Monday, May 21, 2012

கவிதை



பிணம் நண்மை செய்கிறது

இந்தப் பிணம்
நேற்று வேலா ஓட்டலில்
கனந்து எரியும்
அடுப்புக்கு முன்னால் நிற்பவனின்
உடலில் ஊற்றெடுத்துக் கழியும்
சிறு ஆறுகளைத்
துடைத்தெடுக்க
ஆர்வம் காட்டிக்கொண்டேயிருந்தது.

இரண்டு இட்டிலி
மட்டும் போதும் என்று
ஓட்டல் தட்டுகளில் சுடச்சுட
உப்பியிருக்கும் மெதுவடையையேப்
பார்த்துக்கொண்டிருக்கும்
வாலிபனுக்கு மெதுவடையோடு
ஒரு மசால் தோசையும்
கொடுங்கள் என்று சொல்ல வேண்டும்போல் இருந்தது.

பால்கட்டிக்கொண்டிருக்கும்
அடையாளத்தை மார்பின் முனையில்
காட்டிக்கொண்டிருக்கும்
இலையெடுக்கும் பெண்ணிற்கு
கையில் இருக்கும் எல்லாத்தொகையும்
கொடுத்து போ இனி வராதே
எனச் சொல்ல மனம் துடித்துக்கொண்டிருந்தது.
இவன் மனிதனே அல்ல இறைவன்
என்று சத்தமாக சொன்னபோது

பக்கத்திலிருந்தவன் சொன்னான்
ஆமாம் ஐயா நேற்று முன்தினம்
மருத்துவர் இருபத்திநான்கு மணிநேரம்
எச்சரிக்கைத் தந்திருந்தார்
மனைவியைக்கூட
நேற்றுதான் அவ்வளவு பாசமாக
வேலா ஓட்டலுக்கு அழைத்துச்சென்றார்
பாவம் அதிகாலை மரணம்
நம்பவே முடியவில்லை.
------------------------------------------

ஜேடி

No comments: