Sunday, July 31, 2016

கவிதை

ஆபத்தாண்டவன்

ஒரு மயில்வாகனத்தில்
வீற்றிருக்கின்றேன்.
எனக்கும், அவளுக்குமான
இணை நாளென
உறவுகளின் நினைவேந்தலினால்தான்
அந்த வாகனம் எனக்காக
வடிவமைக்கப்பட்டிருந்தது.
அது ஒற்றை நாளுக்கான
வாகனம் என்பது
என் நினைவில் தப்பியிருந்தது.
எதிர் இருக்கைகளின்
தூரத்தில் மிக அற்புதமான
ஆபத்தாண்டவன் உலாவிக்கொண்டிருந்தான்.
பெயர் அதுவானாலும்
எத்தனையோ இக்கட்டுகளில்
பெயர்போலவே பயன்பட்டான். ஆனாலும்,
தற்போது அருகில் தேவைப்படவில்லை.
மயில் வாகனத்தின் இருப்பில்
கைக்கு எட்டும்படியாகவே
சகலமும் கிட்டிவிடுகிறது
ஒருவன் கிரீடம் சூட்டுகின்றான்
ஒருவன் மலர் பாதபடியை
சரியாக்குகின்றான்
ஒருத்தி சாயம் பூசிய
உதட்டால் மதிமயங்க முத்தமிடுக்கின்றாள்
என் முகத்திற்கு அருகில்
வாசிக்கப்படும் வாழ்த்துகள்
நான்கு திசைகளில் பரவுகிறது.
மதிப்பு மிக்க பொருள்கள்
பெற்றுக்கொண்டிருக்கும்
எனது கைகள் ஓய்ந்துபோகின்றது.
ஆஹா...ஆஹா
மயில்வாகனம் அழகு,
மயில்வாகனம் ஆசி.
மயில்வாகனம் இன்பம்
மயில்வாகனம் ஈசன்
மயில்வாகனம் உயிர்
மயில்வாகனம் ஊற்று
மயில்வாகனம் எழுட்சி
மயில்வாகனம் ஏற்றம்
மயில்வாகனம் ஐம்புலன்
மயில்வாகனம் ஒழுங்கு
மயில்வாகனம் ஓதுதல்
அருமை..ஆஹா அருமை….
வாகனமே என் வாகனமே எல்லாம்….
அது ஒற்றை நாளுக்கான
வாகனம் என்பது
என் நினைவில் தப்பியிருந்தது.
அந்தி மறைந்தது
வாகன வாடகைக்காரன் வந்தான்
ஏனோ எனக்கு
ஆபத்தாண்டவன் நினைவு வந்தது.
ஜேடி

No comments: