Wednesday, March 23, 2011

நாவலின் கிளைக்கதை



நான் முதல் முதல் எந்த வழிக்காட்டுதலும் இல்லாமல் 2005ல் எழுதிய 'ஜே டி' நாவல் நிச்சயம் தோல்வி இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் புத்தகங்களை படித்துவிட்டு எழுதியிருந்தால்  சிறப்பாக அமைந்திருக்கும் என்ற மன வருத்தத்துடன். கடந்த ஆறு வருடங்களாக இலக்கியங்களை வாழ்வாதாரத்திற்கான நேரம் தவிர்த்து. தொடர்ந்து   வாசிப்பின் மூலம் யதார்த்தம் பெரும்பகுதியை நிறைவுசெய்தும்.  கற்பனை, புனைவு கசப்புத்தட்டாமல் மீண்டும் ஒரு நாவலை எழுத தொடர்கின்றேன்.  

சிறு பத்திரிகைகளில் வந்த சிறுகதைகளை படித்து எச்சரிப்புக்குள்ளான பிறகே இந்த நாவலை எழுத வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகின்றேன். நிறுவனங்களுக்கும், வாழ்நிலைக்குமான சமன் பாடில்லா வாழ்நிலை போராட்டங்களே எனது கடத்துகோல்.       

நாவலின்  பத்து அத்தியாங்களை கடந்து  நடுவில் உதித்த கிளைக்கதை 

....சற்று நேரம் மேலேயும், கீழேயும் பார்த்தாள். பிறகு வள்ளி கதை சொல்ல துவங்கினாள். காட்டில் மான், முயல், எலி, அணில் கிழக்கிலும்  . கரடி,புலி,யானை மேற்கிலும் வசித்துவந்தது. 

வடக்கையும்,தெற்கையும் இனத்ததுபோல சிங்கம், ராஜாளிக்கழுகு, அதோடு பிசாசும் இருந்தது. ஒருநாள் பிசாசு பச்ச முங்கில் புதரை  தன்  கண்ணிலிருந்து நெருப்பை கக்கி  கொளுத்திடுச்சி. மூங்கில் புதரு பக்குன்னு தீப்பிடிச்சி எரிந்தது. அப்போது பிசாசு வாயிலிருந்து தண்ணீர பீச்சி அடிச்சி நெருப்பை அணைத்தது. அதேபோல் எரியவைப்பதும்,  அணைப்பதும்  மறுபடியும் மறுபடியும் என்று முன்று முறை எரியவைத்தது. மீண்டும் அணைத்தது.  மூங்கில் புதர் அதன் இலைகள், சின்னக்கிளைகள் எல்லாம் தீய்ந்து, கத்தியில் சீவியதுபோல் ஆனது.  தடித்த மூங்கில்  மட்டும் அதன் பச்சைத்தன்மையை இழக்காமல்  இருந்தது.

பிசாசு இப்படி நெருப்பை மூட்டி   மூட்டி    அணைத்ததால் முன்று திசையில் உள்ள மிருகங்கள் எல்லாம் வானத்திலிருந்து மின்னல் தோன்றுகிறது. சற்று நேரத்தில் காற்றும்  வீசக்கூடும், அதனால் மரங்கள் முறியும் வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி அதனதன் உணவைக்கூட தேடாமல். அங்கங்கே தங்கள் இருப்பிடங்களில்  பதுங்கிக்கொண்டது.

பிசாசு சற்று நேரத்தில் ஒவ்வொரு முங்கிலாக தனித்தனியாக கையில்  கிள்ளி யது. அதைவரிசையாக நட்டது. அதையே வளைத்து ஒரு அழகு குடிலாக அமைத்தது.  காட்டுப்பூக்கள் பறித்துவந்து அங்கங்கே வைத்து அலங்கரித்தது. மேடைக்கு மேல் ஒரு சிம்மாசனம் அமைத்தது.சிங்கத்தை அந்த மாளிகையில் அமரவைத்து. இனி இதுதான் உங்கள் ஆளுகையின் மாளிகை. காட்டுக்கு நீங்கள்தான்  ராஜா. காட்டில் உள்ளவற்றை எல்லாம் ஆளலாம் என்றது. உங்களுக்கு விருப்பமிருந்தால் என்னை ஒரு ஆலோசனை நபராக வைத்துக் கொள்ளலாம். உனக்கு சந்தேகம் வரலாம். இவ்வளவு சொல்லுகிறவர் இவரே ஆண்டுகொள்ள வேண்டியது தானே நம்மை என் இழுக்கிறார். இதில் எதோ சதி இருக்கிறது' என்று  நீ நினைக்கலாம். ஒன்றுமட்டும்  தெரிந்துக்கொள் நண்பரே, யோசனை சொல்லுகிறவன் சிலநேரம் ஆளுகைக்கு உதவமாட்டான் . மேலும் எனக்கு உருவமிருந்தால் நானே இந்த காட்டை நிர்வகிப்பேன். என் யோசனையை ஏற்பாய் என்று நினைக்கின்றேன். என்னை வேண்டாமென்றால்  என்வழியாக நான் போவேன்' என இரக்கம் பெரும்படியாக சொன்னது.

நீ ரசிப்பதற்கு புறா ஒன்றை பரிசாகத் தருகிறேன். அதற்கென்று கூண்டு இருக்கிறது. உன் மனநிலைக்கு ஏற்ப அதை உன் கண்களுக்கு முன்னாள் வைத்துக்கொள்ளலாம். அதைக்குரித்ததான அச்சம் ஏற்படும் நிலையில் கூண்டில்  அடைத்துவிடுவது  உன்விருப்பம். அதற்கு உனக்கு முழு சுதந்திரம் உண்டு. உன் கூரைக்கு மேலே  ராஜாளிகழுகுகள் அமர்ந்து இருக்கிறது. நீ கையசைத்தால் யாரையும் அக்கினியில் போடவும், ஆழ்கடலில் கல்சுமத்தி தள்ளிவிடவும் தயாராக இருக்கும்'.  என்று ஆசைகளை எழுப்பி முங்கில் மாளிகையில் சிங்கத்திற்கு பதவிஏற்பு செய்தது.

சிங்கம் சிம்மாசனத்தில் அமர்ந்தது. மாற்றி மாற்றி கால்மேல் கால் போட்டு பார்த்து கம்பீரமாய் உட்க்கார்ந்தது. சிங்கம் 'நண்பரே  நான் அமரும் இருக்கை  பின் தசையை நசுக்குகிறது' என்றது.  தனது செயல் திருப்தியாய் நடக்கிறது என்ற சந்தோசத்தில் பிசாசு  'தலைவரே தன் தசை நசுங்குவதை உணரும்போதுதான், அதன் சூட்சமங்களை அறிந்து பிறரை சுலபமாக நசுக்கி ஆளமுடியும்'. என்று தத்துவம் பேசியது. மீண்டும் அதுவே  ஆளுகையின் இருக்கை மனகஷ்டத்தை கொடுப்பதாய் இருந்தால், உண்மையில் கஷ்டப்படுகிறவர்கள் மீது பரிதாபம் ஏற்பட வைத்துவிடும்.  ஆகவே அப்படி விடக்கூடாது என்று வெடிக்க காத்திருக்கும்  இலவம் பஞ்சு காய்களை  அறுத்து, பஞ்சுகளை எடுத்து  சொகுசு மெத்தையாக்கியது. இப்போது அமர்ந்து பார் தலைவரே' என்றது.

சிங்கம் தன் இருக்கையின் சுகத்தை இரண்டு முன்று முறை எழுந்து  எழுந்து குதித்து அமர்ந்து பார்த்தது. ஒவ்வொரு முறை குதிக்கும்போதும் மூங்கிலில் 'கர்க் முர்க்'  என்று சத்தம் வந்தது. ஒரு நாள் வானத்தில் முழு நிலவு உதித்திருந்தது. வெளிச்சம் சிங்கத்தின் அரண்மனையை தொடவில்லை. பிசாசுவிடம் 'நண்பரே முழு நிலவின் வெளிச்சமும், சூரியனையும் இதுவரை நான் நேரடியாக பார்க்கவில்லையே. ஏன்?  காட்டில் அப்படி என்ன நடக்கிறது' என்று கேட்டது.

'அது ஒன்றுமில்லை தலைவரே. நம்மைச்சுற்றி இருக்கின்ற  மரங்களில், ஆயிரம் ஆண்டு மரங்களும் கிளைப்பரப்பி, பெருத்திருக்கிறது. மரத்தின் இடைவெளி  இல்லாமல் பறவைகள் கூடு கட்டி குடியிருக்கிறது. அதனால்தான் நம் இருப்பிடத்திற்கு பகலும், நிலவும் வெளிச்சம் தரமறுக்கிறது. அதைக்கேட்டு சிங்கம் ஆவேசமடைந்து  அந்த ஆயிரம் வருஷம் மரங்களையும், அதில் கூடுகட்டியுள்ள பறவைகளையும் உடனே உன் நெருப்புக் கண்களில் சுட்டு எரித்துவிடு' என்றது. மேலும் நம் கூரைமேல் இருக்கும் ராஜாளிக் கழுகை  விட்டு, பறக்க கற்றுக்கொண்ட குட்டிபறவைகளையும் தப்பவிடாது தீப்பிழம்பை கக்கி சாம்பலாக்கிவிடு.' என்று ஆவேசக்குரல் தந்தது. 

பிசாசு சுற்றியிருந்த மரங்களை எரித்தபோது. பச்சை மரங்களின் இலைகள் மிளகாய் பட்டாசுப்போல வெடித்தது. வானில் பறந்த பறவை. வேடனின் துப்பாக்கி குண்டு பட்டு. 'நூல் அறுந்த பட்டமாக தலைகீழாய் பூமியை நோக்கி விழுவதுபோல்' வானுயர்ந்த மரங்களின்கிளைகள் எரிந்து விழுந்தது.கூடுகலில் முட்டையோடும், பறக்கத்தெரியாத  குஞ்சுகளும் தலைமயிர் தீய்வதுபோல் தீய்ந்தது. தன் குஞ்சுகளை இழந்த பறவைகள் நெருப்பின் கிட்ட வரமுடியாமல் காட்டியே சுற்றி சுற்றி கத்திவந்தது. சிலபறவைகள் இப்படி கொடுமையான காட்டில் வாழ்வதைவிட  இறப்பதேமேல் என்று அந்த தீயில் விழுந்து மாண்டது.

சிங்கத்தின் இருப்பிடத்தை சுற்றி இருந்த மரங்கள் எரிந்து அமிழ்ந்தன.அதன் வெண்புகை அங்கங்கே லேசாக புகைந்திருந்தது. சிங்கம் தன் சிம்மாசனத்தை விட்டு எழுந்தது.வெளியில்வந்து அதன் அலங்கத்தில் நின்று சுற்றி  பார்த்தது.  இபோதுதான் வனத்தின் வானம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டது. சற்று தூரத்தின் கிழக்கில் மானும், முழலும், எலியும், அணிலும் அதன் இயல்பில் இலையைத்தின்றும், பழத்தைக்கொரித்தும் மரங்களில் ஓடியும், பசுமையான புல் தரைகளில் விளையாடியும் இருந்தது.  இந்தப்பக்கம் மேற்கில் கரடியும், புலியும், யானையும் புற்களை மேய்ந்தும், கிளைகளை முறித்தும் தின்றுகொண்டிருந்தது. இவைகளைப்பார்த்த சிங்கம் உடனே பிசாசை தன் மாளிகைக்கு அழைத்தது.

பிசாசு வந்தது. கூடாரத்திற்கு முன் எரிந்த தழும்புகள் மறைந்து புதியப்புற்கள் முளைத்திருந்தது. 'நண்பரே மேற்கில் வலுவானவர்கள் வசிக்கிறாகள்போல் தெரிகிறது. அவர்களை அழைத்து நாம் பேசவேண்டும். அப்போதுதான் நமது ஆளுகையை விரிவுபடுத்தமுடியும். தாங்கள் தங்களுடைய ராஜாளிக் கழுகுகளுடன் சென்று மேற்கில் நடமாடுகிறவர்களை அழைத்து  வாருங்கள்' என்றது.

பிசாசு தனக்கு உதவியாளராக சிலரை உருவாக்கி,  போனசீக்கிரத்தில் இனஇனமாய் வயதுவாரியாக அழைத்துவந்தது. வரிசையாக புல்தரையில் அமரவைத்தது.  சிங்கம் தனது சிம்மாசனத்தில் உட்கார்ந்தது. ராஜாளிகழுகுகள் இப்போது கூரைமீது இருக்கவில்லை. சிங்கத்தின் சிம்மாசனத்தின் இருப்பக்கமும் கீழ் அமர்ந்தது. இரவின் சத்தம் லேசான சங்கீதமாக கேட்டது. தங்களைச்சுற்றி மரங்கள் இல்லாததால் காற்று இல்லாமல் இருந்தது. யானைக்கு வேர்த்துப்போனது. புலி உட்கார்ந்தபோது அதன் கீழ் பகுதியை எரிந்து மொக்கையாகிப்போன ஒன்று குத்தியது. புலி எரிச்சலாய் கத்திவிட்டு அமர்ந்தது. யானை தும்பிக்கையை துக்கி முதல் கேள்வி கேட்டது 'நீங்கள் யார்?  எங்கள் கூட்டத்தை எதற்காக அழைத்தீர்கள்'  என்றது.

உடனே பிசாசு 'யானை நண்பரே அனேகமாக நீங்கள் கேட்டும் கேள்வியே முதலும் முடிவுமாய் இருக்கட்டும். நாங்கள் சொல்வதை மட்டும் கேட்டுக் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்' என்ற பிசாசின் குரல் மட்டும் கேட்டது. மேலும் இவர்தான் இந்த காட்டுக்கு ராஜா. இனிமேல் இவர்தான் நம்மை வழிநடுத் துவார். அவரவர் வாழ்வாதாரத்திற்கான வழியை கண்டுபிடித்துள்ளார். அவர் இன்று வெளியிடப்போகும் அறிவுப்புகளை கடைபிடிப்போம். அப்படி கடைபிடித்தால் நமக்கு எந்த கஷ்டமும் இருக்காது'.  என்று பிசாசு ஒவ்வொரு முறை பேசும் போதும் நாம், நாம் என்று குறிப்பிட்டு பேசியது. எதிராளியை  தன் திட்டங்களுக்குள்  கட்டுப்படுத்திவிட முடியுமாம்.

சிங்கம் கர்ஜனையிட்டு எழுந்தது. அப்போது வெள்ளைப்புறா கூண்டுக்குள்  மூலையில் தொங்கவிடப்பட்டிருந்தது. நான் அதிக நேரம் காக்கவைக் கவில்லை சுருக்கமாகவே விளக்கநினைக்கிறேன். உங்களுடைய சந்ததியை சிறப்புடையதாக, வலுவுள்ளதாக செயல்படுத்தவே உங்களை கூட்டி இருக்கிறேன்'. சிங்கம் பேசும்போது அதன் பிடரிமயிர் காட்டு மஞ்சள் பூக்களாக  அசைந்தது. மேற்கில் வசிப்பவர்களே நீங்கள் எனக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கிறவர்கள். நீங்கள் வலிமைமிக்கவர்கள். நீங்கள் புற்களையும், புண்டுகளையும், கிளைகளையும், இலைகளையும் தின்னுகின்றீர்கள். நீங்களே பாருங்கள் அற்பமான மான், முயல், எலி, அணில் இவைகள் கிழக்கிலே எவ்வளவு சுகமாய் திரிகிறார்கள். ஏன்? அவைகளை நம் முன்னேற்ற வாழ்வுக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. தங்கள் ஜீவனத்துக்கு அவைகளின் உழைப்பு போதுமானதாக இருக்குமா என எண்ணுகிறீர்கள். சிறு துளிதானே பெருவெள்ளம். நாம் அவைகளை எப்படியும் பயன் படுத்திக்கொள்ளலாம்' என்றது.

அடிக்கடி பேச்சு மட்டும் கேட்கிறது ஆளைப்பார்க்க முடியவில்லை. கேள்வி எழுப்பக்கூடாது என்று எச்சரித்திருந்ததால் மிருகங்கள்  பயத்திலிருந்தது. இருந்தாலும் யானை புலியை கேள்வி கேட்கும்படி தூண்டியது. புலி வாலை சுருட்டி தன் புட்டத்தில் வைத்துக்கொண்டு 'நாங்கள் புற்களையும், தழைகளையும் தின்று நன்றாகத்தானே வாழ்கிறோம்' என்றது.பாலுண்டான்

'முட்டாள் புலியே நீ புல்தின்ன பிறந்தவன் கிடையாது. மானையும், முயலையும்கூட தின்னலாம்' யானை கால் கடுக்க நடந்துச்சென்று ஓலையும் தழைகளையும் தின்னவேண்டியதில்லை. அது பழக்கப்படுத்திக்கொண்டால் மானின் பாலுண்ணலாம்  . முயலும், எலியும் அணிலும் தழைகளை வெட்டிவரச்சொல்லி நம் இடத்திலேயே சாப்பிடலாம்'.

சிங்க ராஜாவே  காலங்காலமாக காட்டில்  வாழ்ந்து வருகிறோம் இப்படி ஒரு வழி இருப்பதை நாங்கள் உணரவே இல்லையே' என்றது கரடி. ஆளுமைக்கு சாதகமாய் பேசுவதால் பிசாசு தனக்குள் பூரித்து மவுனமாய் இருந்தது.

உடனே சிங்கம்  'அவைகள், எல்லோருக்கும் சாதாரணமாக வந்துவிடாது. என்னைப்போன்று உயர்ந்த சிம்மாசனம் அமைப்பவர்களுக்குத்தான் அவைகளின் அறிவு பிறக்கும், ஒரு கட்டளை  கிழக்கில் வசிப்பவர்களை பிடித்துவந்தாலோ, அவர்கள் சேகரித்து தரும் பொருட்களிலோ.மூன்றில் ஒன்று என் ஆசனத்துக்கு வந்துவிடவேண்டும். அப்படி தவறிடும்போது நீங்களும் தண்டனைக்குள்ளாவீர்கள்' என்றது.

அதைக்கேட்ட கரடி, புலி, யானை 'சிங்க ராஜா நாங்கள் தயாராகிவிட்டோம். உமக்கும் எங்களுக்கும் இனி நல்லகாலம்தான். நாங்கள் வருகிறோம்' என்று  கூட்டாக நன்றி சொல்லி கிழக்கு நோக்கி கிளம்பினார்கள். கிழக்குப்பகுதிக்கு  புதிதாக புலியும், கரடியும், யானையும் தங்களை நெருங்கி வருவதைப்பார்த்த  மானும், முயலும், எலியும், அணிலும் அவைகளிடமிருந்து தப்பிக்க மறைந்தும், ஓடியும் புதிய வழித்தடங்ககளை கற்றும் இன்னும் இந்த காட்டிலே அலைந்துகொண்டிருக்கிறது. அவைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவே பெண்ணான உன்னை ஏழுமையில் கடந்து படிக்க அனுப்புகிறேன்' என்று என் தாத்தா பரிச்சை நெருங்கும்  நாளில் தினமும் சொல்லிச்சொல்லி அனுப்புவார்'. என்று பள்ளி நெருங்கும்வரை விறு விறுப்பு குறையாமல் கதை சொல்லிவந்தாள் வள்ளி .....                              

No comments: