Sunday, June 17, 2012

கவிதை

                  
    கூர் தீட்டிய ஆயுதம்.

வானத்திலிருந்து அடிக்கடி நட்சத்திரங்கள்
தலைகீழாய்  விழுகிறது

பூமிப் புழுதியைக் கீறி
கிளம்பும் மூளையின் யோசைனைகள்
தன்  சுகவாழ்வை இழத்தல்
‘உயிர் இழத்தல்போல்’ கணக்கிடுகிறது 
இப்போராட்டத்தின் ஊடாகவே
கொத்துக்கொத்தான பூமியின் ஆவிகள்
வான் பயணம் ஏறுகிறது

நட்ச்சத்திரம்
விழாமல் இருப்பவைகளுடன்தான்
விழுகிறவைகளும்  இருந்தது
தன் இருப்பிடம் பரிக்கப்பட்டதா?,
விழுவதற்காகவே  அமைக்கப்பட்டதா?
விழுதலின் மன பாரத்தை 
சுமந்துகொண்டேவிழுகிறது.

ஏற்றம், இரக்கங்களுடன்
சந்தித்துக்கொள்ளும் நட்சத்திர +ஆவிகள்
உரையாடல் தொடங்குகிறது

விழாமல் இருப்பவைக்கு
விழுதலின் 
பாரமான நினைவலை வருகிறது, ஆனால் 
இதுவரை விழவில்லையாதளால்
என் வழியே 
நல்லதென்று நிம்மதி கொள்கிறது
அந்நிம்மதியே
விழுந்தவையின்
விழுதலை ஏற்றுக்கொள்கிறது

உரையாடல் இப்படித் தொடங்குகிறது
யாராலோ தள்ளப்படுகிறோம்
தள்ளுமளவுக்கு 
வஞ்சினம் என்ன செய்தோம்
விழுகிற நட்ச்சத்திரம் 
உள்ளுக்குள்அழுகிறது.

அழுகிற வல்லமை 
உனக்கு இருக்கிறது
அடடா இது நல்ல உத்திதான்
அழுகிற குழந்தை
பெற்றுக்கொள்ளாமல் 
இருப்பதில்லை

நீ எப்படிக் 
குழந்தைத் தனமானாய்
அன்பைக் கிரயமாக 
வைத்திருப்பவனிடம்
சாத்தியப்படலாம்
அனைத்தும் எனகென்பவன்
அழுகையை மதிப்பானா?

அழுகையில்
சாதித்த சாத்தியங்கள் உண்டுதான்
அழுகிறவரின்
வாழ்வைப்பொறுத்து
அரங்கேறுகிறது வெற்றி
போதிமரப் புகழ்
ஒரு வகை அழுகையின்
வெளிப்பாடுதானே 

கணவாய்களை, தீவுகளை 
கண்டவன் அங்கங்கே கொடிநாட்டி
கொள்ளையிட்டபோது
வெள்ளைத் துப்பாக்கியை
வெண் புறாவாக்கியது
ஒரு வகை அழுகையின் வெளிப்பாடுதான்

2006ன் சோகக் கடற்கரையில்
மணலில் புதையுண்டவள்
கைகள்
வெளியில் 
விரிந்து கிடந்ததே
அது கடசிப்பயனத்தின்  
முடிவற்ற அழுகையின் வெளிப்பாடுதானே 
 
அழுகையின் வெற்றி
அன்புடன் நட்பையும் வளர்க்கிறது
நீண்ட நாட்கள் கடந்தும்

இருட்டுக்குள்
விரிந்து திரியும் 
கூர் தீட்டிய ஆயுதங்கள்  
மிரட்டி  கொல்லும் 
சற்று நாளில் 
கூர் மீண்டும்
பாய்ச்சியவன்  
பக்கமாக மாறிக்கொள்கிறது
திரும்பவும் கொல்லுதலையேச் செய்கிறது
கூர் தீட்டிய ஆயுதம்.

ஜேடி


 

No comments: