Monday, June 17, 2013

சினிமா,

          

                                                                      Kuma 

சென்னை பிலிம் பெஸ்டிவலில் இப்படத்தைப் பார்த்தேன். இரண்டு  நாள் பார்த்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம். அந்தநேரம் எழுதவேண்டும் என்றிருந்தேன். ஏதோ, காரணம் தள்ளிபோய்விட்டது. (இல்லனாலும், ஆயிரம்பேர் படித்துவிட போகிறார்களாக்கும்) மீண்டும் அப்படத்தை பார்த்தேன்.  எழுதாமல் இருக்கமுடியவில்லை.

(குறிப்பு- ‘வாதங்களும் விவாதங்களும்‘ தொகுப்பில், கட்டுரைகளை வாசித்தபோது ஒரு படத்தைப்பற்றிச் சொல்லும்போது அதன்  கதையை சுருக்கமாக சொல்லிவிட்டுதான் விமர்சனம் செய்யவேண்டும் என்று வெ.சா குறிப்பிடுவார் என்பதை சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது எனக்கு பிடித்ததாகவும், நியாயமானதாகவும் படுகிறது. அதன் அடிப்படையில் இப்படத்தின் சிறு குறிப்பு.) 

முஸ்தபா, பாத்மா தம்பதிகளுக்கு வாலிப நிலையில் ஆண், பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். பொதுவாகப் பெரிய குடும்பம். பாத்மாவிற்கு முற்றிய கேன்சர். பிள்ளைகளையும், குடும்பத்தையும் பார்க்கவேண்டும். துர்கிஸ் நாட்டின் ஒரு கிராமத்திலிருந்து ஆயிஷா என்ற பெண்ணை முஸ்தபாவிற்கு இரண்டாவது மனைவியாக கட்டிவருகிறார்கள். கொஞ்ச நாளில் எதிர்பாராமல் முஸ்தபா இறந்துவிடுகிறார். இதற்கிடையில் ஆயிஷாவிற்கு குழந்தையும் பிறக்கிறது. வாலிப பெண்ணின் வாழ்க்கை நிலை என்ன? என்பதுதான் கதை.

முதல் காட்சியில் வெறுங் கண்ணாடிதான் இருக்கும், பின்னணியில் நோயாளியின் தன்மை ஒத்த இருமல் ஒலி கேட்கும். வயதான பாத்திரம் தன் உதடுகளை கர்ச்சிப்பால் மெதுவாக ஒற்றிக்கொள்கிற பிம்பம் கண்ணாடியில் தெரியும். இவர்தான் பாத்மா. அவர் ஒரு நோயாளி என்பதை அதிகச் சிரமேற்கொண்டு வசனங்களாலோ, பெரிய காட்சிப்படுத்தலாலோ பார்வையாளருக்கு புரியவைக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மிகச் சரியாக அதன் பணியை நிறைவேற்றும் காட்சி. 

அடுத்து துர்கீஸ் கிராமம். தெருவில் கோலாகலமான நடனங்கள் சிறு பிள்ளைகள், கூச்சல்கள் அதிகமாக இருக்கும். ஒரு வீட்டின் முதல் தளத்தில் மணமகளை அலங்கரித்துக்கொண்டிருப்பார்கள் அவள்தான் ஆயிஷா. கீழே வட்டமாக நடனம் ஆடுவார்கள். அதில், வாலிபன் சற்று விசேஷ உடை அணிந்திருப்பான். ஆயிஷாவும், அந்த வாலிபனும் ஒருவரை ஒருவர் நோக்குவார்கள். அதில் ஏதோ இருக்கிறது என்ற உணர்வு பார்வையாளனுக்கு ஏற்படும். மேலும், இவர்கள்தான் மணமக்கள் என்ற எதிர்பார்ப்பு வலுக்கிறது. ஆனால் அது நிஜமல்ல, அடுத்தக் காட்சியில் வழுக்கை தலையுடன் முஸ்தபாதான் மாப்பிள்ளை என்பது தெரிகிறது. 

இன்னொரு நியதியை இயக்குநர் அங்கு கட்டமைக்கிறார். ஆயிஷாவும், வாலிபனும் தங்களைப் பார்த்துக்கொள்ளும்போது, இவர்கள்தான் உண்மையானத் தகுதியுள்ள ஜோடிகள். ஆனால், இச்சமூக நடைமுறைகள், வாழ்வின் நிர்பந்தம். எப்படி எல்லாமோ புரண்டுபோகிறது என்பதை மிக எதார்த்தமான வலியுடன் வைக்கிறார்.

ஆயிஷா தன் கிராமத்தை விட்டுச் செல்கின்றபோது எல்லாவற்றையும் இழந்து செல்வதுபோன்ற முகபாவத்தைக் காட்டி தன் முழு திறமையையும் வெளிப்படுத்துகிறார். அரபுநாடுகளில் மலைகளுக்கு இடையில் மிக அகலமான நெடுஞ்சாலைகள் நல்ல அழகியலை வெளிப்படுத்துகிறது. முஸ்தபா குடும்பம் அப்பார்ட்மென்ட்டுக்கு வந்துவிடுகிறது.

முஸ்தபா, ஆயிஷா முதல் இரவை நடத்தவேணடியுள்ளது.  கலியாண வயதில் இரண்டு பெண், ஒரு ஆண் இருக்கிறார்கள். இரவு நெருங்குகிறது. மணமக்களை தனியாக விடவேண்டும். அந்த அறையில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறும்போது. அவர்களின் மன ஓட்டத்தை அற்புதமாகப் படம்பிடித்திருக்கின்றார். அதாவது, முஸ்தபாவின் மகள் வெளியேறும்போது, ‘நம் தந்தைக்கு இவ்வளவு சிறிய பெண் மணமகளாக வந்ததை ஜீரணிக்கமுடியவில்லை. ஆனால், தந்தையை கேள்வி கேட்கமுடியாது. அந்தக்கோபத்தை ஆயிஷாவின் மீதுதான் வைக்கமுடிகிறது. அதேபோல மகணுக்கு, ஆயிஷா தனக்கு ஏற்ற பெண் அவளை இரக்கமில்லாமல் தந்தை கட்டிக்கொள்கிறாரே என்ற வருத்தம் உள்ளூர இருக்கிறது. இருந்தாலும் அம்மாவும், அப்பாவும் விருப்பப்பட்டு செய்கிற செயலை தடுக்கமுடியாத சூழலில் மகன் மனம் நொந்து வெளியேறுவது தெளிவாகத்தெரியும். கடைசியாக பாத்மா படுக்கைகளை சரிசெய்துவிட்டு ஆயிஷாவிற்குப் புத்திசொல்லிக் கிளம்புவாள். ஆயிஷாவிற்கு பத்திசொல்லவேண்டிய அவசியமே இல்லை. அவள் தனக்குக்கிடைத்த வாழ்வு, வாழ்வதுதான் சிறந்தவழி என்பதை நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறாள். அறையை விட்டு வெளியேறியவர்கள். எல்லோருமே பக்கத்து அறைகளில் தூக்கம் இல்லாமல் விழித்திருப்பார்கள். ஆயிஷாவின் அறையில் சிறிய முனகல் சத்தம் மட்டும் கேட்கும். அவர்களுக்குள் உடல் சேர்க்கை முடிந்துவிட்டது என்பதை மிகச்சுலபமாக விளங்கவைப்பார்.

இப்படத்தின் எடிட்டிங் மிகச்சிறப்பாக உள்ளது. எந்தக்காட்சியையும் தெவையில்லை என்று சொல்லிவிடமுடியாது. பல இடங்களில் இசையே இல்லை. அல்லது இசைப்பதே கேட்கமுடியாது. தேவையான இடங்களில் இஸ்லாமியத்திற்கே உரிய தங்கம் சிதறுவதுபோன்ற இசையைத்தான் கேட்கமுடிகிறது.
அறிமுகமில்லாத மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றபோது முரண்பாடுகள் அதிகமாகத்தோன்றும். பிறகு பழகப்பழக அவர்களைவிட அன்பானவர்கள் இருக்கமுடியுமா? என்கிற பற்றுதல் உண்டாகிவிடும். அப்படித்தான் முஸ்தபா மகள்கள் ஆரம்பத்தில் தனக்குப் பிடிக்காத நபர்போல ஆயிஷாவை வெறுப்பார்கள். கொஞ்ச நாளில் அவளின் அன்பான உள்ளத்தைப் புரிந்துகொண்டு ஆயிஷாவிற்கு இன்னொரு தாய்ஸ்தானத்தைக் கொடுக்கிறார்கள். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றாள் ஆயிஷாவிற்கு ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொடுப்பாள். ஆயிஷா எழுத்தைக்கூட்டிக் கூட்டி படிப்பாள். அவளை முதலில் வெறுத்தவள் இப்போது புன்முறுவலுடன் திருத்தி படிக்கக் கற்றுக்கொடுப்பாள். ஒரு கூட்டுக்குடும்பத்தில் உறவுகள் முரண்படவும், அன்புகூறவும் எப்படி சாத்தியமாகிறது என்பது சிறப்பாக வந்திருக்கிறது. 

கேன்சரில் இருக்கும் பாத்மா இறந்துவிடுவாள் என்றுதான் ஆயிஷாவை கொண்டுவருவார்கள். ஒரு கட்டத்தில் சீரியசான நிலமையில் பாத்மா மருத்துவமனையில் இருப்பாள். மருத்துவர் அவளின் ஆபாயக்கட்டத்தை அறிவிப்பார். அந்த அதிற்சியில் எதிர்பாராத விதமாக முஸ்தபா இறந்துவிடுவார். இந்தக் காட்சியை இயக்குநர் மிக நுட்பமாக வைக்கிறார். ஆதாவது, மருத்துவமனையின் பெஞ்சில் முஸ்தபா பக்கத்தில் ஆயிஷா மற்றும் பிள்ளைகள் உறவினர்கள் கூட்டமாக இருப்பார்கள். உள்ளே இருப்பது யாரென்பதையேக் காட்டவில்லை. அந்தச்சூழல் மிகவும் பதட்டமாக இருக்கும். மருத்துவ அறையில் இருந்து மருத்துவர் பதட்டமாக வந்து செய்தியைச் சொல்லுவார். அடுத்தக்காட்சி மயானத்தில் கூட்டமாக அழுவதைக் காட்டுவார்கள். பார்வையாளனுக்கு செத்தது யாரென்று தெரியாமல் பதட்டம் கூடுகிறது. ஒவ்வொரு மகள் முகத்தையும், மகனையும் அழுவதைக் காட்டுவார்கள். இன்னும் செதத்து யாரென்பது தெரியாது. இதற்குமேல் பார்வையாளன் தாங்கமாட்டான் என்று ஒரு மகளை வாப்பா என்று கதறி அழவைப்பார். செத்தது வாப்பா என்றாள், பாத்மா எங்கே என்கிற கேள்வி எழுகிறபோது கடைசியாக பாத்மா அழுகிறக்காட்சி வரும். அவ்வளவு அர்த்தமுள்ளதாகவும், சுவாரசியம் உள்ளதாகவும், எதார்த்தமாகவும் நடைபெறும் நிகழ்வாக இருக்கும்.

பெண்களை இரண்டாந்தரமாக கொண்டுவரும் சூழல் மலினமாக நடைபெறுகிறபோது; முஸ்தபாவை இறக்கவைப்பது முக்கியமான கட்டமைப்பாகவும்; கதையின் சிக்கலை வலுவூட்டும் தன்மையாகவும் இயக்குநர் வைக்கிறார். இன்னொரு பக்கம் ஆணாதிக்கச்  செயலை வெளிப்படுத்துவதாகவும். மதவாத முக்கியஸ்த்தர்கள்கூட மறைமுகமாக இச்செயலுக்கு தூபமிடுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறார். மேலும், ஆணின் குடும்பத்திற்கு நன்றாகவரும் பெண் ஓய்வற்று உழைக்கிறாள், இடையில் நோய்வாய்ப் படுகிறபோது, (அவள் இறந்துவிட்டால்கூடப் பரவாயில்லை ஏதோ நியாயம் இருக்கலாம்) ஆண் சமூதாயம் மிகச்சுலபமாக அவளின் இயலாமையைக் காரணம் காட்டித் தனக்கு இன்னொரு துணையை தேடிக்கொள்கிறார்கள். இந்தக்கேடான நிலமையை உடைத்திருக்கிறார். இந்த மனசாட்சியற்ற செயலால் ஒரு அப்பாவிப்பெண்ணின் வாழ்வு எவ்வளவு சிக்கலைச் சந்திக்கவேண்டி இருக்கிறது, இவ்வளவு விஷயங்களை காட்சிப்படுத்தலில் குவித்திருக்கிறது.  

இப்படத்தில் உருகவைக்கும் பல காட்சிகளில் ஒன்று. முஸ்தபா இறந்துவிடுகிறார். ஆயிஷாவிற்கு குழந்தைப்பிறக்கிறது. பிறகான நாட்களில் முஸ்தபா மகன் ஆயிஷாவிடம் குறும்புடன் பேசுகிறான். உறவினர்களில் சிலருக்கு ஐயம் வருகிறது. குறிப்பாக சகோதரியே, சகோதரனையும், அம்மா ஸ்தானத்தில் இருக்கும் ஆயிஷாவையும் நோட்டம் இடுகிறாள்.  ஒரு கட்டத்தில் ஆயிஷாவிடம், சகோதரன் மிக நெருங்கி பேசுவதும். அதற்கு ஆயிஷா மௌனமாக சிரிப்பதும் அதிகமாகும்.  சகோதரி, சகோதரன் தனியாகப்போகிறபோது எச்சரிப்பாள். இதை ஆயிஷாவும் கவனிக்கிறாள்.

ஒரு இரவு ஆயிஷா மகன் ஸ்தானத்தில் இருக்கும் வாலிபன் அறைக்குச் செல்வாள். நீ அப்படி ஏதாவது அர்த்தத்தில் என்னுடன் பேசுகிறாயா? என்றளவில் பேச்சைத்தொடுப்பாள். அவன் மெல்லக் கதவை சாத்துவான். இவள் மெதுவாகப் பின்னிடுவாள். மாறாக அவன் அழத்தொடங்குவான். உன்னை கிராமத்தில் பார்த்ததிலிருந்தே அளவுக்கு அதிகமாக விரும்பினேன். ஏங்கினேன் என்கிற விதமாக அழுது சொல்வான். அவன் சொல்லச் சொல்ல அவளுக்கு அழுகையை அடக்கிக்கொள்ளமுடியாது. எவ்வளவு உன்னதமான அன்பு வைத்துக்கொண்டு ஒரேக்குடும்பத்தில் வாழ்ந்திருக்கிறோம் அழுதுபுலம்புவாள். கடைசியாக ஒரு பிரியமான குழந்தைக்கு தாய்த்தருகின்ற முத்தம்போல் உதடுகளில் மென்மையாக அந்த வாலிபனுக்கு முத்தமிட்டு வேகமாக வெளியேச்சென்றுவிடுவாள். இவைகைள் எல்லாம் வாழ்வை அணு அணுவாக உணர்ந்து வைக்கப்பட்டிருக்கிற அற்புத காட்சிகள். 

ஆயிஷா எல்லோரையும் அன்பொழுக நேசிக்கும் பக்குவமுடையவள். அதுவே சிலநேரம் சிக்கலைக் கொண்டுவருகிறது.  சிக்கல் சீக்க்கிரமே நடந்தும் விடுகிறது. ஆயிஷா பக்கத்தில், கடை ஒன்றில் வேலைக்குப் போகிறாள். அங்கு ஒரு வாலிபன் இயல்பாகவே அவளை நேசிக்கிறான். கடையில் ஒரு இடுக்கமான நிலையில் இருவரும் எதிரெதிராக நிற்கிறார்கள்.அதுவே சந்தர்ப்பமாகிறது. வாலிபன் அதை பயன்படுத்திக்கொள்ள முயல்கிறான். அவளின் அன்பான குணம் அதை அசட்டை செய்யமுடியவில்லை. அவளுக்கேக்கூட அது தேவையாய் இருக்கிறது. அங்கே உடல் இணைகிறது. அதன் பிறகு இயல்பாகவே ஆயிஷா சற்று சந்தோஷ மனநிலை அடைகிறாள். வீட்டிற்கு போனபோது இரவு நேரங்களில் பாத்மாவின் எதேச்சியான அறிவுரைகளினால் சற்று தடுமாறுகிறாள். 

ஒரு நாள் மீண்டும், அந்த வாலிபன் கடையில் ஆயிஷாவுடன் உறவிற்கு வருகிறான். முதல் முறை ஆயிஷாவிற்கு விருப்பமில்லை என்பதுபோல் ஜாடை செய்தால், விலகிவிடுவதுபோன்று இருந்த வாலிபன்.  இப்போது வேண்டாம் வேண்டாம் என்கிறாள். பொருட்படுத்தாமல் அவளை அனுபவிக்கும் வேகத்தைக் கூட்டுகின்றான். அன்று மதியம்தான் அந்தக்கடையில் ஆயிஷா குடும்பத்தார்,  பொருள் வாங்கிச்சென்றார்கள். அப்போது ஆயிஷாவும், அந்த வாலிபனும் நேருக்கு நேர் பார்வையில் படும்படியாக வேலையில் இருந்த்தைப் பார்த்து. பாத்மா வாலிபனிடம் ஆயிஷாவை பார்த்துக் கொள்ளும்படியாக சொல்லிவிட்டு சென்றிருந்தாள், பொருள் வாங்கிக்கொண்டு சென்றவர்கள். சற்று தொலைவில் சென்றதும் ஏதோ பொருள் மறந்துவிட்டதாக மீண்டும் வருகிறார்கள். இரவு நெருங்கிவிட்டது. கடை மூடும் நேரம். யாரையும் காணவில்லை. கடையின் இன்னொரு நபர் கடையைவிட்டு வெளியே போகின்றான். பொருள் விட்டுவிட்ட விஷயத்தைச் சொல்லி கேட்கிறார்கள். கடைநபர் ஆயிஷாவும் உள்தான் பொருள்கள் மூடிக்கொண்டுவருவார்கள் போய்ப்பாருங்கள் எனும் விதமாகச் சொல்லுகிறான். இவர்கள் கடையின் ஒவ்வொரு பகுதியாய் ஆட்களைத்தேடி வருகிறார்கள். ஒரு மூலையில் ஆயிஷாவும், வாலிபனும் அலங்கோலமாய்  பிடிபடுகிறார்கள்.

அந்தநேரம் ஆயிஷாவாக நடித்தவள் அற்புதமான அதிர்ச்சியை தன் நடிப்பில் மெருகேற்றுவாள், அந்தக்காட்சியில் மட்டுமல்ல. படம் முழுக்க அந்தச் சின்னப்பெண்ணின் அப்பாவியான முகம், இனிமையான குரல், முதிர்ந்த நடிப்பு இயல்பாக அமைந்திருக்கிறது. பெண்ணாக இருந்தாலும் எந்த பின்புலத்தையும் யோசிக்காமல், குடும்பத்திற்கு மாபெரும் தவறு இழைத்துவிட்டதுபோல் பாத்மா போட்டு நொறுக்கிவிடுவாள்.

இரண்டுநாள் கழித்து மீண்டும் பாத்மா அறைக்கு ஆயிஷா உணவு எடுத்துச்செல்வாள். என் வாழ்க்கையில் ஏமாற்றங்களைச் சந்திக்கவைத்தது யார் என்கிறவிதமாக பேசுவாள். பழைய அன்பைத் தொடருவதாக பாத்மாவின் கரங்களைத்தழுவ எத்தனிப்பாள். பாத்மா கையை இழுத்துக்கொள்வாள். ஆயிஷா ஏமாற்றத்துடன் கண்ணாடிக்கதவைச் சாத்திக்கொண்டு வெளியே வருவாள். அறைக்குள் இருக்கிற உருவம் மெல்ல எழுந்து கண்ணாடிக்கதவை நெருங்கிவரும். மெல்ல கதவின் தாழ்பால் மீது கைவைக்கும். இதை மிக அழகாக கண்ணாடிவழியாகவே குளோஷப்பில் காட்டுவார். எப்படியும் ஆயிஷாவை ஆதரிப்பாள் என்ற புரிதலுடன் படம் நிறைவடைகிறது. 

மிக அற்புதமான படம்  KUMA  (இரண்டாம் மனைவி)

(குட்டிக்குறிப்பு: படம் சப்டைடல் இல்லாமல் பார்த்து எழுதியது) 

ஜேடி


No comments: