Monday, January 28, 2013

கவிதை,

அழகிய வார்த்தை


அப்பா,
ஒரே ஒரு முறை
 
‘உன் நெஞ்சுக்குழியை மிதித்துக்கொல்லுவேன்’
அந்தப் புனிதமான வார்த்தையை
பள்ளி வெள்ளைத்தாளை நீட்டியபோது
உழைப்பின் முறுக்கேறிய
கன்னத்தின் நரம்புகள்
புடைத்துக்கொள்ளச் சொன்னது.
அதன் பிறகு நான் கேட்கவேயில்லையப்பா

வாழ்த்தும், அழகிய வார்த்தையைச்சொன்னபோது
உங்கள் கண்கள் ரத்தச் சாயலைத்தரித்துக்கொண்டு
அப்பழுகற்றுக்  காட்டியதை
என் உயிர் உள்ள மட்டும்
மறக்கவே முடியாதப்பா


சுகவீனத்தில் தோளில் சுமந்த  கரங்கள்
நெஞ்சுக்குழியை நெறிக்குமா? 
தாத்தாவின் கழுவேற்றப்பட்ட  தோள்களின் திமில்கள்
உங்களில் மீட்சி பெறவும்
உங்கள் குடல் வறண்ட தேகம்
என்னில் புத்துணர்வு பெரும் என்றும்,
பள்ளி வெள்ளைத்தாள் சுழிக்கப்பட்டதும்
நிராசையான  அன்பின் வெளிப்பாடு -என்று
இன்றைக்கும் நினைக்கிறேன்

அப்பா
ஒரே ஒரு முறை மீண்டும்
உன்னத வார்த்தையை உதிர்த்துவிடுங்கள்
நிகழ்காலத்தில் நீங்கள் உதிர்க்காத வார்த்தையை
எதிர்காலத்துக்கும் சேர்த்து யரெல்லாமோ
அதிகாரத்தொனியோடு  உதிர்த்துவிடுகிறார்க்ள்.
அதில் உங்களைப்போல் உள்ளன்பும் வைத்திருக்கவில்லை.
இரைத்தேடி அலையும் மிறுகத்தின்
தீராப்பசியே மிஞ்சியிருக்கிறது.

சுழிக்கப்பட்ட வெள்ளைத்தாளைக் கண்டும்
என் நெஞ்சுக்குழியை மிதிக்காமல் விட்டதால்
உங்கள் பசியில் சுரந்து வடிந்த
ஈரநெஞ்சத்தை, கூடுதலான கையின் விரலைப்போல் சுமந்தலைகிறேன்.
நீங்கள் கற்பனை செய்த பொறியாளரிடத்திலும், வைத்தியரிடத்திலும் சுலபமாகக் கிடைக்கக்கூடாத நித்தியச் சுரப்பியப்பாஅது

வாழ்க்கைப்பிடிப்பற்றுத்திரியும்போதும்
தைத்திருக்கும், பரந்து விரிந்த சாந்தம்
எழுத்தைச் சுமக்கும் எந்த வெள்ளைத்தாளும்  ஈடுசெய்யமுடியாதென்று
நீ படுக்கையில் விழுந்ததும், நான் தூக்கியபோது
என் நெஞ்சைத்தழுவி சொன்னபோது
மீண்டும் அந்த அற்புத, அழகிய வார்த்தையை
நினைகிறேனப்பா.

ஜேடி

No comments: