Thursday, November 10, 2011

கட்டுரை

                                      ஜெயமோகனின் ‘அறம் கதைகள்’
                                    ழ’ இலக்கிய அமைப்பு  காஞ்சிபுரம்.
                                           வாசிக்கப்பட்ட கட்டுரை


மதிப்புக்குறிய ஜெயமோகன் அவர்களின் அறம் கதைகளில் என் புரிந்துணர்வு. இணைய தளத்தில் ஜெயமோகனிடம் கேட்டபோது “இன்று வரை நம் நவீன இலக்கியம் கொண்டுள்ள இலக்கணங்களை வைத்து அறம் கதைகளை மதிப்பிடமுடியாது” என்கிறார். மேலும்  அவரே அறம் கதைகள் “இலட்சிய வாதத்தை நோக்கி ஒரு சமகால மனம் கொள்ளும் எழுச்சியைப் பதிவு செய்யும்” என்கிறார். அதை நினைவில் வைத்துக்கொண்டே  என் புரிதலை சொல்லுகின்றேன்.

ஜெயமோகன் ஒரு பரந்துபட்ட பிம்பம். அவரின் எழுத்துக்களின் வீச்சி  ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை போன்றது. அந்நெடுஞ்சாலைக்கு இடையில், குடிசைகள், மாடிகள், பூந்தோட்டம், நிழல் தரும் மரங்கள், நல்ல நிலங்கள், கால் வைத்தால் இழுத்துக் கொள்ளும் செற். தொழில் நுட்ப்பவளாகம், உலக நாடுகளின் விபாரஸ்தலங்கள் என்று தன்னகத்தே கொண்டுள்ளவையாகும். அவர் வளரும் எழுத்தா ளராகவோ இல்லை. எதையும் விவாதத்தின் மூலம் தன் நிலையை தெளிவுசெய்கிற நிலையில் இருப்பவர். ஆக, நன்றாக இருப்பதை மேலும் நன்றாக வைப்பது அழகுநிலையத்தின் வேலை. நான் அதை செய்யப்போவதில்லை. ஒரு மருத்துவரின் நிலையிலிருந்தும் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் அதற்கான தகுதி என்னிடத்தில் குறைவுதான். சிறு மளிகை கடைக்காரனுக்கு லேசான தலைவலி, சாதாரண காய்ச்சலுக்கு எந்த மாத்திரை கொடுத்தால் நோவு நிற்கும் என்று தெரியும், அந்த தகுதியுடன் இக்கதையில் மனித மனதுக்கு சிறு நோவைத்தரக்கூடிய  சிலதை மட்டும் சுட்டிக்காட்ட  விரும்புகிறேன்.

அறம் கதையின் போக்கு மனித வாழ்வின் நம்பகத்தன்மையுடனும், வாசித்தலுக்கு சிறிது சோர்வும் தட்டாமல் செல்கிறது. பொதுவாக அவரின் எல்லாக்கதைகளுமே அத்தன்மை கொண்டதுதான். சில இடங்களில் யதார்த் தங்களை மீறி வலிந்து புனைவை யதார்த்தம் போன்று, அதுதான் உண்மை என்று நம்பவைக்கிறத்தன்மை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக செட்டியாரின் மனைவி, செட்டியாரிடம் புலவருக்கு சேரவேண்டிய பணத்தை உடனடியாக கொடுக்கவேண்டும் அப்படி கொடுக்காதவரை நான் இந்த இடத்தை விட்டு எந்திரிக்கமாட்டேன் என்று சுட்டெரிக்கும் சாலையில் உட்கார்ந்துவிடுகிறாள்.  எரிக்கிற வெயிலில் அவளின் சேலை தீய்ந்து புட்டம் வெந்து கொப்பளித்தது என்று சொல்லுகிறார். இந்த இடம் நம்பகத்தன்மை மீறுகிறது. அந்த இடத்தில் செட்டியாரம்மா வேணாம்மா எந்திரிச்சி வாம்மா. செட்டியாரு பணம் கொடுக்கத்தான் போயிருக்கிறாரு என்று ஒருவருமே சொல்லியிருக்கமாட்டார்களா? என்கிற கேள்வி சாதாரணமாக எழுகிறது. மேலும் அவளை கண்ணகியளவுக்கு அல்லது ஒரு கடவுள் தன்மையளவுக்கு நிறுத்துவது தேவையா?

அறம் கையாள்கிறவர்கள் என்று காட்டப்படுகிற இலக்கியவாதியான பெரியவ்ர், என்னதான் குடும்பத்தில் வறுமையிருந்தாலும்  நூறு புத்தகம் எழுதப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறபோது. நல்ல அறப்பண்பு உள்ளவராக இருந்தால் அக்காலகட்டத்தில் எத்தனையோ திறமைசாலிகள் இருந்திருப்பார்கள், இவரைவிட கஷ்டத்தில்கூட இருந்திருப்பார்கள். அவர்களையும் சேர்த்துக்கொண்டு, நான் இத்தனை எழுதுகிறேன். நீங்கள் இத்தனை எழுதித்தாருங்கள் என்று சக படைப்பாளிகளை கேட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து, நூறு புத்தகத்தையும் நானே எழுதித்தள்ளி விடுகிறேன் என்பதில் என்ன அறம் இருக்கிறது.

ஜெயமோகன், பெரியவர் உரையாடலின்போது தனக்கு வயதாகிவிட்டது என்பதை சுட்டும் விதமாக “இந்த வயசுல ஓடுறப் பெண்ணப்பார்த்து ரசிக்கமுடியுமா?” என்கிறார். 
ஜெயமோகன் “குதிரைய ஓடுறப் பமட்டுந்தானே ரசிக்கமுடியும்” என்று  எந்த வயசுக்கும் ரசிப்புத்தன்மை வற்றாத ஊற்று என்பதை சூசகமாக சொல்லுகிறார்.

இக்கதையில் வரும் அத்தனைப் பேரைக்காட்டிலும் செட்டியார் மனைவியின் செயல்பாடே முழுமையான அறம் சார்ந்த செயல்பாடாகும். இச்செயல்பாடு கதைகள் மூலமாக, சொல்லாடல்கள் மூலமாக வருவது நல்லதுதான்  சமூகத்தை ஒரு புதிய பாகுபாடற்ற தன்மைக்கு இட்டுச்செல்ல வழி சுட்டுவது போலவாவது இருக்கும்.

சோற்றுக்கணக்கு


‘கூரிய முள்தைத்து வைத்திருக்கும் யானைப்பாகனுக்கு பிரமாண்டமான யானைகட்டுபட்டு நடப்பதுபோல்’ ஜெயமோகன் பேனாவின் மூடியை திறந்தவுடன் அதன் அதன் வாழ்வியல் கதாபாத்திரங்களுக்கு தகுந்த விதமாக திசையறிந்து பாயும் காற்றைப்போல், அமைதியான இருண்ட மேகத்தின் மழைபோல் நிறம்பிப் பாய்கிறது.

கெத்தேல் சாகிப் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வின் தரம் உயர்த்திக்கொள்ள வேண்டுமென்றோ, எதிர்காலத்தின் ஏற்ற இறக்கங்களை நினைத்தவராகவோ இல்லாமல். பசி என்று வருவோர்க்கெல்லாம் இல்லையென்று சொல்லாமல் சாப்பாடு போடுகிறார். அதற்காக பிரித்தியேகமாக பைசா எதுவும் வாங்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். உண்டியலை மைட்டும் வைத்திருப்பார். விருப்பம் உள்ளவர்கள் அதில் போடலாம். கறிக்குழம்பு, மீன்குழம்பு, வறுத்தக்கறிக்குழம்பு இப்படி சலிக்காமல் அள்ளி அள்ளி போடுவார் என்கிறமுறையில் கெத்தேல்  சாகிப்பின் வாழ்வுமுறை போகிறது.

அதே ஊரில் நல்ல வசதி வாய்ப்பை மாமா, மாமி குடும்பம் பெற்றிருக் கிறார்கள். அங்கு தங்கி படிக்கவருகின்ற சொந்தக்கார பையனிடம் தினம் சாப்பிடுவதற்கு கணக்குப் போட்டு பைசா கேட்கிறாள் அவன் மாமி. பையன் கொஞ்சநாள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறான். மாமி புத்தகத்தை பிடுங்கி வைத்துக்கொள்கிறாள். இப்படியான ஒரு மனிதப் பிறவி. இச்சூழளில் பையன், கெத்தேல் சாகிப்பின் உணவகத்தில் சிலநாள் காசுகொடுத்தும் பலவருஷம் காசு கொடுக் காமலும் சாப்பிடுகிறான்.

பையனின் குழந்தை பருவம் முதலே, அவன் வாழ்வியல் பின்னணி மிகவும் சோகம் நிறைந்ததாக இருக்கிறது. அவைகள் எல்லாம் கதையின் உச்சம். பிறகு அவன் படித்து உயர்ந்துவிட்ட நிலையில் நிற்கிறான். மாமியின் வாழ்வு இப்போது பாதாளத்தில் உள்ளது. கெத்தேல் சாகிப் எப்போதும்போல் சாப்பாடு போடுகிறார். பையன், மாமி தனக்கு உப்பிட்டதை மறவாமல் அவள் மகளை மணந்துகொள்கிறான். தான் முதல் முதல் சம்பாதித்த மொத்தப்பணத்தையும் கெத்தேல் சாகிப் உண்டியில் போட்டுவிடுகிறான்.  

 கெத்தேல் சாகிப் ஆறடி உயரம், கை கால்கள் தூண் தூணாக இருக்கும் .ஒரு ரௌடி நடுரோட்டில் ஒரு பெண்ணின் முலையை பிடித்து கசக்கிவிட்டான். அதைப்பார்த்த கெத்தேல் சாகிப் ஓங்கி ஒரு அரைவிட்டான், ரௌடிக்கு காது செவிடாகி ஆறுமாதம் படுக்கையில் கிடந்து இறந்தேவிட்டான். இவைகள் எல்லாம் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதனிடமும் அறக்கூறுகள் வற்றிப்போகும் நிலை இருக்கத்தான் செய்கிறது. அவைகளை மீட்டமைக்கும் கதைகளாகத்தான் நான் இவைகளைப் பார்க்கிறேன். இருந்தாலும் இதிலேயும் எனக்கு சாதாரணமாக சில சந்தேகங்கள் எழுகின்றது.

கெத்தேல் சாகிப்பின் சாப்பாட்டு முறைமைக்கும், முணியாண்டி விளாஸ் ஓட்டலுக்கும் ஏதாவது தொழில்முறை தொடர்பு இருக்குமா? ஏனென்றாள் முணியாண்டி விளாஸில் சாப்பிடும்போதுகூட எத்தனை முறைக்கேட்டாலும் இல்லை என்றுசொல்லாமல் சாப்பாடு வைத்துக்கொண்டே இருப்பார்கள். அதற்காக டிப்சாகக் கொடுத்தது வெறும் இரண்டு ரூபாய்தான். தினந்தோறும் அப்படித்தான். ஓட்டலுக்கு வரும் எல்லாரும் அப்படித்தான். அதில் புதிதாக வருபவர்கள் சிலர் கொடுக்காமல் செல்வதும் உண்டு. ஆனால் எல்லோருக் கும்போல் அவர்களுக்கும சாப்பாடுபோடுவார்கள். (தற்போது ஐந்துரூபாயாக தருகிறார்கள். அதுகூட அவர்கள் கேட்கவில்லை. விலைவாசி ஏறிவிட்டதால் கஸ்டமராக ஏற்றிக்கொடுக்கிறார்கள். நானும் அதிகநாள் அதில் சாட்பபிட்டு இருக்கிறேன்.)

கெத்தேல் சாகிப் ஒற்றை  மனிதனாக இருந்து கொண்டு, உதவிக்கு ஒரே ஒரு பையனை வைத்துக்கொண்டு பல வருஷங்கள் கறிகுழம்பு, மீன்குழம்பு, வறுத்தக்கறி இப்படி பலவிதமாக செய்து தினந்தோறும் சிறிதும் சலிப்பில்லாமல், சாப்பிட வருவோரிடம் எந்த முகஸ்துதியும் இல்லாமல் சாப்பாடு போட்டார் என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. இன்னொன்று அத்தனை வருஷங்கள் சாப்பாடு போட்டதாக சொல்லப் படுகிறபோது. எந்த இடத்திலும் ஒரு பிச்சைக்காரனோ, பயித்தியக்காரனோ வந்து சாப்பிடவே இல்லையே  ஏன்?

தன் கனவனை இழந்துவிட்டாள், கூலிக்கு போகிறாள். கலியாண வயதில் இருபெண்கள் இருக்கிறார்கள். அந்த சூழலிலும் மாமி ‘நீ கதியில்லாம நிக்கச்சொல்லோ கஞ்சி ஊத்தியிருக்கிறேண்டா, அந்த நன்றிய நினைக்கலனா நீ அழிஞ்சி போயிடுவே’ என்று தைரியமிக்கவளாக அப்பாத்திரத்தை வைத்திருப்பது பாராட்ட வேண்டிய ஒன்றுதான். ஆனால் பையன் முதல் முதல் சம்பாதித்த பெரும் தொகை மொத்தத்தையும் உண்டியலில் போட்டான் என்பது சற்று பொருத்தமற்றதாக இருக்கிறது. இவைகள் போன்ற மிகைப்படுத்தலான  விஷயங்களின் மூலமாக அறத்தை நிறுவமுடியும் என்று நம்புகிறாரா? அல்லது புதிய அறத்தோற்றத்தை நிறுவுவதற்காக இப்படி அமானுஷ்யமான விஷயத்தை கையாள்கிறாரா?

யானை டாக்டர்

காட்டின் நிசப்தமான மொழியையும் அதன் அழகையும், விலங்கினங்களின் வாழ்வியல் முறை, அவைகளின் அறிவுநிறைந்த செயல், அதன் இயல்புகள் குறித்த புள்ளிவிவரங்கள். அவைகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதரின் சுகதுக்கங்கள் இவைகளின் சாதுர்யமான தேடல்களே இக்கதையின் வெற்றி.

 “...யானையின் சடலம் அவிழ்க்கப்பட்ட கூடாரம்போல் நான்கு பக்கமும் பரப்பியிருந்தார்கள்...” “...மேலும் சில கணங்களில் அதில் அசைவுகள் கண்டேன். சேறு நுரைக்குமிழ்களுடன் கொதித்துக்கொண்டிருந்ததுபோல தோன்றியது. அது முழுக்கப் புழுக்கள். புழுக்கள் அவரது கால்களிலும் முழங்கைவரை மொய்த்து ஏறி உதிர்ந்து கொண்டிருந்தன...” என்று
காட்டில் செத்து புழுத்துக்கிடக்கும் யானையின் காட்சியை அப்படியே காட்சிப்படமாக வாசகனுக்கு காட்டிச்செல்கிறார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் காட்டிற்கு மிருக டாக்டராக வந்தவர். காட்டிலேயே தங்கிவிட்டார் ஆயிரத்துககும் மேற்பட்ட யானைகளுக்கு அறுவைசிகிச்சை, முந்நூறுக்கும் மேலாகபிரசவம், நூறுக்கும்மேலாக சடலங்களை பரிசோதனை செய்தார் என்பது ஆச்சரியம்தான். கதை பல்வேறு ஆய்வியல் கூறுகளை சாதாரணமாக சொல்லிக்கொண்டே போகிறது.

“மனுஷன்தான் இருக்கிறதிலே வீக்கான மிருகம். மத்த மிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்குறதுல  இருக்கிற கம்பீரத்தைப்பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும்.” இவைகள் எல்லாம் மனிதனிடம் சகிப்புத்தன் மையை வளர்த்துக்காட்டும் முயற்சி.

அடிப்பட்டுக்கிடக்கின்ற செந்நாயின் கிட்டத்தில் சென்று மருந்து கட்டுகிறார். அச்சமயம் நாய்கள் சூழ்ந்து வருகிற பதற்றத்தையும், அவைகளின் உடல்மொழிகைளையும் மிகவும் யதார்த்தமாக, உண்மைத்தன்மையுடன் சித்தரிக்கிறார். மிருகங்கள் பரிமாறிக்கொள்கிற அநேக விஷயங்களின் புள்ளிவிவரம் அதிகமாகக் கிடக்கிறது.

‘‘எல்லா புழுவும் கைக்குழந்தைதான். நடக்க முடியாது. பறக்க முடியாது. அதுபாட்டுக்கு தவழ்ந்துண்டு இருக்கறது. அதுக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான், சாப்புடறது. தின்னுண்டே இருக்கும். சின்னப்புள்ளைங்ககூட அப்டித்தான்…” இப்படியான டாக்டரின் வரிகள் மனதை நெகிழ வைக்கிற வார்த்தைகள்.

கடைசியாக ஒரு குட்டியானை முள்தைத்து தவிக்கும் அதை பார்த்துவிட்ட டாக்டர் அதற்கு நீண்ட நேரம் வைத்தியம் பார்கிறார். அப்போதெல்லாம் யானைகள் கூட்டம் தேடிவந்ததற்கான அறிகுறியே இல்லாமல். டாக்டர் வைத்தியம் பார்த்து வீடு செல்லும் தருவாயில் பத்து இருபது யானைகள் கூடி நன்றி வாழ்த்து தெரிவிகிறது, 



“தேவதுந்துபிகள் முழங்கின! வான்முரசுகள் இயம்பின! கருமேகம் திரண்ட விண்ணெங்கும் யானைமுக வானவர்களின் புன்னகை நிறைந்திருந்தது”
என்று நடைமுறையின் சாத்தியக்கூறுகளுக்கும் மேலாக இம்மாதிரியாக அறத்தன்மையை நிறுவும்போது மீண்டும் கண்மூடித்தனமான நம்பிக்கையை கட்டமைப்பதாக ஆகாதா?

நூறு நாற்காளிகள்

அறம் கதைகள் முழுக்க கடந்த காலங்களின் அழிக்கப்பட்டுபோன அல்லது மறந்துவிட்ட அதற்கும்மேலாக வாழ்நாள் முழுவதும்,  தான்வாழ்ந்த நிலையில் போராட்டங்களை சந்தித்து அதன் மூலமாக சமூகத்துக்கு எதோ ஒரு கற்பிதங்களை விட்டுச்சென்ற சாமான்ய மனிதர்களின் வாழ்வியலை தற்போது தோண்டி எடுக்கும் விதமாக அவர்கள் அனுபவித்த வலி சற்றும் குறைவில்லாமல் ஜெயமோகன் வெளிப்படுத்துகின்ற சாதுர்யம், அதோடு தற்காலத்துக்கு ஏற்றவிதமாக யதார்த்தம், தத்துவங்கள், வறலாற்று நிகழ்ச்சிகளை இணைத்து  படைக்கின்ற விதம் மிகவும் சவாலானதுதான்.


இக்கதையில் ஆரம்ப காலகட்டங்களில் ஆதிதிராவிட மக்கள் அனுபவித்த கொடுமைகளைவிட மனித இனத்துக்கே நடக்கக்கூடாத அவலம் ‘நாயாடிகள்’ என்கிற இனத்துக்கு நடந்திருப்பதை பார்கிறபோது. இதயமே பதைக்கிறது. 


“நாயாடிகள் அலைந்து திரியும் குறவர்களில் ஒரு பிரிவு, இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்று நம்பிக்கை இருந்ததால் அவர்களை வெளியில் பார்த்தவுடன் கல்லால் அடித்து கொன்றுவிடுவார்கள். அதனால் நாயாடிகள் பகல் முழுதும் காடுகளில் புதர்குழிகளில் தங்கள் குழந்தைகளுடன் படுத்துக் கிடப்பார்கள்” என்று  வறலாற்று ஆதாரங்களுடன் வைக்கிறார்.  அப்படிப்ட்ட பட்டியலில் இருந்து வந்த ஒருவன் டாக்டராகிவிட்டான். மனநிலை சரியில் லாமல் எப்போதோ  காணாமல் போன தன் தாய் ஒரு கட்டத்தில் அவன் பணி செய்யும் மருத்துவமனையில் மூச்சிபேச்சி இல்லாமல், தெருவில் ஆனாதையாகக்கண்டு நகராட்சி நபர்கள் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். சக டாக்டர் எப்போதும்போல் நோயாளிகளை அலட்சியமாகவே கவனிக்கின்றார். (நல்லவேளை எஸ்.சி டாக்டர் அதற்கான காரணத்தையும் சொல்லி விடுகிறார்) மகன் அதிர்ச்சி அடைந்து, அவள் என் தாய் என்று உண்மையை கூறி சரியாக கவனிக்கச்சொல்லுகிறார். டாக்டர் உயர் வகுப்பு பெண்ணை காதலித்து மணந்து குடும்பத்துடன் வாழ்பவர். அவளுடைய உயர்வகையான விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டே  அம்மாவை காப்பாற்ற முயலுவதும்,  மகனுக்கும், தாயிக்கும் இடையில்  ஏற்படுகிற நெகிழ்ச்சிமிக்க போராட்ட வாழ்வை ஜெயமோகன் தருகிறார்.


மனிதன் கட்டமைத்து வைத்துள்ள சமூக அமைப்பு  நாளுக்கு நாள் சகமனிதனை நேசிக்கும் தன்மையிலிருந்து சரிந்துகொண்டே போகிறது. அதன் வலுவைப் பார்க்குமபோது அணுகுண்டைக்காட்டிலும் பயப்பட வேண்டியிருக்கிறது என்பது உண்மைதான். அதனால்தான் பெற்றத்தாயை பேணிக்காப்பாற்ற கூடடுதலாக அதிகாரம் கொண்ட ‘நூறு நாற்காளிகள்’ வேண்டுமென்று கூக்குரல் இடுகிறார்.


இதில் ஒரு ஆபத்தும் இருக்கிறது. நாயாடிகள் என்கிற குறவர்களானாலும், கோட்டாவில் படித்துவிட்டு கீழ்த்தரமாக கெஞ்சும் ஆதிதிராவிடனானாலும் தற்போதைய சூழளில் ஒரு சகமனிதனோடு சமமாய் பழகுகிற பிம்பம் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டாலும், அப்படித்தான் பரப்புரை செய்ய வேண்டும். (அழுக்கே போகாத குளியல் சோப்புக்கு ஆயிரம் இடங்களில் விளம்பரம் செய்தபோது, அதைவிட நல்ல சோப்பேஇல்லை என்று பேசுகிறார்கள் அல்லவா? விற்பனையும் எகிறிவிடுகிறதல்லவா?) அதைவிடுத்து சாதிகள் இல்லை என்று டீக்கடையில் போர்டை வைத்து டீக்கொடுக்கிறான். இப்போதுபோய் குறவர்களை தெருவில் பார்த்தாலே கல்லால் அடித்துக் கொல்வார்கள், என்று சொல்லும்போது சகஜமாய் பழக நினைக்கிற புதிய தலைமுறைக்கு பழைய கீழ்நிலையை புதியதாக நினைவூட்டுவதாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது. 


மெல்லிய நூல்

ஜெயமோகன் இதை சமீபமாக எழுதியது இல்லை. 1999 ல் வெளி வந்த பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் சிறுகதை இதை சமீபத்திய கதைகளுடன் இணைத்திருக்கிறார்கள். தற்போதைய ஜெயமோகனைக் காட்டிலும் அப்போதைய இளய ஜெயமோகன் பொதுத்தன்மையுடன் வாதங்களை வைக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களுக்கான நியாயமாகவும், ஆளுகை செய்கிற சக்தியுள்ளவர்களை ஓரளவு சாட்டையடிகொடுக்கவும், தைரியமாக வெளுத்தும் வாங்கியிருக்கிறார்.

அய்யன்காளி ஆந்திராவில் பின்தங்கிய வகுப்பினர். தன் சாதியின் விழிப்புணர்வுக்காக சிறு போராட்டக்குழுவை வைத்திருந்தார். அத் தலைவர், தன் குழுவுடன்  1937-ல் காந்தியடிகளை சந்திக்கும் ஒரு நிகழ்வை சித்தரிக்கும் கதை.
காந்தி நாடுமுழுதும் சுற்றுப்பயணம் செல்லுகிறார். அச்சமயம் ஆந்திராவிற்கு வருவதைக் கேள்விப்பட்ட அய்யன்காளி தன் குழுவுடன் சென்று சந்திக்கின்றார். அய்யன் காளி குழுவினர் தரையில் உட்கார்ந்து தங்கள் நிலையை விளக்குகிறார்கள். "உயர் வகுப்பு மக்கள் தன் சாதி மக்களை மிகவும் கொடுமைப் படுத்துகிறார்கள். இதற்கு நீங்கள்தான் ஒரு வழி செய்யவேண்டும் இத்னைக்கும் நாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை, கோயிலுக்குள் தெரியாமல் ஓடிவந்த எருமை மாட்டை பிடிக்கச்சென்ற மாடனை திருவட்டார் கோயிலைச்சுற்றி கரை நாயர்கள் பதினெட்டு முறை மன்தரையில் போட்டு  இழுத்தார்கள்" என்கிறார்கள். 

இதை கேட்கும் காந்தி எந்த சலனமற்றவராக அமைதியாக ராட்டை நூற்றுக்கொண்டு இருக்கிறார். சற்று அமைதிக்குப் பிறகு  “ஆயிரம் வருடங்கள் நீங்கள் கொடுமைப்படுத்தப் பட்டீர்கள் என்றால் அதற்கு முதற்காரணம் நீங்கள்தான்...”  நீண்ட உரையாடல் இப்படி தொடர்கிறது. அய்யன் காளி இதுவரை ஒரு வார்த்தைக் கூட காந்தியிடம் பேசவில்லை. அக்குழுவில் ஒருவன்தான் அவர் சார்பாக பேசினான். இதுவரை நடந்த பேச்சுவார்த்தை அய்யன் காளிக்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. அய்யன் காளி திடீரென எழுந்து நின்று கடைசியாக காந்தியிடம் பேசினார் “ உங்கள் நியாயங்கள் எதுவும் எனக்கு புரியவில்லை” என்று பேச்சை முடித்து கிளம்புகிறார். காந்தி இப்போது புன்னகைக்கிறார். அய்யன்காளி போகும் தருவாயில் “ஆக உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். வெல்லும் தருணங்களில் இருக்கும் இதே மனவலிமை தோற்கும்போதும், புறக்கணிக்கப் படும்போதும், கொல்லப்படும்போதும் உங்களுக்கு இருக்கவேண்டும். நீங்கள் இதுவரைக் கேட்டகுரல்கள் எல்லாம் வானத்திலிருந்து வந்தவைகள். இது பாதாளத்திலிருந்து வருகிறகுரல் வருகிறேன்” என்று நெஞ்சை நிமிர்ந்த  தலையுடன் திரும்பி நடந்தார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் சுயசாய்வு விழுக்காடு அடிப்படையில், அதிலும் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் குறைவாக இருந்தால் நல்லது, ஆனால் பெரும்பாலும் பொதுத்தன்மையில் அக்கறை, ஒடுக்கப்படுகிற மக்கள்மீது கூடுதல் கவனம் வேண்டும். அதை இக்கதையில் ஜெயமோகன் சரியாகச் செய்துள்ளார். அய்யன்காளியின் ஆள் காந்திடம்  கேட்கிற கேள்விக் கெல்லாம், பாதிப்புடன் வந்திருக்கிறார்களே என்றுகூட இல்லாமல். காந்தி நையாண்டியுடனும், சாதாரண நிலையிலும் பதில்சொல்வதாகவும். ஒரு கட்டத்தில் ஜெயமோகனின் கோபம் கொப்பளித்ததுபோல் “நிறுத்துடா கிழட்டு நாயே” என்று கத்துவதுபோன்ற பிரமை அவருக்குகேற்பட்டதுபோல் இருந்தது” என்று குறிப்பிடுவார். (தற்போதுய காந்தியடிகளின் கட்டுரைகள், விவாதங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது )

கடைசியாக அய்யன்காளி கேட்டுச்சென்ற கேள்வியில் காந்தி நிலைகுலைந்து அக்கேள்வியில் உண்மை, நியாயம் இருக்கிறது அக்கேள் விக்கான பதிலை அவரால் சொல்லவே முடியவில்லை என்கிறவிதமாக காந்தி நூற்கும ராட்டை அடிக்கடி அறுந்து போகுகிறது, இதுவரை எந்த சலனமும் இல்லாமல் நூற்றவரால் இப்போது நிம்மதியாக இருக்க முடியவில்லை.” என்று யதார்த்தமாக காந்தியின் மன உளைச்சலை வெளிப்படுத்துவார், நீண்ட நேரத்திற்கு பிறகே காந்திக்குள் ஒருமுடிவு கைகூடிவருகிறது என்பதை மெல்லிய நூலாக ராட்டையில் இழைவருகிறது என்றுமுடிப்பார்.

ஆக ஆதியிலேயேஜெயமோன் சிறந்த படைப்பாளி என்பதை உணரமுடிகிறது.

பெருவலி 

வாழ்நாள் முழுவதும் கலைஞனாக, ஒரு படைப்பாளியாக வாழ்க்கையை நிறைவுசெய்கின்றபோதும். திடீர் நோய்தாக்கினாலும், வயதான நேரங்களி லும் பலவிதமான மனக்குழப்பம் குடைந்துகொண்டே இருக்கும். எதை சாதித்தோம் எதைவிட்டுச் செல்கிறோம் என்ற கேள்விகளால்தான் வாழ்வை கடத்தமுடிகிறது. கோமல் சாமிநாதனின்  அப்படியான  வாழ்வியல் துன்பங்கள் அவ்வாழ்வியலுக்கு அப்பால் என்ன இருக்கிறது? புதிய வாழ்வியலைக் காண இதுவரை வாழ்ந்த வாழ்வு பயன்படுமா? வாழ்வு முடியும் தருவாயில் எதற்காக அதை தரிசிக்கவேண்டும்? என்கிறகேள்விகள் வாசகன் மத்தியில் எழுகிறது. இக்கேள்விகளின் மூலமாக வாழ்வியலில் சிறிதள வேணும் புதிய புரிதல் ஏற்பட்டால் அது படைப்பாளனுக்கு வெற்றிதான்.

தமிழக இலக்கியத்தில் ஜெயமோனின்  பங்கை யாராலும் தள்ளிவிட முடியாது. கோமலின் வாயாக இருந்து சொல்லும் வார்த்தைகள் எத்தனை நேர்த்தியாகவிழுகிறது. “இப்ப வலி ஒரு கைக்குழந்தை மாதிரி ஆயிட்டது. எப்பப்பாத்தாலும் மூக்கு ஒழுகிண்டு நைநைன்னு அழுதுண்டு இடுப்பிலே ஒக்காந்திருக்கு. ஆனா இது என்னோட வலி ,என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அதுமேல ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துண்டு போரது வளத்து ஆளாக்கிடுவோம் என்ன?” இப்படியான அற்புதமான வாழ்வியல் புரிதல்கள் ஜெயமோகன் கதைகளில் அநேக இடங்களில் கிடக்கிறது. 


எப்பேர்ப் பட்ட மனிதனாக இருந்தாலும், எதைசாதித்து வானுயர நின்றாலும் மரணம் என்பதை. குழந்தைக்கு, தாயின் பால் வடியும் முலைக்காம்புபோல, ஆணும், பெண்ணும் ஏற்றக்காலத்தில் மணந்துகொள்ளுதல் போல, மிகுந்த விருப்பத்துடன் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எந்த தரிசனங்களும் மரணத்தை சீக்கிரம்  கொடுத்துதவுவதில்தான் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது, என்பதாகத்தான் என்னால் விளங்கிக்கொள்ளமுடிகிறது.


மதிப்புக்குறிய ஜெயமோகன் அவர்களின் அறம்கதைகள் தற்காலத்தில் மிகத்தேவையான ஒன்றுதான்.  இக்கதைகள் முழுக்க முழுக்க பெரும்பாலான மனிதனின் நீர் கோர்த்த இதயத்தை, சிரஞ்சி கொண்டு நீரை இழுத்து மறுஊட்டமாக அவரவற்கான ரத்தத்தை செலுத்தும் முயற்சிதான்.   ஆனால் சாதாரண மனிதன் நம்ப  மறுக்கும் விஷயத்தைக்கூட பெரும் சான்றுபோல், தெய்வீகம்போல் தினிப்பது  சற்று மிகையாக இருக்கிறது.


ஜேடி

No comments: