Tuesday, October 19, 2010

சிறுகதை

                                               முக்கிளை  பூ

கட்டாந்தரையாய் கிடந்தாலும் லேசான தூறலுக்கே வேண்டுதளில்லாமல்  புல்லுகள் உயிர்தெழுந்துவிடுகிறது. வரப்பில் பலவிதமான புல்லுகளும், பூண்டுகளும் பசுமையாய் இருந்தது. அங்கங்கே தும்பைச்செடிகளின்  பூ வானத்தை தனக்குள் இழுத்துக்கொள்ள காத்திருப்பதுபோல் வாயை திறந்திருந்தது. வரப்பின் மீது அடர்பச்சை படுத்திருந்தது. கழனியை ஒட்டியே சாலை. சாலையில் போவோரையும் வருவோரையும் வேடிக்கை பார்த்தவாரே எப்போதும் தன் பணியைச்செய்யும் கழனி. கிராமங்களை கடந்து சாலையில் வரும்போதுதான் பயணிகளின் உண்மையான பிம்பங்கள் வெளிப்படும். புது மாப்பிளைகள், மற்றும் புது மருமகள்கள் தன் மாமனார் வீட்டில் தங்கி கிளம்பும்போது அங்கு பேசமுடியாத பல விஷயங்களை சில்மிஷமாகவும், உண்மையான சண்டையாகவும் நடத்திக்கொண்டு  போவார்கள். தங்கள் தங்கள் வீடுகளில் சாக்குப்போக்கு சொல்லிவிட்டு வாழ்க்கையை பற்றி புரிதல் இல்லாத காதல்கள் முன்னும்  பின்னுமாக வந்து, இந்த கழனியை நெருங்கும்போதுதான் கை கோத்துச்செல்வார்கள். குடும்ப பாரம் தாங்காத முதிர்வயதுடையோர் புலம்பிக்கொண்டு போவதையும் கழனி வெட்ட வேளிச்சமாய் பார்த்துக்கொண்டிருக்கும்.

ஜோதி ஏக்கம் நிறைந்த கண்களுடன்  சைக்கிளில் பார்த்துக்கொண்டுவந்தான். கழனியின் சத்தை விவசாயி உரிஞ்சிக்கொள்வதால் கழனிகூட பிள்ளை பெற்ற தாயைப்போலதான். புல்லுகளில் முக்கிளைக்கொண்ட பூ பூத்திருந்தது. அதன் பக்கத்தில் உட்கார்ந்து இரண்டு கைகளாலும் புல்லுகளை சேர்த்தவாரு தழுவினான்.நிறைந்த மரியாதையுடன் வணக்கம் செய்வதுபோல் குனிந்து நிமிர்ந்தது. ஜோதி புல்லுகளை தழுவினான். அவன் கண்கள் மூடிக்கொண்டது. 

"டேய் ஜோதி இன்னும் இன்னாடா யோசனை அந்த புல்லை கீழ போடுடா, சின்னப்பசங்கமாதிரி கையில உருட்டிங்கிற. இனி வெவசாயமெல்லாம் வேலைக்காகாது. இந்த பட்டிக்காட்டுல போய் இந்த வெலக்குடுத்து வாங்க வந்திருக்கானுங்க. பணங்கொழுத்த பணக்காரனுங்க. இதுதான் நேரம் சட்டு புட்டுனு முடிச்சிடுடா" என்றார்கள் சித்தப்பா மகன்கள் மகா, மாசிலாமணி.சற்று தூரத்தில் வெள்ளை அம்பாசிடர் கார் வந்தது. நேற்று பெய்த துறளால்     தரையில் ஈரம் இருந்தது. தூசிகள் பறக்கவில்லை. பருவநிலை மாற்றத்தால் எப்போது பொழியும் எப்போது வெயில்காயும் என்று தெரியாத நிலையில்தான் நேற்று பொழிந்தது. கார் பக்கம் வந்ததும் ஜோதி உள்ளிட்டோர் படபடத்தனர். மற்றவர்கள் தங்களுக்குறியதை இழந்து விடுவதில் நிம்மதியடைபவன் தான் மாசிலாமணி. இபோதும் அவன் தான் முந்திக்கொண்டு  " ஜோதி ஏதாவது ஒரு முடிவை சொல்லு. தலைவர் ஆளக்கூட்டியாந்துட்டார். நல்ல வெல வருது இதை எழந்துடாதே. சொல்லிட்டேன். "அவனே மருபடியும் ஜோதியின் கவனத்தை  ஈர்க்க "பணத்தை வாங்கிம்போய் டவுனுல நல்ல  ஸ்கூலாப்பாத்து பய்யனை சேத்துடு மீதிய பேங்குலப்போட்டு வட்டிய வாங்கி சாப்பிடுபா" என்ற 
வீயாபாரத் தந்திரத்தை வீசினான்.

ஜோதி அவர்கள் இருவரையும் விட்டு சற்று  தள்ளிச்சென்று யூரியன் போவதுபோல் உட்கார்தான். கண்களில் முக்கிளை பூ தென்பட்டது. "அப்பா கடா மாடுகளை பூட்டி கலப்பை வைத்துக்கொண்டு ஏர் ஓட்டவந்தார். ஜோதி பின்னால் கால் சட்டையை மாட்டிக்கொண்டு வந்தான். அவன் கையில் புல்லை வைத்து திருகிக்கொண்டுவந்தான். கழனிவந்ததும் ஏர் பூட்டி ஜோதியிடம் கொடுத்தார். ஜோதிக்கு புழுதி ஓட்டுவதென்றால் சந்தோசம். தண்னீர் இருக்கின்ற கழனியில் இறங்கச்சொல் வதால் அப்பாவை போடா என்று சொல்லிவிட்டு எந்த மூலைக்காவது ஓடிவிடலாமா என்று தோன்றியது. இருந்தாலூம் 'டேய்.. ராஜா, வாபா' என்று கொஞ்சும் வார்த்தைகள் பொழிந்தார். அதில் வேறு வழியின்றி கழனியில் இறங்கினான்.காலையில் கழனித்தண்ணீர் அய்ஸாக இருந்தது. அதன் குளிர்ச்சி மூளைவரை எட்டியது. அவன் அப்பா அண்டைவெட்டினார். ஜோதி ஏர்  ஓட்டினான். கலப்பையில் கைவைத்திருப்பது போலவே தூங்கிக்கொண்டே நடந்தான். கலப்பை மாட்டின் காலில் பட்டு தடுமாறிவிழுந்தது. சத்தம் கேட்டு திடுக்கிட்டு கலப்பையை பிடித்து ஓட்டினான். "டேய் தூங்க்கினே ஏர் ஓட்டுரியா" என்ற குரல் கேட்பதுபோல் உணர்ந்து திடுக்கிட்டான். "ஜோதி எவ்ளோ நேரம் ஒக்காந்திருப்பே" என்று மகா அழைத்தான் அதன் பிறகு எழுந்து வந்தான்.

கறவேட்டி  கட்டிய சாரங்கனோடு இன்னும் இரண்டுபேர் வந்தார்கள். சாரங்கன் ஜோதியோடு நான்காவது வரை படித்தவன். ஜோதி நான்காம் வகுப்போடு நின்றுவிட்டான். சாரங்கன் மேலும் அய்ந்து வகுப்புக்கடந்து மாற்றுச்சான்றிதழ் வாங்கிவிட்டான். தீவிர விவசாயியாக மாறிவிட்டான். அவன் அப்பா ஊர் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். முறையாக  பிள்ளைகளை ஒவ்வொரு திராவிடக்கட்சிகளிலும் நுழைத்து வளர்த்து விட்டார். சாரங்கன் வயது குறைவாக இருந்ததால் விவசாயம் பார்த்தான். நல்ல வாலிபத்தில் கலியாணம் நடந்தது. கலியாணம் முடியும்வரை அரசியல் மீட்டிங்கோ, கட்சியின் உறிப்பினராகவோ இருந்தவன் இல்லை. மாமனாரும் அரசியலில்  முகியமான நபர்தான். குறுகிய  நாளுக்குள் ஊராட்சி மன்றத் தலைவராய் இன்று மினிஸ்டர் ஒயிட்டில் வந்து நிற்கின்றான். 2005- 2006களின் தொடக்கத்தில்தான் கம்பெனியாளர்கள் எனக்கு இரநூறு  ஏக்கர் எனக்கு முந்நூறு ஏக்கர் முடிச்சிக்கொடு என்று பெட்டிப்பெட்டியான பணத்தை அட்வான்ஸாக கொடுத்தார்களாம். அந்த வியாபாரத்தின் தொடக்கமாக ஜோதியிடம் வந்தார்கள். தனக்கு சாதகமான இருவர் எதிரில் இருக்கும்போது ஒருவரை முகியப்படுத்தினால். தன் வேலை பின்னடைவு ஏற்பட வாய்புள்ளது என்று எண்ணியவன் "இன்னா மகா, மாசிலாமணி, ஜோதி இன்னா சொல்றாரு" என்று சாரங்கன் கேட்டதும், சரியான முடிவு கிடைக்கவில்லை என்பது போல் அமைதியாய் இருந்தார்கள். சாரங்கனே பேசினான். "ஜோதி சுத்து வட்டாரத்துல எல்லா ஊர்லயும் ஆளுங்க போய் பேசிக்கிட்டே இருக்காங்க. உன் கழனிப்பக்கத்தில எல்லா கழனிக்கும் அட்வான்ஸ் குடுத்தாச்சி பணம் இப்போ அப்போனு இழுப்பறிலாம் கிடையாது. பேசனுமா அட்வான்ஸ் புடுச்சிக்கோ, ஒரு வாரத்தில மொத்தப்பணமும் செட்டில். இப்படித்தான் போகுது. அதனால டக்குனு சொல்லு,"

இடையில் குறுகிட்ட சந்தானம் "ஜோதி கம்பெனிக்காரனுக்கு தேவையான நெலம் கெடைச்சிட்டா. அதுக்கப்புறம் இவ்ளோ வெலலாம் போகுமானு சதேகம்தான். இது தங்களுக்கு சாதகமானா  பேச்சி என்பதில் ஜோதியைத் தவிர்த்து சந்தோசப்பட்டார்கள்.

"அதுக்கு இல்லை தலைவரே எனக்கு இருக்கிறதே இந்த ஒரு ஏக்கர் அஞ்சி செண்டு  நெலம் மட்டும்தான். இத வித்திட்டா எனக்கும் இந்த ஊருக்கும் சம்பந்தமில்லாம பூடுமே அதான் கஷ்ட்டமா இருக்குது."

"இன்னா ஜோதி, அப்பிடிசொல்லிட்டே. நமெல்லாம் அப்பிடியா பழகுறோம் தாயா, புள்ளயா அண்ணந்தம்பியாயில்ல பழகுறோம் சம்மந்தமில்லாம போயிடுமா?" என்ற சாரங்கனின் வார்த்தை ஜோதியின் மனசை திசைதிருப்பியது. சரங்கன் சொன்னதில் உச்சிக்குளிர்ந்து விட்ட மாசிலாமணி "தலைவரே அவன் இப்படித்தான் பேசிங்கெடுப்பான் அட்வான்ஸ் குடு " என்றான். 

"ஏம்பா அவசரப்படுறே, செண்டு இன்னா வெலனுலாம் சொல்லிட்டியா" என்றான் மகா. சாரங்கன் கூட இருந்தவன் "இவருக்குமட்டும் இன்னா கொறைச்சா குடுக்கப்போகிறோம், அதேவெலதான். செண்டு மூவாயிரம். "என்பதோடு மொத்த நிலத்தையும் கணக்கு செய்து. மொத்த அமோண்டை சொன்னான். மகா, மாசிலாமணியும் இவ்ளோ பணமா என வாயைப் பிளந்தார்கள். கிரமத்தில் இதுவரை செண்டு இருநூற்றி அய்ம்பது, அதிகபட்ச்சமாக முன்னுற்றி அய்ம்பதுதான். புழக்கத்தில் இருந்தது. ஜோதியை செர்ந்தவர்கள் ஒரு சிலர் நான்கைந்து எருமைமாடுகளை வளர்த்து பால் ஊற்றினர் மற்றும் நகரத்தின் வசதியான நில முதலாளிகளின் நிலங்களை தாங்கள் விளையச்செய்ய மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் விளைச்சலில் பெற்றுக்கொண்டனர். அதன் மூலம் பெற்றலாபத்தில் இரண்டு ,மூன்று அய்ந்து என்று செண்டு கணக்கில் நிலங்களை தங்களுக்கு சொந்தமாக்கினர். அப்படி சேர்த்ததுதான் ஜோதியின் நிலமும். தற்போது அன்னிய முதலீடுகளை அங்கிகரித்தவுடன் கடைகோடி மூலையின் இடுக்கில் இருக்கும் கிராமத்தின் கை மண் கூட விலை அதிர்ச்சியைத் தருகின்றவை என்பதை மகா, மாசிலாமணி, ஜோதியும் அறியவில்லை.  கோடாலி விழுந்த குளத்தில் தேவதை எழுந்து செல்வங்களை கம்பெனி மூலமாக வாரி வழங்குகிறார்கள் என்று நினைத்தனர். ஜோதி இதுவரை ஒரு ஆயிரத்தை மொத்தமக பார்த்ததில்லை. இருந்தாலும் இவ்வளவு பணத்தை கண்டு அவன் மனம் சந்தோசப்பட்டது  போலவும் தெரியவில்லை. பணத்தை மடியில் வைத்து கட்டிக்கொண்டான். வியாபாரம் முடிந்துவிட்டாதால் எல்லோரும் காரை நோக்கிச்சென்றார்கள். இப்போது மகா, மாசிலாமணியின் நடை முந்திச்சென்றது. 

ஜோதி பின்பக்கம் பார்த்தான். ஜோதி களம் செதுக்கிக் கொண்டிருந்தான். பையை தோளில் போட்டபடி பள்ளியிலிருந்து ஜோதியின் மகன் வரப்பின் மீது ஓடிவந்தான். அசைந்தாடிக் கொண்டிருந்த விளைச்சளிலிருந்து குருவிகள் கத்திக்கொண்டு பறந்தது. "அப்பா நம்ம வீட்டில குருவிங்களுக்கு நெல்லு கட்டிவெக்கப்போறேன். கதிரு கீச்சிக்குடுப்பா" என்றான் ராஜா 

"பள்ளிக்கோடம் உட்டாங்களா, சரி சரி போய் கதிரு கீச்சிக்கோ" என்று சொன்னதும் குதித்து குதித்து ஓடிவந்து  விளைச்சளில் முற்றிய கதிராய் பாலின் ஈரம் காயாமல் இருந்ததை கிழித்துச்சேர்த்தான். தன் கையளவுக்கு அடங்கும்படியாய் கதிர் இருந்தது. பயை எடுத்துக்கொண்டு ஜோதிக்கு கதிர்களைக்காட்டி "அப்பா நான் வரேன்" என்று மீண்டும் ஓடிடான். ராஜா கதிர்களை தூக்கி ஆட்டியபோது எதோ தேவதையின் காதில் ஆடும் தங்க ஆபரணங்கள்போல் தெரிந்தது. ஜோதி களம் செதுக்குவதை விட்டு நிமிர்ந்து கையசைத்து டாட்டா காண்பித்தான். முன்னாடி சென்ற சாரங்கன் "இன்னா ஜோதி யாருக்கு டாட்டா காண்பிக்கிற" 


"ஒ..ஒ..ஒன்னுமில்ல தலைவரே"

காரின் ஓட்டுநர் கண்ணாடியை துடைத்துக்கொண்டிருந்தார். முன் சீட்டுக்கு மேலே பன்னீர் திராட்சை நேர்த்தியாக தொங்கியது. ரப்பரில் இருந்தது. கட்சி வாரிசுகளின் போட்டோக்கள் பேதமில்லாமல் பளிச்சென்று பார்வையில் படும்படியாக இருந்தது. சாரங்கனைச் சேர்ந்தவர்கள் முன்சீட்டிலும் ,ஜோதியைச் சேர்ந்தவர்கள் பின் சீட்டிலும் உட்கார்ந்தார்கள். சந்தானம் வெள்ளைத்தாளில் அக்ரிமெண்ட் எழுதினான். பின் சீட்டுக்குச்சென்றது. மாசிலாமணி மகாவை படிக்கச்சொன்னான். மகா தன் பங்கை பதிவு செய்ய கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான். தனக்கு படிக்கத் தெரிந்திருப்பது பற்றி தானே பெருமைப்பட்டான். அதை நிருபிக்கும் விதமாக சத்தமாகப்படித்தான். தனக்கு படிக்கத்தெரியவில்லை என்றாலும் தான் மற்றொன்றில் திறமைசாலி என்பதை காட்டும்விதமாக மகா படித்து முடித்ததும் "இம் குடு ஜோதி கையெழுத்து போட்டு குடு நாங்க சாட்சி போடுறோம்" என்றான். பின்சீட்டில் இருந்தவர்கள்.இறங்கினார்கள். கையெழுத் தான பேப்பர் ஒரு நோட்டில் வைத்து சாரங்கன் தூக்கி பின் சீட்டில் போட்டான். நெளிந்து வளைந்த ஜோதியின் கையெழுத்து வெளிதெரிந்தது. 
அதையே உற்றுப்பார்த்தான். கழனியில் கூழ் குண்டானில் ஏடாய் இருந்ததை எடுத்துவிட்டு அதில் வெறும் விரலால் ஜோதி என்று எழுதினான். அவன் அம்மா எழுத்தைப் பார்த்து  'தன் பிள்ளை என்னமா படிக்குது' என்று பெருமை பட்டாள். 
 ஜோதிக்கு கட்டியாகப்போட்டு கருவாட்டுக்குழம்பு ஊற்றினாள். ஜோதியின் அப்பாவுக்கு கூழ் கரைத்து ஊற்றினாள். மூவரும் வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். அந்த காட்சிகள் மறையவேயில்லை. கார் கதவை ஜோதி கையில் பிடித்திருந்தான். கார் ஸ்டார்ட்டானது. ஓட்டுநர் கதவு சாத்துங்க என்றபோது பின் சீட்டில் அம்மா அப்பாவும் உட்கார்திருந்தார்கள். கார் வேகமெடுத்தது. ஜோதி திடுக்கிட்டு சற்று ஓட்டமெடுத்து நின்றான்.

ஜோதி இந்த பணத்தவெச்சி உன் பையனை பதினொன்னாவது டவுனுல நல்ல பள்ளிக்கூடமா சேத்துடுபா அப்புறம் எங்களுக்கும் கமிஷன் இதிலேயே குடுத்துடுபா" என்று கூடவே பேசிக்கொண்டு வந்தார்கள். இரவின் சத்தங்கள் காற்றைவிட மென்மையானது.ஆனால் இருட்டைவிட கனமானதாக இருந்தது. சிறிய கூரைவீட்டின் குறுக்கில் நான்கு அடிஉயரம் கொண்ட குறுகுச்சுவர் இருந்தது. அவற்றின் மேல் சிம்னி விளக்கு எரிந்தது. கூரைக்குகீழ் பரவிக் கிடந்த மங்கிய வெளிச்சம் மூங்கில்களை கூரையின் நரம்புபோல் காட்டியது. கோரைப்பாயில் இரு முதுகுகள் ஒட்டியபடி  ஒடுங்கிப்படுத் திருந்தார்கள்.
"நாம வாழறதுக்கு அதவுட்டா இன்னா வழி இருக்கிது. அதயும் வித்தாச்சி இனிமே எப்படி வாழப்போறோம்" என்றாள் மஞ்சுளா.

"கவலப்படாதே நம்ம பையன் நல்ல மார்க் எடுத்துக்கிறான் டவுனுலயே பெரிய ஸ்கூலாம் அங்கியே பாம் வாங்கியாந்துட்டான். பணம் செலவானாலும் பரவாயில்ல அந்த ஸ்கூல்ல சேத்துட்டா பையன் நல்ல நெலமைக்கு வந்துடுவான். அங்க படிச்ச ஆளுங்களாம் பெரியப்பெரிய ஆளுகளாத்தான் இருக்காங்களாம். நம்ம பையனும் பெரியாளா வந்துடுவான். அதுக்கப்புறம் நமக்கு ஒரு வேள  தண்ணியாவது  ஊத்தமாட்டானா" 

"அய்ய புள்ளய இன்னா அப்பிடி சொல்றே. நாமோ அப்பிடியா அவனை வளத்துக்கிறோம் மஞ்சுளா திரும்பினாள். ஜோதியின் முதுகில் இடைவெளி இல்லாமல் சதைகள் அழுந்தின. அவனும் திரும்பினான் .விளக்கு அனைந்தது. 

தலைமையாசிரியருக்கு ஒரு டேபில் சேர் இருந்தால் கூட பள்ளியை நிர்வகிக்கமுடியும் என்பது வருகிற பெற்றோர்களுக்கு எங்கே தெரிகிறது. சிம்மாசனம் போன்ற சேரையும் குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறையையும் பார்த்தவுடன் மிரண்டு போகிற அப்பாவிமக்கள் சேர்க்கை நாடக கூட்டத்தில் யார் யார் வாய் எவ்வளவு கேட்பினும் கொடுத்துவிட்டு போகிறார்கள். ராஜா பாம் வாங்க பள்ளிக்கு வந்திருந்தாலும் தலைமையாசிரியர் அறைக்கு வருவது இதுதான் முதல் முறை ஜோதியும் ராஜாவும். அறைக்கு முன்னால் நின்றார்கள். கதவை அடிக்கடி திறந்து மூடும்போது. செத்த பிணத்திலிருந்து  வருவது  போல் ஒரு வாடை வந்தது. அறை தெளிவில்லாமல் புகைமூட்டமாய் இருந்தது. வருகிற பெற்றோரின் தோற்றத்தின் அடிப்படையில் மரியாதை கூடியும் குறைந்தும், சுத்தமாக பிடிங்கியும் விட்டுக்கொடுத்தும்  சேர்க்கை நடக்கிறது என்பதை ஜோதி உணர்ந்தான். 

"அய்யா கொஞ்ஜம் கொறச்சிகுங்கோ" என்று தொடங்கும் முன்னே  "தோபாருயா கேக்குறத கட்டிடு போ" என்றவர் "வெளியில கூட்டத்த பார்த்தே இல்ல பேசாம கட்டிட்டு கெளம்பு" என்றது. சேர்க்கைக்குழு ஒருவேளை நம் மார்க்கை சரியாக கவனிக்காமல் கேட்கிறார்களா என்று சந்தேகப்பட்ட ராஜா "சார் நானுத்தி இருபத்திநாலு  மார்க்சார்" என்று சற்று பெருமையாகவும் சொன்னான். சுயமரியாதைக்கு கலங்கம் ஏற்பட்டு விட்டதைபோல் மையத்திலிருந்தவர் சற்று கோபமாக "டே எங்க பையன் 155 பேர் நாணுத்தி முப்பதுக்கு மேலடா. அதுவும் உங்க ஸ்கூல்ல நானுத்தி அய்ம்பதுன்னா எங்க ஸ்கூலுக்கு இரநூத்தி அய்ம்பதுதான் அதன் மதிப்பு. பணம் கட்டுனா கட்டு இல்லனா கெளம்பு காத்து வரட்டும். அவன் T.Cய குடுத்துடுங்க சார்" என்றார். பையன் சற்று அதிர்ந்து போனான். ஜோதிக்கு கனவெல்லாம் நிறைவேறாம போயிடுமா என்று பதட்டப்பட்டான். ராஜா காத்து வரட்டும் என்ற உபதேசம்  நிறைய செய்தித்தாள்களில் படித்த நாபகம் வந்துக்கொண்டிருந்தது. ஜோதி தன் பாக்கட்டை காலியாக்கிக்கொள்ள கெஞ்சினான். உள்ளறைக்கு சென்று திரும்பியபோது ஊருக்கு திரும்ப பஸ்பேர்மட்டும் இருக்கிறதா என்று பாக்கட்டை தொட்டுப்பார்த்தான் ஜோதி.  "தலைவரே கும்புடப்போன தெய்வம் போல வரீங்க"


"இன்னா, ரிஜிஸ்டர் வர புதன் கிழமைதான். பணமெதுனா வேனுமா ஜோதி. ரிஜிஸ்டர் அன்னிக்கி உன்பொண்டாட்டி, பையன் எல்லாம் கூட்டியாந்துடு."

"அதெல்லாம் இருக்கட்டுந்தலைவரே பையன இங்கதான் டவுனுல பதினொன்னாவது சேத்துட்டேன். டெய்லி இங்க வந்துபோக கஷ்ட்டமா இருக்கும்னு எங்கவீட்லலாம் சொல்லுச்சி, உங்களாண்ட இருக்கிற பணத்துக்கு இங்கியே ஒரு எடம் பாத்து வாங்கிக்குடுத்துடு. நான் ஓலக்கூரக்கூட போட்டுக்கிறேன்" 

"அப்பிடியா செரி செரி இதெல்லாம் முடியட்டும். நம்ம பசங்க இருக்கிறாங்க ஒடனே முடிச்சி குடுக்கச்சொல்றேன். வரட்டுமா" சாரங்கன் எப்படியும் முடித்துவிடுவார் இனிமே நாமலும் இந்த டவுனுலதான் பிழைப்பு தேடனும் போல என்று தனக்குள் நினைத்தான். 

பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு, 'தள்ளிவிடச்சொல்லி கிளம்பும் வண்டியைப்போல்' காலையில் அங்கங்க நிற்பதும் லேசாக நகருவதுமாய் இருந்தார்கள் மனிதர்கள். மஞ்சுளாவும் ஜோதியும் புங்கைமரக்குளிர்ச்சியில் தஞ்ஜமடைந்திருந்தார்கள். நேரம் கழித்து சாரங்கன் காரில் வந்தான் .ஜோதி காரைப்பார்த்ததும்  ஊசலாடிய உயிர் சுகம்பெற்றதான சந்தோசத்துடன் எழுந்துபோனான். சாரங்கன் பார்த்தான் இவன் நின்ற இடத்திற்கே வந்தான். தன் கணவனை ஏமாற்றுவதாக நினைக்கக்கூடாது என்பதற்காகவே மஞ்சுளாவிடம் சொன்னான். "ஏம்மா நான் டவுனுப்புள்ளா விசாரிச்சிட்டேன் எங்கியும் நாம  சொல்ரரேட்டுக்கு ஒரு எடமும் கெடைக்கல உங்களுக்குங்கிறதால நம்ம கட்சிக்காரப்பையனாண்ட ஒரு வீடு இருக்கிது. அவன் மார்க்கெட் பக்கமா புதுசா வீடூ கட்டிக்கினு போயிட்டான். இந்த வீடு வித்துடுறான். அது கோயில் எடம், ஆனா இருபது வருஷத்துக்கு மேல நெறைய  பேரு மெத்த, மாடிலாம் கட்டிங்கிறாங்கோ. யாரும் ஒன்னும் செய்யமுடியாது. அது உங்களுக்கு சரிபடுமானு பாருங்க. சொன்னிங்கன்னா உங்களுக்கு சேரவேண்டிய பணத்திலயே வீட்டுக்காரனை பத்திரமெல்லாம் உங்கபேருக்கு எழுதிகுடுக்கச் சொல்றேன் யோசனைப்பண்ணி சொல்லுங்க நானு ஆபீஸ் உள்ள போய்வரேன்" என்று கார் நின்ற பக்கமாக போனான் சாரங்கன்.

"இன்னா கோயில் எடம்னு சொல்றார். பட்டா கெடையாது. எதுனா பிரச்சனை வரப்போகுது."

"வேற இன்னா பண்றது. அங்க இருக்கிற அவ்ளோ பேருக்கு வராத பிரச்சைனையா நமக்கு வரப்போகுது. பையன் நல்லா படிக்கனும்னா வந்துதான் ஆகனும்"  என்று தீர்மானமாய் இருந்தான் ஜோதி.

E.B காரன் வந்து அட்டையைக்கேட்ட போதுதான் இது இரண்டாவது கணக்கெடுப்பு என்பதை கணக்கிட்டாள் மஞ்சுளா. டவுனுக்கு நேற்று காலையில்தான் வந்ததுபோல நினைத்தாள். தவிற்கக்கூடாத கடமையைப் போல் அவசர அவசரமாய் தண்ணீர் தெளித்து இருவேளையும் வாசலைப் பெருக்குவது நகரத்தில் வசிப்பவர்களுக்கு வித்தியாசமாகத்தான் இருந்தது. பள்ளியிலிருந்து வந்த ராஜா பையை தூக்கிப்போட்டான். எப்பவும் அவன் அப்படி நடந்துகொண்டதில்லை. புத்தகங்களுக்கு மரியாதைகொடுக்க வேண்டும் அவன் அப்பா சொல்லுவார். அவனேக்கூட புத்தகங்களை தேவையில்லாமல் மடிப்பதோ கிறுக்குவதோ செய்யமாட்டான். மஞ்சுளா வழக்கமான இருப்பிடத்தில் பை இல்லாமல் இருப்பதைக்கண்டாள். எடுத்து ஓரமாகவைத்தாள். சமையல் செய்வதற்காக ஆய்த்தமானாள்.

"அம்மா அந்த ஸ்கூல் புடிக்கவேயில்லமா நெறைய கண்டிசன் போடுறாங்கமா முடி ஒட்ட வெட்டனுமாம், மூனு சட்டவச்சிக்கினு பேஜ்சி தைக்கனுமாம், பெல்ட், செருப்பு இல்லாம வரக்கூடாதாம். சின்ன தவறுக்கு கூட அசிங்கமான வார்த்தைகளில் திட்டுறாங்க. எனக்கு எரநூறு குடும்மா அப்பத்தான் நான் பள்ளிக்கோடம் போகமுடியும்." கத்திரிக்காய் நறுக்கி தண்ணிரில் போட்டிருந்தவள் பையனிடம் வந்தாள். "எப்பா இன்னாடா இப்படி சொல்றே. கிராமத்தில நெலத்த வித்ததுக்கும் இந்த வீட்ட வாங்கினதுக்கும் சரியாப்போச்சினு கையில இரண்டாயிரம் குடுத்தான். அதவச்சி  இதுவரைக்கும் தள்ளிம் போச்சி திடிர்னு எரநூறு குடுனா எங்கடா போறது. உங்கப்பா போற கொளுத்து வேலைகூட ஒரு நாள் கெடைக்குது ஒம்பது நாளைக்கு இல்லைன்றாரு. நான் என்ன செய்யிறது".  ராஜா எதுவும் பேசவில்லை அமைதியாய் இருந்தான். புத்தகப்பையை தன்னிடம் இழுத்தான். எழுத ஆரம்பித்தான். கண்ணிர் சொட்டு நோட்டில் விழுந்தது. எதிர்ப்பில்லாத மெளனம் எதிர்மறையானவரை பேசத்தூண்டிக்கொண்டே இருக்கும்போல. மஞ்சுளா பக்கத்தில் உட்கார்ந்தள். "ராஜா ரெண்டு நாளைக்கு போபா. நானு பக்கத்து தெருவுல மிட்டாய் கடைக்கு வேலைக்கு கூப்பிட்டுருக்காங்க அங்க அட்வான்ஸாவது கேட்டுப்பாக்கிறேன். "சொன்னதும் சமாளிப்பத்தைத் தவிற வழியில்லை காலையில் சற்று சீக்கிரமாகச் சென்றுவிட்டால் முன்னாடியே கிளாசில் உட்கார்ந்துவிடலாம் என்று நினைத்தான். அப்படியே அவசரமாக பள்ளியில் நுழைந்தான். காவலர் கூண்டுக்கு பக்கத்தில் நின்றிருந்த ஆசிரியர் திடீரென திரும்பினார் "டேய்...டேய் நில்லு. நேத்தே சொன்னேன் இல்ல முடிவெட்டனும் எல்லாம் மாட்டிக்கினு வரனும்னு. உனக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கும். அப்பிடியே ஓரமா நில்லு. ஹெட்மாஸ்டராண்ட போனாத்தான் நீயெல்லாம் உருப்படுவே." தலையை குனிந்து நின்றவன் கண்களால் மழைப்பொழிந்தான்.


"டே... ஓடு... ஓடு..." என்று பையன்களை விரட்டினார். இவர் எதிர்ப்பார்க்கின்ற குறைபாடு நிறைந்த இன்னும் இருவர் வந்தார்கள். சற்று நிறுத்தி பிறகு 'ஓடு ' என்று துரத்திவிட்டார். கேஸ் கிடைக்காதபோது பிளாட்பாரத்தில் தூங்கு வோரை இழுத்துச்செல்லும்  போலீஸாக மாறி தற்போது இவன் போதுமென்று ராஜாவை இழுத்துச்சென்றார். "நான் அவ்ளோசொல்லி அனுப்பியும் நீ அப்பிடியே வரனா நாங்க என்ன கேனையங்களா. போ...போ போடா" தலைமையாசிரியர் அறைக்கு கிட்டவந்தபோதுதான் சத்தம் அதிகமானது. உள்ளே தள்ளினார். பையன் "சார்...சார்..."என்று சொன்னதுடன் ஆசிரியரை பரிதாபமாகப்பார்த்தான். அறையில் நுழைந்தான். ஆசிரியர் மைய ஆசிரியரைப்பார்த்தார். எதுவும் பேசவில்லை. "இதெல்லாம் உருப்படாதுங்க சார். அது மூஞ்சியபாத்தாவே படிக்கிறாமாதிரி தெரியலே. ரோட்டுல பொறுக்குறாமாதிரி இருக்குது. உங்கம்மா சோத்த மட்டும்  போட்டு தொரத்திடுவாங்களா புள்ளையப்பத்தி கவலையில்லையா. இதுங்கள்லாம் படிக்காது. T.Cய குடுத்து துரத்திடனும். உங்கப்பாவ கூட்டிக்கினுதான் வரனும் இல்லனா வராத" எந்த சலனமும் இல்லாமல் சொன்னார்.


ராஜா கஷ்டப்பட்டான். அம்மாவை பற்றி சொன்னபோது கோபம் வந்தது. இப்போது அழவில்லை துடைத்துக்கொண்டான். வீட்டிற்கு போனபோது பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டில் விசாரித்தான். "மிட்டாய் கடைக்கு வேலைக்கு போறேன்னாங்கபா' என்றதுடன் சரி. அவன் முதுகில் பேக்கின் பாரம் அழுத்தியது. இறக்கும்போது தான் பாரம் அதிகமாய் தெரிகிறது. கிராமத்தில் வீட்டுச்சாவியை கதவின் பக்கத்தில் வைப்பார்கள். அதைபோல இங்கு வைத்திருக்கிறார்களா என்று பார்த்தான். அவன் கனிப்பு சரியாக இருந்தது. பையை கழட்டி எறிந்தான் .கதவு சாத்திவிட்டு தரையில் படுத்துவிட்டான். மஞ்சுளா நடந்துவரும் போது அவள் நிழல் அவள் காலடிக்கு கீழாகவே வந்தது. வீட்டின் கதவில் பூட்டு இல்லாமல் போக திடுக்கிட்டாள். நடை சற்று வேகமானது. மனசு பல வாதங்களை எழுப்பியது. கதவை திறந்தாள். இன்னும் திடுக்கிட்டாள். "டேய்.. ராஜா இன்னாடா பள்ளிகோடம்  போகலியா"  அவன் தூங்கி விட்டிருந்தான். அவள் மீண்டும் தட்டி எழுப்பினாள். முகத்தை திருப்பிகொண்டான். கண்களில் கண்ணிர் காரைத் தரையில் விழுந்தது. தன்னால் முடிந்தளவு தரையை ஈரமாக்கியது. அவள் கீழே உட்கார்ந்தாள்.

"ராஜா இன்னாடா'எழுந்து உட்கார்ந்தான். " அந்த ஸ்கூலே வேனாமா. நான் வேற ஸ்கூல்ல சேர்ந்துக்கிறேன். அங்கப்படிச்சாலும் நான் பாஸ் பண்ணிடு வேன்"


"யப்பா சோறு  போடுற நெலத்தக்கூட உன் படிப்புக்காக உட்டுட்டு வந்துட்டமேடா. இப்ப, இப்பிடி சொல்ரியே. எப்பிடிப்பா. வத்தியாரு எதுனா சொன்னாங்களா, நான் ஒன்னா சொல்லி உட்டுட்டு வரேன் வாபா. இந்த டவுனுலயே அந்தமாதிரி பள்ளிக்கோடம் கெடையாதாம்பா"


"அம்மா உனக்கு தெரியாதும்மா எங்க கிளாஸ்சில  பசங்களே யாரோ வாங்கி வச்ச பேருல, இவுனுங்க குளிரு காய்ராங்கனு பேசிக்கிறாங்கம்மா" மஞ்சுளா எதுவும் பேசவில்லை அழ ஆரம்பித்தாள். பிறகு கதவு தாளிட்டு உட்கார்ந்து "அந்தாளு வந்தா நான் இன்னா பதில் சொல்லுவேன் தெனமும் கல்லயும் மண்ணயும் சொமக்கிறானே பாக்கிறவங்களுக்கு கேவலமாப்பூடுமே, ஊர உட்டே போனா அவன் புள்ள ஓடியாந்துடுச்சினு பேசுவாங்களே" என்று அழுதுகொண்டே மாரை பிடித்துக் கொண்டு தரையில் சாய்ந்தாள். பையன் "அம்மா.. அம்மா.. எந்திரிம்மா. இன்னாச்சிம்மா. எந்திரிமா நான் போறேன்மா. அந்தப்பள்ளிகோடமே போறேன்மா." மஞ்சுளாவை தட்டியும் முகத்தை அழுத்தியும் சொன்னான். இதுவரை தண்ணிர் தெளிக்க வேண்டும், கொடுக்கவேண்டும் என்று தோன்றவில்லை. மஞ்சுளா லேசாக கண்விழித்து. கொஞ்ஜம் தண்ணிக்குடுபா என்று கேட்டதும் சொம்பு எங்க டம்ளர் எங்கனு தேடி தண்ணிர் மொண்டு வந்து குடிக்கக் கொடுத்தான். குடித்தப்பிறகு முகத்தில் லேசாக தண்ணிர்போட்டு கழுவினான். சற்று நேரத்திற்கு பிறகு உட்கார்ந்தாள். பையன் எழுந்து பையை எடுத்துக்கொண்டு கிளம்பினான். மஞ்சுளாவும் தலைவாரி முகத்தை கழுவிக்கொண்டு கிளம்பினாள். பள்ளியின் கேட்டை பார்த்தபிறகுதான். நம்ம சொன்னது சரியாத்தான் இருக்குமோ என்று பிரமித்தாள். கண்ணாடிக்கதவோரம் நிறுத்தப்பட்டாள் உள்ளே யாரோ பேசிவிட்டுவெளியே வந்தபோது சில்லென்ற காற்று மஞ்சுளாவின் முகத்தில் அப்பியது. அது வெளியில் சுவாசிக்கும் காற்றைப்போல் இல்லை. அறையில் யாரும் இல்லாதபோதே உள்ளே அனுமதித்தார்கள். ராஜா மஞ்சுளாவுக்கு பின்னாக வந்து நின்றான். அவன் சுவாசித்த காற்றின் வாசம் பிடிக்கவில்லை. இரண்டு முறை யாருக்கும் தெரியாமல் மூக்கை தேத்துக்கொண்டான்.


"ஏம்மா அவனை பள்ளிக்கூடம் அனுப்புறியா , காயிலாங்கடை குப்பபொறுக்க அனுப்புறியா. அதுந்தலையும்,  அதுமூஞ்சியும் சோத்த மட்டும்  ஆக்கி, ஆக்கி கொட்டிட்டா போதுமா. நீ இருக்கிறாபோல தான் புள்ளியும் வெச்சிங்கீற போமா. வெளிய போமா. இவன்லாம் இந்த பள்ளிகோடத்துக்கு லாய்க்கு இல்ல.  கூட்டிக்கினு போமா" மஞ்சுளா அழுதாள்."சார் இனிமே ஒழுங்கா அனுப்புறேன் சார். இந்த ஒரு முறை மண்ணிச்சிடுங்கசார்." என்று தடாலென்று காலில் விழுந்துவிட்டாள்.

"ஏம்மா பொம்பளைய அனுப்பிட்டு உங்க ஊட்டுக்காரு எங்கப்போயிட்டாரு. போயி அவுற அனுப்புமா. அவுராண்டசொல்லி அனுப்புறோம் போமா"  அம்மா காலில் விழுந்ததை பார்த்து மல மல வென்று அழுதுவிட்டான். தாமதப்படுத்தாமல் மஞ்சுளாவை தூக்கினான். ராஜாவுக்கு அந்த அறை புகை மண்டிக்கிடப்பது போன்று  தோன்றியது. ஏமாற்றத்துடன் கதவைத்திறந்தான். மஞ்சுளா வெளியே வரும் வரை கதவைப்பிடித்திருதான். மஞ்சுளா வெளியே வருவதற்குள். நல்ல வளர்த்தியானவள், பெரிய முலைகளைக்கொண்ட பெண்  பையனோடு உள்ளே நுழைந்தாள். "வாங்க வாங்க நம்ம 'பி.டி.ஏ'  தலைவர் சொன்னாரே அவுங்கதான நீங்க ஒக்காருங்க. பையனை கிளாசுக்கு அனுப்பிடுங்க. அடிக்கடி  வாங்க. எப்படி படிக்கிறானுவிசாரிங்க" அவள் கலையாத புடவையின் மடிப்பு  பக்க முலையை வெளியரங்கமாய் காட்டியிருந்தது. 

ராஜா அம்மாவை வளியே அழைத்துவந்தான். கேட்டுக்கு வெளியே விட்டு "அம்மா அங்கே கடையாண்டையே  இரு வரேன்" கண்னாடி அறையில் அவள் இருந்தாள். இவன் நேராக உள்ளே நுழைந்து காரித்துப்பினான். மீசையிலும் முகத்திலும் எச்சில் அப்பிக்கொண்டது. அவர் கைத்துண்டு எந்த பாக்கெட்டில் இருக்கிறது என்று தேடுவதற்குள் வேகமாக வெளியே  வந்து ஓடினான்.

"இன்னாடா எங்க போனே". என்றாள் மஞ்சுளா அவமானங்களையும் மீறி.

"ஏண்டா வெள்ளக்காரன்  "தோள உறிச்சி போட்டுட்டிங்கனு கேட்டு வந்தேன். நீ கவலப்படாதம்மா நான் எப்பிடியாவது படிச்சி  பாஸ் பண்ணிடுவேன். தன் வீட்டிற்கு முன் ஒரு ஜீப் நின்றிருந்தது. சிலர் வருசையாக நின்றனர். ஒரு அதிகாரி கையெழுத்து வாங்கிக்கொண்டு எதையோ கொடுத்தார். நான்கு போலிஸ்  முன்னும் பின்னுமாக உட்கார்ந் திருந்தனர். போலீஸ் கைகளில் கணத்த தடியிருந்தது. மஞ்சுளாவும்  ராஜாயும் எதோ நடக்கிறது என்று யூகித்து வேகமாவந்தார்கள். ஜோதியை தொடுகிற தூரத்தில் வந்தபோது அவன் கையெழுத்துப் போட்டு பணத்தை வாங்கினான். அவன் சட்டை கிழிந்திருந்தது. அவர்களைபார்த்தும். ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்குப்போனான். பணத்தை தூக்கி மூலையில் அடித்தான். மஞ்சுளா "இன்னாச்சி" என்றாள் பதட்டதுடன் மீண்டும்  "சட்டை கிழிஞ்சியிருக்குது  இன்னாச்சி"

"எல்லாம் போச்சி மஞ்சு எல்லாம் போச்சி கட்சித்தலைவர்து நூற்றாண்டு நெனைவு நாள் வருதாம், அவர் நெனைவா பூங்கா, கோயில், கொளம் ,ரோடுனு எல்லாம் புதுசா போடப்போறாங்களாம் அதனால கோயில் சுத்தியிருக்கிற எடத்த எல்லாம் இடிக்கப்போறாங்கங்களாம் அதுக்கு பதிலா வேற எடத்தில எடம் தறாங்களாம். ஒடனே அதுல போய் வீடுகட்டிக்கனும்னு அய்யாயிரம் குடுத்திருக்கிறாங்க" என்று அழுதான். அதற்குமேல் பேசமுடியவில்லை ஜோதி அழுததைப்பார்த்து மஞ்சுவும் ராஜாவும் பள்ளியின் நடவடிக்கைக்காகவும் சேர்ந்து அழுதார்கள். அவர்களின் அழுகையை நிறுத்தி ஜோதி அழுகையை அடக்கினான். பேச்சை திசைத்திருப்பினான். 'மஞ்சு எதுக்கு சொம்மா அழுற நடக்கிறது நடக்கட்டும்  சிலதெல்லாம் எடுத்து. மூட்டைக்கட்டி வையி நானு நம்ம ஊருவரைக்கும் போயிட்டு வரேன்' என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான் .   
ஜோதி கண்திறந்தபோது புல்லில் முக்கிளை பூ ஒன்று புதிதாக பூத்திருந்தது.



நம்புழுதி
 

   
     

            
                                                                                                

3 comments:

RATHINAKUMAR said...

அன்புள்ள டேனியல் உங்கள் சிறுகதை படித்தேன், எனக்குப் பிடித்திருந்தது, ஈரான் படம் போல இருந்தது.
வாழ்த்துக்கள்.
...தரும.இரத்னகுமார்

பல்லவர்கள் said...

சிறுகதை நன்றாக இருந்ததது.மெய்ப்புத் திருத்துதல் செய்ய வேண்டும்.பத்திகள் சிறியவையாக இருந்தால் படிப்பது எளிது.படங்கள் சேர்க்க வேண்டும்.தொடக்க வர்ணனை தேவையில்லை.அது கதையின் வேகத்தை குறைக்கிறது. மற்றபடி,கதையின் கரு நன்றாக உள்ளது.அடுத்த கதையை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

DANIEL JAMES said...

தோழரே எழுத்து தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி
முதல் பத்தி கதையுடன் மிகவும் தொடர்புடையது
என்றே கறுதுகிறேன்.
நன்றி.