Friday, December 28, 2012

கவிதை

மதிப்பற்றக் குரல்

மதிப்பற்றக் குரலை 
வீதியில் கூவி விற்கிறேன்
எல்லாக் காலத்திலும் தேவையது
ஆனால், 
எந்தக் காலத்திலும் பரவலாக விரும்பாதது

எல்லாத்தெருக்களிலும்
கூவ வேண்டியிருக்கிறது.

அதற்கு
வசீகரமான ஒரு அழகை
மெருகேற்றவேண்டியிருக்கிறது.

இத்தனைக்கும்
உலகத்தின் பெருந்திரலான
ஞானிகளால் பாடம் நடத்தப்பட்டது.

ஏனோ,
மனதுக்குள் இருந்துகொண்டே
செயலாற்ற மறுக்கிறது.

நம்மை,
நமக்குப் பிடித்தவர்களாக
மாற்றுவதற்கே
இம்மதிப்பற்றக் குரலை
வீதியில் கூவுகிறேன்.

நாம் அணிந்துகொள்ளும்போது,
தாயும், சகோதரியும், காதலியும்
விளையாட்டுக் காட்டிக்கொண்டே
வீதியில்
துப்பட்டாவை பறக்கவிடலாம்.

தள்ளாடும் தாத்தாவின் கரம்கோர்த்து
இளைப்பார
சிறு தேநீரும் உதவலாம்.

குழந்தையின்
புஜ்ஜி கன்னத்தை
வலிக்காமல் முத்தம் செய்யலாம்.

ஒரு கோழை
பதுங்க இடந்தேடுவதுபோல்
சாதிக்குள் பதுங்காமல்
வாழும் பழக்கத்திற்கு வரலாம்.

இதற்காகவே
இம்மதிப்பற்றக் குரலை
வீதியில் வைக்கிறேன்
‘அன்பை‘ உருவாக்குவோம் என்று.

ஜேடி

No comments: