Wednesday, September 22, 2010

கட்டுரை

                                    ஆதிதிராவிடன் சலுகை சாதியல்ல

எங்கள் பாட்டன் பூட்டன் எல்லாம் அவமானங்களையும், பிறருக்கு உழைப்பை வழங்கியுமே தங்கள் வாழ்வை கழித்தார்கள். குத்துபட்ட முருங்கை மரத்தில் கசியும் பிசின்போல்' எப்போதும் கசக்கி பிழிதலையே உணர்ந்தார்கள். அதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்பதில் உறுதிகொண்டு சிலநேரம் சந்தோசம் பலநேரம் கசப்பிலும் காலம் கடத்தினார்கள். மின்சாரம் பாய்ந்த  உடலில் ரத்தக்கடத்தல்  நின்றுவிடுவது போல் மதிப்புக்குரிய முன்னாள் பண்ணையாளர், உயர்சாதி என தங்களை எப்போதும் விளம்பரப்படுத்திக்கொள்ளும் மனிதத்தன்மையில் நம்பிக்கையில்லாத நண்பர்களும் சேர்ந்து புதயலை தோண்டுவதாக எளியவர்களின் உழைப்பை பிழிந்து தங்களுக்கு செல்வம் சேர்த்துக் கொண்டார்கள். இதில் மின்சாரம் பாயாமலே உழைப்பாளியின் ரத்தம் சுண்டிவிட்டது. வாழ்வின்  சுவாரசியத்தை சற்றும் ருசிக்காமல்  கொடூரங்களை சுமந்தே 'பூட்டன்' மறைந்துவிட்டான். வெள்ளைக்காரன் தரிசனத்தால் 'பாட்டன்' கடைசி காலத்தில் சற்று நிம்மதியடைந்தான். அதனாலே அப்பன் பெயர் மாறியது. எறும்பு  தன் இரையை இழுதுச்செல்வதாக  வாழ்வு நகர்ந்தது. பெயர் மாற்றிக்கொண்டதால் வெள்ளைக்காரன் மோட்ச்சம் போகும் வழியை எல்லார்க்கும் காட்டும் பொறுப்பை சிலரிடம் தந்தான். பொறுப்பு, மையம், புள்ளி, மதிப்புடையது, மதிப்பில்லாதது என தன்னைத்தான் கட்டி நிருவனமயமாய் தொடர்கிறது. மாமன், மச்சான் தெரிந்தவர்கள், உண்டியலை எந்த வழியிலேனும் சம்பாதித்து நிறப்புகிறவர்கள், சாதிக்காரன் என்று பொறுப்பை பிரித்துக்கொண்டு அமைப்பைத் தொடர்ந்து  நடத்துகின்றோம்.

எந்த அறிஞர்களாலும்  கண்டுபிடிக்கமுடியாத  ரிப்பேர் ஆகாத ஒரே மெஷின்தான் அந்தக்கால அம்மா. விசேஷ நாட்களில் தேர்ந்த மஞ்சள் கிழங்கை உரசி பூசிய வெளுத்த முகத்தின் அழகும், கிளிமார்க் சிக்காயில் ஊரி கருத்த முடியில் மிச்சமாய் நின்ற வாசமும்,  ஆண்டை வீட்டின் மாட்டுக்கொட்டாயின் சாணத்தில் கரைந்து நாற்றமாய் உருமாறி வெளியேறும் தினந்தோறும்.       

அண்ணன் சமயக்கொள்கையை பரப்புகிற ஆயர் பொறுப்பில் அமர்த்தப்படுகின்றான். பிறகு அவன் சபைமக்களிடம் பேசும்போது. உங்களை ஆளுகிற அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. என்கிற தொனியிலேயே பேசி செயல்படுகிறார். கிராமங்களுக்கு செல்லும்போது கொழுத்தக்கன்றுகள் அளவுக்கு நாட்டுக்கோழிகளை அடிக்கத்தூண்டுகிறார்கள். 'செத்த பொணத்தை பருந்து தின்பதுபோல்' எழை கிராமக் குழந்தைகளை ஏக்கத்தோடு பார்க்கவைத்து தின்கிறார்கள். அரிசி மூட்டைக்கு மேல் சட்டியையும், கிழ் இரண்டு கொம்பு சொருகியது போல் அண்ணனுக்கு உருவம் மாறிவிட்டது. ஆசீர்வாதங்களை பொழிவதற்காக அவரே  கையேந்துகிறார் என்று கடவுள்   மீது பழியைப்போட்டு  வடக்கிலும், தெற்கிலும் வீடும் நஞ்ஜையும் வாங்கிப்போட்டார். அவர் செயல்பாடுகளை விமர்சிக்கும்  யாரையும் பழிவாங்கி ஏப்பம்விடுவார்.

தம்பி,  பள்ளி  படிப்பை  விட்டு  ஷகிலாவின்  படத்தை காலாவதியான திரையரங்கத்தில்
தேடுகிறான். வீட்டில் தந்தைக்கு அடங்கி நடப்பவன்போல் நடந்து. தன் பணியை செய் தாலும்  வஞ்சகமுள்ள எஜமானி வேலையாளை எப்படி பேசுவாளோ அதைபோல் அதைவிட கேவலமாய் தன் தாயை பேசக்கற்றுக்கொண்டான். ஒட்டகம் தொண்டை தண்ணியாக' தந்தை வைத்திருப்பதை    ஏமாறும்போது எந்த மன உறுத்தலும் இல்லாமல் பணப்பையை சுருட்டிவிடுகிறான். மற்றவர்களின் மனநோவுப்பற்றி கவலையில்லை  பொய்களை உண்மைபோல் குரல் உயர்த்தி பேசுகிறான்.

அக்காவும்,தங்கையும் தட்டுத்தடுமாறி படிக்கிறார்கள்.அடுக்குமாடியின் கண்ணாடி சன்னலை உற்று பார்த்துக்கொண்டே வருகிறார்கள். இவர்கள் தலைக்கு எண்ணெய் பூசிக்கொண்டு போவதால் இவளைச்சார்ந்தவளின் தலை எண்ணெயில்லாமல் சருகு போல் பறக்கும் பட்சத்தில் கேலிசெய்கிறார்கள். முன்னணி நடிகையின் நகை அலங்க்கரங் களுக்காக ஏங்குகிறார்கள். இக்காலத்திலும் கிராமத்தில் முல்லுகளை சுள்ளியை அடுப்பில் வைத்து ஊதி ..ஊதி புகையில் மூச்சுமுட்டும். அது வயதானவர்களுக்குதான் என்று ஒதுக்குவதுபோல்   சமூக அக்கறை, அரசியல், இலக்கியம் சார்ந்த எதையும் புறந்தள்ளிவிடுகிறார்கள்.

மாமன், யார் முடங்கினாலும் கண்டுகொள்ளாமல் தான் முன்னேற அதிகாரம் உள்ளவர்களின் உறுப்பை உருவிக்கொண்டே கிடக்கிறார்கள். கிருத்தவ நிறுவனம் தன் மனைவிக்கு புடவைதந்தால் தன் பெயரை மாற்றிக்கொள்கிறார். அரசாங்கம் அடுப்புதரும்போது எச்சறிக்கையாக சலுகை மதத்தை பதிவுசெய்கிறார். தினந்தோறும் பஞ்சு சிகரட்டும், மாமிமுசம், மதுவும்  இல்லாமல்  அவரால் வாழமுடியவில்லை.

பெரியப்பா பிள்ளைகள் பாட்டன் சம்பாதித்த முன்று சென்ட் வீட்டு மனையை  இரண்டு தலைமுறையினர் ஆண்டு,  தற்போது  குடும்ப அட்டையில்  தலைவர்களாய் வர்ணிக் கப்படுகிறவர்கள் நான்கு குடும்பமானபோது அதேமனையில்  பாகம்பிரிக்க அடித்துக் கொள்கிறார்கள். அந்த களேபரங்களில் சகோதரர்களின் ரத்தமும்,  சதையும்  பரிபோகிறது ஆயரிடம் முறையிடும்போது. தன்மேனியை குன்டூசியும் தீண்டாமல் பாதுகாத்து  இயேசுவின் ரத்தமும் சதையும் பெற்றுக்கொள்ள வாருங்கள். எனஅழைக்கிறார்.

நகரங்கடந்து பெண் கொண்டும்  கொடுத்தும் வாழ்கிறார்கள். சூலாயுதங்களில் பக்தி கொண்ட சொந்தக்காறர்கள். வாலிபர்கள் நல்ல ஆடைகளை உடுத்திக்கொள்ள சினிமாவை பார்த்து பழகுகிறார்கள். நல்ல அந்தஸ்த்து நிறைந்த காதலியை தேடி அலைகின்றார்கள். சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள  தன் மானத்தை மறந்து. நாக்கு தரையில் படும்படி குனிந்து விடுகிறார்கள். பஞ்சாயத்து செய்தபிறகு தங்கள் பாகமென்று கட்டாயமாய்  மறைமுகமாக பெற்றுக்கொள்கிறார்கள். தாய், தகப்பன் கஷ்ட்டத்தை பெற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள்  சீக்கிரத்தில் கட்டாயமாக மறந்துவிட,  விடா முயற்ச்சிசெய்கிறார்கள். காதுகளை அகலமாய் விரித்து தன்னை புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டுமென்று  எதற்கும் அடிமையாக துணிகிறார்கள். லாபம் ஈட்டமுடியாத சமூகப்பணியில், அறிவை வளர்த்துக்கொள்கிற முயற்சியில், மானத்தை இழந்து போகாததில், மனசாட்சியை மதிப்பதில், எதிலும் நீதியை மறந்து போகாமல் இருத்தலில் மிகமிக பின்தங்கியநிலையில் இருக்கிறோம்,  இனியும்  சலுகை சாதி என்று சொல்லிக்கொள்வதில் மார்தட்டி நிற்கக்கூடாது.   ஆதிதிராவிடன் சலுகை சாதி மட்டுமல்ல  எல்லா நிலைகளிலும் நீதியை முன்னிலைபடுத்தி சமூகத்தை சமன் செய்துக்கொண்டு செல்கின்ற ஆளுமை வாய்ந்தவன். நீதியும், சமூக அக்கறையும் உயர்வர்க்கத்துக்கு மட்டுமல்ல  எனக்கும் வேண்டும்.   எல்லாம் செழிப்பாக்க.



   நம்புழுதி
                                       

No comments: