Monday, July 25, 2016

'ஈரம் வற்றும் தட்டுகள்'

ஈரம் வற்றும் தட்டுகள்.

ரஜினியின் தொடக்ககாலம் கிராமங்களில் நிறைந்திருந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் ரசிப்பால்தான், அவர்களின் கொண்டாட்டங்காளால்தான் வியாபார ரீதியாக அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு அமைந்தது. குறிப்பாக தலித் மக்களுக்கு அதில் பெரும்பங்குண்டு. அடித்தட்டு மக்களில், இளைஞர்கள் அவரின் புதுவிதமான ஸ்டைலில் ஈர்க்கப்பட்டார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் பெரியவர்கள் தாமாகவே, தங்கள் இனம்போல கருதி இயல்பாகவே நம்ம ஆளாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அளவில் அவரின் படங்களை அதிக விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால்,  அந்தக் காலகட்டங்களில் மேல்தட்டு மக்கள், மற்றும் படித்து பொருளாதாரத்தில் உயர்ந்து சமூகத்தில் உயர்மதிப்பு நிலைக்குள் தங்களை இணைத்துக் கொண்டவர்கள், அநேகமாக ரஜினியை, மெண்ட்டல், அல்லது குடிகாரன் என்கிற தகுதியில்தான் வைத்திருந்தார்கள். மேலும், சாதிய ரீதியாகவும், நிறம் ரீதியாகவும் எம்.ஜீ.ஆர், சிவாஜி போன்ற பெரும் ஆளுமைகளில் தங்களைக் கரைத்துக் கொண்டிருந்ததாலே, ரஜினியை அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு சாதாரன நடிகனாகக்கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

மேல்தட்டு விமர்சனம்

ஒரு கட்டத்தில் மேல்தட்டு மக்களின் விமர்சனங்களில் ரஜினி துவண்டு புழுவாகத் தத்தளித்தக் காலங்கள் உண்டு. அந்த நேரங்களிலும் அடித்தட்டு மக்களின் கனவு நாயகனாக வலம் வந்துகொண்டிருந்தார். அநேக இளைஞர்கள் திரும்பத்திரும்ப ரஜினியை நேரில் சென்று உரையாடுவதுபோல சினிமா கொட்டகைகளில் அவரைத் தரிசிக்கத் தொடங்கினார்கள். மேலும், ரஜினி தன்னுடைய அயராத உழைப்பால் தனித்தன்மையான திறமையை வெளிப்படுத்தினார். அதன்பால் நாளுக்கு நாள் வெற்றியையும் குவித்தார். வேறு வழியில்லாமல் கொஞ்சங் கொஞ்சமாக மேல்தட்டு மக்கள் முதலில் வியாபார ரீதியான லாபத்திற்காகத்தான் ரஜினியை ஆதரித்தார்கள். அதற்கான லாபத்தை பெருமளவில் ஈட்டிக்கொண்டார்கள். லாப ருசி கண்டவர்கள் ரஜினியை மேல்தட்டிலேயே தக்கவைத்துக்கொள்ள விரும்பினார்கள்.  அவர்களுக்கு அது மிகத் தேவையாக இருந்தது. இவர்கள் எதற்காக தம்மை நாடியிருக்கிறார்கள். எப்படிப்பட்டவர்கள் என்பது ரஜினிக்கு மிகத் தெளிவாகவேத் தெரியும். அதனால்தான் யாரையும் சாய்ந்து வாழ்பவராக இல்லாமல் தனிமைப்பட்டவராக இருந்துவருகின்றார். ஒருவேளை மேல்தட்டு, நடுத்தட்டு என்று இன்றைய தலைமுறை வாலிபர்கள் ரஜினியை எந்த அரசியலும் இல்லாமல் விரும்பலாம், அவர் எளிமை, நற்பண்பு, ஆண்மீகம், உச்சம் மற்றும் ஈர்ப்பு எனும் நிலை நிரந்தரமாக அவரில் உள்ளதால்.

நன்றி மறவாமை

ஆரம்ப காலங்களில் தன்னுடைய சொந்த மக்கள்போலவே தனக்கு ஆதரவு தந்த அடித்தட்டு மக்களுக்கு இதுவரை எதையுமேச் செய்யவில்லை என்ற வருத்தம் தொடர்ந்து அவரில் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை நினைத்துக் காத்துக்கொண்டிருந்தார். பொதுவாக ரஜினி கடந்த காலத்தை, அதாவது தனக்கு செய்த உதவியை மறக்காதவர். அவற்றிர்க்கு பதிலியாகத் தனக்கு வாய்ப்புக்கிடைக்கும்போது திருப்பி செய்துவிடுகின்ற பண்புடையவர். அப்படித்தான் ஆரம்ப காலங்களில் எந்த அடித்தட்டு மக்களால் தான் தமிழகத்தில் கால்ஊன்ற உதவியாய் இருந்தார்களோ அவர்களுக்கு ஏதாவது திருப்பி செய்யவேண்டும் என்ற நோகில் கபாலியைக் கையில் எடுத்தார். அப்படித்தான் பா.ரஞ்சித்தின் கதை பிடித்தவுடன், ‘போய் தாணுவைப்பார். அவருக்கு நான் நன்றிக்கடன் செய்யவேண்டியிருக்கிறது‘. என்றார்.

ரசிப்பின் உச்சம்

எங்கள் கிராமத்தில் எண்பதுகளிலும், தொண்ணூறுகளைக் கடந்தும் நாங்கள் ஒரு நாலு பேர் மிகத் தீவிரமான ரஜினி ரசிகர்கள். ஒவ்வொரு நாளும் மாலையில் கிணற்றண்டையில் கூடி ரஜினி புகழ் பாடிக்கொண்டிருப்போம்.  ரஜினியின் ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு பணத்திற்கு சர்வதேச திட்டம்போல் வகுப்போம். தொடர்ந்து கூலிவேலைக்குப் போவது. சில நாள் கூலி இன்னும் கொடுக்கப்படவில்லை என வீட்டிற்குச் சொல்வதுண்டு. பதில் செய்வதற்கு வேறு சில கூடுதலான வேலைசெய்து, முன்நாள் கூலியை வீட்டிற்குக் கணக்குக் காட்டுவது. சில நாள் வீட்டிற்கு கொடுப்பது போக,  மிச்சம் பிடித்து படத்திற்காக சேகரிப்பது என்றெல்லாம் நடந்திருக்கிறது. அநேகமாக நான் ரஜினியின் படங்களை முதல் நாள், முதல் காட்சி நண்பர்களுடன் சேர்ந்தோ, தனியாகவோ பார்த்துவிடுவேன். ரஜினி ரசிப்பின் உச்சமாக எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வொன்று நடந்துவிட்டது. ‘தர்மதுரை‘யா, ‘அதிய பிறவி‘யா சரியாக நியாபகம் இல்லை. ரஜினி பச்சை சட்டை, மஞ்சள் பேண்ட்  தொல, தொலனு போட்டு, இன்செய்துகொண்டு வருவார். அந்த உடை எங்களை ஈர்த்தது. கொஞ்ச நாளாக அதே நினைவாக இருந்தோம். சில நாள் கழித்து “டே, அதேமாதிரி டிரஸ் நம்ம நாலுபேரும் தச்சி போடனும்டானு“ பெசிக்கொண்டோம். அதை எப்படியோ சாத்தியப்படுத்தினோம். எங்கள் ரசனை எல்லை மீறியது என்று அப்போதுத் தெரியவில்லை. எனக்குப் பொண்ணு நிச்சயம் பண்ணப்போகின்ற நாளில், அந்த டிரஸ்சை நாலுபேரும் ஒரே மாதிரி போட்டுகொண்டு சென்றோம். அங்கு போனபிறகுதான் பெண் வீட்டார் “யார்ரா அவுனுங்க புதுசா தொடங்குன பேண்டு செட்டுகாரனுங்களாட்டம் வந்திருக்கானுங்கனு, ஒரே கிண்டல் பேச்சாகிவிட்டது. இருந்தாலும் எங்களுக்கு அது பெருமையாகவேப் பட்டது. ஆனால், இப்போது நினைக்கும்போ சற்று சிரிப்பாகத்தான் இருக்கிறது. இப்படியெல்லாம் ரசிகர்கள் இருந்துதான் ரஜினியின் மதிப்பைக் கூட்டினார்கள். இதுபோல ஆயிரக்கணக்கான செயலை அடித்தட்டு மக்கள் செய்து ரஜினி எனும் மாபெரும் பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவைகளை ரஜினி எளிதில் மறந்துவிடமாட்டார்.

மதிப்பீடு

2003க்குப்பிறகு என்னை இலக்கிய செயல்பாடுகளில் இணைத்துக்கொண்டேன். நண்பர்களுடன் உலக சினிமாவின் தரத்தை உற்று பார்க்கத் தொடங்கியதிலிருந்து படிப்படியாக தமிழ் கதாநாயகர்களின் மீதான பிரமாண்டமான நம்பிக்கைகள் குறையத்தொடங்கின. இருந்தாலும் ரஜினியைப் பொறுத்தளவில் தனிமனித வாழ்வின் சிறப்பியல்புகளில் என் மதிப்பீடு உயர்ந்தே இருக்கிறது. கிராமத்திலிருந்து நகரத்தில் வந்து பிழைக்கிறவன், நகர மக்களுக்கு செய்ததைவிட, எந்தவிதத்திலும் ரஜினி செய்யாமல் இருக்கவில்லை என்பது என் கருத்து.  இந்த புரிதலோடு கபாலியைக் குறித்து நானும் என் கருத்தை வைக்க விரும்புகிறேன். லட்சக்கணக்கில் விமர்சனங்கள் வந்திருந்தாலும் தினமணி போன்ற வன்மமான மதிப்பீட்டின் மூலம், வெகுஜன மக்களிடம் பொய்யான மதிப்பீட்டை நிறுவுவதற்கு, மாற்று மதிப்பீடாகவும் படத்தில் தவறு எங்கேத் தொடங்குகிறது. எங்கே சிறப்பு அடைகிறது என்பதை என் அறிவுக்கு எட்டியவிதமாக  வெளிப்படுத்த முயல்கின்றேன்.

தொடரும்...

No comments: