எல்லையை வகுக்கும் தெரு நாய்கள்
எதிரி
சுவர்ஒட்டி விளம்பரமாய் இருந்தாலும்
கிழித்தெறியும் வன்முறையாளன்,
பாதுகாப்பில்லை
பத்திரம், பத்திரமாக இருக்கட்டும்
எனப் பக்கத்தில் கொடுத்திருந்தால்
பட்டாவில் பெயர் மாற்றிக்கொள்ளும்
பாதக மோசக்காரன்,
மென்சதைகள் துளிர்க்காதவளை
வன்புணர்வுக்குத் தூக்கும்
இரக்கமற்ற கொலைகாரன்,
கிழம் பூண்டு விழுவோர்,
தெருவோரம் அழுவோர்,
இருப்பிடம் தேடி
ஒரு வேளை நிம்மதியைத் தந்ததின்
இன்பங்களை ரசிப்போர்,
இத்தனை வகையாரில் யாரும்
மாற்றுச் சிந்தனையே அற்றவர்கள்போல்
ஒரே கதகதப்பில் உறங்கவைக்கும்
மென்மையான இருளை
அலங்கோலமாக்குவது
தெருநாய்கள் மட்டுமே.
எதற்காகவோ ஒரு நாய்
எழுப்பும் அருவருப்பான ஊலையிடுதலுக்கு
பல மூலைகளில் இருந்து
பின்னணியை கட்டமைக்கும் நாய்கள்.
நாய்கள் தனக்கு
உப்பிட்டவனை மட்டுமே
நேசிக்கப் பழகுகிறது
குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே
தான் உழலவேண்டும்
என்றக் கட்டாயத்தில் வாழ்கிறது
பக்கத்துத் தெருவில்
வாழும் நாய் தவறுதலாக
நுழைந்துவிட்டால்
கூட்டாகச்சேர்ந்து
அதன் குரல்வலையைப் பிய்த்து
துடிக்கத்துடிக்கச் சாகடிக்கிறது
இதன் உச்சகட்டமானக் கொடூரம்
வந்தது குழந்தை நாயாக இருந்தாலும்
அதன் உயிர்த் தப்புவதேயில்லை.
பெண் நாய்
தனக்கு இனக்கமானவற்றோடு
தன் இளமையைச்
சுகித்துக்கொள்ள முடிவதேயில்லை
வலுவுடன் திரியும் நாய்
வாலுக்கு மறைவின் வழியில்
வழியும் காம ரசத்தை
நக்கிக்கொண்டே அலைகிறது
அதன் எல்லைக்குள்
பருவமாகும்
எல்லா பெண் இளமையையும்
தான் மட்டுமே அனுபவிக்க
பல வீடுகளில் இரந்து வாழ்கிறது
ஆரம்பம் முதல் முடிவுவரையான மனிதனுக்கு
வெட்ட வெளிகளில்
அலங்கோலமாகப் புணர்வையும்
கூட்டுப்புணர்வுக்கானப் பயிற்சியையும்
மனிதனோடு இணைந்து வாழும்
எல்லை வகுக்கும் தெரு நாய்கள்
கற்றுக்கொடுக்கிறது.
ஜேடி
No comments:
Post a Comment