ஒவ்வொருவரின்
இதயம் உரசும் பாக்கட்டிலும்
மூன்று பிரதான புகார்க்கடிதங்களை
வைத்திருக்கின்றார்கள்.
எல்லாமே கண் கண்டு
மூளைப் பத்திரப்படுத்தியதுதான்
ஒன்றை வைத்தபோது
வீடற்றவர்களாக
உறவற்றவர்களாக
மாறிப்போக வாய்ப்பிருக்கிறது.
இன்னொன்றை வைத்தால்
உழைப்பைச் செலுத்தமுடியாதவர்களாக
பிழைப்பற்றவர்களாகிப்
போக வாய்ப்பிருக்கிறது.
மூன்றாவதாக வைத்தால்
நாதியற்றவர்களாக
நாடற்றவர்களாக
இப்பூமியையே இழந்தவர்களாகவும்
போக வாய்ப்பிருக்கிறது.
இருந்தாலும்
மூன்று நிலைகளுமே
தைரியமாகச் சொல்லுகிறது
குறைகள் இருந்தால்
வெளிப்படையாகச் சொல்லவும் என்று.
வாழப் பக்குவப்படுத்திக்கொண்டவர்கள்
பாக்கட் புகார்களைச் சமயம்பார்த்து
மென்று விழுங்கிவிடுகிறார்கள்.
வாழ்வைப் பதியம் போடத்தெரிந்தவர்கள்
சமயம்பார்த்து வெளியிடுகிறார்கள்.
ஜேடி

No comments:
Post a Comment