நான்காம் ஆண்டு நிறைவு
நான் இன்டர்நெட் கனைஷன் வாங்கி ஐந்து
வருடம் தொடங்கியுள்ளது. இதுவெல்லாம் ஒரு விஷயமா என்று நினைக்க வேண்டாம்.
எனக்கு
இதுதான் விஷேஷம். என் பிறந்தநாள் விழாவை கொண்டாடியதில்லை. அதை எப்போதுமே
அலட்சியப்படுத்தியுள்ளேன். அதைவிட இந்தக் கனைஷனைத் தொடர்ந்து வைத்திருப்தில்தான் மகிழ்வுகொள்கிறேன்.
என் வாழ்க்கையில் இதைத்தவிர எந்த ஒன்றும், இவ்வளவு நாள் தொடர்ந்து தடையில்லாமல், (ஒயர்
அறுந்து தடை வந்ததுண்டு) நான் வைத்திருந்ததேயில்லை. பணம் கையில் இருக்கும்போது படிப்பு,
சில பொருள் என்று மிக மிக ஆசையாய் தொடங்குவேன். அதற்கு மேலும் முதலீடு
தேவைப்படும்போது தொடரமுடியாமல் தடைபட்டு ஆசை எல்லாம் நிறைவேறாமல் போகும். ஆனால்,
இன்டர்நெட்டை மட்டும் எந்தக் காரணத்தைக்கொண்டும் இழக்கவே முடியவில்லை.
இதற்கு இன்னொரு காரணம் நான், வலைப்பூவைத் தொடர்ந்து வைத்துள்ளதாகும். ‘நம்புழுதி’ வலைப்பூ தொடர்ந்து நான்கு
வருஷம் முடிகிறது. காஞ்சிபுரத்தில் தீவிரமான இலக்கிய ஈடுபாடு உள்ளவர்களில்கூட
முதலாவது வலைப்பூவைத் தொடங்கி எழுதிவந்தவன் நானாகத்தான் இருக்கும்.
எனக்குத்தெரிந்து வலைப்பூவில் நல்ல விஷயத்தையேத் தொடர்ந்து தந்துவந்திருக்கிறேன்.
அதன் வாசிப்புப் பக்கம் 14,215 என்று காட்டப்படுகிறது. இதற்குப்பின்னால் எத்தனை
வறுமையிலும் இன்டர்நெட்டைக் கட்செய்யாமல் கட்டணம் செலுத்தியதுதான்
நிகழ்ந்திருக்கிறது. முகப்புத்தகமும் அப்படிதான் என்று நினைக்கிறேன். ஆனால்,
இதுவரை யார் இந்தப்பக்கங்களைப் பார்த்தது, வாசித்தார்கள், ஏதாவது தகவல்
சொன்னார்களா என்றால் மிகமிகச் சொற்பம்தான்.
நான் முகப்புத்தகத்தில் பார்க்கிறேன். சில
பிரபலமான எழுத்தாளர்கள், அல்லது பெண்கள் ஒரே ஒரு வரி, ‘அந்தத் தெருமுக்கில் வடை சாட்பிட்டேன்,
நன்றாக இருந்தது.’ என்றால் கூட ‘பசிக்கு எறும்பு உணவு திருடுவதுபோல்‘
வரிசையாக வருகிறார்கள். லைக் போடவும். கருத்து சொல்லவும். அப்படி வருவது
அவர்களுக்குப் பிடித்திருக்கிறது, நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. இவைகளைத்தாண்டி
எனக்கும் சில நண்பர்கள் லைக்போடுகிறார்கள். அவர்களின் பக்கங்களைச் சென்று
பார்த்தால், அவர்கள் உண்மையிலேயே தீவிரமான இலக்கியப் பணியாற்றுகிறவர்கள். இந்த
சிலருக்காக தொடர்ந்து எழுதவேண்டி இருக்கிறது. என்று சொன்னால் அது ஐம்பது
விழுக்காடுதான் உண்மை. முக்கியமாக என் சிரசின் தளத்தை விரிவு படுத்தவும், சிரசின்
பாரம் இறக்கி வைப்பதற்காகவுமே மீதி விழுக்காடு, இன்டர்நெட்டை வைத்திருக்கிறேன்.
பசித்தலும், பஞ்சமும்
என் வலைப்பூ இயங்குவதை கட்டுப்படுத்திவிடாது. (கூகுளும், கரண்ட்டும் தவிர) பாரபட்சமற்று.
சகலத்தையும் தடையற்றுக் கொடுக்கும் இன்டர்நெட் நான் தொடங்கி ஐந்தாம் ஆண்டு தொடர்கிறது. ‘நம்புழுதி‘
வலைப்பூ மற்றும் முகப்புத்தகம் நான்காம் ஆண்டை முடிக்கிறது.
சமகாலத்தில் இருந்தும், இப்பணிக்கு ஊக்கம்
தராத அத்துனை தோழர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் நன்றி.. நன்றி.
ஜே. டேனியல்

No comments:
Post a Comment