Saturday, January 15, 2011

'துயில்' என் பார்வையில்

                                        எஸ்.ராவின்     'துயில்'           

ஸ்.ராமகிருஷ்ணன் 'துயில்', வாசகன் என்ற அடிப்படையில் என் பார்வையில் ஆச்சரியங்களும் சிலகேள்விகளும் எனக்குள் எழுகின்றது. எஸ்.ரா அவர்களின் எழுத்தாற்றல் உலகறிந்து சிறப்புமிக்கது, பொறுப்புள்ளது. 

சிறுகதைகள், கட்டுரைகள் எழுதும்போதும் உலக திரைப்படங்களை அறிமுகப் படுத்தும்போதும் ஓடும் நீரோடையின் கீழ் கிடக்கும் சின்னச்சின்ன கூழாங் கல்லுகள், மணல் தரைகள், புல், பூண்டுகள் தெளிவாய்தெரியும் தன்மை  கொண்டதாகவே  நான் பார்க்கிறேன். ஒரு எஞ்சின், இரு பெட்டிகளை இழுத்துக்கொண்டு போகும் தொடர் வண்டிதான் 'துயில்' நாவல். எஞ்சின் என்பது சின்னராணி,அழகர். இரு பெட்டிகள் ஏலன் பவர், கண்டலு அக்கா அந்தபெட்டியின் பாதுகாப்பான சரக்குகளாக பல உதிரி கிளைக் கதைகளைக்  கொண்டுள்ளது.
 
சின்னராணி, அழகர் கணவன் மனைவி. செல்வி அவர்கள் மகள் இவர்கள் மூவரும் தெக்கோடு மாதாக்கோயில் திருவிழாவில் கடற்கன்னி ஷோ போட்டு பிழைப்பு தேட  ஆத்திக்குளம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறார்கள். சின்னராணி வாழ்வெல்லாம்  எதையோ யோசித்துக்கொண்டே இருக்கிறாள். 'அப்படி என்ன தான் யோசிப்பாள். அதைப்பற்றி அழகர் கேட்டுக்கொள் வதில்லை. கேட்டாலும் அவள் பதில் சொல்வதில்லை.' (பக்கம்25) இப்படித்தான்  அவர்கள் குடும்ப வாழ்வு  முழுதும் நடந்தேறுகிறது.

'அப்பா ஏமாந்து அழகருக்கு தன்னை கலியாணம் செய்துகொடுத்துவிட்டார். அழகர், தான் ஊர் ஊராகச்சென்று  சைக்களில் பாத்திர வியாபாரம் செய்பவன் என்று ஏமாற்றிவிட்டான். இப்போது, தன்னை  பல ஊர்களுக்கு கூட்டிச்சென்று  மனிதர்கள் முன்னாள்    காட்சி பொருளாகக்காட்டி  பிழைப்பு நடத்துகிறான்.' என்ற வெறுப்பு  அவளுக்குள்ளாகவே தொடர்ந்து  நெருப்பு மூட்டம்போல் புகைந்து கொண்டேயிருக்கிறது. வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களை, செயல்பாடுகளை இழந்துவிட்டால் வாழ்வே இழந்துபோகின்ற அவலமும் நடந்தேறிவிடுகிறது.

தனக்கு அழகர் கிடைத்திருக்காவிட்டால் தன் தோழி நங்காவின் கதிதான் நமக்கும் ஏற்பட்டிருக்குமோ என சின்னராணி, அழகர் தன்னை பெண்பார்க்க வந்ததை   நினைப்பார்கிறாள்.  'நங்கா கருத்த தோற்றம்.  உருவம் பெருத்தவள். அவளுக்கேற்றபடி எல்லாம் பெருத்து இருந்தது. ஆனால் தன்னை பராமரிப்பதில் அக்கறை இல்லாதவள். அவள் யாருக்கும் கவர்ச்சியை ஏற்படுத்தவில்லை.அந்த ஊரில் எந்த ஆணும் அவளைக்கண்டு கொள்ளாததால் அவளுக்கு ஏற்பட்ட காமத்தை அடக்கவே முடியவில்லை. தன் உறுப்புகளுக்கு மரியாதை தராத ஆண்களை அவமானப்படுத்த எண்ணுகிறாள். அவர்களை காறி துப்புகிற விதமாக. நங்கா  தன்னை முழு நிர்வாணியாக்கிக்கொண்டு  வெட்டவெளியில் கோயில் மரத்தில் தூக்கிட்டுக்கொள்கிறாள்'. நங்காவின்  இறப்பை நினைத்துதான்  சின்னராணி,  அழகரை எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டாள்' என்பது.  எத்தனை நூற்றாண்டுகளைக் கடந்தாலும் பொருளாதாரத்தில் பிந்தங்கிய கடைநிலை பெண்களுக்கான வாழ்வு அமைவதில்:  இன்னும் அவலநிலை, உச்சம் தொட்டதாகத்தான் இருக்கிறது.

இதேபோல தகப்பனை நினைக்கும்போதும், அண்ணனை நினைக்கும்போதும்  உயிர் உள்ள கதைகள் பிறக்கின்றன. அவர்களின் கதையாடல்களின் மூலமாக ஆழமான மனித மன உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. காலத்தின் பொருளாதார சூழல்களை  பிரிதிபளிக்கிறது. 'காட்டில் ஒவ்வொரு மரமும், ஒரு போர் வீரனைப்போல் யுத்தம் நடத்துகிறது. அதன் வேர்கள் பூமியின் பாறைகளை  உடைக்கிறது. தண்ணீர் தேடி அலைகிறது. ஒரு துரவியைப்போல் தவமிருக்கிறது'. (பக்கம்71)  என்கிற  கதைகளோடு ஒன்றிவிடுகிற  கவித்து வமான கதைகள் நிறம்பியிருக்கிறது.

'சின்னராணிக்கு  அடர்ந்த  தலைமயிர்,  அதை பராமரிக்க அவளுக்கு ஏரிச்சலாய் இருந்தது. அதே தெருவில் ஒரு டீச்சர் இருந்தாள். அவள் எப்போதும் சீப்பும் கையுமாகத்தான் இருந்தாள். செம்பருத்தி எண்ணையைதான் தலைக்கு வைப்பாள். ஒரு முடியும் கழிந்து வராமல் இருந்தது'. (பக்கம் 106) என்பது  சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் சொல்ல முடியாதபடி  கிடக்கிறதை அறியலாம்.
 
சாதியின் கோர முகம் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு கிளை கதை 'ஒரு உயர் சாதி கிழவி தன் கர்ப்பிணி மருமகளை அழைத்துக்கொண்டு  பஞ்சம் பிழைக்க வருகிறாள்.வெகுதூரம் நடந்ததால் சோர்ந்து போகிறார்கள். பக்கத்தில் மாடிவீடுகள்  தென்படுகிறது   கிழவி  மரு மகளை ஒரு இடத்தில் விட்டு விட்டுப்போகிறாள். தன்  சாதி ஒத்த வீடுகள்தான் என்று சற்று நிம்மதியாய் சென்று ஒரு வீட்டின் கதவை வெகுநேரம் தட்டுகிறாள்.உள்ளேயிருந்து ஒரு பெண் வருகிறாள். கிழவி  கம்மங்கஞ்சி கேட்கிறாள்.வீட்டுக்காரி வாய்க்கு வந்தபடி அசிங்கமாக திட்டுகிறாள். ஒரு வேளை தன்னை தாழ்ந்தசாதி என்று  நினைத்து திட்டுகிராளோ,  யோசித்த கிழவி நானும் உன் சாதிதாம்மா என்று சொல்லுகிறாள். அப்போதும் வீட்டுக்காரி திட்டி போடி போய் தெரு மண்ணை சாப்புடு என்று துரத்துகிறாள். கிழவி திட்டிக்கொண்டே திரும்புகிறாள். இதற்கிடையில் மருமகள் சற்று தள்ளி எதிரே இருந்த குடிசை பகுதிக்குச்சென்று  கஞ்சி வாங்கி குடிக்கிறாள். அக்குடிசையின் எதிரே பன்றிகள் மேந்துகொண்டிருக்கிறது. தான் விட்ட இடத்தில் மருமகளை காணாது கிழவி தேடுகிறாள்.பிறகு குடிசைபகுதியை நோக்கி நடக்கிறாள்.மருமகள் கஞ்சி குடித்துக்கொண் டிருந்தாள். பார்த்து ஆவேசமடைந்த கிழவி கஞ்சியை தட்டி விட்டு சாதி கெட்ட சாதியில வந்து கஞ்சி குடிக்கிறியா, அதவிட பன்னி பீயதுன்னு  என்று  கண்டமேனிக்கு திட்டி கூட்டிச்செவாள். வழிஎங்கும் வாக்குவாதம் கோபங்கள் இருக்கிறது. ஒருகட்டத்தில் வெகு தூரம்நடந்து ஒரு ஓடையில் போகும்போது கிழவி காணவில்லை.மருமகள் சற்று யூகித்து திரும்பும்போது கிழவி பெரிய பாறாங்கல்லை துக்கிவைத்துக்கொண்டிருக்கிறாள்.  பசியின் கொடுமையால் கஞ்சிவாங்கி குடிச்சிட்டேன் மன்னிச்சிடும்மா, உங்கவாரிசு வயித்துல இருக்குது' என்று கெஞ்சுகிறாள். கிழவி மிகவும் மூற்கமாக கிழேதள்ளி தலையில் பாறாங்கல்லை போட்டுவிடுவாள். தானும் நாண்டுக்கொண்டு  செத்துப் போவாள்.'பெண்களை தாய் என்றும் தெய்வம் என்றும்  சித்தரிப்புகள்  இருந்தபோதும். கட்டமைத்து வைத்த சாதி பிடியிலிருந்து பெண்களும் விடுபட முடியவில்லை. குடும்ப கெளரவத்துக்காக பெண்களும்கூட  அதை சமூகத்தில் பாதுகாக்கிறார்கள். என்பதை இக்கிளைக்கதை தெளிவாக்குகிறது. 

இடையிடையில்  அழகரின் கடந்த காலங்கள் நினைவுகளாக வந்து போகிறது. சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிப்போகிற அழகர் காமக்கூடல் தொழில் செய்வோரிடம் எடுபிடி வேலையில்  சேருகிறான். அங்குள்ள பெண்களின் பின்னணிக்கதைகள் பல பதிவாகிறது. அத்தொழிலை நடத்தும் ஜிக்கி குடும்ப பின்னணி பரிதாபத்துக் குரியதாய்  மாறியபோதுதான் ஜிக்கி அத்தொழிலை நடத்துகிறாள்.என்பது பின்வரும் அவளின் கதை யில் தெரிகிறது. முக்கியமாக பெண்களின் நெருக்கடி, மன ஓட்டங்கள் நாவலில் பதிவாகிறது.

ஒரு கட்டத்தில் அழகர் காமக்கூடல் விடுதியில் ராமி என்ற பெண்ணை படுக்கை அறையில் அவளுக்கு தெரியாமல் பார்க்கிறான். அதை பார்த்துவிட்ட ராமி 'ஏண்டா திருட்டுத்தனமா பாக்கிற'  என்று உள்ளே அழைத்து  அவள் நிர்வாணமாகி  அவனையும் நிர்வாணமாக்கி காமக்கூடல் புரிந்து, 'இதுதாண்டா வேற  ஒண்ணும் இல்ல'  என்று சொல்லும்போது இதற்காக  எத்தனை உயிர்கள், எத்தனை குடும்பங்கள் வாழ்விழந்து சிதறிப்போய் இருக்கிறது. என்று வாசகனை சிந்திக்கவைக்கிறது.

அழகர் சின்னராணிக்கு முதல் முதல் கடற்கன்னி வேஷம் போட்டு தொட்டியில் படுக்கவைப்பான். அவள் வெட்கத்தால் கண்ணைமூடி படுத்துக்கிடப்பாள். 'இப்படி இருந்தாள் நீ உயிரோடு இருக்கிறயா, செத்துக்கிடக்கிறயானு தெரியாது. கொஞ்சம் கண்ணைத்திறந்து அப்பப்போ வாலை ஆட்டிக்காட்டு' (பக்கம் 145)  என்று சொல்லும்போது சிறந்த கலையம்சத்தை வெளிப்படுத்துகிறது.  
                                                இரண்டு
ஏலன் பவர், ஞானத்தந்தை இவர்கள் கடிதங்கள் மூலமாக  விவாதிக்கப்படும்  கருத்துக்கள் மிகவும் முக்கியமானது. மதங்கள் தங்கள் கற்பிதங்களாலும், கட்டுப்பாட்டாலும். ஒரு சாதாரண மனிதனைக்கூட எப்படி தங்கள் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. 'நோய்மையின் காரணமாக தன் உயிரையே இழக்க நேரிடும்  பட்சத்திலும், மத நிர்பந்தங்களில் இருந்து  வெளி ஏறமுடியாதபடி  இருக்கிறார்கள்.' என்பதை  ஏலன் பவர், ஞானத்தந்தைக்கு எழுதும்போது  ஆணித்தரமாய் குறிப்பிடுகிறார். 

ஏலன் பவர்,தெக்கோடு மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்ய வருகிறார். மக்களை தேடிச்சென்று வலிய மருத்துவம் பார்க்க முற்படுகிறார். அங்கு இருக்கும் பழமை வாதிகள் மிரட்டலால் அவரிடம் யாரும் மருத்துவம் பார்க்க வரவில்லை. இலவசமாய் மக்களின் உயிர்காக்க அந்த மக்களிடமே மருத்துவம் பார்க்கிறேன் என்று பிச்சைகேட்கிறார். 'நோய்மைக்கு சரியான சிகிச்சை தனக்கு தெரிந்திருந்தும்  புசாரிகளாலும், மந்திரக்காரர்களாலும் அவர் கண்முன்னே நோயாளிக்கு விஷத்தை உற்றுவதுபோல் செய்கிறார்களே' என்று வேதனைப்பட்டு.  ஞானத்தந்தைக்கு கடிதம் எழுதுகிறார். 'நான் வெற்றி பெறமுடியவில்லை எனில்,  தெக்கோட்டிலேயே  இறந்து போவேன். எனக்காக கல்லறை கட்டுவதற்குக்கூட ஒரு ஆள் இருக்கமாட்டார்கள் என்று நன்றாகத்தெரியும்.'(பக்கம்211)  எவ்வளவு  சோகமான, வேதனைத்தருகின்ற வெளிப்பாடு. நாட்டை தூக்கிநிறுத்துகிறேன், புரட்டிபோடுகிறேன் என்று சொல்பவர்கள்கூட  இந்த வாழ்வை வாழமுடியாது. பதிலுக்கு ஞானத்தந்தை எழுதும் கடிதம் முக்கியமானது. மத சார்பு நிலை கொண்டதாக சில இருந்தாலும் 'நிறைய படித்தவர்கள் எதையும் சிக்கலாக் கிவிடுவார்கள் என்பது உன் விசயத்தில் உண்மையாக இருக்கிறது.' (பக்கம்391) ஆழ்ந்த சிந்தனை கருத்துகளும் உள்ளது. ஏலன் பவர் தான் சார்ந்த மதத்தின் மூட பழக்கங்களையும் விர்ச்சிக்காமல் இல்லை. தன்னுடைய இடையறாத முயற்சியால் வெற்றி பெறுகிறார். ஆனால் உதவி வேலைக்காக வைத்திருந்தவனே  அவரை கொல்லுகிறான்.
                                                    மூன்று 
கொண்டலு அக்கா இந்த பகுதி இல்லையென்றால் நாவல் வெற்றி பெற்றிக்கமுடியாது. எட்டூர்மண்டபம் வரும் ஒவ்வொரு  நோயாளிகளுக்குள்ளும், வாழ்விழந்த, வாழ்வை அறிந்துகொள்ள முடியாத  ஒரு சோகக்கதை இருக்கிறது.

'சிவபாலன் எந்த குறைபாடும் இல்லாமல் இருந்தான். தன் இரு கைகளும் வேர்த்து வழிந்துகொண்டே  இருக்கும். நாளடைவில் நாற்றம் எடுத்துவிட்டது. தான் ஒரு ஆடிட் செய்யும் அரசு அதிகாரி என்றும், தான்வாங்காத லஞ்சப்பணமில்லை.எல்லாவற்றையும் மள மளவென்று  இழந்துதான் இங்கு வந்தேன்.' என்று சொல்லும் அவன் கதையைப் படித்தால் ஸ்பெக்ட்ராம், எந்த ஊழல் பேர்வழியும் சற்று யோசிப்பான்.

கொண்டலு அக்கா ரோகிகளுக்கு தீர்வு சொல்லும்போது. சாவின் முடிவைத்தேடி ஓடுவோரும், வாழ்வை திரும்பி பார்க்க பழகுவார்கள். எல்லா நோய்மைக்கும் காமம் தான் காரணமென்றும். அதிலிருந்து விடுதலை பெற வழிகளையும் ஆராய்கிறது. நாவல்  நிறைவை எட்டுகின்றபோது. சின்னராணி இன்னொரு வித்தைக்காட்டியால்  கற்பழிக்கப்படுகிறாள். எதிர்ப்பார்ப்புகள், ஏக்கங்கள் மத்தியிலும்  வாழ்வை நிறைவு செய்ய முடியாதவளாகவே தொடர்ந்து வாழ்ந்தவள்.   கடைசியில் ஆவேசம் கொண்டவளாக கற்பழித்தவர்களை கொலைசெய்து ஜெயிலுக்குப்போகிறாள். அழகர் அவளை மீட்க்க முடியாத நிலையில் நாவல் முடிகிறது.  
                                        நான் விளங்கிக்கொண்டது.
 எஸ்.ரா அவர்கள். வாழ்வியல் ஆழங்களை. கலையம்சங்களை, மனஓட்டங்களை தெளிவு படுத்துவதுபோல்,  காட்ச்சிப்படுத்துதலில்  செய்யவில்லை.    உறுதியான கல்லுகளால் காங்கிரிட்டால் கட்டடம் கட்டப்பட்டு,  அவசரத்தில் சரிவர பூசுவேளை  செய்யாமல் வண்ணம் தீட்டியதுபோல் உள்ளது நாவல் முடிவு.   எஸ்.ரா மனித வாழ்வை அலசிச்செல்லும், அதே பாணியை   கதை  பாத்திரங்களும், சுவாரசியம் குறையாது கையிலெடுத்துக்கொள்கிறது .
முகப்பு அட்டையில் சேவல், மரத்தின் உச்சாணியில் இருக்கிறது. சேவலின்  தன்மையில் ஒன்று, மனிதனை தூக்கத்திலிருந்து (விடியலைச் சொல்லும்) எழுப்புவதாக அறியப்படுகிறது.

சின்னராணி அதேயிடத்தில் கற்பழிக்கப்பட்டு, வாழ்விழந்து போகிறாள். ஏலன்பவர் சிறப் பான சேவைசெய்தும் கொல்லப்படுகிறார்.ஜிக்கி வாழ்வைப் போராடி வாழ்ந்து கடைசியாக அழகரைப்பார்த்தும்.வெறுமையாய் மறைந்துபோகிறாள் கொண்டலுஅக்கா பாராமரிப்பில் இருந்து கிளம்பும் ரோகிகளின்  நோய்மைக்கு தீர்வு கிடைத்ததாக தெரியவில்லை. இதையெல்லாம் கோபுரத்தின்  உச்சியிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் மாதா, நம்பி வரும் மனிதனுக்கு ஒரு சாதாரண சேவல் செய்கின்ற எழுப்புதல் (சுகம், ஆறுதல் நோக்கிய ஆரம்ப விடியல் ) பணியைக்கூட செய்யாமல் துயில் கொண்டிருப்பதை சுட்டுவதாகவே எனக்கு படுகிறது. 

'துயில்' படிக்க பிரித்தால்  தூக்கத்தைத்தொளைத்து, வாழ்வியலை, நோய்மையின் ஆழங்களை அறிந்துகொள்ள பெரும் பங்காற்றும். அவர் வார்த்தையில் சொல்லவேண் டுமென்றால், 'ஒரு சிறுவனை கைப்பிடித்து  அழைத்துக்கொண்டு போவதைப்போல'  நாவலின்  ஒரு பக்கமும்  விடுபடாமல் படிக்கும் முடிவுக்கு அழைத்துச்செல்லும்.
    
நம்புழுதி             

No comments: