Monday, March 5, 2018

கட்டுரை


யோசேப்பையும், தானியேலையும் விற்கும் 
தூய்மை இழந்த நிறுவனங்கள்.

//நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்;…//
ஆதியாகமம்-37-20

அறுபதுகளில் இருந்து ஏறக்குறைய எண்பதுகள் வரை நான் சார்ந்த கிறித்தவம் சேவைகளின் உச்சம் தொட்ட காலங்களாக இருந்திருக்கிறது. என் பாட்டனார் வழியாக கிறித்தவத்தைத் தழுவித் தந்தை கடவுள் நம்பிக்கையுள்ள மனிதனாகவும், தீவிர சமூக சேவகனாகவும், சாதி இந்துக்களுக்குச் சிம்ம சொப்பனமாகவும் விளங்கியிருக்கிறார். அவரின் இளமைக் காலத்தில், கிறுத்தவத்தை வளர்த்த துரைமார்களின் சேவையைச் சொல்லும்போது, எங்கள் மனமெல்லாம் பூரித்துப் போகும். நம் இனமில்லாமல், நம் மொழியில்லாத மனிதர்கள் இப்படிக்கூட ஒடுக்கப்பட்ட மக்கைளை நெருங்கி வருவார்களா என ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.

வெள்ளைக்கார துரைமார்கள் குதிரையில் எங்கள் கிராமத்திற்கு வந்ததாகவும், முழங்கால் மடிந்து செல்லக்கூடிய மிகவும் பின்தங்கிய ஓலைக்குடிசைகளில் நுழைந்து, சொம்பில் கூழைவாங்கிக் குடித்துவிட்டு, கடவுளின் அன்பைப் பேசுவார்கள். ஏழை மக்களின் குறைகளை மனதுருகி கேட்ப்பார்கள். அவைகளை, துளிகூட போலியில்லாமல் தீர்த்துவைக்க முயல்வார்கள். அநேக வெளிநாட்டு ஆயர்மார்கள் தங்கள் உறவுகள், உரிமைகள், இன்பங்கள், ஏகாதிபத்தியங்கள் என பல்வேறு செல்வாக்குகளையும், உயிர்களையும் இழந்துதான், இந்த மண்ணில்  மதம், கல்வி, மருத்துவம் சார்ந்த நிறுவனங்களாக வளர்த்தெடுத்தார்கள்.

எண்பதுகள் தொடங்கி இரண்டாயிரம் ஆண்டுகள் முடியுமுன்னே அந்நிறுவனங்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களின் வாழ்வியல்களில் அக்கறை கொண்டதாகவும், கிறித்தவத்தின் மீது பொது சமூகவெளியில் தார்மீக நற்பெயரை பறைசாற்று வதாகவும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தது. கிறித்தவ மும்முனை நிறுவனங்களின் செயல்கள், சேவை, நேர்மை, அன்பு என்கிற மாபெரும் புனிதத்தை கையைவிட்டு நழுவவிடாமல் கண்காணித்து செயல்பட்டுவந்தார்கள். அந்தக்காலங்களில் உண்மையான, நேர்மையான, உழைக்கச் சுணங்கால்த மனிதர்களைக் கண்டுபிடித்து, மும்முனை நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தினார்கள். அப்படியான பணியாளர்கள் (உயர் பதவியிலிருந்து, கீழ்பதவிவரை) தங்கள் நிறுவனத்திற்கு மிக உண்மையாக உழைத்து தங்கள் திறமைகளை நிரூபிப்பதுடன், தங்கள் பணியாளர்களையும், நிறுவனங்களையும் பெருமைப்படுத்திவந்தார்கள்.

1999க்குப் பின்னான காலகட்டங்க படிப்படியாக முற்றிலும் கலாச்சாரம் மாறிக்கொண்டே வந்துவிட்டதாக அறியமுடிகிறது. அந்தக் கலாச்சாரம் வடக்கு மூலையின் புகைவண்டி ஜங்சனில் இருந்துதான், ஒட்டுமொத்தமாக ஏறி வந்திருக்கிறது. அந்தக் கலாச்சாரம் கிறித்தவ மும்முனை நிறுவனங்களின் மேம்பாடுகளையும், சுனாமி இழப்புபோல, அனுபவிக்கச்செய்கிறது. 

பெரும்பாலும்  அன்பு, உண்மை, உதவுதல், திறமை, ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்திக் காட்டுதல் என்கிற செயல்கள் முற்றாக மறக்கடிக்கப்பட்டுவிட்டது, பொதுவாக மும்முனை நிறுவனங்களில், உயர் பதவி வகிப்பவர்களின் நெருங்கிய உறவுமுறைகள், மதநிறுவனத்தைக் கட்டுப்படுததக்கூடிய மிகத்தெரிந்தவர்கள், மேடை துபாடிகள் போன்ற நபர்களைத் தேடித்தேடி கல்வி, மருத்துவம், மதம் சார்ந்த நிறுவனங்களில் நிரப்பிக்கொண்டே வந்தார்கள். வருகின்றார்கள். இந்தப் போக்கு மிக மிக மோசமானப் பின்னடைவை  மும்முனை நிறுவனங்களிலும் ஏற்படுத்திக்கொண்டே வருவதை யாருமே ஆய்வு செய்யவில்லை. அரசு நிதிவழங்கும் வேலைசார்ந்து அமர்த்தும் பணிகளில் கொள்கைகள் ஏதும் கடைபிடிக்கப் டுவதில்லை. அதன் செயல்பாடுகளில் சுத்தமாக வெளிப்படைத்தன்மையும் இருப்பதில்லை.

பொதுவாக மும்முனை நிறுவனங்களில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை மிகச்சிறப்பாக செய்கிறவர்களுக்கு மரியாதை இருப்பதில்லை. மரியாதைத் தரும் நிலையில் இருப்பவர்கள், தங்கள் பதவிகளை எந்த அடிப்படை நேர்மையிலும், முறையாகவும் பெற்றிருக்கவில்லை.  வெறுமனே மேடை அலங்காரப் பொருட்களைக் கொடுத்துவிட்டு, பொய்புகழ் பேசிவிட்டு, வந்தனங்களைத் தாழ விழுந்து சொல்லிவிட்டு, குறுக்குவழியில் பதவியை பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தவேண்டும், சமூகத்தில் தங்கள் நிறுவனத்திற்கு நல்ல பெயர் இருக்கவேண்டும் என்பதிற்காக உழைக்க முற்படுவதில்லை.

தங்கள் இருக்கையை ராஜாவிற்கான சிம்மாசனமாக வைத்திருக்கவே விரும்புகிறார்கள். மிகச்சிறிய பெண்களின் சிரிப்பலைகள் தங்கள் மீது வீசவேண்டும் என்று ஏங்குகிறார்கள். எந்தவகையான காரியத்தையும், பணத்தின் மூலமும், கையூட்டுக் கொடுப்பதின் மூலமும் சாதித்துவிடலாம் என்ற மதம்பிடித்து அலைகிறார்கள். ஒருவேளை அந்நிறுவனங்களில் அவர்களின் கையூட்டு வேலையை திருத்திக்கொள்ள அறிவுறுத்தினால், அத்தன்மை வாய்ந்தவர்களை யோசேப்பைப்போல் மாற்றானுக்கு விற்றுவிடவும், தானியேலைப்போல் சிங்ககெபியில் போட்டு வதைக்கவும் முற்படுகின்றார்கள்.

தூய்மை இழந்த நவீனக்கிறித்தவ நிறுவனங்கள்.






No comments: