Wednesday, September 10, 2014

கட்டுரை,

விமர்சனங்களில் புதிய கண்டுபிடிப்புகள் இல்லை.

தற்கால கதையாடல்கள் ஆக்கத்திலும், விமர்சனபார்வையிலும் புதிதாக ஏதாவது கோட்பாடுகளை நிறுவிச்செல்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான்.

ஒரு கதையை வாசித்தபிறகு, எனக்கு இப்படித் தோன்றியது, இன்னொருவருக்கு அப்படி புரிகிறது, வேறொருவருக்கு வேறுமாதிரி புரிகிறது. சுருக்கமாகச்சொன்னால் பத்துபேர் படிக்கிறார்கள் என்றால் பத்துவிதமாக புரிந்துகொள்ளலாம் என்பது இயல்புதான். அது எனக்கும் ஏற்புடையதுதான்.

ஆனால், ஒரு விஷயம்.  கதை (சிறுகதை அளவில் எடுத்துக்கொண்டால்கூட) எழுதிய படைப்பாளன், பெரும்பாலும் ஏதோ ஒரு கருத்தை வைத்துக்கொண்டுதான் எழுதுகிறான். ஒரு கரு துளிர்த்ததால்தான் இந்தக் கதை உருவானது என்று பல படைப்பாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். சிறுகதையில் குறிப்பாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, நூல்  பிடித்தார்போல கொண்டுசெல்லவேண்டும் என்பதும் இருக்கிறது. 

அப்படி இருக்க வாசிப்பாளனுக்குதான் பல புரிதல் இருக்கிறதே ஒழிய கதையாளன் வைத்தது ஒன்றுதான். படைப்பாளன் தன் படைப்பில் ஒரு கருத்தை வைத்திருக்கிறார் என்கிறபோது, விமர்சகர்கள் பல விதங்களில் கருத்துக்களை படைப்பை தூக்கிப்பிடிக்கும்படி சொன்னால் விட்டுவிடுகிறான். ஏனென்றால், வாசிப்பாளன் புரிதலை முடக்கக்கூடாது, கதையை வாழ்த்திதானே பேசகிறான் என்கிற அளவில் விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. நேர்மையான படைப்பாளனாக இருந்தாலும் பெரும்பாலும் அதுதான் நடந்துவிடுகிறது. இப்படி சொல்வது சரியில்லை என்று சொல்லிவிடமுடியாது. ஒருவேளை அப்படிச்சொன்னால், இன்னொரு கேள்வி வரும். சரி படைப்பைக்குறித்து புகழ்ச்சியாக வரும் புரிதல்களை மட்டுமே ஏன் தாராளமயம் கொண்டு ஏற்கிறான். வாசிப்பாளனின் புரிதலாக, அதே எழுத்தை இகழ்ச்சியாக சொல்லும்போது வெறுப்படைகிறான் (தேர்ந்த படைப்பாளியாக இருந்தாலும்) என்பதற்கு பதில் இல்லை. காழ்ப்புணர்ச்சி, தாங்கும் சக்த்தி, பொறாமை இவைகளுக்குள் எல்லாம் போகவேண்டாம். பொறுப்புணர்வோடு வாதிடும் நோக்கோடு பார்த்தல் முக்கியம்.

ஆக பலவிதமான புரிதல் என்பதற்கு உள்நோக்கம் இல்லை என்றாலும், அதை வாதிடும் பொருளாக சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதுதான் என் எண்ணம். இன்னொரு விஷயமும் இங்கு தோன்றுகிறது. ஒரு படைப்பை பலவிதமான புரிதல்களில் புரிந்துகொள்ளலாம் என்பது சரியாக இருந்தால், படைப்பைக்குறித்து வரும் பல விதமான விமர்சனங்களை, ஏன், எந்த ஒரு தேர்ந்த பத்திரிக்கையும்  சேர்ந்தால்போல் வெளியிடுவதில்லை. தேர்ந்த பத்திரிகைகள் ஓரளவு படைப்பைப் பிரிதிபளிக்கிற விமர்சனங்களை மட்டுமே ஏன் வெளியிடுகிறது.

என்னைப் பொறுத்தளவில் பலவிதமான புரிதல் என்பது முன்னோர்களின் கண்டுபிடிப்பு. அதைத் தவறு என்று சொல்லவில்லை. தற்போது வரும் படைப்பாளிகள் அதற்குமேல் எதுவும் இல்லை என்பதுபோல் அதையே திரும்பத் திரும்ப சொல்வது ‘மாமியார் முதுகுடைய செய்துவைத்த சாப்பாட்டை, மருமகன்  தலைவாழையில் விருந்து சாப்பிடுவதுபோல்‘ அதன்பிறகு பெரும்பாலாக அவ்உறவுக்குள் வெறுமையின் வெற்றிடம்தான் (மருமகன் சாப்பாடுனு சொன்னதும், ஒரு மலையாள படத்தில் ஒருத்தன் வரும்போதெல்லாம் சாப்பாடு மட்டுமே சாப்பிடுவானே அதுதான் நாபகம் வருது. படத்தின் பெயர்  நாபகம் இல்லை.) என்று கருதுகிறேன். 

கதையாடல்களில் ஆதர்ச விருப்பமாக, மிக நெருங்கி வாசிப்பவன் படைப்பாளனின் மனதிலிருந்து எழுத்தாக விழுந்ததை, அதே புரிதல்களுடன் மீட்டெடுப்பான். அப்படி மீட்டெடுக்க முடியவில்லை என்றால் அவனிடம் போதாமை இருக்கிறது. அல்லது அவன் அப்படைப்பை ஆழ்ந்து அணுகவில்லை என்றுதான் அர்த்தம். 

யாரோ ஒருவர் எழுதியப் படைப்பின் புரிதலை மிகச்சரியாக சொல்ல வேண்டும் என்பது இரண்டாம் பட்சமாகக்கூட இருக்கலாம். ஆனால் ஒரு கருத்தில் நிற்பது என்பதுதான் சரியாக இருக்கும். அது உண்மை என்பதால்தான், ‘உன் படைப்பை எழுத்தாக வை நீ யாரென்று சொல்லுகிறேன்‘ என்கிற சொல்லாடல் இலக்கியத்தில் அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. பிறகு ஏன் பல வித்ததில் புரிந்துகொள்ளலாம் என்பதும் பெரும்பாலன நடைமுறைப் பேச்சாக இருக்கிறது என்று யோசிக்கும்போது விமர்சகன் தங்களைத் தப்பவைத்துக்கொள்ள சொல்லும் வாசகமாகத்தான் என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. 

இந்த வாசகத்தால்தான் இலக்கியத்தை ஆழ்ந்து படிப்பதில் இருந்து கீழ் தள்ளியிருக்கிறார்கள், அல்லது கதைகள் வாசிப்பு என்பது ஒரு பொழுதுபோக்கு என்கிற அளவிற்கு வந்துவிட்டது என்பது என் நிலைபாடு.

ஆக படைப்பாளர் மற்றும் இலக்கிய ஆர்வல அறிஞர்கள் படைப்பைக்குறித்தும், விமர்சனங்களைக் குறித்தும்  புதிய கோட்பாட்டுக் கண்டுபிடிப்புகள் செய்தால்தான் இலக்கியத்தை வரும்காலத்தில் சிறுபான்மை (சாதி, மத அடிப்படையில் இல்லை. இலக்கியதில் ஊடாடும் மக்கள்) மக்களிடமாவது அழிந்துவிடாமல் தக்கவைக்கமுடியும்.

டேனியல்


No comments: