Sunday, April 10, 2011

கட்டுரை

                        அம்பேத்கர் தன் மக்களால் கலங்கப்படுகிறார்.

''சாதியை நீங்கள் விரும்பவில்லை. அப்படியானால் நீங்கள் உருவாக் குகிற சமூகம் வேறு என்ன என்ற கேள்வி எழுகிறது. என்னை கேட்டால் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றறை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம் நான் உருவாக்க விரும்புவது.''   

அம்பேத்கர்  இப்படி ஒரு நீண்ட உரையை எல்லாத்தரப்பு மனிதர்களுக்காக பேசியிருக்கிறார். இவரை எப்படி தலித்துக்கு மட்டும் சொந்தமான தலைவர் என்று உரிமைகொண்டாடமுடியும்? மன்னர் கொடுத்த சொற்ப உதவித்தொகை ரூ.1500 யையும், தான் இரண்டாண்டு  கால ஆசிரியப்பணியின் முலம் சேகரித்த பணத்திலும் வெளிநாடு சென்றார்.  அப்படி ஆரம்ப நிலையிலேயே தன் வருமானதிற்குள்ளும், நீதி, நேர்மையை கடைப்பிடித்து வாழவும் தன்னை தயார்படுத்திக்கொண்டார்.

சாதி அடையாளத்தின் வழியாக  தலித்தானவர்களுக்கு, அதிகாரம் படைத்த மதவாதிகள் கொடுத்த துயரம் தாளாது, வக்கிரம் நிறைந்த செயல்பாடுகளை  கண்டு கொதித்தார். மன வேதனை அடைந்தார். அதனூடாக பெரும்பாலும் அவருடைய கண்டனங்கள் மனித இனத்தை வஞ்சனையுடன், ஒரு சிலர் சொகுசாய் சிலரை அடிமையாய் மணுதர்ம சட்டத்தின் பெயரில் கையாண்டவர் களுக்கு எதிராக இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களின் நிலை முற்றிலும் மாற்றப்படவேண்டும் என்ற முனைப்பு அவர் செயலில் இருந்து. அதற்காக ஓயாத கலகக்குரலை எழுப்பினார். இருந்தபோதிலும் எல்லா மனிதர்களுக்கான உரிமையை கெடுத்தவராக ஒருபோதும் இல்லை. சமூகத்தின் ஒட்டுமொத்த மக்களும்  சகோதரத்துவத்துடன் இருக்க வாதிட்டார்.  அதன் பலனாக வெற்றியும் கண்டார். ஒன்றை நிதானமாக ஆய்வு செய்ய வேண்டும். ஒருவன் ஒத்த சார்புடையவனாக இருந்தால், நிச்சயமாக எல்லோரும் ஜனநாயக முறைப்படி ஏற்றுக்கொள்ளும் நீதியை கட்டமைக்க முடியாது. 'பாம்பு கடித்து சிகிசைக்கு வந்தவனும், ஜலதோசமென்று  வாசல்ப்படியில் முதலில் நிற்பவனையும் விசாரித்த மருத்துவர், பாம்புகடித்தவனை முதலில் அழைத்தார். முதலில் சிகிச்சைப்பெற்றவன் மருத்துவர் எனக்கானவர்  நீ  சென்று வேறு ஒருவரிடம் மருத்துவம் பார் என்று சொல்லமுடியுமா?  நல்ல மருத்துவர் பாம்புகடித்தவனை  கண்டிக்காமல் விடுவாரா?' அம்பேத்கரின்  செயல்பாடு அப்படித்தான் இருந்திருக்கிறது. அவரின் பெயரை சொல்லி தனக்கான உரிமையை பெற்றுக்கொண்டவர்கள். 'பசித்தவன் நாவு ருசி அறியாது' என்பதுபோல்  அம்பேத்கர் சொன்ன, கடைபிடித்த நீதி, நேர்மை, நேசித்தல் போன்ற வாசகங்களை புறந்தள்ளிவிட்டு. தங்கள் வாழ்வை முன்னேற்றிக்கொள்ள  என்ன வழிமுறைகள் அவர் உழைப்பின் மூலமாக கிடைத்ததோ அதை மட்டும் போற்றி பேசினார்கள். கடைபிடித்தார்கள். 

தெளிவாக சொல்லவேண்டுமென்றால்  அம்பேத்கரின் மன ஒழுக்கம், உண்மை, எதிர்ப்பார்ப்பு இல்லாமல் சகமனிதனை நேசித்தல் சார்ந்த விஷயங்களை புறந்தள்ளிவிட்டு. அரசியல் சலுகைசார்ந்து அவரைப்போற்றினார்கள். தெய்வம் என்றார்கள். எங்களுக்கான ஒரே தலைவர் என்று உரிமைகொண் டாடினார்கள். ஒரு வேளை அக்காலகட்டத்தில் ஆண்டைகளின,  பார்ப்பனர்களின் பொருள் சக்த்திக்கு, சூழ்ச்சியான மத சடங்குக்கு கட்டுப்பட்டவர்களாய்  தலித்துகள் இருந்தபோது. 'வேட்டையாடத்துரத்தும்  சிங்கத்தின் பாய்ச்சலுக்கு குட்டி காட்டுமாடு கரடு முரடுகளை, தேய்ந்த பாதை என  கடக்க முற்படுவதுபோல்'  பொய்களை, எமாற்றுகளை, சமயத்துக்கு மாறும் தன்மையை சமூக ஒழுங்கென்று  கடைபிடித்திருக்களாம். உயர்சாதி மதங்களும், அறிவாளிகளும் இத்தனைக்காலம்  நாம் செய்த வேலையை இப்போது அவர்கள் செய்கிறார்கள் என்று மவுனமாய் இருந்துவிட்டார்கள். ஆனால் அம்பேத்கர் நிச்சயமாக அப்படிப்பட்டத் தன்மையை ஒருபொதும் தம் மக்களுக்கு கற்பித்தவரல்ல.

''ஒரு தனிமனிதன் மற்றவர்களை அன்புடன்னும், மரியாதையுடனும் நடத்தி உடன் வாழ்  மனிதருடன் ஒன்றுபட்டு வாழவிரும்பும் மனநிலையே சகோதரத்துவம் எனப்படுவது." 

இப்படியான அம்பேத்கரின் வாசகங்களை தலித்துகளுக்கான வழிகாட்டி தான்தான், என்று தன்னை குறிப்பிட்டுக் கொள்கிறவர்கள் பொது மேடையிலாவது பேசியிருக்கிறார்களா?  என்றால் கேள்விக்குறிதான்.  அம்பேத்கரின் பெயரை தனக்காகவும், தன்குடும்ப வாழ்வுக்காகவும் பயன் படுத்தாமல், மேற்குறிப்பிட்ட பொதுத்தன்மை வாய்ந்த வாசகங்களை  அவரின் நற்பெயரை பிரதானப்படுத்தும்படி பேசியிருந்தால்,  அவர் அன்பு மகன்களை இழந்து, மனைவியை இழந்து உழைத்த உழைப்பை மதித்து கடைபிடித் திருந்தால். பெரும்பாலான மக்களிடம்  அம்பேத்கர்  இன்னும் சாதித் தலைவராக   பேசப்படுவாரா? 

"தேர்தல் அரசியல் நமக்கு வேண்டாம். அரசியல் தற்குறிக்களைத்தான் உருவாக்கும்! லஞ்ஜலாவன்யங்களுக்கு ஆட்படுத்தும்! தன்னலத்தையே மென்மேலும் வளர்க்கும்!" என்று 1999 க்கு முன் மதுரை மண்ணில் கொடியேற்றி தன் கட்சியை அறிமுகப்படுத்தியதோடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நியாயமாய் போராடுகிற தன்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சி முடித்துக்கொண்டது.  அதன் பிறகான நெடுந்தூர அரசியல் பயணம் திரு.திருமாவளவன் மேற்குறிப்பிட்ட  தீர்க்க தரிசனம்போல் இன்றும் அவருக்கே கூட  நேர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அம்பேத்கர் குறிபிடுவதுபோல்  "தாழ்த்தப்பட்ட மக்களின் கேடுகளுக் கெல்லாம் அரசியல் அதிகாரம் மட்டுமே தீர்வாகிவிடாது என்பதையும் கூரியாகவேண்டும். அவர்களின் விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் உள்ளது."  அம்பேத்கர் மறைந்து அரைநூற்றாண்டை  கடந்துவிட்ட நிலையில் சமூகத்தில் தலித்துகள் ஓரளவு பொருளாதாரத்தில் முன்னேறியிருக் கின்றார்கள்.  பல நகரங்களில் உயர்சாதி இருப்பிடங்களோடு ஒன்றியிருக் கிறார்கள். அனால் ஒட்டுமொத்தமாக சமுதாயத்தில் பொதுவாக தலித்துகள் சார்ந்த மதிப்பீடு பார்க்கின்றபோது. தலித்துகள் மிக மோசமானவர்கள், சுயநலவாதிகள், நீதியை கடைபிடிக்காதவர்கள் என்கிற ஆரம்பகால அடிமைப்படுத்தலில் ஏற்பட்ட மனவலியை விட ஒரு மோசமான நிலைபாட்டை சுமத்தி வைத்திருக்கிறது. அதற்கான தீர்க்கமான மறுப்பை என்னுடன் சேர்த்து பெரும்பாலான  தலித்தும் துணிந்து சொல்வதற்கு இல்லை. இப்படியான நிலை தொடர்ந்து நீடிக்குமானால் இரவு பகல் பாராது தன் மக்களுக்காய் உழைத்த  அந்த மாமேதைக்கு தலித்துகள் திருப்பி செய்த கைம்மாறு என்ன? 

"ஒரு சமூக அமைப்பானது. தனக்கு தேவையான- தகுதியான மனிதர்களைப் பெருமளவில் தேர்ந்தெடுக்க விரும்பும் பட்சத்தில் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே அது முடிந்தவரை எல்லாரையும் சமநிலை கொண்டவர்களாக ஆக்கினால் மட்டும்தானே அது சாத்தியம் ஆகும். ஆகவேதான் நம்மால் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது என்கிறேன்."

தலித்துகளிலே பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறவர்கள், பொருளாதா ரத்தில்  தங்களுக்கு கீழான தலித்தவர்களை ஏலனமாய் நடத்துகின்ற நிலைமை இருக்கின்றது. அம்பேத்கர் மேல் குறிப்பிட்ட பொன் மொழிகளை எந்த தலித்தலைவர்களும் தங்கள் சந்ததிக்கு நினைவூட் டியதுமில்லை. பொருளாதா ரத்தில் உயர்ந்துவிட்ட தலித்தவன், அவனுக்கு ஈடாக பொருளாதாரத்தில் எழும்பி நிற்கும் மற்ற  சாதி நபரால் மதிக்கப்படுவதால்,  பொருள் சக்த்தி பெற்ற தலித்கடந்த காலத்தை மறந்துவிட்டு சற்று நேர்மையாய் நடக்க முயற்சிக்கின்றான். ஆனால் அவனேகூட தனக்கு கீழானவனுக்கு நீயாமாய் நடப்பதற்கும், வாழ்வாதாரம் பெற்றுக்கொள்வதற்கும் ஒரு வழியையும் காட்டுவதில்லை. தலித்தவர்களுக்கு வழிக்காட்ட  பொது வெளிக்கு வருகிறவர்கள். இனியும் பொதுத்தன்மையுடன் நேர்மையையும், நீதியையும் கையிலெடுத்து  பேசாத பட்சத்தில்  உயர்வகுப்பாய் இருக்கிற பெரும்பான்மை வாய்ந்தவர்கள்  தலித்துகளை கடமைக்காக மட்டுமே சேர்த்துக்கொள்வதும். ஆக்கமான பணிகளில்  ஒதுக்கிவிடுவதும். நாவலவிலே மட்டும் பேசுவது, நிகழ்ந்துவிடுவது நிரந்தரமாகிவிடும். முற்போக்கு சிந்தனையுடைய இலக்கியத்துறையிலும் கூட எந்த ஒரு தலித் எழுத்தாளர் களையும் திறந்த மனதுடன் தோள்மீது கைப்போட்டு நடப்பு பாராட்டுவதே இல்லை. நிற்பந்தகளின் அடிப்படையிலேயே 'அவர்களின் நிழலை பொருட்டாக எண்ணாமல் இருப்பதுபோல' தலித்துக்களை கணக்கிடுகிறார்கள்.தற்போதைய சமூகத்தில் மதத்தின் மூலமாக அடிமைப்படுத்துவது இரண்டாம் பட்சமாகத் தான்  இருக்கின்றது. பொருள் சார்ந்து  அடிமைப்படுவதுதான் முதலில் இருக்கிறது. அதற்கு சான்று ஆளுங்கட்சியும்,  எதிர்க்கட்சியும்  மாறி மாறி இலவசங்களை அறிவிப்பது.

"சமத்துவம், சகோதரத்துவம்- எல்லாவற்றுக்கும் மேல் நியாயம் என்கிற உணர்வுகளால் துண்டப்பட்டே செயல்படுகிறார்கள். என்கிற உணர்வு ஏற்பட்டால் மட்டுமே, எந்த ஒரு மனிதனும் மற்றவர்களுடன் ஒன்றினைவான் என்றே எனக்குத்தோன்றுகிறது." 

இந்த உண்மையான வாக்கை ஒவ்வொரு தலித்துகளும்   ஏன் ஒட்டு மொத்த சமூகமும் கடைபிடித்தாகவேண்டிய  நிலையில் இருக்கிறோம். அப்படி செய்ய தவறுகின்றபோது  'நேற்று யாரும் கண்டுகொள்ளாத அடிமையாய் இருந்தான். இன்று இவனே இவனை அடிமையாய் இருக்கவிட்டு, தலித்தாய் கண்டுபிடித்து, சிலர் பார்ப்பனிய மணுசாயம் பூசிக்கொண்டு நிற்கிறான். நாளை சாயம் பூசிக்கொண்டிருந்தவன் முழு பார்ப்பனிய மணுசட்டத்தை தரித்துக் கொண்டவனாய்  அவன் பாட்டன் வயிற்று பிள்ளையை  எனக்கு முன்னாள் செருப்பு போடுகின்றாயா? சேவகம் செய்யகிற அடிமை நாயே என்று அரங்கேரும் அபாயம் இருக்கிறது.  இந்நிலைக்கு திரும்புகிற பட்சத்தில்  ஏறக்குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி அறைநூற்றாண்டு களப்பணி ஆற்றி உழைத்தவர். அதன்முலமாக ஒட்டுமொத்த அரசு நடத்தும் வழிமுறைகளை அமைத்துதந்தவர். உலகமே போற்றி புகழ்ந்தாலும் அதில் பெருமைகொள்ளாது. ஒடுக்கப்பட்ட  இனத்திற்கு இயன்றளவுக்கு சுதந்தர வாழ்வை அனுபவிக்கச்செய்ததின் முலமாக இதயம் நிறம்பிய மகிழ்ச்சியை உணர்ந்தார். ஏறக்குறைய அறுபது ஆண்டுகால உழைப்பு, அறுபது ஆண்டுகால அவரைப்பற்றின பேச்சி, படிப்பு  எல்லாவற்றையும் மறந்து தலித்துகளே அம்பேத்கரை உயர்சாதி ஓட்டிச்செல்லும் மாட்டுவண்டியில் ஏற்றிவிடு கின்றனர். பள்ளிப்பாடங்களை கற்றுவர கையில் கோணிகொடுத்து அனுப்புகிறார்கள்.

"இக்கருத்தை அதிகாரம் படைத்த- புகழ்படைத்த ஒருவனின் கருத்து அல்ல இந்த நாட்டில் உள்ள ஏழை எளியவர்களின்- அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக தன் வாழ்க்கையை ஓயாத போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஒரு சாமானியனின் கருத்தாக எடுத்துக்கொள்ளுங்கள்."

அனேகமாக எந்த லாபநோக்கும் இல்லாமல் அம்பேத்கர் இதயத்திலிருந்து புறப்பட்ட வார்த்தைகளாகத்தான் இது இருக்கவேண்டும். வெறும் பேச்சில் மட்டுமில்லாது. அதையே நடைமுறையில் கடைபிடிக்கிற, எதிராளியையும்  நேசிக்கிற,  மதிக்கிற ஒருவரால் மட்டும்தான் இப்படியான வார்த்தைகளை வெளிபடுத்தமுடியும். அத்தன்மையில் தலித்துகளை வழிநடத்துகிற தகப்பனும் தாயும்  இல்லாமல் மனம்போனபடி வாழ்கின்றவர்களாகவே தலித்சமூகம் உலவிக்கொண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த சமூக நிலையாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வுகாணும் நோக்கைபபார்த்தால் அம்பேத்கர் மனம் நிறைந்து சொன்ன 'சமத்துவம்,  சகோதரத்துவம், நியாம் என்ற அடிப் படையில் ஆராய்ந்து, தலித்துகளும் சமூகமும் கடைபிடிக்காவிட்டால் தலித் துக்கள் அம்பேத்கர் என்று தங்கள் வாயால் உச்சறிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மொத்த சமூகமும் தான்.


குறிப்பு   
'சாதியை ஒழிக்கும் வழி'.  டாக்டர் அம்பேத்கர்.
'சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை'  தொல்.திருமாவளவன்.
தலித்முரசு-புதியகோடாங்கி

ஜேடி
 

2 comments:

பல்லவர்கள் said...

நன்று

DANIEL JAMES said...

பல்லவ தோழர்களுக்கு நன்றி.