Sunday, August 28, 2011

கட்டுரை

த.மு.எ.க.சவும் பிரெஞ்ச் ஆய்வுஅரங்கமும் இணைந்து
நடத்திய இரண்டாம்,மூன்றாம் நாள் நிகழ்வு(12,8,11,13,811)

எழுத்தாளர் பொன்னீலன்

தன் வெண்நிற ஆடைகளைப்போலவே, கட்டை விரலை நிமிர்த்திப் பிடிக்கின்றது போல தன் கற்றை மீசையும், தலை மயிரையும் முதுமை வெண்தன்மையாய் மாற்றியிருந்தது. நாங்கள் சில நண்பர்களுடன் சேர்ந்து கல்கியின் பொன்னியின் செல்வனோடு, அதே கருத்து ஒற்றுமை கொண்ட இன்னொரு புத்தகத்தையும் வைத்துக்கொண்டு ஒன்றுக்கொன்று ஒப்பீட்டுத்தன் மையில் பக்கங்களை விட்டு விட்டுப்படிப்போம் காலப்போக்கில் ஊன்றிப் படிக்கின்ற பழக்கம் வந்தது நான் தாயாரிடமும், தந்தையிடமும் கதைகளை உள்வாங்கிக்கொண்ட அனுபவமுண்டு. என் தாயார் அதிகம் படிக்கவில்லை. ஆனால் ஆங்கிலம் உள்பட நான்கு மொழிகளைக் கற்றறிந்திருதார்.

நான் முக்கியமாக என் கரிசல் மண் சார்ந்த மக்களிடதிருந்தே என் நாவல்களுக்கான களங்களை தேர்வுசெய்கிறேன். வழியாக வழியாக வருகின்ற நாட்டார் பாடல்கள்,நாட்டார் வாழ்மொழி, நாட்டார் மரபு,நாட்டார் கதைகள் இவைகளில் இரத்தமும் சதையுமான மக்களின் வரலாறுகள் புதைந்து கிடக்கின்றன. அவற்றிலிருந்து இலக்கிய நயத்துடன் வரலாறுகள் படைக்கமுடியும்.நான் அப்படியான படைப்பைத்தான் வைக்கிறேன். எந்த படைப்பையும் எழுத வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டு எழுதவில்லை. மேலும் என் படைப்புகள் மக்களின் வாழ்விலிருந்து எடுக்கப்பட்டதுதான். எழுதி எழுதி துளிர்த்ததுதான் என் எழுத்துக்கள். அதை ஏன் இப்படி எழுதினேன், அப்படி எழுதினேன் என்று கேட்பதை கேலிக்குறியதாகத்தான் நான் பார்க்கிறேன். எழுதவருகிறவர்கள் புத்தகங்களை நிறையப்படிக்கவேண்டும். கூடவே மக்களின் வாழ்வு முறை வரலாற்றை, நேரடியான மக்களின் வாழ்வை படிக்கவேண்டும். தொன் மங்களை உடைத்துப் பார்க்கவேண்டும். இப்படித்தான் என் இயக்கம் தொடர்ந்தது இயங்கிவந் திருக்கிறது‘என்றார்.

எஸ்.ராமகிருஷ்ணன்

வரலாறு என்றால் என்ன? ஒரு எழுத்தாளனாக வரலாறு ஏன் எனக்குத்தேவைப்படுகிறது.எது வரலாறு. அறியப்பட்ட வரலாறா? அறியப்படாத வரலாறா? அறியப்பட்ட வரலாறு என்றால் எப்படி அறியப்பட்டது. அறியப்படாத வரலாறு என்றால் எப்படி அறியப்படாதது. ராஜ ராஜ சோழனுக்கென்று ஒரு வரலாறு இருந்தது அது அறியப்பட்ட வரலாறு. அறியப்பட்ட வரலாறை யார் எழுதியது. அதற்கான பின்னனி என்ன? அறியப்படாத வரலாறு கடைநிலை மக்களின் வரலாறு, அதை யாரும் எழுதாமல் விடுதலுக்கான காரணம் என்ன?

வரலாறு என்றதும் ஒரு ஊர்ல ஒரு ராஜா,ஒரு ராணி என்று ஏன் சொல்லுகிறோம். ராஜாவுக்கு ஒரு வரலாறு இருக்கும்போது ராணி வரலாறு ஏன் இல்லை. ராணி எந்த ஊர். ராஜா வரும்போது அவர் மட்டுந்தான் வந்தாரா. ஒரு சமயல்காரன் கூட இல்லையா? அவனுடைய வரலாறு ஏன் விடுபட்டுப்போனது. வரலாறு என்றதும் ஏன் கோட்டைகள் நாபகம் வருகிறது. குதிரைகள் நாபகம் வருகிறது. அவ்வரலாற்றை பார்க்க நான் ஏன் அக்பர்காலத்தை,பாபர்காலத்தை நோக்கிப்போகவேண்டும். வலாறு என்றதும் ஏன் மிகவும் நீண்டதொலைவையே மனம் கற்பனை செய்கிறது. எனக்கு அருகாமையில் வரலாறு இல்லையா? ஒண்ணாம் நுற்றாண்டு, இரண்டாம் நூற்றாண்டு,ஏழாம் நூற்றாண்டுகளில் படிப் படியாகச் சொல்வதுதான் வரலாறா?

எனக்கு அப்படியில்லை. இன்றும் ஒண்ணாம் நூற்றாண்டு, இரண்டாம் நூற்றாண்டு,ஏழாம் நூற்றாண்டு இருக்கிறது, ஆனால் எங்கு இருக்கிறது என்று தான் தெரியவிலை. வரலாற்றை ஒரு காலத்துக்கும் இன்னொரு காலத்துக்கும் செங்கல் அடுக்குவதுபோல அடுக்கத்தேவை யில்லை. வரலாறு என்பது இருந்துகொண்டே இருப்பது. ஒரு வரலாற்றை,வரலாற்று ஆசிரியர்கள் எழுதும்போது ஒருவிதமாகவும், இலக்கியவாதிகள் எழுதும்போது வேறுவித மாகவும் எழுதுவது எப்படி?

என் ஊர் ஸ்ரீரங்கம் பக்கத்தில் இருக்கிறது, அங்கு ஆறு உண்டு அங்கு ஒரு குதிரையைப் பார்த்தேன். அதைப்பார்த்போது இந்த குதிரையில் யார் அமர்ந்திருப்பார்கள், அது யாருடைய குதிரை. எங்கிருந்து வந்தவர்கள். அதற்கு உரிமையாளர் இல்லையா, இது எந்தகாலத்துக்குதிரை அந்த காலத்தின் வரலாறு என்ன? இப்படி அடுக்கடுக்காக ஆராய்வதின் மூலமாகத்தான் என்னால் வரலாற்றை படைக்க முடியும். மேலும் வரலாற்றை கற்பனையில்லாமல் இலக்கிய நயத்தோடு என்னால் படைக்கவே முடியாது. ஒரு பொருளை பல்வேறு கோணங்களில் பார்ப்பாதற்கும், ஒரு நிகழ்வை பல்வேறு யூகங்களில் உள்ளடக்கிக் கொண்டு செல்வதற்கும் கற்பனை மிகவும் அவசியம். நிகழ்காலத் திலேயே என்னுடைய வரலாறு கண்முன்னே இருந்தும் ஆது வேறு வேறு திசைகளில், வேறு வேறு நிலைகளில் தங்கிக்கிடக்கிறது. அவைகளை கண்டுபிடித்து வெளிக்கொண்டுவருவதுதான் இலவாதிகளின் வரலாற்று ஆசிரியர்களின் பணியாய் இருக்கிறது‘ என்றார்.


கண்மணி குனசேகரன்

என்னால வெறுமனே சும்மா இதப்படிச்சிட்டு,அதப்படிச்சிட்டு எழுதிவிடமுடியாது. எதையும் கண்ணாலப் பார்த்தாதான் நமக்கு வேலைக்கு ஆகும். எழுதமுடியும். என்னுடைய இயல்பே வாழ்க்கையில நடக்கிற விஷயங்களை, பார்க்கிற செயல்களை போகிறப்போக்கில் முன்னப்பாதி, பின்னப்பாதி தள்ளிட்டு நட்டுவிடுற கரும்பைப் போலதான் என் படைப்பபுகளை படைக்கிறேன். என் கிராமத்தில் ஒவ்வொருவரிடத்திலும் கொட்டிக்கிடக்கின்றது எழுதித்தீராக் ஆயிரம் கதைகள். அவைகளையே நான் படைப்புகளாக்குகின்றேன்.

நான் அஞ்சலை நாவலை ஆக்கம் செய்வதற்கு எந்த வரலாற்று ஆவணங்களையோ புத்தகங்களையோ அதிகமாக தேடி அலையவில்லை. அஞ்சலைக்கு ஒரு ஏரியும் சுற்றி விளை நிலங்களும், ஒரு சிறிய கிராம், அதில் வாழும் மக்களும் வேண்டியிருந்தது. அதற்காக ஏரியின் படம், ஒரு சிறு கிராமம்,அதில் வாழ்கிற மக்கள் என்று சார்ட்டில் நானாக வரைந்து‘ சுவற்றில் ஒட்டிவிடுவேன். அதன் பிறகு நாவல் எழுதத்தொடங்குவேன்.அப்போது எனக்கு இன்னின்ன பாத்திரங்கள் அமைப்பதிலும், அதிலிருந்து ஒவ்வொரு பாத்திரத்தின் பின்னணியை விவரித்து கொண்டுசெல்வதிலும் எனக்கு எந்த சிக்கலும் வந்ததில்லை. நாவலை முடித்தபின் வேறு ஒரு நபரிடத்தில் காட்டினால் ஒருவேளை, அவர் இந்த இடத்தில் இப்படி இடிக்கிறதே என்றால்,எந்த காலத்தில் நடக்கிறது என்று தெரியவில்லையே முக்கியமாக அது வரவேண்டும் என்று சொன்னால்,ஒத்துவராத இடத்தை கட்செய்து தூக்கிவிட்டு, செர்க்க வேண்டிய இடத்தில் ஒன்றை கோர்த்துவிட்டுப்போவேன்‘. என்பதாக தன் படைப்பைக்குறித்து உரையாற்றினார்.

சு.வெங்கடேசன்

வரலாற்று நாவல் என்பது புனைவுகள் இல்லாமல் எழுதப்படமுடியாது என்பதுதான் என் நிலைபாடு.வரலாற்றுப் புனைவு என்பது வரலாற்றின் எழுச்சிகளுக்கு உட்பட்டது. எழுதப்பட்ட வரலாறு ராஜ ராஜன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டினான் என்பது, கடைசியாக செங்கமலம் பச்சைபுடவை கட்டிச்சென்றாள் என்பது எழுதப்படாத வரலாறு இப்படித்தான் தமிழகத்தின் வரலாறுகள் இதுவரை இருக்கின்றன. எழுதப்படாத வரலாறு வாய்மொழியாக, புலக்கதைகள் மூலமாக, தலைமுறை தலைமுறையாக இருந்துவருகின்றது. இவைகள் சாமான்ய மக்களிடமே அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றது.எழுதப்பட்ட வரலாற்றையும், மக்களை கண்டுகொள்ளாமல் விட்டுப்போன எழுதப்படாத வரலாற்றையும் இனைத்து புதிய வரலாறுகள் எழுதும்போது உண்மையான வரலாறுகளை வெளிப்படுத்தமுடியும். என்று நினைக்கிறேன்.என் நாவல்களில் இருதளங்களையும் இனைத்துத்தான் வரலாற்றை கட்டமைக்கிறேன்.‘ என்பதாக உரையாற்றினார்.


தோழர் சோலை சுந்தரபெருமாள் உட்பட பேசியப்படைப்பாளர் யாவரும் தங்களுடைய படைப்புகளில் இலக்கிநயத்தோடு வரலாற்றை எப்படி இனைத்து படைப்பது என்பதை தங்கள் தங்கள் அறிவுத்திறமையால் கட்டமைத்துக்காட்டினார்கள். குறிப்பாக எஸ்.ராமகிருஷ்ணன் ஏன்... ஏன்...என்று பல கேள்விகளை எழுப்பி, அந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தேடிச்செல்கிற கூடுதல் பணியை வாசகனுக்கோ அல்லது படைப்பாளிக்கோ அல்லது யாருக்கும், தேவையானதாகவே வைத்தார்கள். தனக்கே உறிய பாணியில் ஒரு உலகலாவிய பார்வையாகவும் இருந்தது. இலக்கியத்திற்கு உள்ளடங்கிய எல்லா படைப்புகளையுமே, நேர்த்தியான நுணுக்கங்களைக் கொண்டு ருசியுள்ள, சாப்பிடும் பொருளாகக்கொடுத்தார். நல்ல படைப்பாளன் தரும் சாப்பாடு யாருக்குமே அஜீரணக்கோளாறை ஏற்படுத்தாது.சாப்பிட்டபிறகு ஒருவேளை வயிறு கலக்கிறதென்றால் ஏற்கனவே ஆகாதது எதோ வயிற்றில் தங்கியிருக்க வேண்டும். ஆனால் பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இலக்கியத்தை படைத்து மனிதனிடம் கொடுத்தால்,சிலருக்கு பசியாற்றுகிறது, சிலருக்கு உப்பே இல்லை, சிலருக்கு பிடிக்கவேயில்லை,ஒரு காகிதப்பூ போல(பசியாற்றாது,மனதுக்கு பிடிக்கும். ஆனால் பயன்பாடு என்று பார்த்தால்) இலக்கியம் இப்படி இருக்கவேண்டுமா? எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என்று சோல்லுவது முட்டாள்தனம். மறைமுகமாகவோ வெளியரங்க மாகவோ எல்லாருடைய உணர்வுகளிலும் ஒரு நிறைவை கலக்கச்செய்வதாய் இருக்கவேண்டாமா?(எருமையினதோ,பசுவினதோ)பால்போல்‘


நானறிந்த வரையில்,முகம் சுழிக்கிற அளவுக்கு யாரும் பாலை பழிப்பதில்லை(பால் ஒருமணிநேரம் தாங்குமா இலக்கியத்தை எப்படி அதனோடு ஒப்பிடமுடியும் என்று கேள்வி எழும்புகிறது. ஆனால் அவரவர் நாக்கில் தங்கிய விருப்பத்திற்கு ஏற்ப, தன் ருசியை தகவமைத்துக்கொண்டு. எல்லாருக்கும் பிடித்திருக்கிறது என்று சொல்லுகிற வல்லமை பாலுக்கு உண்டல்லவா)அதனால் இலக்கியம் இப்படி இருக்கவேண்டுமா? எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்தவிகடனில் எழுத்தாளர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் ‘கலாச்சாரம், வரலாறு, மதம், தத்துவம், அறிவியல், அரசியல், நுண்கலை, சினிமா, மொழி, சமகாலப்போக்குகள்‘ என்று பைபிளில் வருகின்ற பத்துக்கட்டளைப்போல ஒரு பத்து சாரம்சத்தை முன்மொழிகின்றார்.ஒருவேளை இதன் அடிப்படையில் படைக்கிறபோது இலக்கியத்தின் நிலை என்ன? மேலே கண்மணி குணசேகரன் சொல்வதுபோல் அடியத்தறித்து முனையைத்தறித்து போகிற போக்கில் படைப்பை நட்டுச்சென்றால் அதனுடைய நிலை என்ன? இரண்டுமே கிடைக்க முடியாத அற்புத இலக்கியம் என்றால், எல்லாம் படித்து அறிவுஜீவிகளாய் இருந்தாலும் ஒரேமேடையில் ஆரோக்கியமான விவாதமாக நகராமல், ஒருவரின் ஒருவர் மனதை தாக்கும்படியாக பேசுகின்ற நோக்கத்திறகான வழி ஏன் ஏற்படுகிறது? நானறிந்த வரையில் மேலேக்குறிப்பிட்ட பத்து சாரம்சத்துடன் ‘உண்மையாய்யிருத்தல்,நேசித்தல்,அரவனைத்தல்‘ ஆகிய இம்மூன்றும் பிரதானமாக ஒரு எழுத்தாளனுக்கு வேண்டும்.இச்சாரம்சத்தை போற்றும் விதமாக ஒரு எழுத்தாளனுக்கு இதயத்தில் ஈரத்தன்மை வேண்டும் என்று எழுத்தாளர் பொன்னீலன் பேசினார். மூன்றாம் நாளில் கருத்தரங்கில் பங்கேற்ற எழுத்தாளர்கள் ஜாகீர் ராஜா காமுத்துரை,மார்க் இன்னும் சில எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் சமூகசீர்கேடுகளை எவ்வாறு கட்டமைத்தோம்,அதற்காக நாங்கள் அனுபவிக்கும சங்கடங்கள் என்ன? எங்கள் குடும்பம் எவ்வாறு அவதூறுக்கு ஆலாகிறது என்பதைஎல்லாம் ஆராயப்பட்டது. பிரெஞ்ச் ஆய்வுக்கூடத்தில் இயங்கும் கண்ணன் மிகவும் நேர்த்தியா கட்டமைத்து நடத்தினார். தோழர் தமிழ்ச்செல்வன் கூட்டு நன்றிக்குப்பிறகு பயனுள்ளக்கூட்டம் நிறைவுற்றது.

ஜேடி

No comments: