Saturday, March 24, 2012

சினிமா

                           தமிழ்  சினிமா  ஏமாற்றுகிறது
           திரையரங்குகள்  வாழ்வைக் கற்றுத்தருகிறது.


தமிழகத்தில் முன்னணி இயக்குநர்களின் தமிழ் படங்கள் எப்போதும்போல மக்களின் மூளையை மழுங்கடிக்கும் செய்தியைத்தான் தருகிறது. நேற்று வேட்டை’  என்ற படத்தைப் பார்த்தேன்.  இயக்குநர் லிங்குசாமியின் படம்.  இவர்கள் படத்தை  ஸ்வாரசியமாக  தந்து  விபாரத்தில் வெற்றிபெறவேண்டும் என்றே நினைக்கிறார்கள். முன்னணி இயக்குநர்களுக்கு முற்றிலும் கலையம்சம்  நிறைந்தப்படங்களை எடுக்கத்தெரியும். ஆனால் மக்கள் ரசிக்கமாட்டார்கள் என்று காரணம்காட்டி கலைப் படங்களை எடுக்கபயப் படுகிறார்கள். 

ஒரே ஒரு வருஷம் தமிழகத்தில் வெளியாகின்ற அனைத்துப்படங்களும், முக்கியமாக முன்னணி இயக்குநர்கள் பங்கேற்கவேண்டும்,  மனித வாழ்வின் யதார்த்தம் மீறாமல்  படங்களை வெளியிடட்டும். (உண்மையைப் புரிந்துகொண்டு)  நிச்சயமாக மக்களின்  ரசனை மாறி கலைப்படங்களையும் வெற்றியடையச் செய்வார்கள். புதியவர்கள்  பலர், வாழ்வின் யதார்த்தங்களை மீறாமல் படங்கள் தருகிறார்கள். அதில் சிலர் கலைவெற்றியோடு, விபார லாபமும் அடைகிறார்கள். சிலர், விபார லாபம் இழந்துவிடுகிறார்கள், ஆனால் கலையில் தோற்பதில்லை. இப்படிச் சிலர்தோற்பதற்குக் காரணம் முன்னணி இயக்குநர்கள்  முற்றிலும் வாழ்வின் யதார்த்தம் மீறிய ஏமாற்று வேலையோடு படத்தைத் தருவதால்தான். தகப்பன், செய்வதுமட்டுந்தானே உண்மை என்று பிள்ளைகளுக்கு நம்பக மூட்டப்படுகிறது. முன்னணி இயக்குநர்கள் செய்கிறப் படங்களுக்கு மாறாக, புதியவர்கள் கட்டமைக்கும்  படங்கள் தெரியாமல் எடுக்கிறார்கள் என்ற பிம்பத்தை உண்மைத் தெரியாத மக்கள் மத்தியில்  தோற்றுவித்துவிடுகிறார்கள். இவைகள் எல்லாம் பொய் என்பது சமீபமாக புதியவர்கள் பெற்ற தேசிய விருதுகள் நிறுபிக்கின்றன.

கிளைமாக்ஸில் மாதவனும், ஆர்யாவும் துப்பாக்கியைத் தரையில் சுத்தவிட்டு வில்லன் பக்கமாகத்திரும்பினால் ‘நி காலி’ என்று பிரித்தியேகமான முடிவாக இயக்குநர் வைக்கிறார். இப்படி அபத்தமான ரசனையைத்தான் முன்னணி இயக்குநர்கள் மக்களுக்கு பிரதானமாக வைக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொண்டு வெளியே வந்தேன். என்ன இருந்தாலும், தமிழ்ப்படம் சொல்லித்தராத பல வாழ்வியலை திரையரங்குகள் சொல்லித்தருகிறது.

தகப்பன், தன் மகளிடம் பாசத்தை வெளிக்காட்டச்  சினிமாவிற்கு அழைத்துவந்திருப்பார் போல  சுற்றி நிற்கும் வாலிபர்களின் சிறிதுநேர மன மகிழ்ச்சியின் விளையாட்டிலிருந்து தப்பிக்க அவளை தன் கூடவே நிற்கவைத்திருக்கிறார். அவள் யாரையும் பார்க்க, அவளாகவே அனுமதி எடுத்துக்கொள்கிறாள். அவளை யாராவது பார்த்தால் அவள் தகப்பன்தான் அவனுக்கு உடனே எதிர்ப்பார்வையை வைக்கிறார்.

காதலியை விட்டுவிட்டு, காதலன் நொறுக்குத்தீனி வாங்கிவரச் சென்றவன்  இன்னும்  வரவில்லை. சுவர் ஓரமாக நின்ற காதலி, ககைபேசியையும் கடைவீதிகளையும் பார்த்துக்கொண்டே நிற்கிறாள். இந்த கொஞ்ச நேரத்தில் இவ்வளவு துவண்டு விடுகிறாளே. சனியன் காத்துக்கிடக்கட்டும் என்று வேண்டுமென்றே வீட்டுக்கு காலதாமதமாக  வரப்போகின்ற காலங்களில் எல்லாம் எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறாள்.

சதைகளின் தடங்களை இன்னும் காணாத காதல் ஜோடிகள் தங்களைச்சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாமல் சொர்க பூமியில் தவழ்ந்து கிடக்கிறார்கள். எல்லாம் மாயை, நாம் இருவர்மட்டுமே நிஜம் என்று திளைக்கும் அப்பாவிகள்.

ரசனை இல்லாதக் கணவனைப்பெற்ற மனைவி, குடும்பப் புழுக்கத்தைத் துறந்து சற்று நிம்மதியைக் கொண்டாடத் தன் பிள்ளைகளைச் சாக்குவைத்து வந்திருக்கிறாள். திரையரங்கு வளாகத்தில் சுதந்திரமாகத்திரியும் பிள்ளைகளை நினைத்து சற்றுநேரம் சந்தோசப்படுகிறாள். அந்தச் சந்தோசம் சடிதியில் மறைந்துப்போகிறது, பிள்ளைகள் கேண்டினில் விற்கும் இருமடங்கு விலையுள்ள தின்பண்டங்களைக்கேட்கும்போது.

எந்தப்பக்கம் திரும்பினாலும் கேட்டுப்போடும் உறவுகளை மீறி ரசிக்கப் பெண்களைக்  கூட்டாக்க முடியாமல் தவிக்கும் வாலிபர்கள். எந்த யுகத்தில் நடக்குமோ, பார்க்கும் பெண்களிடம்  சுதந்திரமாய் பேசுகின்ற நிலமை.பேச்சில் வன்மம் இருந்தால் பாளார் அரைகொடுத்து, எந்த மனஉருத்தலும் இல்லாமல் விலகிக்கொள்ளட்டும். ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலுக்கு ஏன் விலகிச்சேல்லவேண்டும் என்ற கேள்வியோடுதான் திரிகிறார்கள் பல வாலிபர்கள்.(பேசுவதே உரசிக்கொள்ளத்தான் என்கிறபோது, நாறும் பன்றியும் ஜாக்கிறதையாகத்தான் இருக்கவேண்டும்)

பத்துவருடத்திற்கு முன் என் கண்முன்னால் வளர்ந்த குழந்தைப்பெண்.  தாய், தகப்பன் இல்லாத இவள், அவள் பாட்டியிடம் வளர்ந்தாள். ஒரு நாள் ஏதோ உதவிக்காக மூதாட்டி என்னை அழைத்தாள். சற்று வளர்ந்திருந்த நிலையிலும் ஒரு அனாசின் மாத்திரை வாங்கமுயாமல் சுருண்டு படுத்துக்கிடந்தாள் அந்த சின்னப்பெண். நல்ல வசதியான உரிமைநிறைந்த சொந்தங்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஒரு ஆண் பிள்ளையைத்தத்தெடுத்து வளர்த்தார்கள். அவளேதான் இன்று திரையரங்கில்  பார்த்தேன், என்ன அழகு. மெழுகுபோன்ற உருண்டையான முகத்தில் கண்ணுக்குத் தெரியாத மூக்குத்தி அணிந் திருந்தாள். அது அவளின் அழகை இன்னும் கூட்டியிருந்தது. பெண்கள் எப்படித்தான் தங்கள் வசீகரத்தைக் கூட்டிக்கொள்கிற சூட்சமங்களைக் கண்டுபிடிக்கிறார்களோ?  நான் அவளைப்பார்த்தேன். குழந்தையாய் இருந்தவளா அது?  என்னை நானேக் கேட்டுக்கொண்டேன். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். பொதுவெளிகளில் பெண்கள் எவ்வளவு ஒழுக்கமான வர்களாய் தங்களை அடையாளப் படுத்துகிறார்கள். தன் கைப்பேசியை காதருகில் கொண்டுவந்தாள். இதற்குள் அவள்தான் என்று ஊகித்துவிட்டு  சற்று இடம் மாறினேன்.  மீண்டும் திரும்பியபோது புதிதாக இருந்த நீண்ட தாலியை எடுத்து வெளியேவிட்டிருந்தாள். கலியாணம் முடிந்துவிட்தா? நல்ல வாழ்வுதான் அமைஞ்சிருக்கும்போல. நல்லா இருக்கட்டும் என்று  திரையரங்கில் நுழைந்தேன்.  தமிழ்படங்கள் பலநேரம் வெற்றாய் போனாலும்,  திரையரங்கு எப்போதும் வாழ்வுகளைக் கற்றுத்தருகிற இடமாகவே இருக்கிறது.

ஜேடி

No comments: