Monday, October 31, 2011

கட்டுரை

                                   சாக்கடை  சர்க்கரை நோயானது
                                                   

                                                                1
பீடியோ ஆபீஸ் காலையிலே கூட்டம் கலைக்கட்டியது. துப்பாக்கி ஏந்திய போலீஸால் வாசல் மிரண்டிருந்தது. வயிறு பெருத்த இன்னுஞ்சில போலீஸ் மக்கள் கூட்டத்தைக் உள்ளுக்குள் வராமல் தடுத்தனர். சுங்குவைத்த கூவும் சேவல் விரைவாக வந்துபோனது. அனைத்துக் கறை வேட்டியும் வெளிறிய நிறத்தில் இருந்தது. பெரிய கட்சி ஆதரவாளர்கள் டூவீலரில் துண்டுக் கொம்புகளில் கொடியை பின்னியிருந்தார்கள். சிலது பறந்தும் சிலது முடங்கியும் இருந்தது. கவுன்சிலராகவும் வார்டு நெம்பராகவும் நின்ன அநேகரது கழுத்தும் கை விரல்களும் காலியாக இருந்தது. வாலிபர்கள் சைலன்சர் மூடியைக் கழட்டிவிட்டு இரண்டு முறுக்கி முறுக்கி தயாராக நிறுத்தியிருந்தார்கள். பாதிக்குமேல் நபர்கள் கிடைத்த சந்து பொந்துக்களை எல்லாம் பார்களாக மாற்றியிருந்தார்கள். நேரம் கடந்தது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
                                                                  2
நான் மனு நாமினேசன் செய்யிறபோதுதான் அந்தப்பய்யனும் வந்துநிக்கிறான். ஒரு நாள் முன்ன சொல்லியிருந்தாலும் நான் நின்னுஇருக்கமாட்டேன். நான் கேக்கும்போதெல்லாம் அய்யய்ய நமக்கு அரசியல்லாம் சரிவராதுன்னு சொன்னான். நண்பா நீ நில்லு உன்ன எப்படியாவது ஜெயிக்க வக்கிறேன்னு சொன்னான். எனக்குத்தான் எந்தவேலையும் இல்ல பி ஏ படிச்சிட்டு சும்மாயிருக்கிறோமே, இந்த பொழப்பையாவது பாப்பம்னு பாத்தா, கம்பெனில வேல செய்யிற நாயி அதுக்கும் போட்டியா வந்துட்டது.  அவனமாதிரி இந்த பூமியில யார் இருப்பாங்கப்பாரு, துரோகி. கூடவேயிருந்து எனக்கே பேடியா மாறிட்டான். என் வீட்டுக்கு வரும்போது என் தட்டிலேயே சாப்பாடு போடச்சொல்வேன். அவனுக்கு வேலை கிடைக்க எத்தனை கம்பெனி முகவரியை  தேடிக்கொடுத்திருக்கிறேன். என் சகோதரியின் மைத்துனியைக் கூட எப்படியாவது  பேசிமுடித்து சொந்தமாக்கிக்விட யோசனை செய்தேன். வேற்று சாதிக்காரன்கூட இப்படி ஒரு துரோகத்தை செய்யமாட்டான். சதிகாரன், மோசக்காரன், இவன் எத்தனைப்பேர் குடும்பத்தை கெடுப்பான்  எக்கேடு கெட்டுப்போகப்போகுறான் என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும்.

                                                    3
டே நீ ஒண்ணும் கெவர்மெண்டுல  வேலை செய்யலடா, தனியார் கம்பெனிலதான் வேலை செய்யிற, அதனால எங்க கட்சி மூலமா நெம்பரா நிக்கவெக்கிறோம் நீ ஏன் பயப்படுற. உன் சாதியில சுயேட்சயா நிக்கிறானே பி ஏ படிச்ச வேலயில்லாதவன், அவனப்பத்தி கவலப்படாதே. அவன்சோறும் உன்சோறும் ஒண்ணா இருக்குதா என்ன? ஒரே ஊட்டிலேயே வெவ்வேற கட்சியில இருந்து கொண்டு ஒரே எடத்துல நிக்கிறாங்க. நீ ஏண்டா தயங்குற என் சாதிக்கட்சி மூலமா நிறுத்துறோம். இந்தா இதுல இருபத்திஐந்து ஆயிரம் இருக்குது புடிச்சிக்கோ உன்னாண்ட இருக்கிற புறுப்ப மட்டும் குடு மத்த எல்லாவேலையும் நான் பாத்துக்கிறேன். நீ எப்போதும் போல வேலைக்கு போ சாயந்திரம் மட்டும் கேன்வாஷ் செய்ய வந்துடு. டே என்னடா இவ்வளவுதூரம் சொல்றோம் இன்னும் யோசிக்கிற. உன் சாதியில ஒண்ணு ரெண்டு பெருசுங்க பெரியக்கட்சிக்கு போடுவாங்க. வாலிப பசங்க சிலது நடிகர் கட்சிக்கு போடுவாங்க. பாதிபேர் உன் பிரண்டுக்கு போடலாம்னு முடிவுபண்ணி யிருப்பாங்க,  இந்த சமயம்பாத்து நீ நின்னியானா மக்கள் அலை உன்பக்கம் திரும்பும், அந்த நேரம்பாத்து பாட்டில்,  சில்லரை கொஞ்சம் தட்டினா நீ தான் வார்டு நம்பர். நம்ம கட்சி பேர்ல நின்னு நீ வார்டு நம்பரா ஜெயிக்கிறளவு  எனக்கு சப்போட் பண்ணியானா நான்தான் தலைவர். இப்ப எழுதிவசிக்கோ நீ தான் துனைத் தலைவர். இந்த நேரம் பாத்து பஸ்ல வரச்சொல்ல எங்கப்பன் சாதிப்பெயர் சொல்லி திட்டினதெல்லாம் மனசுல வெச்சிக்காதடா.

                                                                       4
போப்பா நண்பனா இருந்தா இவன் சம்பாதிப்பான், நான் சும்மா இருக்கணுமா? நாங்க ரெண்டுப்பேரும் எங்கப்போனாலும் ஒண்ணா போவோம் வருவோம் அப்பிடியிருந்த எனக்கு நான் எலக்ஷன்ல நிக்கப்போறேன்னு அவுரு சொன்னாரா? கூடவேயிருக்கிற எனக்குக்கூட சொல்லாம மனு நாமினேஷன் பன்றாரே. அப்ப என்னால முடியாதா? அதான் ஏதோ ஒண்ணுன்னு ஒரு கட்சியில நிக்கிறேன். நான் என்னமோ அவுரு ஊட்டிலயிருந்து லட்சத்த தூக்கியாந்துட்டா மாதிரி என்ன மோசக்காரன், துரோகி, அவுசாரின்னு ஊர்ல பாக்கிற ஆளுகளாண்டலாம் சொல்லிக்கிணு வராராமே. அரசியல்னு வந்தா அப்பிடித்தான் இருக்கும் எதுவாயிருந்தாலும் பாக்கணும் அதான் ஆம்பளைக்கு அழகு. அத உட்டுட்டு போறவர ஆம்புள பொம்புளயாண்டலாம் சொல்லி நீலிக்கண்ணீர் வடிக்கிறாரே. அவுருக்கூட நல்ல அரசியல்வாதிதான் இப்படி தப்பான பிரச்சாரம் பண்ணி, பண்ணி என்ன கெட்டவன்னு முத்திரைக்குத் திட்டா, அனுதாப ஓட்டு வாங்கிடலாம்னு பாக்கிறாரு. அதையும்தான் பாக்கலாம். ஒரு காலத்துல ஒதைச்சான் அந்த சாதிக்கட்சியில போய் நிக்கிறானே இவனுக்கெல்லாம் என்ன சாதிப்பற்று இருக்குதுனுவேற பிரச்சாரம் பன்றார். நான் தெரியாமத்தான் கேக்குறேன் எப்பவோ நடந்துபோன விஷயத்தயேன் விஷமத்தனமா பரப்பணும். என் குழந்தையும் ஒசந்த சாதின்னு சொல்றாங்களே அந்தக்குழந்தையும் ஒண்ணாதான் பாடம் படிக்கிறான். விளையாடுறான். அவனுக்கு தெரியாததை நாம கத்துக்கொடுக்கணுமா? நானே என்னளவு ஊர் பசங்களை, டே மாமா மச்சான்னுதான் கூப்புடுறேன். என்னளவில் உள்ள பசங்கள் எல்லோரும் அப்படிதான் நடந்துகொள்கிறார்கள். ஒண்ணா கிரிக்கட் ஆடுரோம் அவன் பங்ஷன்னா எங்களைக் கூப்புடுறான். அவுங்க பங்ஷன் முடிச்சக் கையோட குடும்ப பொம்பள நம்ம எடத்துக்கே வந்து ஒரு வீடு தவறாம பலகாரம் குடுத்துட்டுபோறாங்க. நம்ம பங்ஷன்னா அவன் சாதியில வயசானவன்கூட சிலர் வந்து சாப்பிட்டுபோறான். இப்பப்போய் கடந்த காலத்த நாபகப்படுத்தி அவுங்கள்லாம் உயர்சாதிக்காரன். அவன் என்ன சாணிவாரவச்சான். கோவணம் கட்டவச்சி கூழ் ஊத்தினான் என்கிறபோது நாமளே பழசஎல்லாம் கௌரிக் கௌரி அந்த இழிநிலையை மீண்டும் மீண்டும் புழக்கத்தில் வைக்கச்செய்வதுபோல ஆகாதா?  எனக்கென்னவோ இப்படி அடிக்கடி சொல்றதின் மூலமா சிலருக்கு தனிப்பட்ட அரசியல் லாபம் தேடிக்கிறாங்களோனு தோனுது. இதஒடைக்கணும்னுதான்  சாதிக்கட்சியாய் இருந்தாலும் நம்மள தேடிவரான் பழகுவோம்னு பணம்வாங்கினேன். பணம் வாங்கி என்வீட்டிலயா கொண்டுபோய் வெச்சிக்கினேன். சரக்கா, பணமா எல்லாருக்கும் குடுத்தேன். நாரப்பட மக்கள் ஜனங்களா அது, எவன்குடுத்தாளும் எனக்கு உனக்குன்னு சண்டப்போட்டு வாங்குதுங்க. உள்ளூர்ல எதுனா செய்யலாம்னு போய் ஓட்டுக்கேட்டா சும்மா வந்துகேட்டா ஓட்டு போடுவோமா? மூஞ்சியில, ஓட்டதான் போடுவோம்னு சொல்லுதுங்க. எதுவோ நடக்கட்டும்.

                                                                    5
எப்பவும் நண்பனாகவும், எப்பவும் விரோதியாகவும் இருப்பது நல்ல மனிதனுக்கு  அழகுஇல்லைதான். இவ்வளவு நாள் நண்பர்களாய் இருந்தீர்கள். இந்த வார்டு நெம்பர் பதவிக்கே, நட்ப்பை இழக்கணுமா? இப்ப நாங்க யாரும் சாதி பாக்கிறதில்லைனு சொல்றே நல்லதுதான். ஆனா இதுவரைக்கும் கிராம வருவாயில் உங்களுக்கான பங்கு என்னனுதெரியுமா? எப்பவாவது அதுல எங்களுக்கும் பங்குண்டுனு கேட்டிருக்கிறியா? ஆது எனக்கு தேவையில்லாத வேலைனு சொல்றே. பரவாயில்ல உன்பெருந்தன்மையை பாராட்டுறேன். கிராமத்துல எத்தனையோ நலத்திட்டம், காண்ராக்ட் வேலை ஒதுக்குறான் எதாவது ஒண்ணு உங்காளுங்க செய்ய விட்டுக்கொடுக் கிறாங்களா?  உனக்கு தேவை அதிகமிருக்கு, அவனிடம் பொருள் அதிகமிருக்கு கேட்கும்போது கொஞ்சமேனும் தந்தால் சற்று நிம்மதியாய் போகும். மூர்க்கமாய் மறுத்தால் இருவருக்குமான கருத்தில் சுமூகம் இருக்குமா? தனக்குள் கொதிகலனை வைத்துக்கொண்டே பிரகாசமான முகத்தைக்காட்டி சுற்றும் சூரியன்போல் உயர்ந்தவனுள்ளும், தாழ்ந்தவனென்று அடையாளப் படுத்தப்பட்டவனுக் குள்ளும் மறைமுகமான வன்முறை இருக்கத்தான் செய்கிறது. விடிந்தால் தெரிந்துவிடும்போ.

                                                                      6
வாழ்த்துக்கள் புது வார்டு நெம்பரே, உன் சந்ததியில் நீதான் முதலில்  மதம் பிடித்த யானையின் வால் நுனிமயிராக ஒட்டிக்கொண்டாய் என்று நினைக்கிறேன்.  நான் உன்னை எதிர் பார்க்கவேயில்லை. அந்த கம்பெனியில வேலைசெய்யிரானே அவன்தான் வருவான்னு எதிர்பார்த்தேன். பராவாயில்ல ஜனங்கள் உன்னை எதுக்கோ ஆவலாக தேர்வுசெய்திருக்கிறார்கள். நீ பணம்கூட அதிகமாய் செலவு செய்யவில்லையே. மக்களைக் கவர என்ன திட்டத்தை பிரயோகித்தாய். தயவுசெய்து சொல் அடுத்து வரும் தேர்தலில் நான் பயன்படுத்திக் கொள்கிறேன். சரி அதுபற்றி பிற்பாடு  பேசலாம், இப்போது விஷயத்துக்கு வருகிறேன். உன்னைப்போல் வெற்றி பெற்ற வார்டு நெம்பர் ஐந்துபேரும் என்னைத்தான் துனைத்தலைவர் பதவிக்கு தேர்வுசெய்திருக்கிறார்கள். எனக்கு முன்பே உன்னை துனைத்தலைவர் பதவிக்கு தேர்வுசெய்யுங்கள் என்று அவர்களிடம் போய் நீ பேசியதாக அறிந்தேன். பராவாயில்லை பதவி ஒரு போதிமரம் அதன் துளிர்த்து தொங்கும் வேர்களைப் பிடித்துவிட்டால், சுகமான சுகத்தைத்தந்து தாளாட்டும். அனுபவித்தவர்கள்,  என் கரத்தாலே இது துளிர்த்திருக்கிறது. நானே இதைக் காக்கும் வல்லுநர் என்று அடம் பிடிப்பார்கள். நீயே சொல் என்ன செய்யலாம். அவர்களுக்கு திருப்தியாகவே பணத்தை கொடுத்துள்ளேன். நீ எனக்கென்று விட்டுக்கொடுப்பாயா?  இல்லை முடிந்தவரை முயற்சி செய்கிறாயா?

                                                                   7
தலைவரே நீங்கள் அனுபவசாளிகள். நான் புதியவன் எனக்கு அவ்வளவாகத்தெரியாது. அவர்களுக்கு இருபத்திஐந்து கொடுத்ததாகக் கேள்விப்பட்டேன். நீங்களே துனைத்தலைவராக இருங்கள் அதுதான் சிறந்ததுங்கூட, எனக்கு ஐம்பதா சேர்த்துக் கொடுத்துவிடுங்கள்.

குறிப்பு-
1. கட்டுரையாளர்
2 . வேலையில்லாதவன்
3 .சாதிக்கட்சி
4 . கம்பெனிக்காரன்
5 . கட்டபஞ்சாயத்துக்காரன்
6 . வார்டில் ஜெயிடத்தவன்
7 .  வேலையில்லாதவன்
  
ஜேடி

No comments: