடுகல்களை
பறக்கவிடுகிறார்கள்.

மகா பட்டங்களில் தங்களை வரைந்து
வானத்தில் பறக்கவிடாமல்
தெரு முக்குகளில் நிறத்துகிறார்கள்.

இப்போதெல்லாம் அடிக்கடி
புதிய புதிய கொள்ளிக்கட்டை  நிர்வாணங்கள்
மக்கள் நெரிசலில் புகுந்து வலம் வருகிறது.

ஆதிக்காலங்களில்
மனிதனை நிர்வகிப்பவனுக்கு
சற்றேனும் உண்மைக்கனல் இருந்தது.
தற்போது
கனல், எரி நெருப்பாய் முளைத்து
வெளியேறி,
கொள்ளிக்கட்டை  நிர்வாணங்களாக
எட்டுத்திக்கும்
ஆட் கொணர்வுகளுக்கு அலைகிறது.

ஆட்கொணர்வுகளே
அதன் செயல் திட்டம்.

பக்கத்து தெருவின் கடந்த கால
அழிப்புகளைப்பற்றி
தன் தாத்தா இறந்த துக்கம் இல்லை.
முந்தினநாள்
தங்கள் குடும்பமே
வாழ்வாதர வழி என உழைத்தவன்
இறந்தபோது.
ஒரு மூத்த சகோதரன் இழந்த இடைவெளியை அறியவில்லை.

நேற்று
ஒரு பிஞ்சின் கழுத்தை திருகி முறித்தபோது
 தங்கள் குடும்பக் குழந்தை இழந்த சோகத்திற்கு
 திரும்பவில்லை.

இன்று காலை
அழகிய புள்ளிமானின் தோலை,
அதன் உடலிலிருந்து,
அதன் கண்முன்னே உரித்து அழித்ததை,
நம் கால் தடங்களை தினமும் ரசிக்கும்
குடும்பச்  சகோதரி
இழப்பின் நினைவைக்கூட பெறமுடியாமல்.
தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும்
கெட்டித்துப்போன
வெறும் தரைகள்
பரந்து வளர்ந்து கொண்டிருக்கிறது.

எப்போதும்போல்
வழிகாட்டி வேடம் தரித்தவர்கள்
கொள்ளிக்கட்டை நிர்வாணங்களாய்
மக்கள் நெரிசலில்
உற்சாகமாய் பயணிக்கிறார்கள்.

ஜேடி

No comments: