கறுப்பு மரம் தினந்தோறும்
அதன் வீரிந்த கிளைகளில் இருந்து
பூக்களைப்பூக்கிறது
வேர்களைச்சுற்றியத்
தரைப்பகுதி மலக்குவியல்,
சாக்கடை ஓடையென பரவிக்கிடக்கிறது
அதிகாலையில் மிகுந்த வாசத்துடன்
பூத்து உதிரும் அறிதான பூக்கள்
மெல்லியத் தென்றலைத் தழுவிக்கொண்டே
கீழே விழுகிறது
ஒன்று
தன் அழகிய இதழில் சாக்கடை குடித்தவாறு
வாசத்தைத் தொலைத்து நகர்கிறது.
இன்னொன்று
மலத்தில் நடவு செய்ததுபோல்
அமர்ந்து முகத்தைக் காட்டுகிறது
அதிலிருந்து எழும் நாற்றத்தின் வாடை
திசை நிறப்பி உலவுகிறது.
இருந்தாலும் கறுப்பு மரத்திலிருந்து
பூ உதிர்வதும் நிற்கவில்லை.
சாக்கடை ஓடுவதும் நிற்கவில்லை
மரணமும்மற்று, உயிர்த்தெழுதலுமற்று
நிலை கொண்டிருக்கிறது
பூமியின் சுழற்சிபோல் என்னைச் சுற்றும் நிழல்.
டேனியல்

No comments:
Post a Comment