Friday, November 30, 2012

சிறுகதை,


நான்கு நிறம்

நவீன் திட்டமிட்டே இலக்கியத்தில் பரிச்சயமற்ற நான்கு நண்பர்களை எப்போதும் கூடவே வைத் திருந்தான்.  அவர்கள் நால்வரில் இருவர் பட்டயப் படிப்புப் படித்து மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள். மற்ற இருவர் அலுவலக நண்பர்கள்நவீன் கடந்த பத்து ஆண்டுகளாக அவனுடைய சிறுகதைகள், கவிதைகள் தவிர ஒரு எழுத்தாளர்களின் புத்தகங்களைக்கூட பரிந்துரைக் கவில்லை. தாராள மனதுவைத்து அவர்களுக்கு அறிமுக மில்லாத சில எழுத்தாளர்களைப் பற்றி பேச்சில் எடுத்துச் சொல்வதைத் தவிர, அவர்களின் எழுத்துக்களை கண்ணில்  காட்டியதே இல்லை.

நவீன் ஏன் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தவேண்டும், அவர்களுக்கு இலக்கியம் என்ற பக்கத்தைப் புரட்டும் ஆர்வம் இருக்கக்கூடாதா? பட்டதாரி ஆசிரியர்கள்,நவீனுக்கு பழக்கம் ஏற்பட்ட நாள் முதல் எனக்கு இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் சார் ஆனால்,பத்ததாம் வகுப்பு மாணவர் களை கரை சேர்ப்பதற்கே கடினமாக உழைக்கவேண்டியிருக்கிறது. மாதம் டெஸ்ட்,அதைத் தவிர்த்து,நான் ஒவ்வொருப் பாடத்திற்கும் டெஸ்ட் வைக்க வேண்டியிருக்கிறது என்பார்கள். உண்மை  என்னவென்றால் நவீனுக்குத் தெரிந்து இவர்கள் ஒரு கல்வியாண்டில் கூட நூறு விழுக்காடு தேர்ச்சியைக் காட்டவில்லை. நேரத்தோடு வகுப்பறை,பாடத்திட்டப்படி தேர்வுகள் என்று தன் கடமையை ஆற்றுகின்ற ஆசிரியர் தொடர்ச்சியாக முழு விழுக்காடு தேர்ச்சியைக் காட்டியுள்ளார். அடுத்த இரண்டு நண்பர்கள் எங்களுக்கு இருக்கும் பணியில் எலக்கியமாவது, உலக்கியமாவது என்று ஒருவர் சொல்ல,இன்னொருவர் ‘ஆமாம் சரியாய் சொன்னே‘ என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொள்வார்கள்.

ஆனால்,நவீன் எழுதிச்சென்றுக் காட்டும் கவிதைகள்,கதைகள் அத்திப் பூத்தார்போல வாசிப்பார்கள். கதை நன்றாக இருக்கிறது என்பார்கள். அநேகமாக அந்த நேரம் டீக்கடையில் டீ சாப்பிடும் நேரமாக இருக்கும். நவீன் சிலநேரம் ஏற்கனவே காசு கொடுத்திருப்பான். டீ ஸ்டேண்டின் பக்கத்தில் நிற்கும் வசதி இருப்பதால் அங்கேயே நின்று சாப்பிடுவார்கள். அவர்கள் பேச்சை கவனிக்கும் டீமாஸ்டர் மௌனமாகச் சிரித்துக்கொள்வான். நவீன் அதை அறிந்துதான் வைத்திருந்தான். இருந்த போதும் நவீன் டீமாஸ்டரிடம் வாய்க்கொடுப்பதில்லை. பல நேரங்களில் இடைவேலை நேரத்தில் டீக்கடையில் போண்டா,பஜ்ஜி பார்சலுக்காகக் கிழிக்கப்படும் ஆனந்த விகடன்,குங்குமம் மற்றும் நாளேடுகள் படிப்பதை அடிக்கடிப் பார்த்திருக்கிறான். இந்தப்புத்தகங்களைப் படிக்கின்றவர் களிட்ம்கூட வாதிடமுடியாதபடி ஒரு இலக்கியவாதி என்று நீங்கள் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. முதலாளியின் பருந்துப் பார்வைக்கு மத்தியில் இப்புத்தகங்களையாவதுப் படிக்கிறாரே. அதற்கு மதிப்பளிப்பது அவசியம் என்பதை இப்போது விளங்கிக்கொண்டு இருப்பீர்கள்.

தொடர்ச்சியான நால்வரின் சந்திப்பின் ஒரு நாளில் இரண்டு நண்பர்கள்தான் இருந்தார்கள். நவீன் முழங்கால் வரை சட்டைப் போட்டிருந்தான் அதைப் பார்த்தபோது பட்டதாரி ஆசிரிய நண்பருக்கு நாம் கூட கதை எழுதினால் இப்படி ஒரு பந்தாவைக் காட்டலாமே என்று யோசித்தார். ஆசிரியர் தங்கக் கம்பி நிறத்தில் சிறுங்கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவர் இன்செய்திருந்த விதம் பார்வை யாளரைக் கவரும்படியாகத்தான் இருந்தது.அவருக்குத்தான் அதில் நம்பிக்கையில்லை இந்த உள்ளூர ஆசை மேலும் வலுபெறும்படியாக (அ. வே. க. இ ) அந்தி வேளை கலை இலக்கியம் என்ற அமைப்பிலிருந்து பெரிய பெரிய நோட்டீஸ்களை கொண்டுவந்தார். நவீனைப்பார்த்து வணக்கம் கவிஞரே என்று விளித்தார். இடது கையில் வைத்திருந்த நோட்டீஸை பிரித்து எடுக்கும்போது இரண்டு நோட்டீஸ் டீக்கடையின் கொக்கோ கோலா கிரேடுகளுக்கு இடையில் விழுந்து விட்டது. அட என்னாடா இது என்று குணிந்து இப்படியும் அப்படியும் பார்த்தார். கைவசத்திற்கு அகப்படவில்லை. பிறகு சிரமப்பட்டு எடுத்தார். பட்டதாரியும்,கூட இருந்தவர்களும் எந்தப் பதட்டமும் இல்லாமல் நின்றிருந்தார்கள்.

நவீன் நீல நிறக் கலரில் இருந்த நோட்டீஸையேப் பார்த்தான் ஏ4 சைசில் நடு பாதி குறுக்காக மடித்திருந்தது. நான்கு பக்க நோட்டீஸ். முதல் பக்கத்தில் எழுத்துக்கள் ஏதும் இல்லை. நண்டு தன் இரு கால்களில் ஒரு இளம் பெண்ணைத்தூக்கிப் பிடித்திருப்பதும்,அவள்  நிர்வாணத்தில் வலைந்து தன் நீண்ட கூந்தலை மார்புகளுக்கு இடையில் யானையின் தும்பிக்கையாகத் தொங்கவிட்டிருந்தாள். கீழ் நோக்கியப் பார்வையால் இமைகள் மூடியதுபோன்று இருந்தது. இரப்பைகள் கேள்விக்குறியின்,கீழ் புள்ளியை எடுத்துவிட்டு இமையில் சொறுகியிருப்பது போன்றும் இருந்தது. நோட்டீஸை பார்த்தவர்கள் யாரும் அடுத்தப்பக்கம் போகவில்லை. பட்டதாரியுடன் இருந்தவன். சார் அடுத்தப் பக்கம் திருப்புங்க சார் என்றான்.

நவீன் அடுத்தப்பக்கத்திற்கு போய்விட்டிருந்தான். தலைப்பு இருபதாம் நூற்றண்டில் பெண்கள்,நாள்,நேரம் இடம் என்று கொட்டை எழுத்துக்களில் இருந்தது. கொடுத்தவரிடம் நண்பரே இருபதாம் நூற்றாண்டில் பெண்கள் பல கொடுக்குகளின் பிடியில் இருக்கிறார்களா?அல்லது தங்களுக்கு பாதுகாப்பானதென்று அவர்களே பல கொடுக்குகளை வைத்திருக் கிறார்களா?நோட்டீஸ் கொண்டுவந்தவர் ‘நண்பரே,அதன் அர்த்தம் எனக்கு சரியாகப் பிடிபடவில்லை. நம் பொறுப்பாளரைத்தான் கேட்கணும் என்றார். நவீனுடன் இருந்தவர்கள் ஒரு போட்டோவை இப்படியும் அர்த்தம் கொள்ளலாமா?என்று ஆச்சிரியத்தை தங்கள் முகத்தில் படரவிட்டுக் கொண்டிருந்தார்கள். நம்ம ஆள் ஜீனியர்ஸ்தான் என்று தங்களுக் குள்ளாகவே ஊகித்துக் கொண்டார்கள்.
  
ஒரு நாள் நண்பர்கள் கூடியிருக்கும்போது,என் சிறுகதைகளைத் தொகுப்பாக வெளியிடவேண்டும் எப்படிச்செய்வதென்று திட்டமிடுவதே மிகக் குழப்பமாக இருக்கிறது. என்ற  சோகத்தன்மையை நவீன் வெளிப்படுத்தினான். அலுவலக நண்பன் ஒருவன் வீச்சருவாளை உறுவுவதுபோல கண்கள் சற்று உருள வார்த்தைகளைக் கொட்டினான். “சே, உன்னைப்பத்தி இப்பதான் புரியுது நீ இதுநாள்வரை நண்பராகவே மதிக்கவில்லை. இப்படி யாருமற்ற ஒரு தெருவாசிபோல பேசுகிறாயே‘ என்றான். உரிமையுடன் பேசிய வார்த்தை என்றாலும் அதில் நவீனைப் பற்றிச் சற்று மனக்கஷ்டம் இருந்ததுபோன்று வார்த்தை வெளிப்பட்டது.  அவன் வாயாலே ஒரு முடிவு வரட்டும் என்று நண்பன் சொன்னது புரியாததுபோல் ‘ஏன்யா கோபித்துக்கொள்கிறாய் நான் என்ன சொல்லிவிட்டேன்.

‘பின்ன என்னபா இத்தனை தூரம் அன்யோன்யமாகப் பழகுறோம் எங்களை வைத்துக்கொண்டு உன் புத்தகத்தை வெளியீட்டு விழா செய்ய நாதியில்லாத மாதிரி பேசுறியே. அப்ப நாங்கெல்லாம் உனக்குத்தோள் கொடுக்க மாட்டோமா?‘ என்றான். இவன் பேச்சில் உள்ள கருத்தைப் பிடித்துக்கொண்ட இன்னொரு நண்பரும் சேர்ந்தார்போல ஆமாம்பா இன்னொரு முறை இப்படி சொல்லிவிடாதேப்பா. அப்படி வேற்று ஆள்மாதிரி நெனைச்சா நாங்க இதோடு எங்க பிரன்சிப்பை முறிச்சிக் கிறோம். என்று இடதுகாலைப் பின்னுக்கு இழுத்துத் திரும்பினான்.

நான் சொல்றதை முழுசா கேளுங்கப்பா. இலக்கியம் என்பது நீங்க நெனைக்கிறாமாதிரி நிறுவன விழாவோ,ஆயிரம் சமரசங்களுடன் கூடிப்பிரியும் குடும்ப விழாவோ அல்ல. முற்றிலும் மாறுபட்டது.  முற்றிலும் சுதந்திரமானது. ஒரு குறிப்பை மட்டும் சொல்லுகிறேன். டீக்குடிக்கச்சொல்ல சாருக்கு சர்கரை கம்மி,எனக்கு அதிகம் என்று சொல்வான். டீ டம்ளரை கையில் வாங்கிக்கொண்டு,நீ அந்தச் சிறுகதையில் எழுதியிருக்கிறியே “அவள் வந்துகொண்டே இருந்தாள். காளை வீரியமாய் எழுந்தது. திட்டாக இருந்ததைத் துடைத்தெடுத்தாள். என்று எழுதியிருக்கிறாயே. அதைப் படிக்கிறபோது,நீ எவ்வளவு பெரிய காமுகன் என்பது வெளிப்பட்டுவிடுகிறது. பெண் இயல்பா வருவதைப் பார்த்ததும் உன் ஆண்மை வெளிப்பட்டுவிடுகிறது. சற்றும் இரக்கமின்றி  அவளையேத் துடைத்தெடுக்க வைத்திருக்கிறாயே. நீ எவ்வளவு முற்போக்காய் பேசினாலும் உன் எழுத்து காட்டிக்கொடுத்துவிடும். இப்படியான ஈவிரக்கமற்ற எழுத்தை நாங்கள் குப்பைக்குள்தான் போட வேண்டும். என்று அழிச்சாட்டியம் பண்ணுவார்கள். நீ என்னதான் உண்மையை,‘இல்லை நண்பரே,வீட்டுக்காரி மாட்டுக்கொட்டகையைச் சுத்தம் செய்ய வருகிறாள். அதிகாலையில தினந்தோறும் வரும்போ தெல்லாம் காளை இதற்குத்தான் வருகிறாள். என்று ஊகித்து காளை எழுந்துவிடும்,பிறகு சாணியை சுத்தமாக எடுப்பாள். என்ற அடிப்படையில்தான் எழுதினேன். என்றால்கூட நம்பமாட்டார்கள். ஆளாளுக்கு ஒரு விளக்கத்தைத் தருவார்கள். இது ஒரு பக்கம் நடந்து கொண்டேயிருக்கும். இன்னொரு நண்பர் டீயிக்கு காசு கொடு என்பார். இந்த உலகம் உங்களுக்கு முற்றிலும் விந்தையானதல்லவா?உங்களால்  பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியுமா?'நண்பனை இவன் இன்னா குறுக்குக்கேள்வி கேட்கிறது என்று அடிக்கப் பாய்வீர்கள்தானேஎன்று நவீன் முடித்தபோது.

நண்பர்கள் மிகவும் ஆச்சரியமாகவும்,தங்கள் கண்கள் விரியும்படியாகவும் கேட்டுக்கொண்டிருந்தவர்களில்,ஆசிரிய நண்பர் முடிகள் சிலிர்ப்பதாய் உணர்ந்திருப்பார்போல. பாக்கட்டில் இருந்த  சீப்பால் தலையை வாரிவிட்டார். பற்களில் சில மயிர்கள் சிக்கியிருந்தது. சுத்தம் செய்தார். இன்னும் சாணிக்கதையில்  இருந்து  சுவாரசியத்திலிருந்து விடு படவில்லை. கேள்வியை எழுப்பினார். “ஏன் சார் இலக்கியவாதிகள் சதாரண மக்களைக்காட்டிலும் சக்த்திவாய்நதவர்கள்,அவர்களால் வைக்கப் படும் எழுத்துக்கள் மக்களின் வாழ்வை நேர்மைக்கு நேராக திசை திருப்பும்,  புகழ்ச்சி இல்லை,கேடான சிந்தனை இல்லை,என்கிற விதமாகத்தானே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைத்தானே நான்கூட மாணவர்களுக்கு அறிவுரையாக அடிக்கடிச் சொல்லிவருகிறேன்.

சங்க இலக்கியங்கள்,அறுபதுகளில் இருந்து எண்பதுகள், எண்பதுகளில் இருந்து  இரண்டாயிரம்,புத்தாயிரத்திலிருந்து தொடக்கம் என்று தமிழ் இலக்கியங்களை வகைபடுத்துகிறார்கள். எந்தக் கட்டத்திலும் அறிமுக மற்றவன் என்ற காரணத்திற்கா சில நல்ல எழுத்துக்களை மக்களின் பார்வைக்கு வராமல்  புதைக்கப்படாமலும் இல்லை. தனக்குச் சாதகமானவன் என்பதற்காக பல பின்தங்கிய (கருத்திலும்,தரத்திலும்) எழுத்துக்களை மக்களின் பார்வைக்கு வெளிப்படுத்தாமல் விட்டுவிட்டதும் இல்லை. ஆனால், புத்தாயிரத்தாண்டுக்கு சற்று முந்தியும்,அதன் தொடர்ச் சியாகவும் தமிழ் இலக்கியம் ஒரு புதிய உத்தியைக் கையாண்டுவருகிறது. எழுத்துக்களை அப்படி ஒதுக்கிவிடுவது நல்லதல்ல. சாதி அடையாளத்தை கொடுத்து தரமான இலக்கியத் தன்மையிலிருந்து ஒதுக்கிவைப்பது. மட்டமான பெயர் வைத்துவிடுவது. பொதுவாக குழுக்குழுவாய் இயங் குவது. அவனும் வைக்கட்டும் நாமும் வைப்போம்,நம்முடையது மட்டும்தான் தீவிரம் மற்றதெல்லாம் ‘வருமானம் அற்றநேரத்தில் அம்மா வெறும் பிஞ்சி புளியங்காய்களை வைத்து அரைத்துத்தந்த ஊறுகாய்என்று தரம்பிரித்து ஒதுக்கிவிடும் தன்மை மிகப்பிரபளமாய் நடந்துக் கொண்டிருக்கிறது.

நீங்கள் இலக்கியத்தின் பக்கம் வராமல் இருப்பதால்தான் எப்போதோ இறந்தகாலத்தில் சொன்ன இலக்கியவாதியின் பிம்பத்தை இன்னும் சுமக் கிறீர்கள். என்ன சொன்னீர்கள் இலக்கியவாதிகள் சுயநலம் அற்றவர்கள். அமாம் சார்,பஸ்சுக்காக காத்திருக்கிறபோது  முண்டியடித் துக்கொண்டு ஏறு வதைத் தவிர்த்து ஒதுங்கியிருப்பார்கள். அதுவே நீண்ட தொலைவில் இருந்து வந்திருக்கட்டும் அடுத்த பேருந்தேக் கிடையாது,தன் குறிப்பிட்ட இடம்போய் சேரவேண்டியது மிக அவசியம். அப்போதும் நெறுக்கி ஏறாமல் இருந்துவிடுவார்களா?நீங்கள் இணையதளங்கள் பக்கமும் வருவதில்லை. தீவிர இலக்கியவாதிகூட இந்தியா டுடேவில் வெளிவந்த தனது  கட்டுரையை,ஊடகங்களில் தன் நேர்க்காணலை அவரவர்  இணைய தளத்தில் சுட்டிக்கொடுக்காமல் இல்லை. வளரும் எழுத்தாளன்,தன் கதை நன்றாக இருந்தது அறிமுகமில்லாத நண்பர் ஒருவர் சொன்னார் என்று நண்பரிடம் சொன்னால் இவன் விளம்பரம் தேடிக்கொள்கிறான் என்று கிண்டலடிப்பார்கள்.

இப்படியான  சிக்கல் இருக்கிறது. சார்,அதனால்தான் என் சிறுகதையை எப்படி வெளியிடுவது என்று யோசித்திருந்தேன். நண்பர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். 

அலுவலக நண்பர் “என்னசார் சொல்றார் இவர் எனக்கு எழுத வருது நான் எழுதுறேன். என் பணத்தைப் போட்டு வெளியிடுறேன். இவுங்க என்ன சொல்றது. யாரவன் என்ன சொல்றான் எனக்கு முன்னாடி வரச்சொல்லு ஒரு கை பார்க்கிறேன்.

சார்,இவருக்கு கொஞ்சம் சொல்லுங்கசார். என்மேல இருக்கிற நட்பினால அதிக உணர்ச்சி வசப்படுறாரு. இலக்கியம் கடமைக்குள் அடங்கயிருக்கிற குடும்ப உறவுகளைப்போல இல்லை. பல்வேறு ரசாயனப் பொருள்களைக் கொண்டு,வியாதிக்கு தீர்வாக வைக்கத்  தயாரிக்கப்படும் மருந்துபோன்றது. மருந்து உருவானதும் எலிகள்,பூனைகளிடம் செலுத்தி பரிசோதித்தபின்புதான் பொது வெளிகளில் புழங்கவிட முடியும்,  இலக்கியமும்  அதைபோலதான். அலுவலக நண்பனுக்கு அநேகமாக புரியாமல் இருந்திருக்கலாம் சற்று மௌனமாக இருந்தான். இப்போது நால்வருக்கும் சேர்த்தார்போல நவீன் சொன்னான். 

நண்பர்களே நான் சொல்வதுபோல நீங்கள் நடந்துகொண்டால் என் சிறுகதைப்புத்தகம் எந்த நெருடலும் இல்லாமல் இலக்கியக் குடும்பத் திற்குள் நயமாகப் புகுந்துவிடும். பிறகு போற்றலும்,இகழ்தலும் வந்தாலும் பரவாயில்லை,என்று நிறுத்தினான். நண்பர்களுக்கு புத்துயிர் பெற்றதுபோல் ஒரு சந்தோஷம்.

பிரிதொரு அரசு விடுமுறைநாளில் நீண்ட பிரதான சாலையின் ஓட்டல் ஒன்றில் நவீன் நண்பர்களைக் கூட்டிச்சேர்த்தான். இன்று முழுதும் உங்களுக்கு என்ன வேண்டுமோ சாப்பிடுங்கள். திட்டத்தை உள் வாங்கிக் கொள்கிறவரை யாரும் அதிகம் குடிக்க்கூடாது. சாலையில் கனரக வாகனங்கள் அடிக்கடி ஊர்ந்துகொண்டிருந்தது.  ஓட்டலில் நான்கைந்து கயிறுகட்டில்கள் எதிர் எதிர் புறமாகப் போடப்பட்டிருந்தது. அதைச்சுற்றி தென்னங் கீற்றுகளால்  வளைக்கப்பட்டிருந்தது. மேற்குப் பக்கமாகப்  பெரிய டின்னைப் பிளந்து அடுப்பாக நிற்க வைத்திருந்தது. நான்கைந்து விறகு எரிந்தும் எரியாமலும் புகைந்துகொண்டிருந்த்து. நண்பர்கள் இரண்டிரண்டு பேராகவும்,நவீன் ஒருக்கட்டிலும் உட்கார்ந்தார்கள். கயிறுக் கட்டிலின்மேல் எப்படி சாப்பிடுவது என்ற பீதி எல்லார் மனதிலும் ஊடாடியது. சந்தேகம் தீரும் விதமாக ஓட்டல் சிறுவன் கட்டிலின் குறுக்காக பலகையை வைத்துவிட்டுச்சென்றான். ஆவல் கூடியது. இருபது சுக்காரொட்டி பையனிடம் நண்பர்களில் ஒருவர் சொன்னார். நவீன் சிக்கன் பிரை மற்றும் விஜிடேரியன் மசாலா சொன்னான். பையன் காய்ந்து கொண்டிருந்த கல்லினமேல் தண்ணீரைத் தெளித்து துடைப்பத்தால் சுத்தம்செய்தான் கல்லில் சர்... என்று சத்தம் கேட்டது. 

நண்பர்களே இது செயல்திட்டத்தின் ஒத்திகை மட்டும்தான். இதில் உங்களுக்கு எழும் கேள்விகளும்,நீங்கள் ஏற்கும் பாத்திரத்தில் இயல்புக்கு மாறான சந்தேகம்,எழுந்தால் சொல்லுங்கள். என்னால் முடியாது என்ற குழப்பம் வந்துவிடக்கூடாது. அப்படிக் குழப்பம் வராமல் இந்நிகழ்வை மிக எதார்த்தமாய் நடத்தி முடிக்க நீங்கள்தான் ஒத்துழைக்கவேண்டும். இதுதான் நீங்கள் எனக்குச் செய்கிற மிகப்பெரிய உதவி.

சார்,உங்களுக்கு எதோ பாடம் நடத்துவதாக நினைக்கவேண்டாம். மனதில் பதிய வைத்துக்கொள்வது அவசியம். நூல் வெளியீடு விழா தேதியை குறித்துவிட்டேன். தேதி,நாள் உங்கள் விருப்பப்படி அரசு விடுமுறை நாளில்தான். அது பெரிய விஷயமில்லை. நிகழ்வுக்கு எப்படியும் இருபது பேர் வந்துவிடுவார்கள் என்று சொன்னதும் நண்பர்களில் ஒருவர் பயங்கரமாகச் சிரித்தார். இந்த இருபது பேரைச் சமாளிக்கிறதுக்கா இவ்வள்வு ஏற்பாடு?என்றான் தாஸ். 'அவசரப்படாதே நண்பா,அந்த இருபது பேர் என்பதுகூட விழா மேடையில் அமரப்போகும் சிறப்பு அழைப் பாளர்களைச் சேர்த்துதான் சொல்லுகிறேன். போன மாதம் நீ உன் பையனுக்கு பெயர் வைக்கும விழாவிற்கே முந்நூறுபேரை கூட்டி விட்டாயே, அதை வைத்து இக்கூட்டத்தை எடைபோடக்கூடாது. இருபது சேர் நான்கு ஐந்து வரிரைசயாகப் போடப்பட்டிருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் நான்குபேரும் ஒரே இடத்தில் உட்காரக்கூடாது. பிரிந்து நான்கு இடங்களில் அமர்வது அவசியம்.

இது நூல் அறிமுகக்கூட்டம்தான். வருகின்ற அறிஞர்கள் இடையிடையில் விமர்சனக்கூட்டமா?நூல் அறிமுகக் கூட்டமா?என்கிற சந்தேகத்தை கிளப்புகிற விதத்தில் புத்தகத்தின் பாதகச் செயல்களைப்பேசி கூட்டத்தின் போக்கை திசைதிருப்பி விடுவார்கள். உதாரணமாக ‘இப்புத்தகம் வானத்தின் உதிராத நட்ச்த்திரம். பூமியில் கண்களுக்குக் மேலோட்டமாகக் காணக்கிடைக்காத தங்கம். என்று இரண்டு வார்த்தைச் சொல்லுவார்கள். இதில் மயங்கி புத்தகம் ஓகே என்று எழுந்து வந்துவிடக்கூடாது. மூன்றாவதாக மறைமுகமாக வெளிப்பட்டு சுற்றுப் புறத்தை நாறடிக்கும் குசுவைப்போல சில வார்த்தைகள் வெளிப் படுத்துவார்கள்.  புத்தகத்திலிருந்துதான் அவ்வார்த்தைகளை எடுப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் பேச்சை திசைத்திருப்ப நீங்கள் என்ன செய்வீர்கள்‘ என்று நவீன் நிறுத்தினான்.

பட்டதாரியும் மற்ற அலுவலக நண்பர்களும் பேந்த பேந்த முழித்துவிட்டு, நவீன்சார் “நான் எழுந்து சார்,என் நண்பர் அப்படி எல்லாம் எழுதியிருக் கமாட்டார். நீங்கள் ஏதோ காழ்ப்புணர்ச்யில் பேசுகிறீர்கள். அவர் வசிக்கும் தெருவில் கேட்டுப்பாருங்கள்,மேலும் நம்பிக்கையில்லை என்றால் பணி செய்யும் அலுவலகத்தில் கேளுங்கள்என்று முகத்தில் அறைந் தார்போல சொல்லட்டுமா?என்றார் பட்டதாரி.

நவீனுக்கு சற்று பயம் கூடிவிட்டது. இவர்களை வைத்துக்கொண்டு செய்கிற ஏற்பாட்டால் ஏதாவது வம்பில் மாட்டிக்கொள்வோமா?என்று பதட்டம் அடைந்து, பிறகு சிரித்தும்விட்டான். “சார் அப்படி எல்லாம் ஊகமாகச் சொல்லியும்,ஐயோ பாவம் சார் என்பதன் மூலமாகவும் இலக்கியவாதியின் வாதத்தை முடித்துவிட முடியாது சார். எதுவாயினும் நிரூபிக்கவேண்டும். எதிர்தரப்பு நாம் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமே பதிலாக வரவேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல இலக்கிய வாதத்தை,இலக்கியமாகியுள்ள ஏடுகளில் இருந்தோ,இலக்கியமாகும் தகுதிவாய்ந்த வார்த்தைகளைக் கொண்டோ அடிக்கவேண்டும். அப்போதுதான் நம் பதிலுக்கு எதிர் திசையி லிருந்து நான் முன்னே சொன்னதுபோல மௌனம் பதிலாகக் கிடைக்கும். அப்படிச் செய்யவேண்டுமென்றால்,நீங்கள் என் புத்தகத்தை ஒரு முறையாவது வாசித்து இருக்கவேண்டும். நான் பதிப்பிக்கும் முன்பாகவே உங்களிடம் காட்டி வாசிக்கச்சொல்லியும் தலா மூன்று மாதம் எடுத்துக் கொண்டதின் பலனாக ஒரு வருஷம் ஓடிவிட்டது. படிக்கவில்லை. பிரிண்ட்டிற்குப் பிறகு புத்தகத்தைக் இலவசமாகக் கொடுத்தும்,யாருக்கு நன்றி சொல்லப்பட்டிருக்கிறது என்பதோடு நிறுத்திக் கொண்டீர்கள். இந்நிலையில் எதிராளி புத்தகத்தை மேய்ந்து இப்புத்தகம் ஊனத்தோடு பிறந்திருக்கிறது என்று சொல்லும்போது நீங்கள் எப்படி பதில் வாதம் வைக்கமுடியும்.

உதாரணமாக,மேல் சொன்னதுபோல்  மேடையில்  நடந்தால் பதிலுக்கு.“மதிப்புக்குறியவரே, நீங்கள் ஊனம் என்று சொல்வது அபத்தத்திலும் அபத்தம். ஒருவன் பிறந்து வளர்ந்து மனைவி,மக்கள் என்று சுகபோகமாய் வாழ்கின்றான். இவனும் பிறந்தான் வாழ்கிறான். இவன் இரண்டு கண்களால் நன்றாகப் பார்க்கிறான். நீங்கள் பேசும் வார்த்தையின் முழு அர்த்தத்தை புரிந்துகொள்ளும் விதமாக காதுகள் நன்றாகக் கேட்கிறது மூளை என்னைவிடச் சிறப்பாக வேளை செய்கிறது. கால்கள் சற்று இழுத்து, இழுத்து நடக்கிறான். அப்படி இருக்கும்போது நீங்கள் கண்மூடித்தனமாக ஒட்டுமொத்தமாக ஊனம் என்று சொல்வதை நாங்கள் மறுக்கிறோம். எந்த உறுப்பு ஊனம் என்பதை நீங்கள் சுட்டிக் காட்டவேயில்லை.“. என்று நீங்கள் எதன் அடிப்படையில் வாதாடமுடியும். அதுவெல்லாம் நடக்காத காரியம் என்று சொன்ன போதுதான் அலுவலக நண்பர்கள் தலை சொறிந்தார்கள். சுக்கா ரொட்டி ஒரு ரவுண்டு காலியானது. மீண்டும் சில ஐட்டம் ஆடர் செய்யப்பட்டது. தாஸ் யூரியன் போயிட்டு வரேன் என்று எழுந்து நழுவினான்.

பாதிக் கிணற்றில் நழுவக்கூடாது. நீ வரும்வரை இதுகுறித்து பேச்சு ஓடாது சீக்கிரம் வா என்றான் நவீன். தாஸ் சற்று குற்ற உணர்ச்சியோடு சீக்கிரமாகவே திரும்பிவிட்டான். வந்தவன் முன் உட்கார்ந்த அதே நிலையில் உட்காராமல் இரு கால்களைக் கீழே தொங்கவிட்டு உட்கார்ந்தான். முன்னைவிட ஆழ்ந்து நோக்கும் பார்வையை நவீன் பக்கம் திருப்பினான்.

நல்லா கவனிங்க மேடையில் நான் வலது கடைசி இல்லை,இடது கடைசி இருக்கையில்தான் உட்காருவேன். என் வலது கையில் ஒரு கீச்செய்ன் இருக்கும். அதில் நான்கு நிறத்தில் சிறியச் சிறிய சிலேடுகள் வைத் திருப்பேன். ஒண்ணு பச்சை,இரண்டு கறுப்பு,மூன்று வெளிறிய மஞ்சள், நான்கு லைட் புளு இந்த நான்கும் நான்கு பொருள் குறித்து பேசுகிறது என்பதை உணர்த்த மேடையிலிருந்து,சிக்னல் தருவதற்காக வைத் திருப்பேன். புரியவில்லைதானே. உதாரணத்திற்கு,பச்சை நிறம் முதல் பட்டதாரி சாருக்கு,இரண்டாம் நிறம் நண்பர் தாசுக்கு,மூன்று இரண்டாம் பட்டதாரி சாருக்கு,நான்கு கதிர் உனக்கு. மேடையில் இருந்தோ,பார்வை யாளரிடத்திலிருந்தோ புத்தகத்திற்கு பாதகமாகவோ,சாதக மாகவோ கருத்து வருகிறதென்றால் அதற்குத் தகுந்தார்போல என் வலக் கையில் உள்ள கீச்செய்ன் வில்லையை தொங்கவிடுவேன். நீங்கள் ஆங்கங்கே இருந்த இடத்திலிருந்து,உங்கள் வாதங்களை வைக்கலாம். குறைந்த பட்சம் ஒவ்வொருவருக்கும் இரண்டு முறை சிக்னல் தரப்படும். பேச்சாளரின்  பொருள் போக்குச் சார்ந்துதான் என் சிக்னல் அமையும். ஒருவேளை உங்களில் சிலருக்கு வேலையில்லாமல் கூட போக வாய்ப்பிருக்கிறது.

குறிப்பைக் கேளுங்கள். சார்,முதலில் நீங்கள்தான். நான் பச்சை வில்லையைத் தொங்க விட்டதும் ‘பேச்சாளர் முழுக்க முழுக்க புத்தகத்தை வாழ்த்திப் பேசியுள்ளார்‘ என்று அர்த்தம். அப்போது நீங்கள் எழுந்து ‘ஐயா இவ்வளவு ஆழமாக இதுவரைக் கேட்டதில்லை. என் கணிப்புப்படி புத்தகம் மூன்று முறையாவது படிக்கத்தூண்டியிருக்கும். சார்,இங்கு வரும் வசனத்தை சற்று கவனமாக கேளுங்கள். ஆதாவது,புத்தகத்தை நீங்கள் மூன்று முறை படித்துள்ளீர்கள் என்று வரவில்லை. புத்தகம் மூன்று முறை படிக்கத்தூண்டியதாக வருகிறது. இதுதான் முக்கியம். ஆழைப்பாளர் புத்தகத்தை முழதுமாக படித்தவராகக்கூட இருப்பார். மற்ற இடங்களில் படித்த வியாக்கியானங்களை,நம்மப் புத்தகத்தில் அங்கங்கே வாசித்தக் கருத்துக்களையும் கோர்வையாக்கி சுவையாகத் தருவார். நமக்கு அது முக்கியமல்ல. நம் புத்தகம் படிக்கத்தூண்டியது என்கிறபோது ஏதோ காவியம் அளவுக்கு யோசிக்கத்தூண்டுகிறதல்லவா?இதுதான் நமக்கு முதல் வெற்றி. சார்,நீங்கள் இதைப்பேசும்போது வார்த்தைகள் தடைபட்டு தடைபட்டு வருவதுபோன்று இருக்கவேண்டும் அப்போதுதான் உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து வருவதாக நம்பவைக்கும்,அதற்காக,அதிக நேரம் இழுக்கக்கூடாது. பேசியதும் அமர்ந்துவிடவேண்டும். உங்கள் கையில் இருக்கும் புத்தகத்தை எடுத்துச்சென்று அந்த பேச்சாளரிடம் கையெழுத்து,கைபேசி எண் எல்லாம் அச்சமயம் வாங்க முற்படக்கூடாது.

இது நால்வருக்கும் பொதுவானது கவனியுங்கள். மேடையில் பேசத் தொடங்கும் முதல் நபர் புத்தகத்தின் ஏதோ ஒரு முலையில் இருக்கும் நுணுக்கமான சில வார்த்தைகளை கண்டுபிடித்து சற்று புரியாதமாதிரி சொல்லி புத்தகத்தைத் தூக்கிப்பிடித்து சொல்லிவிட்டால் நமக்கு நல்ல நேரம்தான். அவர் சொன்ன கருத்தையே, அடுத்தவர்,அதற்கடுத்தவர் என்று புத்தகத்தின் மதிப்பு மாறாமல் வேறு வேறு முறையில்,தொடர்ந்து கொண்டே சென்று கூட்டம் முடிந்துவிடும். உங்களுக்கு அதிகம் வேலை இருக்காது.

நம்முடைய நேரம் போதாக்குறையாக இருந்து,கூட்டத்தை வழி நடத்துகிறவர் கூட்டம் முடியும் தருவாயில் பார்வையாளரை நோக்கி இக்கருத்துக்களில் தங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தால் சொல்லலாம் என்று சொல்லிவிட்டால்தான் நீங்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஒருவேளை மேடையின் பேச்சாளர்களைவிட,பார்வையாளர்களில் நான்கு மடங்கு இலக்கியம் படிப்பவர்களாகக்கூட சிலர் இருக்கக்கூடும். சிறு புல்குவியலுக்குள் மறைந்திருக்கும் பாம்புபோல சடார் என்று படமெடுத்து நிற்பார்கள். கடவுள் புண்ணியத்தில் புத்தகத்திற்கு சாதகமாக சொல்லி விட்டால் மேடைப்பேச்சிற்கு  பச்சை நிறம் பயன்பட்டதுபோல பார்வையாளர் பகுதிக்கும் ஒரு நிறம் போதும். மாறாக புத்தகத் திலிருந்து சில பாதகமான முடிவுகளை வெளிப்படுத்திவிட்டால் பின்  வருகின்றவர்களின் எல்லாப்பார்வையும் அதை நோக்கியே பயணிக்கும். அந்த இக்கட்டான சூழளில் நான் மேடையிலிருந்து கறுப்பு நிறத்தைக் காட்டுவேன்.

அப்போது தாஸ் நீ எழுந்து சற்று ஆவேசமடைந்தது போல் முகத்தை வைத்துக்கொண்டு அந்த நபர் எந்தக் கருத்தோட்டத்தைப் பற்றி சொல்லி யிருந்தாலும் கவலைப்படாதேஉன் முகத்தில் கோபம் மட்டும் கொந்தளிப் பதுபோன்ற நிலையை மாற்றிக்கொள்ளாதே. குரல் உயர்த்தி நண்பர் எழுப்புகின்ற பார்வை முற்றிலும் தவறானது. அவர்,அவரின் இயல்பான பார்வையிலேயே புத்தகத்தின் பார்வையாக இழுத்துச் செல்கிறார்.தாஸ் இதுவரை மட்டும்தான் நீ புரியும்படியாகச் சொல்லவேண்டும்.இதற்குமேல் உன் வார்த்தையில் வேகம் இருக்கவேண்டும். நண்பரே,தமிழ் இலகியங்களின் உச்சமாய் விளங்குகின்ற சாரு நிவேதிதா காமத்தைக் குறித்து எழுப்புகின்ற கேள்விகளுக்கு மறுப்புக்கூறி மாற்றிவிட முடியுமா? எஸ். ராமகிருஷ்ணன்  நோய்மைக்குத் தரும்விளக்கங்களை தவறானப் பார்வை இதற்கு மேலான வழித்தடம் இருக்கிறது அதை வைக்காமல் விட்டுவிட்டார் என்று சொல்லமுடியுமா?ஜெயமோகனின் இரவில் புனிதமான சத்தங்கள்  ஊடுருவிக்கொண்டே  இருக்கிறதென்பதை ஆய்வுப் பூர்வமாகதான் வைத்திருக்கிறார் என்பதை நீங்கள் ஆய்வுப்பூர்வமாக முறுக்க முடியுமா?. இப்படி  முடியுமா?முடியுமா?என்றே எல்லாக்கேள்விகளும் இருக்கும்படியாகவே வைக்கவேண்டும். வாதம் வைத்தவர் கூட்டம் வைத்தாலே,தொடங்கி இரண்டு மணி நேரம் லேட்டா வரோம். இதுல எங்க,இதுலாம்  நிருவுரது என்று  யோசிக்கும்படியாக குரல் சத்தமாக இருக்கவேண்டும். தாஸ் நீ பேசுவது வேகமாகவும், தங்குதடையற்றும் இருக்கவேண்டும். மறந்துவிடக்கூடாது நீ பேசியவற்றில்  பொய்எது,உண்மைஎது  என்று ஆராய்ந்துகொண்டு இருக்கக்கூடாது. நீ கேட்டுவிட்டு  தரும் டீயோ, பிஸ்கட்டையோ சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம். கூட்டம் முடிந்தபிறகு,சிலர் நீ நிற்கும் இடத்திற்கு வந்து சார் உங்கள் குரலில் ஆவேசம் இருந்தது. எழுப்பிய வாதத்தில் உண்மை இருந்தது என்று உன் வாய் வார்த்தையைப் பிடுங்க முயற்சிப்பார்கள். தாஸ் உனக்கு மீண்டும் சொல்கிறேன். இதை சமாளிக்க, நீ என்னிடம் எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. மறந்துவிடாதே. அந்த சமயம் தயவு செய்து நீ பதில் ஏதும் பேசக்கூடாது. தலையை மட்டும் ஆட்டிவிட்டு அங்கிருந்து நழுவிவிடு. இலக்கியவாதிகள் சீருடையற்ற புலனாய்வுப் பேர்வழிகள். ஆதி அந்தத்தை கறந்துவிடுவார்கள் என்றபோது தாஸ் பயந்துவிட்டான். அவன்,தலைவரே எங்களுக்கு மட்டும் தான் உன் பயிற்சியா வெளிறிய மஞ்சள்,மற்றும் லைட் புளுகளுக்கு ஒரு ஆலோசனையும் இல்லையே என்று கேள்வி எழுப்பினான்.

உடன் இருந்த கதிர் “எந்த மனுஷன் பாவச்செயலுக்கு துணையை அழைக்காமல் இருக்கிறான். உங்களோடு படம் முடிகிறதென்றால் விட வேண்டியதுதானே என்ற கதிர் ‘ஏன்யா எங்களையும் இழுக்கிற.‘பேச்சு எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்திவிட்டது. நவின் தன் கடவாய்ப்பல் ஓட்டைத்தெரிய சிரித்துவிட்டான். சிரிக்கும்போது நெற்றியின் இரண்டு பக்கங்களிலும் சுருக்கம் விழுந்தது. சுருக்கம் தன் அழகைக் கெடுக்கிறதென்று பல முறை யோசித்ததுண்டு. பெண்கள் முன் சிரிக்கும்போது மிக எச்சரிக்கையாக சிரிப்பான். எல்லா நேரங் களிலும்  எச்சரிக்கையாக இருக்க முடியவில்லை. சில நேரங்களில்,இயல்புக்கு சிரித்துவிட்டு பிறகு ஞாபகம் வந்ததும் வருத்தப்படுவான். அனைவரும் சிரிப்பலிருந்து விடுபட்டனர். பேச்சைத்துவங்கினான். 

கதிர் உனக்கு பயம் ஒன்றும் இல்லையே?இலக்கியத்தில் மிகச் சிலக் கூட்டங்கள்தான் பல தளங்களுக்கு இழுத்துச்செல்லும். அது அழைப் பாளர்களின் ஈடுபாட்டைப்பொருத்தது. பலக்கூட்டங்கள் தொடக்கம் முதல் முடிவுவரை பச்சை நிறத்தைச் சார்ந்ததாகவோ,கறுப்பு நிறத்துக்கு வேலையுள்ளதாகவோதான் முடிந்துவிடும். அப்படி நடந்துவிட்டால் தாஸ் சொன்னதுபோல மஞ்சள்,புளுக்கு வேலை இல்லை. ஒருக்கருத்து மட்டுமே மேலோங்கி முடிந்தாலும்,நம் புத்தகத்துக்கு வீழ்ச்சிதான். புதிதாக இலக்கியத்தில் நுழைகிறவர்களுக்குத்தான் இந்தப் பரிதாபம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால்,நம் கூட்டம் அப்படி முடிகிறமாதிரி அமையும் நோக்கம் தெரிந்தால் நான் பயிற்சி அளிக்கும் வாசகங்களை வைத்து புத்தகத்தை பன்முகப்பார்வைக்கு இழுத்துச்செல்கிற விதமாக. மேடையாளர்களைப்பார்த்து. நீங்கள் புத்தகத்தின் பெரும்பாலான கருத்துப்பாடுகளைத் தொடவில்லை. இதை விட்டுவிட்டீர்கள். என்று வினா எழுப்பவேண்டும். 
சரி இப்போது மற்ற இருவருக்கானது. கதிர் உனக்கு மஞ்சள் வேண்டுமா? புளுவேண்டுமா?என்று கேட்டதும் ஆசிரியர் சற்று  உற்சாகமாக எனக்கு லைட் புளு சிக்னல் என்றார். பட்டதாரி  உற்சாகமாகச்  சொன்னதும் பராவாயில்லை.திட்டத்தில் ஒன்றிவிட்டார்கள் என்று நவீன் சந்தோசப் பட்டான். சார் உங்களுக்கு அடுத்ததாகச் சொல்கிறேன். முதலில் கதிருக்கு. நண்பரே ஏற்கனவே சொன்னதுபோல உங்கள் இருவருக்கும் வேலையில்லாமல் போக எந்தளவு வாய்ப்பிருக்கிறதோ,அதே அளவு சற்றுக் கூடுதலான பணியும் உங்களுக்குத்தான். இரண்டு நிறத்திலும் நான்கு கருத்துபாடுகள் இருக்கிறது. நான்குக்கும் சேர்த்து ஒருவரே என்றால் சற்றுக் குழப்பம் ஏற்பட்டுவிடும். இரண்டிரண்டாக பிரித்துக் கொள்கிறேன். மேடையாளர்களில் ஒரவரே இந்நான்கு கருத்தை சொல்ல வாய்ப்பிருக்கிறது.இரண்டு கருத்தை சொல்லிவிட்டு முகதாட்ச் சணியத்துக்காக மற்ற கருத்தை விட்டுவிடலாம். அடுத்து வருகிறவர் தான் ஒன்றும் சலைத்தவர் அல்ல என்று விடுபட்ட கருத்தைக் கையிலெடுக்கலாம். மேடையாளர்,ல்லது  பார்வையாளர் இடங்களில் இருந்தும் இந்நான்கு கருத்துபாடுகளும் வரலாம். எப்படி வந்தாலும் பரவாயில்லை. ஒருவர் பேசி முடித்ததும்,என் கையில் இருக்கும் நான்கு நிறத்தில் ஒன்றை தொங்கவிடுவேன். ஏதோ,கையில் வைத்துக்கொண்டு யோசனையில் இருக்கிறார் என்கிற பார்வை மற்றவர்களுக்கு ஏற்படலாம்.  நீங்கள் அந்நிறத்தை கவனித்து நிறத்திற்குறியவர் எழுந்து கற்பிக்கப் பட்டதை எடுத்துரைக் கவேண்டும்.

கதிர் இதை நீ சரியாக கவனி ‘ஒண்ணு இப்புத்தகத்தில் அழகியல் நோக்கு இல்லை. எல்லாக்கதைகளும் பாடிக்கட்டப்படாமல் வெறும் இன்ஜினுடன் சாலையில் ஓடும் புதிய கனரக வாகனம்போல் இருக்கிறது. அவரே,நான் பத்திப் பத்தியாகத் தேடினேன். எந்தப்பேராவிலும் பாலியல் வசீகரம் இல்லாமல் ஒரு பசுங்கன்று கூட மேயமுடியாதக் கட்டாந்தரையாக இருக்கிறது.‘முன்னே சொன்னது போல,இரண்டுக்கருத்தை ஒருவரேச் சொன்னாலும்,இருவர் சொன்னாலும் என் கையிலிருக்கும் வெளிறிய மஞ்சள் நிறத்தின் வில்லையைக் காட்டுவேன்.கதிர் நிறத்தை மறந்துவிடாதே உனக்கு மஞ்சள். அதற்கான கருத்து அழகியல்,பாலியல் சரியா என்றான் நவீன்.

நண்பரே,ஒண்ணாவது குழந்தைக்குச் சொல்வதுபோல சொல்கிறாயே. நீங்கள் மேடையிலிருந்து காட்டுகிற சிக்னலுக்கு ஏற்றார்போல கற்பிக்கும் பாடத்தை ஒப்பிக்கவேண்டும் அவ்வளவுதானே“ என்றான். நவீனுக்கு,நாம் சற்று இழுக்கிறோமோ,இருந்தாலும் சமாளித்து,கதிர் இலக்கியத்தில் ஜாம்பவான்கூட ஒண்ணாம் கிளாஸ் மாதிரிதான் ஏன்னா இது கண்ணுக்குத்தெரிவதும், தெரியாததும் புணர்ந்து நிகழ்கிற தரிசன வெளிப்பாடு. வாழ்நாள் முழுதும் கற்றுக்கொண்டேயிருப்பது அதனால்தான் சொல்கிறேன்‘ என்று நிறுத்தினான். 

இந்த வாசகத்தைக் கேட்டதும் கதிர் நாம் தேரிவிட்டோம் என்று நினைத்தது தவறுபோல,என மௌனமானான். மீண்டும் நவீன் ‘கதிர் மஞ்சள் சிக்னலைக் காட்டியதும் நீ எழுந்து நண்பரே,தோழரே,ஐயா இவற்றில் எதையாவது  ஒன்றை விளித்துதான் பேச்சைத் தொடங்க வேண்டும். அழகியல் இல்லை என்கிறீர்கள். இப்படி இருப்பதுதான் அழகியல் என்று கட்டமைத்து வைத்திருக்கிற அடிப்படையில்தானே நீங்கள் சொல்கிறீர்கள். ஐஸ்வர்யாராய் போல் இருப்பதுதான் அழகு அப்போதுதான் பெண்ணாக ஏற்கமுடியும் என்பதை எந்த மனித் தன்மை யுள்ளவன் ஏற்கமுடியும். அழகியல் மனிதனின் வாழ்வியலில் பருவத்திற்கு ஏற்றார்போல மாறக்கூடியது அல்லவா?நீங்கள் ஒண்ணரைக் கண்ணனாக இருதுப்பதுதான்  எனக்கு  அழகு என்றுபடுகிறது. அதனால்,நீங்கள் எதிர்பார்க்கிற அழகு இல்லை என்பதற்காக ஒட்டுமொத்தமாக அழகில்லை என்பதை ஏற்க முடியாது‘ என்று சொல்லி விட்டு உட்கார்ந்து விடவேண்டும். முதலில் அழகை எதிர்பார்க்கிறவர்,அடுத்ததாக அநேகமாக பாலியலைத்தான் சொல்ல முற்படுவார். மீண்டும் மஞ்சள் சிக்னலைத்தான் தொங்கவிடுவேன் அப்போது மேலோட்டமாக ஆண்,பெண் பால் உறுப்புகளின் பெயர்களை கதையோடு ஒன்றிவரும் படியாக இருப்பது நிறைவாக இருக்குமா?கதைக்கு சம்பந்தமற்று பாலியல் செய்யத் தூண்டுவதற்கு சிறுப்பங்காவது கதைகள்  ஆற்ற வேண்டும் என்று கருதுகிறீர்களா? எங்களுக்குத் தெளிவாக விளக்கினால் நலமாக இருக்கும்‘ என்று கேள்வியை எழுப்பி அமரவும். இதைச் சொல்லிவிட்டு நீ இருக்கையில் அமருவதற்குள் உன் சுற்று வட்டங்களின் இருக்கை யிலிருந்து ‘இவனுங்களாம் எழுத்தாளனுங்க  வாய்க் கூசாம பேசுறானுங்கப்பாரு என்று  காதுபட பேசுவதை நீ கேட்கலாம்.  அவர்களும் உங்களைப்போலவே இலக்கியக்கூட்டங்களுக்கு எதேச்சையாக புதிதாக வந்தவர்களாக இருப்பார்கள். அப்படிப் பட்டவர்களின் வாய்ஸ் நமக்கு பலம்தான். பொது வெளியில் மக்களின் ஆதரவுப்பெற்று விட்டால் எந்த இலக்கியம் தெரிந்த ஜாம்பவன் ஆனாலும் மண்ணைக் கவ்வவேண்டியதுதான். இந்தளவு உன் பங்குபோதும்.‘ என்று நவீன் முடித்தான். கதிரின் பங்கு முடிந்ததும் சற்று பின்னால் சென்றான். டர டர வென்று பிளாஸ்டிக் காகிதத்தின்மீது சத்தம் சற்றுநேரம் கேட்டது. மீண்டும் பட்டதாரிக்கு என்னச் சொல்லப்போகிறார் என்பதை கவனிக்க வந்து உட்கார்ந்தான்.  

சார் நீங்கள்தான் கொஞ்சம் கைக்கொடுக்கனும் ஏன்னா யாரும் நேரடியாகக் கையில் எடுக்க முடியாத கருத்துப்பாடுகள் உங்களிடம்தான் ஒப்படைக்கிறேன். நவீன் சொன்னதும் பட்டதாரி சற்றுப் பதட்டத்துடன்  தலையை ஆட்டினார். ஏற்கனவேப் பேசியவரே மூன்றாவது நான்காவதுக் குற்றச்சாட்டையும் வைக்கலாம். வேறொருவர்,மேடையிலிருந்தோ, பார்வையாளரிடமிருந்தோ வைக்கலாம். மூன்றாவது கருத்து,ஒரு ஜாதிக்கெதிராகவும்,இன்னொரு ஜாதிக்கு ஆதரவாகவும் பல கதைகளில் வைக்கிறீர்கள். படைப்பாளனுக்கு அழகா?இப்படி எழுதுவதால் சமூகத்தில் பிளவைத்தான் ஏற்படுத்தமுடியும்.‘ என்றும்,இவரோ அல்லது வேறொருவறோ புத்தகத்தில் பிழைகள் மலிந்துக் கிடக்கிறது. இது மொழிக்கு பெருத்த அவமானம். என்கிறபடி நான்காவதாக தன் பேச்சை முடித்தால்‘ சார்,கதிருக்குச் சொன்னது போலவே உங்களுக்கும் லைட் புளு,சிக்னல் தொங்கவிடுவேன்.

முதல் கருத்துக்கு,‘நீங்கள் எழுந்து,ஐயா உங்கள் வார்த்தையில் நியாயம் இருக்கிறது. மனிதன் மனிதன் என்ற சுட்டுச்சொல்லுக்கு மட்டுமே உரியவனாக இருந்தால் நீங்கள் சொல்லுவது சரி. நான் பக்கத்தில் இல்லாதபோது நீங்கள் என் மனைவியிடம் கேட்டால் என்னை மிகவும் நல்லவன் என்று சொல்லுவாள். எதிர் வீட்டுக்காரியின் கணவனிடம் கேட்டால் என்னைவிட மோசமானவன் இந்த உலகத்திலேயே இல்லை என்பான். என் செயல்தானே என்னை நல்லவனாகவும் கெட்டவனாகவும் தீர்மாணிக்கிறது. ஒருவன் சமூகத்தால் கெடுவது இரண்டாம் பட்சம்தான். தனி மனித ஒழுக்கத்துடன் இருக்கும் எந்த மனிதனையாவது,அனைத்து மதங்களின்,ஜாதிகளின் தீவிர பற்றாளர்கூட கெட்டவன் என்று சொல்ல வாய்க்கூசுமல்லவா?அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த ஜாதியிலும் நல்லதையே நினைப்பவரை நல்லவன் என்றும்,அடிக்கடிக்கேடு நினைத்து செயல்படுத்துபவரை கெட்டவன் என்றும் சொல்வதுதானே இயல்பு. அதைத்தான் புத்தகம் செய்திருக்கிறது‘ ஐயா எனக்கு அவ்வளவாகத் தெரியாது இருந்தாலும் என் உள்ளத்தில் உதித்ததைச் சொல்கிறேன். என்ற அளவில் முடித்துக் கொள்ளுங்கள்.

இதற்கு மேல் அவரோ,வேறு நபரோ பிழைப்பற்றி வாத்ததை எழுப்பினால், சார்,சற்றும் தயங்காதீர்கள். உங்கள் நண்பன் என்பதை மறந்துவிடுங்கள். தினந்தோறும் உறவாடியது எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். மொழியைக் கொச்சைப்படுத்துகிற வேலையை வைத்துக் கொள்ளாதே. நீயெல்லாம் எழுதவில்லை என்று யார் அழுகிறார்கள் என்று கேட்டு இருக்கிறேன் சார். கேட்காமலில்லை. ஆனால் அவர். ‘நண்பரே, உனக்கு ஒரு குடும்பம்,மக்கள் செல்வம்  இருக்கவேண்டும் என்று யாராவது ராஜ்ஜியத்தை விட்டு காட்டுக்கு போனார்களா?கேவலம் ஐம்பதோ, இருபதோ, முப்பதோ ஆண்டு வாழ நிர்மாணித் திருக்கிறபோதே அவனவனுக்கு இயல்பாக  மெரித்து,அமுக்கி வாழ உனக்கு தெரிந்திருக் கும்போது. பூமி உள்ளவரை என் எழுத்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளவனை எழுதக்கூடாது என்பது மகா மட்டமான செயல் அல்லவா?‘ என்று என்னிடம் கேள்வியை எழுப்பினார். பிறகே எக்கேடாவது கெட்டுப்போ என்று விட்டுவிட்டேன்.‘ என்று சொன்னபிறகு,தலைவரே மன்னிக்கனும் இது எனக்கான நேரமல்ல இருந்தாலும்  புத்தகத்தின் நியாயமான தரத்தை மறக்கடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்கா சிறு மறுப்புக்கருத்து. அனுமதிக் கேட்டுவிட்டு நீங்கள் பாட்டுக்கு தொடங்கிவிடலாம். அவர்  பேசுங்கள் என்று சொல்லும்வரை,நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. ‘நான்கூட யோசித்தேன். ஆங்கில மொழி உலகம் முழுதும் பரவ காரணம் என்னவாக இருக்கும் என்று சக ஆசிரியையிடம் கேட்டபோது. எதற்கும் வலைந்து கொடுக்கும் தன்மை. குறிப்பாக என் பெயர் சீதா. நான் எழுதும்போது sitha என்றுதான் எழுதுவேன். தோழி ஆங்கில ஆசிரியை sita என்று எழுதுவாள். அடிப்பாவி  ஆங்கில ஆசிரியை இப்படி எழுத்தை தவறாக எழுதுகிறாயே என்கிறபோது. ஆங்கிலத்திற்கு இதுதான் பெஷாலிட்டி ஒத்த ஓசையுடைய எழுத்தை மாற்றிப்போட்டாலும் தவறு  இல்லை.இப்படியும் எழுதலாம்.அதனால்தான் எல்லா நாடுகளையும் பிடிக்கிறது. என்று சொன்னார்கள். அப்போதுதான் மேலும் ஒரு விஷயம் விளங்கியிது. மிகக் குறைவான கற்றலுடன் கணினியைக் கையில் எடுக்கும் மனிதன் கொஞ்ச நாளிலே அதன் எல்லா முகங்களிலும் ஊடாடமுடிகிறதே எப்படி?செயல்படுத்த பல சுலபமான வழித்தடங்கள் நமக்கு கிடைக்கிறது. அதனால்,அதன்பயன்பாடு உலகம் முழுதும் தேவையாய் இருக்கிறது. என்று நான் கணக்கிடுகிறேன். தயவுசெய்து நண்பரின் புத்தகத்திற்காகக்கட்டு கட்டுவதாக நினைக்க வேண்டாம். என் யூகப்படி இன்னும் அறுபது ஆண்டுகளில் தமிழில் ஓசை மாறிவரும் எழுத்தை பெருங்குற்றமாக எடுத்துக்கொள்ளும் காலம் மாறிவிடும். அப்போது மொழிபல நாடுகளின் காதல் கண்ட ஜோடியைப்போல்  சந்தோஷமாக இயங்கும். என்பதாகவேப் படுகிறது.‘ என்று முடித்துக்கொள்ளவும். சார்,இந்த முறை முடிக்கும்போது நன்றி சொல்ல மறக்காதீர்கள். சொல்ல மறந்த நிகழ்வால்கூட புத்தகம் குப்புறப்படுக்கவும் வாய்ப்பிருக்கிறது. வானலாவ உயரவும் வாய்ப்பிருக்கிறது.‘ என்று சொல்லி தன் நெடியப் பாடத்தை முடித்தான்.

நணபர்களுக்கு சற்று மயக்கம் தலைக்கேறிவிட்டது. நவீன் சார் நீங்க கவலைப்படாதீங்க சும்மா வெளுத்து வாங்கிவிடுகிறோம். என்று நான்கு பேரும் கோரசாகச் சொன்னார்கள். புத்தக வெளியீட்டின் முடிவில் நிறைவாகப்பேசிய விழாத்தலைவர் நவீ(ன)ன் புத்தகத்தை விருதுக்கு முன்மொழியவேண்டும் என்றார்.

இருக்கையின் தடபுடல் சத்தத்துடன்,பல மூலைகளில் இருந்து கைத்தட்டல் கிளம்பியது.  

ஜே. டேனியல்

No comments: