Thursday, July 28, 2016

கபாலி
கருந்தேள் ராஜேஷ்
ரஜினி மற்றும் பிற பாத்திரங்கள் நடிப்பு அங்கங்கே சிறப்பாக செய்துள்ளார்கள். கதையின் போக்கு குழப்பம்.

ராம் சின்னப்பயல்
இருபத்தியைந்து வருஷம் சிறையில் இருந்தவருக்கு தற்கால வடிவேல் நகைச்சுவை வசனம் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.

தினமணி
உலக பெரும் அறிஞர்கள் படைப்புக்கு ஈடாக இருக்கும் என்று எதிர்பார்த்தது தவறு. பா.ரஞ்சித் அடித்தட்டு மக்களின் தேறாத வாழ்வை படம்பிடிக்கிறவர். அவரின் தலையில் பனங்காயை வைத்துவிட்டார்கள்.

தி தமிழ் இந்து.
குறை படைப்பாளியின் கையில் இல்லை. நம் பார்வையில்தான் இருக்கிறது.மேலும், முதல்நாள் டிக்கட் வியாபாரம் ஒரு கார்பரேட் தன்மையில் புழங்கியது சதாரண ரசிகனை பின்னுக்குத் தள்ளிவிட்டது. தொடர்ந்து ஆட்சியாளர்களின் பாராமுகமே காரணம்.

தலித் சார்புடையவர்கள் (பெரும்பாலும்)
பா.ரஞ்சித் புரட்சியாளர், அடித்தட்டு மக்களின் வாழ்வை தூக்கி நிறுத்தும் செயலை தொடர்ந்து செய்கின்றார். கபாலியை அவரைவிடச் சிறப்பாக யாரும் செய்யமுடியாது. சிலர் பரவாயில்ல. பத்தோட பதினொன்னு.

தலித் எதிர்ப்பாளர்கள்
பறையண்டா, ரஜினி பறையன் தலைவண்டா, இந்த மயிருக்கு எப்பிடியெல்லாம் விளம்பரம். ஊத்திக்கிடுச்சிடா,

இந்தச்சூழலில் என் பார்வையும் இங்கே. (முடிந்தால் வாசிக்கலாம்)
தேவைப்படாத சில வகைகளை உள்ளடக்கிய, தேவையான ஒன்றாக இச்சமூகத்தில் உதித்துவிட்டப் படைப்பு கபாலி.

கதையின் குறைபாடு.
ஆரம்பகால தமிழ் மலையக மக்களின் நிஜமான வாழ்வை பின்னணியில் காட்டப் படும்போது, ஒரு ஐந்து சதவிகிதம்கூட நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தவில்லை. அந்த மக்களின் நெடுங்கால கஷ்டங்களைத் துண்டு துண்டாக வாய்வழியாக விவரிப்பதுதான் திரைக்கதையின் மிகப்பெரிய குறைபாடு. இப்படி வாய்வழியாக விவரிக்கும் முறையை எடுத்துக்கொண்டதற்கு காரணம். பா.ரஞ்சித் நிண்டதொரு ஆய்வு முடிவை தன் கையில் தீர்க்கமாக வைத்திராமல் இறங்கியதுதான். இரு கேங்கின் கதையென்றால் அதன் பரிமானங்கள், வீழ்ச்சி, வெற்றி அப்பகுதியை மட்டும் எடுக்காமல், வியாபார ரீதியில் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திபடுத்த இடையிடையில் நுழைக்கப்பட்ட குடும்ப உணர்வுகளின் கதைத் துண்டுகள் இவைகள்தான். கபாலியின் ரசிப்புத்தன்மையை பின்னுக்கு இழுக்க மிக முக்கிய காரணங்கள்.

ஒரு நாயகன் பாத்திரத்தை வைத்து எந்தளவிற்கு தன் இன மக்களுக்கான நியாத்தைக் கட்டமைக்க முயன்றாரோ, அதேயளவு தெரிந்தோ தெரியாமலோ தன்னுடைய இனத்தின் இளைஞன் சதாரண அடப்படை அறிவு இல்லாத முட்டாள் என்கின்ற பாத்திரத்தையும் படைத்துக் காட்டிவிட்டார். அப்பாத்திரம் என்னை முகம் சுழிக்கவும் வைத்துவிட்டது. அநேகமாக இதை யாரும் சொல்லாத ஒரு விஷயம். அட்டகத்தி நாயகன் தினேஷ். அவரை ஓவர் ஆக்டிங் என்றே சொல்லமுடியாது. அந்த பாத்திரத்தை ரஞ்சித்தான் உருவாக்கியிருக்கின்றார். அதற்கேற்ற நடிப்பை அவர்தான் வாங்கியிருகின்றார். இத்தனைக்கும் டானிடம், அந்த இளைஞனுக்கு சிறு பொறுப்புதான் வழங்கப்படுகின்றது. அந்த சிறுபொறுப்பில்கூட எவ்வளவு அடாவடித்தனத்தைக் காட்டிவிடுகின்றான். டான் போகும் இடமெல்லாம் சுற்றி நிற்பவர்களை தாருமாறாகத் தள்ளிவிடுவது. சில இடங்களில் பெண்களைக்கூட வேகமாகத் தள்ளிவிடுகின்றான். உண்மையிலேயே ஆதிக்க வர்க்கங்களுக்கு தன் மக்களின் தரத்தை உயர்த்திக் காட்டவேண்டுமென்றால் ஒவ்வொரு பாத்திரத்தையும் மிக ஜாக்கிரதையாக முன்னெடுக்கவேண்டும். டான் மூலம் நான் ஆளப்பிறந்தவண்டா என்ற கர்ஜனை பொதுவான பார்வையாளர்கள் மத்தியில் பேசப்படலாம் வெகுசீக்கிரம் மறைந்தும்போகும். ஆனால், தினேஷ் பாத்திரம் போன்றவைகள்தான் ஆதிக்க மக்களிடமும், அறிவுசார்ந்த மக்களிடமும் வேர் ஊன்றி, பல கட்டங்களாகப் பேசிக்கொண்டிருக்கும். இவன்களெல்லாம் இப்படித்தான். அந்த சின்ன பொறுப்பில் இருக்கும்போதே இவ்வளவு மோசமாக நடந்து்கொள்கிறான். இவன் ஆள்கின்றவனாக வந்துவிட்டால் எப்படி இருப்பான் என்கிற பிம்பத்தை மிகச்சுலபமாக குத்திவிடுகின்ற வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

நடிகர்களின் பங்கு
ரஜினி தன்னுடைய நடிப்பில் அற்புதம் செய்திருக்கின்றார். எதிரிகளிட்ம் கோபத்தைக் காட்டும்போதும், போராட்டங்களின் காலகட்டங்களிலும், மகள், மனைவியிடம் பாச உணர்ச்சியைக்காட்டும்போதும் சிறப்பாக செய்திருக்கின்றார். குறிப்பாக தான் பெரிய டான் என்றாலும் தனக்கு இருந்த ஒரே உறவான மனைவி இருக்கின்றாளா? இல்லையா? தனக்கு ஒரு வாரிசு இருந்திருந்தால் என்ற ஏக்கத்தின்போதெல்லாம் அவர் முகத்தில் காட்டும் வெறுமை, ஏக்கம் அருமை. தன் மனைவியைத் தேடும்போது மகள் இருக்கின்றாள் என்பதும், அந்நேரம் எதிரிகள் சூழ்ந்துவிட்ட சூழலில், தன்னை மிகபெரிய இக்கட்டில் இருந்து காப்பவள்தான், தன் மகள் எனத்தெரிய வரும்போது, அதுவும் அவள் ஒரு சாகசப்பெண்ணாகத் தன்னை மீட்கும்போது ரஜினி மெய்மறந்து நிற்கும் காட்சி ஆகச்சிறந்த நடிப்பு. தன் மனைவி அரவணைப்பைத்தவிர்த்து, அநேகம் ஒருவரை ஒருவர் தொடாத காட்சிகளாகத்தான் இருக்கின்றது. ரஜினியின் நிஜத்தின் பெருந்தன்மை காரணமாக இருக்கலாம். இருந்தாலும் பாத்திரம் ஏற்படுத்தவேண்டிய கணவன், மனைவிக்குள் மிக நெருக்கமாக எழக்கூடிய (காம) ஊடல்களைப் பார்வையில் காட்டிவிடுகின்றார். முடிந்தளவு அப்படியான நேரங்களில் தன் ஸ்டைலைக்காட்டி தப்பித்துவிடுகின்றார். மொத்தத்தில் ரஜினியின் நடிப்பு மிக அற்புதம்.

நாயகி
நடிப்பும் மிக அற்புதம். எல்லா இடங்களிலும் மிக இயல்பாக நடித்திருந்தாலும். பிரிவுக்குப்பிறகு கணவனை முதல் முதலாகக் காணும் காட்சியில் பார்வையாளர்களை தேம்பித்தேம்பி அழவைத்துவிடுகின்றார். இப்படி ஒவ்வொரு நடிகரையும் சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்து நடிகரையும் மிகப் பொறுப்பாக நடிக்கவைத்துள்ளார்பா. ரஞ்சித்.

பின்னணி இசையும், காட்சிகளோடு இயைந்த பாடல்களில் ‘மாய நதி‘ நெருப்புடா பாடல்கள் ரசிக்கும் படியாகவே இருக்கிறது.

மலேசிய நாட்டின் கட்டடங்கள் ஒளிகளால் நிறைந்த இரவுநேரக் காட்சிகள் அழகு. பா.ரஞ்சித் காட்சிகளை மிக நேர்த்தியாக கட்டமைக்கின்றார். வசனங்கள் பார்வையாளர்களிடத்தில் பரவலாக பேசப்பட்டாலும், பாத்திரங்களுக்குப் போருந்தும்படியாக அமைந்திருந்தால் மிகச் சிறப்பாக வந்திருக்கும். பல விஷயங்களைப் படிக்கின்றவன் தகுதிக்கான வசனங்களை, கதைக்கு பொருந்தும் பாத்திரங்களில் பேசினால் சில நேரம் ஒன்றாமலும், சிலநேரம் வீனான சார்புத்தன்மையில் கொண்டுபோய்விடும் என்பது என் நம்பிக்கை. ராம் சின்னப்பயல் தன் முகப்புத்தகத்தில் அதை அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளதைப் பார்க்கலாம்.

ஒட்டுமொத்தமாக கபாலியைக் கணக்கிட்டுப் பார்த்தால், மிகச்சிறந்த சத்துக்கள் கொண்ட பழவகைகள் எப்படி தேவையில்லாத தோல், நார், போன்றவைகளால் இணைந்து சத்துள்ள சுலைகளை கொண்டுள்ளதோ அவைபோன்றுதான், தேவைப்படாத சில வகைகளை உள்ளடக்கிய, தேவையான ஒன்றாக இச்சமூகத்தில் உதித்துவிட்டப் படைப்பு கபாலி.

டேனியல்

No comments: