Tuesday, January 7, 2014

விமர்சனம்,

'பூக்குழி'                                 பெருமாள்முருகன்

“மை வெச்சாளோ மாய்மாலம் பண்ணாளோ. பொய் ஆயிருச்சே…. போங்காலம் வந்திருச்சே.” அம்மாவின் அதிர்வு வசை கடைசிவரை புகையும், நெருப்புமாக தொடர்கின்றது. இந்த வசை தன் ஜென்ம விரோதிக்கு எதிரானதில்லை. தன் மகன் சம்மதம் இல்லாமல் நகர்புரத்தில் இருந்து இளம்பெண்ணை மணம் செய்து அழைத்து வந்துவிட்டான். 

இங்கிருந்து தொடங்குகிறது பெருமாள்முருகனின் “பூக்குழி” நாவல். குமரேசன் சற்று படித்தவன், தன்னுடைய வாழ்வாதாரத்தை தானே பூர்த்திசெய்துகொள்ளும் திறமையும், தங்குவதற்கான குடிசையும் அவனுக்கு சொந்தமாக இருக்கிது. ஆனால்,  கூரை வீட்டில் இருந்து தெருவில் போனால் “இன்னா குமரேசா, எங்க கௌம்பிட்ட.  வெய்யில் அதிகம் இல்ல, மழைவருமா?“ போன்ற வெறும் வார்த்தைகள்தான் எதிர்படுகின்ற கிராமத்தின் மாமனோ, மச்சானோ சிறவயதிலிருந்து பழகிய நண்பர்களோ அதிகபட்ச ஆருதலாக பேசப்போகிறார்கள். இதுகூட கிடைக்கவில்லையே என்பதுதான் குமரேசனுக்கு வருத்தம். கிராமத்தார் பற்றிக்கூட கவலையில்லை. பெற்ற தாயே முரட்டுத்தனமாக எதிர்ப்பதுதான் பெரும் வேதனை. குமரேசன் பரவாயில்லை. ஒருவேளை கிராம மக்களை வெள்ளந்தியானவர்கள் என்று நம்பி தன் சொந்த உறவுகளை விட்டு, குமரேசன் மீது இருந்த ஆவல், மற்றும் நேசத்தின் அடிப்படையில், வந்த இளம்பெண் சரோஜா நிலமையை நினைத்தால் அவ்வளவு வேதனை.

நாவல் பெரிய அடுக்குகளை நிறுவுகிறது. சமூகத்தின் பல நிலைகளை புகுத்தி வெளிக்கொண்டுவருகிறது. சாதிப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தின் தொடக்கப்புள்ளியாக விரிகிறது என்கிற பகட்டை எல்லாம் சொல்லமுடியாது. அது எடுத்துக்கொண்ட விஷயம் மிக… மிக லேசானது, நாம் அன்றாடம் ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் கேள்விப்படுவதுதான், ஆனால், அதைக்கொண்டுசென்ற விதத்தில்தான் அதன் சுவாரசியம், சாதாரண கிராமத்திலும் உச்சாணியில் குடிகொண்டிருக்கும் அதிகார வீச்சம், சாதியக்கட்டுமானம், பொறாமையின் வர்த்தகம் என்று மிக.. மிக விரிந்திருக்கிறது.

காதலிக்கிற ஆண், பெண் தன்னிச்சையான முடிவை எடுப்பதற்கு முன் ஒரே ஒரு முறை பூக்குழியை வாசித்துவிட்டு சுதந்தரமான முடிவை எடுக்கவேண்டும். சரோஜா நகர்புரத்தின் ஒரு சாதாரண கூலி தொழிலாளியின் மகள்தான். தாய் இல்லை. தகப்பன், ஒரு சகோதரன் இருக்கிறான். குமரேசனுக்கு தாய் மட்டுந்தான். மிகவும் பின் தங்கிய கிராமம். நிறைய ஆடுகள் வைத்திருக்கிறாள். குமரேசன் ஒரே பிள்ளை.  கிராம இளைஞர்களோடு வேலைக்கு அனுப்பாமல், குமரேசனை நகர்புரம் அனுப்புகிறாள். ஒரு சோடா கடையில் வேலைசெய்யும்போது காதல். திடீரென்று இருவரும் குமரேசன் கிராமம் வந்துவிடுகிறார்கள். அங்கு பாசத்துடன் வளர்த்ததாயும், கிராமமும் காதலர்களை ஏற்றுக்கொண்டதா அவர்கள் நிலை என்ன என்பதுதான் உச்சம்.

தகுதியான நேரத்தில் தன் பிள்ளை தகுந்த அழகுப்பெண்ணை நியாயமாக திருமணம் செய்து அழைத்து வந்திருந்தாலும், பெற்றத்தாய் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏன் தொடர்ந்து வருகிறது.  தாயிடம் முன் அனுமதி கேட்கவில்லையே என்ற காரணம் மட்டுமா? காலத்துக்கும் ஊரார் அவச்சொல்லில் நிற்கவேண்டுமே என்ற ஆதங்கமா? மேல் தட்டு, நடுத்தட்டு, கீழ்தட்டு எந்தத்தட்டாக இருந்தாலும் சாதி என்று வருகிறபோது, அது வெறும் சாணி அள்ள பயன்படுத்தும் அழகற்ற, அழுக்குப்படிந்தத் தட்டுதான் என்பதை அழகாக சொல்லிச்செல்கிறார்.

வெவ்வேறு சாதியில் இருந்து கலந்த காதல்தான் நாவலின் களம் என்றாலும்,  எந்த ஒரு இடத்திலும் ஒரு சாதியத்தை உயர்த்தி ஒன்றை தாழ்த்தி வைக்கிற பொம்மலாட்டங்கள் இடம்பெறவில்லை. ஆசிரியர் மிக நேர்மையாக சாதிய வித்தியாசங்களை கறுப்பு வெள்ளையாக வைக்கிறார். நிறத்தை வைத்தாலும் இரண்டுக்குமான உயர்வு, தாழ்வுகளை சுட்டவில்லை அதுதான் மிக.மிக முக்கியம். இன்னும் சொல்லப்போனால் கொச்சை சொல்லாகப்பேசும் பாத்திரங்கள்கூட எந்த இடத்திலும் முகம் சுளிக்கும்படியான சாதிய உயர்வு, தாழ்வுகள் பேசவில்லை.

மேலும் நாவல் இந்த வருஷங்கள்தான் என்பதை உறுதியாக சுட்டவில்லை என்றாலும், ஏறக்குறைய முப்பது வருஷத்து முந்தைய பழைமையும், தற்போது நகர்புரங்களிலும் புதிய வர்ண்ணம் தரித்து பரவி யிருக்கும் வாழ்க்கையை விளக்குகிறது என்று சொல்லிவிடலாம். ராமாயி ஒப்பாரி வைக்கும் கிராமியப்பாடல்களும், வட்டார வழக்கில்  மைறைந்துபோன அற்புதமான பழமொழிகள், தற்போது அருவருப்பாக எண்ணப்படும் பழைமையான அற்புத சொற்களை வாசிக்கிறபோது, வாசிப்பாளனை மீண்டும் தம் தம் பழைய வாழ்வின் ஏதோ ஒரு சம்பவத்தை நினைவூட்டாமல் விடாது.  

சரோஜா வெண்நிறத்தில் மயங்கிய கிராமத்தின் ஆண்கள், பெண்கள் அவர்களோடு ஒட்டவும் முடியாமல், தள்ளிவிடவும் முடியாமல் தவித்துக்கொண்டு சுற்றும் தோரனை, ரசனை வாய்ந்தது. நாளுக்கு நாள் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை, நீரில் மறைந்திருந்து தீடிரென தலை தூக்கும் சாதிய நம்பிக்கைக்கொண்ட முதலைகளிடம்  தன்னை நம்பி வந்த ஜீவனைக்காத்துக்கொண்டும், தினமும் வயிற்றுப்பிழைப்பைப் பார்க்கவும் வேண்டிய சுழலில், சரோஜாவை இரண்டு நாள் தன் வீட்டில் விட்டு நகர்புரம் போகிறான். பத்திரமாக இரு நான் இரண்டு நாளில் வந்துவிடுவேன். என்று கடைசியாக சொன்ன வார்த்தைதான் சரோஜாவுக்கு ஆருதல். என்ன நடக்குமோ என்ற நிலையில் சரோஜாவிற்கு வயிறு கலக்குகிறது சற்று இருலடைந்த புதர் பக்கமாக மலம் கழிக்கப்போகிறாள். அங்கு தன் மாமியார் அவளை கொல்வதற்காக கிராமத்தலைகளுடன் ரகசியமாக பேசிக்கொண்டிருக்கிறாள். அய்யோ தன்னுடைய மாமியாரின் குரல்தான் இருள்டைந்த புதருக்குள் குலை நடுங்கி… நடுங்கி மறைகின்றாள். எல்லாத்தையும் நானே சொல்லிடுவேனு நினைக்காதிங்க. புத்தகத்தை வாங்கி அதன் உச்சத்தை நுகர்ந்து சந்தோஷத்தால் மனதைப் பூர்த்தியாக்குங்கள், உங்கள் ஆயுசுநாட்கள் சற்று நீண்டிருக்க.

எனக்கு குமரேசன்  அம்மா பாத்திரத்தை சரியாக சொல்லவில்லையோ என்பதாகப்படுகிறது. தன் மகனை படிக்கவைத்து கிராம பிள்ளைகளோடு போனால் கெட்டுவிடுவான் என்கிற அளவுக்கு பாசத்தை வைத்திருந்தவள், கலியாணம் பண்ணிக்கொண்டு வந்தபிறகு ஏறக்குறைய ஆறுமாதம் ஆனபிறகும் தன் நிலையில் இருந்து சற்றும் மனம் மாறாது தீவிரமாக சரோஜாவையும், குமரேசனையும் பரம எதிரிபோல் பாவிப்பதற்கு வேறுகாரணம் இருக்குமோ? ராமாயி இருபது வயதிலேயே கணவனை இழந்தவள். குமரேசன் படித்துவிட்டு இருந்தபோது  நகர்புரம் சோடா கடையில் சேர்க்க உதவிய நாட்டுக்கோழி முட்டை வாங்கும்பாய். கிராமத்திற்கு வரும்போதெல்லாம் ராமாயி வீட்டில் தங்குவதும் இருந்திருக்கிறது. குமரேசன் தன் ஜோடியை கூட்டிவந்த பிறகு பாய் வருவதேயில்லை. இதற்கும் ராமாயி கோபத்துக்கும் தொடர்பு இருக்குமா? அல்லது சாதி சனங்கள் ஊர் கூடி வாழமுடியவில்லையே என்ற வருத்தம் மட்டும்தானா? இப்படியான மிக நுணுக்கமான விஷயங்களை நாவல் சொல்லாததால் சற்று வருத்தமும் இருக்கிறது.

பழக்கப்பட்ட கதையம்சமாக இருந்தாலும் யார்கண்ணிலும் படாத பல விஷயங்கள் நாவல் வைத்துச்செல்வது சிறப்புக்குரியது.

         ஆசிரியர்              வெளியீடு               விலை

      பெருமாள்முருகன்        காலச்சுவடு.             ரூ.130/-

டேனியல் 

No comments: